தாக்கம் (Impact) என்பது ஒரு செயலால் ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதில் நேர்மறையான தாக்கம் என்பது ஒருவரின் செயலின் மூலம் சமூகத்திற்கோ, தனிநபரின் வாழ்வின் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ நல்ல ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துவதாகும்.
அதேபோல்,
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய வாழ்வில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். இதற்காகவே வாழ்வின் நிகழ்வுகளில் நம்முடைய நம்பிக்கை, நடத்தை, தூய்மையான வாழ்வு முக்கியம்.
கிறித்தவ
வாழ்வின் தாக்கம் குடும்பத்திலிருந்து தொடங்கப்படவேண்டும். இதற்கு ஆதாரமாக திமொத்தேயுவின் வாழ்வில் காணலாம். “வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்” (2திமொ
1:5). திமொத்தேயுவின்
பாட்டி மற்றும் தாய் கடவுள்மீது உண்மையான நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தியதின் மூலம், போலித்தனமற்ற பக்தி, கடவுளைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தூய உள்ளம் கொண்ட வாழ்க்கை ஆகியவற்றை முன்னுதாரணமாகக் காட்டினர். மேலும், அவர்கள் திருவிவிலியத்தைத் தியானித்து, அதை குழந்தைப் பருவத்திலிருந்தே திமொத்தேயுவுக்குத் தொடர்ந்து கற்பித்தனர். இதன்மூலம் அவரது குணம் வடிவமைக்கப்பட்டு, உண்மையான நம்பிக்கை உறுதியாக நிலைநாட்டப்பட்டது. இதே நம்பிக்கைதான் அவரைத் திருத்தூதர் பவுலுடன் நம்பிக்கையுள்ள உடன் பணியாளராக வளரச் செய்தது.
இவ்வாறு
திமொத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி மற்றும் தாயின் நம்பிக்கை ஓர் ஆழமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் மற்றும் பெரியவர் தமது வாழ்வின் மூலம் கிறித்தவத் தாக்கம் குழந்தைகளுக்குள் ஏற்படவேண்டும். இவ்வாறு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக மாறும்பொழுது, அந்தக் குழந்தைகளும் சமூகத்தில் தானியேல் மற்றும் பவுலைப் போன்று ஒவ்வொருவரின் மத்தியிலும் கிறித்தவத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆகவே,
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் அதிக ஊக்கத்தை அளிக்கிறார்கள் என்பதை நினைவில்கொண்டு, நம் சொந்த ஆன்மிகப் பயணத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைக் கவனிக்கவேண்டிய நேரம் இதுதான்.
நாம்
வாழும் இவ்வுலகில் கிறிஸ்துவின் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம் வாழ்வானது உவர்ப்புள்ள உப்பைப்போல, கிறிஸ்துவின் சுவையை வெளிக்கொணரும்படி இருக்கவேண்டும். அதற்கான எளிதான வழிகளில் ஒன்று, கடவுளை நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் முதன்மைப்படுத்துவது. நம் எண்ணங்கள், நோக்கங்கள், ஆசைகள், அதிகாரங்கள், செல்வங்கள், செயல்கள், திட்டங்கள், உறவுகள், உரையாடல்கள், வேலை மற்றும் அட்டவணை ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தையும் அவருக்கே கொடுக்கவேண்டும்.
அன்பு
நிறைந்த அன்றாட வாழ்க்கையின் மையத்தில் கடவுளை வைத்திருப்பதன் மூலம் நாம் உரையாடுகின்ற, செயல்படுகின்ற ஒவ்வொன்றிலும் தூய்மை நிறைந்திருக்கும். இவை அனைத்திற்கும் கடவுளே ஆதாரமாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கடவுளின் அரசிற்காக நம் வாழ்வின் வழியாக ஒரு தாக்கத்தை அனுபவிக்கும். திருமுழுக்கு யோவான் போலவே, நாமும் எந்தவோர் இடத்திலும் இயேசுவைச் சுட்டிக்காட்டுவோம். இது என்னைப் பற்றியது அல்ல; இது அவரைப் பற்றியது என்று மனதாரச் சொல்வோம்.
நம்
வாழ்வில் எந்தவொரு தாக்கம் ஏற்பட்டாலும் அது கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். அந்தத் தாக்கம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கிறிஸ்துவை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். அதற்கான சிறந்த உதாரணம் தபித்தா. யோப்பா நகரில் வாழ்ந்த தபித்தா மிகவும் எளிமையான பெண் சீடர். நன்மை செய்வதிலும், இரக்கச்செயல்கள் புரிவதிலும் அவர் முழுமையாக ஈடுபட்டிருந்தார். ஆனால், இவரது எளிமையான வாழ்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இறந்தபோது இவரின் நற்செயல்களின் சாட்சிகள் பேதுருவை அழைத்து வரச்செய்து, இறந்த தபித்தாவை உயிர்த்தெழச் செய்தனர். அந்த நிகழ்வு யோப்பா நகர மக்களில் பலரையும் கிறிஸ்துவுக்குள் நம்பிக்கை கொள்ளச் செய்தது (திப 9:36-42).
இவ்வாறுதான்
நம்மில் உள்ள கிறித்தவ ஒளியானது மனிதர்முன் ஒளிவீச வேண்டும். அப்பொழுது அவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு நம் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16). அவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தேயு 28: 19-இல் கூறப்பட்டுள்ளபடி, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்ற
இயேசுவின் கட்டளை இயல்பாகவே நிறைவேறும்.
இவ்வாறு,
ஒரு சீடனின் கிறித்தவச் சாட்சிய வாழ்க்கை மற்றொருவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அது பெருகி இரட்டிப்பாகும். இரண்டு நான்காக, நான்கு எட்டாகும்போது, சீடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். நம் கிறித்தவத் தாக்கத்தின் மூலம் இவ்வுலகில் எத்தனை ஆன்மாக்கள் கடவுளின் அரசிற்குள் வரப்போகின்றன என்பதையும், அதன் விளைவாக, கடவுளுடைய அரசிற்குள் படையெடுத்து வரும் கூட்டத்தால் விண்ணரசு எவ்வளவோ மகிமையானதாக மாறும்! அதை நினைத்துப் பார்க்கும்போது, நம் சாட்சிய வாழ்க்கை மூலம் கடவுளின் அருளின் வழியாக நாமும் பங்கு பெற்றிருப்பதில் ஆன்மிக மகிழ்ச்சி கொள்வோம். அப்பொழுது இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து, “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” (மத்
25:21) என்று கூறி, நம்மை மேன்மையுள்ள இடத்திற்கு உயர்த்துவார். உலகிற்குக் கிறிஸ்துவின் தாக்கத்தை உருவாக்குவோம். கிறிஸ்துவிற்கு ஆன்மாவை அறுவடை செய்வோம்!