ஒருநாள் பேருந்தில் மாலை ஏழு மணியளவில் பயணம் செய்யும்போது, என் அருகிலிருந்த நபர் தன் மனைவியுடன் சத்தமாகச் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலில் அவர் தன் மனைவியுடன், “நான் உன் மகளைக் காலையில் பள்ளியில் விட்டேன். மதியம் என் வேலையாளை அனுப்பி உணவு வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். மாலையில் அவளைப் பள்ளியிலிருந்து வீட்டில் சேர்த்தேன்” என்று தன்னுடைய வேலையை மட்டும் கணக்குப் போட்டுத் தன் மனைவியைத் திட்டினார்.
இந்த
நிகழ்வு சற்று என் காதுக்குள் சென்று விட்டுச் செல்லவில்லை. இந்த நவீன உலகத்திலும்
பெண்கள் இன்னும் தரக்குறைவாக நடத்தப்படுவது எனக்குக் கவலை அளித்தது, சிந்தனைகளைத் தூண்டியது.
பொதுவாகவே ஆண்கள்தான் வேலைகள் செய்வார்கள், பெண்கள் தகுதியற்றவர்கள், எளிதில் ஏமாந்து
போகக் கூடியவர்கள் போன்ற தவறான கருத்துகளைச் சில புதினங்கள், இலக்கியங்கள் மற்றும்
கதைகள் வழியாக மானுடச் சிந்தனையில் புகுத்திவிட்டார்கள். இதனால் பெண்கள்மீது ஏராளமான
சுமைகள் மறைக்கப்பட்டதாகவே உள்ளன.
தீமைக்குக் காரணமானவர்கள்
யார்?
திருவிவிலியத்தில்
அலகை எளிதில் ஏவாள் என்ற பெண்ணை ஏமாற்றிவிட்டது. அந்தப் பெண்ணால்தான் பாவம் உலகிற்கு
வந்தது. அதிலிருந்து பெண்ணைக் குறைவாகப் பார்க்கக்கூடிய சிந்தனைகள் உருவாயின.
இலக்கியத்தில்
ஈசீயோத் எழுதிய ‘உழைப்பும் ஊழிகளும்’ (work and days)
என்ற நெடும்பாட்டில் பண்டோரா என்ற பெண்மாந்தரைக் கொண்டு வருகிறார். இதில் பண்டோராதான்
முதலில் படைக்கப்பட்ட பெண் என்று கிரேக்கத்தில் நம்பப்படுகிறது. உலகிற்குத் துன்பமெல்லாம்
பண்டோராவினால்தான் வந்தது என்று சாடியைத் திறந்த கதையை ஈசீயோத் எழுகிறார். இதில் தன்
தம்பி பெர்சிஸ் தன்னை ஏமாற்றியதற்குக் காரணமாக இந்தப் பகுதி சொல்லப்படுகிறது. அண்ணனைப்
பழிவாங்குவதற்காகத் தம்பிக்கு மணம் செய்விக்கப்பட்டவள் பண்டோரா. எந்தக் காரணத்தோடும்
திறக்கக்கூடாது என்ற முன்குறிப்போடு, ஓர் அழகான சாடியைப் பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
ஆசை தாங்காமல் சாடியைத் திறந்து விட்டார் பண்டோரா. அந்தச் சாடியிலிருந்து தீமைகள் புறப்பட்டு
உலகத்தை நிரப்பின. பதறிப்போன பண்டோரா சாடியை அடைத்தபோது அதில் மீதி இருந்தது நம்பிக்கை
மட்டும்தான். அதுவும் அடைபட்டுவிட்டது. இவ்வாறாக, பெண்ணால்தான் தீமை உருவானது என்று
எழுதுகிறார்.
மேற்கூறிய
திருவிவிலியப் பகுதியையும் ‘உழைப்பும் ஊழிகளும்’ என்ற
பாடலையும் பெண்கள் மீது சொல்லப்படுவதை மாற்றுச்சிந்தனையில் பார்க்கவேண்டும். அதை அப்படியே
பொருள் கொண்டால் நாமும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற
தவறுதலான அடைமொழிக்குள் பெண்களை அடக்கிவிடுவோம். தொடக்கத்தில் சொல்லப்படும் பேருந்து
நிகழ்வில் வரும் நபரும் பெண்களைப் பற்றிய தவறுதலான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். அதனால்தான்
அவர் தன்னுடைய வேலையை மட்டும் எண்ணிப் பேசுகிறார். பெண்கள் செய்யும் வேலைகளை அவர் புரிந்துகொள்ளவே
இல்லை. அவர்கள் செய்யும் வேலைகள் மற்றவருக்குத் தெரியாமலே மறைக்கப்பட்ட சுமைகளாவே இருக்கிறது.
பேசுபவர்கள் மட்டும்தான் வேலை செய்யக்கூடியவர்கள் என்ற போலியான சிந்தனைகள் உள்ளத்தில்
தோன்றத் தொடங்குகின்றன. ஆனால், பெண்களின் வாழ்வில் அவர்கள் மறைமுகமாகச் செய்யும் பணிகளை
எண்ணிப் பார்த்தால் அளப்பரியவை! அவர்கள் ஒருபோதும் தங்கள் வேலைகளை வெளியில் சொல்லிக்
காட்டியதும் இல்லை, பேசியதும் இல்லை.
வெளிப்படையாகச் சுமத்தப்பட்ட
சுமைகள்
ஒவ்வொரு
நாளும் என்ன உணவு சமைப்பது, பால் எப்படி வாங்குவது, மளிகைப் பொருள்களின் செலவு, வீட்டு
வாடகை கட்டுவது, மின் கட்டணம் எவ்வளவு வரும், குழந்தைகளின் பள்ளிச் செலவு, மருத்துவச்
செலவு, தண்ணீர் வாங்குவது, இந்த ஆண்டு பண்டிகைக்கு எப்படிச் செலவு செய்வது... என்று
முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்லும் பட்டியலை ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தன் உள்ளத்தில்
எண்ணிக்கொண்டேயிருப்பார். இந்த நவீன உலகத்தில் குடும்பப் பெண்ணின் நினைவில் வைக்கும்
குடும்பப்பட்டியல் நீண்டுகொண்டேதான் செல்கிறது. ஆனால், அவர்கள் ‘நிறைகுடம் தளும்பாது’ என்ற சொல்லுக்கு இணங்க, வெளியில் தாங்கள் செய்யும் வேலைகளைச்
சொல்லால் அல்ல; உள்ளத்தால் அன்னை மரியாவைப் போன்று சிந்தித்துச் செயல்படுகிறார்கள்.
மனத்திற்குள் மறைக்கப்பட்ட
சுமைகள்
குடும்பத்தில்
ஒரு குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தையின் அனைத்துப் பொறுப்புகளும் பெண்களின்
மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தையின் உடல் நலம் பேணல், தடுப்பூசி மருந்துகள்
சரியாகப் போடுதல், குழந்தையின் உணவு பேணுதல், சரியான பள்ளியைத் தேர்ந்தெடுத்துச் சேர்ப்பது,
குழந்தையின் ஒழுக்கம், செயல்கள், யாருடன் குழந்தை சேருகிறது போன்ற சிந்தனைகள் பெண்ணின்
உள்ளத்தில் ஓடிக்கொண்டேயிருக்கும். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தின் கடைசி நாள், தேர்வு
நாள், குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு
ஏற்றபடிச் செயல்படுவது, பெண் பிள்ளை இருந்தால் அவர்களின் மாதவிடாய் நாள்களை நினைவில்
வைத்துக்கொள்வது, கணவரின் எதிர்பார்ப்புகளை அவர் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றுவது என்று
தங்களின் மனத்திற்குள் பெண்கள் சிந்தித்து, வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
பணிச்சுமையின்
காரணமாக, கணவர்கள் திருமண நாளை மறந்தாலும் பெண்கள் மறக்கக் கூடாது. பெண்கள் வீட்டிலுள்ள
அனைவரின் பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவில் வைத்துக்கொண்டு மறவாமல் வாழ்த்துகள்
தெரிவிப்பது, பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பின் சென்ற ஆண்டு வாங்கிய பரிசுப் பொருள்களை
நினைவில் வைப்பது; அது மட்டுமன்றி, மற்றவர்கள் நமக்கு வாங்கிக் கொடுத்த பொருள்கள்,
பணத் தொகையை நினைவில் வைத்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தமுறை செயல்படுவது, திருமணம்
மற்றும் மற்றக் காரியங்களுக்கான செய்முறைகளை நினைவில் வைத்துச் செயல்படுவது போன்ற செயல்கள்
பெண்களுக்குத்தான் என்று சமுதாயத்தால் மறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளன. பெண்களும் தங்களின்
உள்ளத்தால் இச்செயல்பாடுகளை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளமுடியாத
சுமைகள்
பெண்கள்
தங்கள் குடும்பத்தைப் பற்றி, பல சுமைகளை எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவற்றில் உடனடியாகச்
செய்யக்கூடியவை எவை என்றும், அவற்றில் முக்கியமானவை மற்றும் முதன்மையானவை எவை என்றும்
எண்ணிச் செயல்படுவது. வீட்டில் கணவர் செய்ய வேண்டியவை, குழந்தைகள் செய்ய வேண்டியவை,
மாமியார், மாமனார் செய்ய வேண்டியவை, தன் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டியவை என்று பெண்கள்,
ஒவ்வொரு நாளும் அறிவுசார் மற்றும் உணர்வுசார் சுமைகளைச் சுமந்து செயல்படுவது. இந்தப்
புரிந்து கொள்ளமுடியாத சுமைகள் எளிதான ஒன்று அல்ல; மனித ஆற்றலை மறைமுகமாக அதிகம் உறிஞ்சும்
தன்மை கொண்டவை. மற்றவர்கள் இந்தச் சுமையைப் பகிர்ந்துகொண்டாலும், திட்டமிடல் சுமையைப்
பொதுவாகப் பகிர்ந்து கொள்வதில்லை.
சுமைகளால் ஏற்படும் தியாகம்
மேற்கண்ட
எல்லாச் செயல்களிலும் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டால் பெண்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது.
இதனால் மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல்சோர்வு எனப் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாக நேர்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் பணி வேலைகள் என்று இரண்டு சுமைகள்
இருப்பதால் வேலையில் உயர்வு ஏற்பட்டாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் தியாகம் செய்யும்
நிலை ஏற்படுகிறது.
பெண்ணுக்குள் மறைந்திருக்கும்
சக்தி
ஒவ்வொரு
பெண்ணிடமும் தாய்மை என்ற வல்லமையுள்ள சக்தி பொதிந்துள்ளது. அதனால் மேற்கண்ட நான்கு
வகையான சுமைகளை ஒவ்வோர் ஆணும் அறிந்து, அதை அவர்களுடன் உணர்வு சார்ந்த முறையிலும்,
அறிவுசார்ந்த முறையிலும் பகிர்ந்துகொள்வது கடமையாகும். அப்படிச் செயல்படும்போது பெண்களுக்குள்
மறைந்திருக்கும் தெய்வீகத்தன்மை வெளிப்படும். இதனால் குடும்பமும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கும்.
ஒவ்வொரு
சொல்லுக்கும் எடையும் நிறையும் உண்டு. எல்லாச் சொல்லுக்கும் பொருள்கள் உள்ளன. தொல்காப்பியத்தில்
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று எழுதுகிறார். எனவே, குடும்பத்தில்
நல்ல சொற்களையும் செயல்களையும் பயன்படுத்தி பெண்களிடம் மறைந்துள்ள சுமைகளை அகற்றுவோம்.
தெய்வீகத்தைக் கொண்டு வருவோம்.