தவக்காலம் மனிதர்களுக்குக் கடவுளால் வழங்கப்பட்ட பொன்னான, பொக்கிசமான நாள்கள் என்று கூறினால் அது மிகையாகாது என எண்ணுகிறேன். ஏனென்றால், தவக்காலம் என்பது அருளின் காலம்; ஆசிர்வாதத்தின் காலம்; இரக்கத்தின் காலம்; ஈகையின் காலம்; மன்னிப்பின் காலம்; மனமாற்றத்தின் காலம்; பரிவின் காலம்.
‘தவக்காலம்’ கரடுமுரடான வாழ்வைச் செதுக்கி, நல்ல வடிவத்தை உருவாக்கும்
உன்னதமான காலம். கல்லான இதயத்தைக் கனிவுள்ள இதயமாக மாற்றும் சிறந்த காலம். உடைகளைக்
கிழித்துக் கொள்ளாமல் உள்ளத்தைக் கிழித்துக்கொள்ளும் அருமையான காலம்.
தவக்காலத்தின்
மிக முக்கிய நோக்கங்களாக மூன்றினைக் குறிப்பிடலாம். அவை செபம், தவம், தர்மம் ஆகியவை
ஆகும். செபத்தால் மனிதன் கடவுளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்தித் தன்னைப் புதுப்பித்துக்
கொள்கிறான். தவத்தால் தன்னைப் பற்றி ஆழமாகப் புரிந்து, தெரிந்து தனது பலவீனத்தை வெல்வதற்கு
முயற்சிகளை மேற்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான். தர்மத்தால் இயலாதவர்கள்,
இல்லாதவர்கள், முடியாதவர்கள், ஏழைகள் யாவருக்கும் ஒறுத்தல் வழியாக, உண்ணாநோன்பு வழியாக
உணவை, உடைமையை, பொருளைப் பகிர்ந்து கொடுத்து,
பிறரன்பையும் இறையன்பையும் அனுபவிக்கும் அருமையான காலம். தவக்காலம் மனிதனை மனிதனாய்
மாற்றும் சிறந்த மனிதநேய காலம்.
தவக்காலம்
மனமாற்றத்தின் காலம். மனம் மாறுவது என்பது மேலோட்டமான மாற்றம் அல்ல; வேரோட்டமான மாற்றம்.
மனம் மாறி ஒரு புதிய மனிதனாக, சிறந்த மனிதனாக உருவாகுவதே தவக்காலத்தில் கொடுக்கப்படும்
சிறந்த அழைப்பு. பழைய பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து புதிய, புனிதமான நிலைக்கு வருவதுதான்
மனமாற்றம். எனது பாவப் பழக்கவழக்கங்கள், பலவீனங்கள், குற்றங்குறைகளைச் செபம், தவம்
வழியாக உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, விடுதலை பெற்ற மனிதனாக வாழ்வது. மந்தமான மனநிலையிலிருந்து,
ஊதாரி மகனைப் போல அறிவுத் தெளிவு பெற்று இறைவனிடம் திரும்பி வருவதும், திருந்தி வாழ்வதும்
தவக்காலத்தின் மிக முக்கியமான பண்பாகும்.
தவக்காலம்
மன்னிப்பின் காலம். நாம் எல்லாரும் பலவீனமானவர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள், தவறக்கூடியவர்கள்,
தவறு செய்யக்கூடியவர்கள். எனவே, பிறரைக் காயப்படுத்துவது மனித குணமாக மாறிவிட்டது.
இதனால் இறைவனோடும்-இயற்கையோடும் தன்னோடும்-பிறரோடும் உள்ள உறவை முறித்து வாழ்கிறோம்.
எனவே, இக்காலம் ஒருவரையொருவர் சந்தித்து ஒப்புரவாகி, மன்னித்து உறவைப் புதுப்பிக்கும்
காலம். உறவுகள் ஊனமாகிவிட்டால் வாழ்வும் ஊனமாகிவிடும். எனவே, மன்னித்து உறவுகளைப் புதுப்பித்து,
புதியதொரு வாழ்க்கை வாழ்வதே தவக்காலத்தின் மிகச்சிறப்பு.
தவக்காலம்
சடங்கு, சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள் வழிபாடுகளோடு முடிந்து விடக்கூடாது; மாறாக,
தவக்காலத்தின் நோக்கங்களும், கடவுளின் ஏக்கங்களும் நிறைவேறுவதாக அமையவேண்டும். இறைச்சியை,
முட்டையைத் தவிர்ப்பதால் புனிதத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. எல்லாரிடமும் நல்லுறவை
ஏற்படுத்தி, அன்பு செய்வதன் வழியாகத் தவக்காலத்தின் பலனை அனுபவிக்கலாம்.
எல்லாவற்றிற்கும்
மேலாக ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுப்பதும், பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதும்,
தாகமாய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதும்,
இருக்க இடமில்லாதவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதும், சிறையில் இருப்பவர்களைக்
காணச் செல்வதும், அந்நியரை வரவேற்பதும், தவக்காலத்தில் சேமிக்கும் பணத்தை ஏழைகளுக்குக்
கொடுத்து நிறைவு காண்பதிலும்தான் தவக்காலம் நிறைவடைகிறது. எனவே, தவக்காலத்தில் தவமிருப்போம்;
இறைவேண்டலில் நிலைத்திருப்போம்; ஏழைகளுக்குக் கொடுப்பதில் மகிழ்வடைவோம்; உயிர்ப்புப்
பெருவிழாவை உயிராற்றல்மிக்க உணர்வோடு கொண்டாடுவோம்.