இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான ‘மகிழும் ஞாயிறு’ (Laetare Sunday)-ஐக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கி நாம் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில், மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியைத் தூண்டும் ஒரு மைல்கல்லாக இந்நாள் அமைகிறது. “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (1சாமு 16:7) என்ற உண்மையைச் சிந்திக்கும் வேளையில், வெளிக்கண்களால் காண்பதைக் காட்டிலும், இறைவனின் ஒளியால் அகக்கண்களைத் திறப்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை இன்று உணர்கிறோம்.
இறைவனின்
பார்வையை நாம் பெறவேண்டுமெனில், முதலில் நாம் உலகப் பார்வையைத் துறந்து இறைப்பார்வையை ஏந்தவேண்டும். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக தாவீது தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வை விவரிக்கிறது. ஈசாயின் மூத்த மகன்கள் அவர்களின் தோற்றத்தாலும் உயரத்தாலும் சாமுவேல் இறைவாக்கினரைக் கவர்கிறார்கள். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே... மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை” (1சாமு
16:7) என்று கூறி அவர்களை நிராகரிக்கிறார். மனிதர் கண்களைப் பார்க்கின்றனர்; கடவுள் இதயத்தைப் பார்க்கின்றார். ஈசாயின் ஏழு புதல்வர்களையும் நிராகரித்த கடவுள், இறுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைய மகன் தாவீதைத் தேர்ந்தெடுக்கிறார்.
சிறுவனாக
இருந்த தாவீதிடம் அப்போது ஒரு படைத்தலைவருக்கோ அல்லது ஆட்சியாளருக்கோ உரிய மதிநுட்பமோ, மனத்துணிவோ அல்லது உலகளாவிய தகுதிகளோ இருந்திருக்கவில்லை. ஆடு மேய்க்கும் ஒரு சாதாரண சிறுவனாகவே அவர் பார்க்கப்பட்டார். ஆனால், உலகம் யாரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ, யாரை ஒதுக்கி வைத்ததோ, அவர்களையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் பணிக்கென அனுப்புகிறார். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலும் நாம் காண்கிறோம். பிறவியிலேயே பார்வையற்ற ஒரு மனிதர், சமூகத்தால் ‘பாவி’ என்று முத்திரை குத்தப்பட்டவர்; சமூகத்தில் மிகக் கடினமான துன்பங்களுக்கு ஆளானவர்; ஆலயத்தில் நுழையத் தடை செய்யப்பட்டவர்; இரந்துண்ணும் ஓர் எளியவர். அன்று அங்கிருந்த சீடர்களும் பரிசேயர்களும் அவரை ஒரு சுமையாகவோ அல்லது பாவத்தின் அடையாளமாகவோதான் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவரை ஒதுக்கித் தள்ளாமல், கடவுளின் செயல் அவர் வழியாக வெளிப்படும் பொருட்டு அவரைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீதுக்கு
அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர் எப்படி ஒரு புதிய ஆற்றலைப் பெற்றாரோ, அதேபோல இயேசு அந்தப் பார்வையற்றவரின் கண்களில் உமிழ்நீர் தடவி, “சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்று பணித்தபோது, ஒரு புதிய படைப்பு அங்கே நிகழ்ந்தது.
பிறவியிலேயே
பார்வையற்றவர் பார்வை பெறும் நிகழ்வில் இயேசு செய்கின்ற அடையாள முறைகள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. இயேசு உமிழ்தல், சேற்றைப் பூசுதல், கழுவுதல் போன்ற செயல்களால் நோயாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறார். ஏன் இவ்வளவு அடையாளங்கள்? இந்த அடையாள முறைகள் நோயாளிகளின் நம்பிக்கையைத் தூண்டி, அதை வலுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இதனைத் திக்கிப் பேசுபவர் நலம்பெற்ற நிகழ்விலும் (மாற் 7:33-35), பெத்சாயிதாவில் பார்வையற்ற ஒருவர் பார்வை பெற்ற நிகழ்விலும் (மாற் 8:23-25) காணலாம். உமிழ்தல், சேறு பூசுதல், கைகளை வைத்தல், வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பெருமூச்சு விடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஊடகங்களாகச் செயல்பட்டன.
யோவான்
குறிப்பிடுகின்ற சிலோவாம் குளம் ஆழமான இறையியல் சிந்தனையை நமக்குள் விதைக்கின்றது. சிலோவாம் குளம் என்பது எருசலேம் நகரின் தெற்கு எல்லையில் அமைந்திருந்த ஒரு முக்கியமான நீர்நிலையாகும். விவிலியப் பேராசிரியர் கு. எரோணிமுசு விளக்கப்படி, இக்குளத்திலிருந்துதான் கூடாரத் திருவிழாவின் தண்ணீர்ச் சடங்குகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, எருசலேம் நகருக்கு வெளியே இருந்த கெதிரோன் பள்ளத்தாக்கில் ‘கிகோன்’ ஊற்றிலிருந்து மக்கள் தண்ணீர் கொண்டுவந்தனர். ஆனால், போர்க்காலங்களில், நகர் முற்றுகையிடப்பட்டிருக்கும்
நேரங்களில் இவ்வூற்றுக்கு மக்களால் செல்ல முடியாததால் அரசர் எசேக்கியா (கி.மு. 716-687), சென்னாக்கிரீபு
(704-681) என்னும் அசீரியப் பேரரசர் நகரை முற்றுகையிடுவார் எனத் தெரிந்ததும், 1749 அடி நீளமுள்ள கடினமான பாறையைக் குடைந்து ஒரு சுரங்கப் பாதை வழியாக நகருக்குள் இருந்த இந்தக் குளத்திற்குக் கொண்டு வந்தார். இவ்வாறு இக்குளத்திற்கு வரும் நீர் ‘கிகோன்’ ஊற்றிலிருந்து தாரையாக ‘அனுப்பப்பட்டதால்’, ‘அனுப்பப்பட்டது’ என்னும்
பொருளில் இதற்கு ‘சிலோவாம்’
என்று பெயரிடப்பட்டது. யோவான் இயேசுவைக் குறிக்கும் வகையில் அதனைச் சற்று மாற்றி ‘அனுப்பப்பட்டவர்’ என்று
பொருள் கொடுக்கிறார். இதன் மூலம் அந்தப் பார்வையற்றவர் வாழ்வு தரும் நீராகிய இயேசுவிடம் சென்று நலம் பெறுகிறார்.
குளத்தில்
போய்க் கண்களைக் கழுவியதால் பார்வை பெற்றவர், அந்த நல்ல செய்தியை உலகிற்குப் பறைசாற்ற அனுப்பப்படுகிறார். யூதர்களும் பரிசேயர்களும் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
தன்னை நலப்படுத்தியவர் யார் என்றுகூட பார்வை பெற்றவர் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால், நலம் தந்தவர் ஒரு சாதாரண ஆளாக மட்டும் இருக்க முடியாது என்பதை உணர்கிறார். தான் சந்திக்கப் போகின்ற பிரச்சினையைக்கூட உணராமல், பார்வை பெற்றவர், தனக்குப் பார்வை அளித்த அந்த ஆள் “ஓர் இறைவாக்கினர்” (9:17) என்று
நற்செய்தி அறிவிக்கிறார். எந்த அச்சுறுத்தலுக்கும் அவர் அசையவில்லை. “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட முயல்கின்றனர் (9:34,35). இந்நிகழ்வு இயேசுவையும் யூதர்கள் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததை நமக்கு நினைவூட்டுகின்றது.
பார்வையற்றவர்
நலமடைந்த நிகழ்வில், அவர் ‘திரும்பி வருதல்’
(9:7) என்பது நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய ஒரு முக்கியமான தருணமாகும். இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவிய அந்த மனிதர், பார்வை பெற்றவுடன் உடனடியாகத் திரும்பி வருகிறார். பிறவியிலேயே பார்வையற்ற அவர், அதுவரை எந்த ஒரு மனிதரையும், ஏன் தனக்கு நலம் அளித்த இயேசுவைக் கூட கண்டதில்லை. இருப்பினும், இயேசுவின் தொடுதலால் புதிய ஆற்றல் பெற்ற அவர், அவரை ‘ஓர் இறைவாக்கினர்’ (9:17) என்று
துணிவோடு அறிவிக்கிறார்.
தனக்கு
வாழ்வளித்தவருக்கு நன்றி சொல்லவும், அந்தப் புனிதமான பாதங்களைக் கண்டு பணியவும் அவருடைய விழிகளும் கால்களும் விரைந்தன. தான் சந்திக்கப்போகும் சமூகப் பிரச்சினைகளையோ, அதிகாரிகளின் எதிர்ப்பையோ பற்றி அவர் கவலைப்படவில்லை; மாறாக, தான் பெற்ற மாபெரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும், தன்னைப்போல இருளில் இருப்பவர்களை ஒளியின் ஊற்றாகிய இயேசுவிடம் அழைத்துச் செல்லவும் அவர் துடித்தார். இவ்வாறு, பார்வை பெற்ற அந்த எளிய மனிதர், வெறும் நலம் பெற்றவராக மட்டும் நின்றுவிடாமல், கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்த நற்செய்தியாளராக உருமாறித் திரும்பி வருகிறார். ஆனால், பார்வை இருந்தும் பரிசேயர்கள் தங்கள் அகப்பார்வையை இழந்து, கண்ணிருந்தும் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.
பார்வை
பெற்ற மனிதர் ஒளியை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய இரண்டாம் வாசகம் (எபே 5:8-14) வழியாக, “ஆண்டவரோடு இணைந்து ஒளியின் மக்களாக நடங்கள்” என்று நம்மை அழைக்கிறார். ‘ஒளியின் மக்கள்’ என்போர் இருளின் செயல்களுக்கு இடம்கொடாமல், நீதி, உண்மை இவற்றில் நிலைத்து வாழ்பவர்கள்.
இன்று
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: முதலில், இருளைக் களைந்து ஒளியைத் தழுவவேண்டும். பரிசேயர்களைப்போலச் சட்டங்கள் எனும் இருளில் சிக்கி, தங்களுக்கு முன் நின்ற மெய்யான ஒளியைக் (இயேசுவைக்) காண மறுத்தது போல, நம் அகக்கண்களை மறைத்துக்கொள்ளாமல் நம் இதயத்தில் இறைவனின் ஒளி சுடர்விட நம்மை அனுமதிப்போம். இரண்டாவது, இதயத்தால் பார்க்கும் பண்பை வளர்த்துக்கொள்வதன் வழியாக, குடும்பங்களில் நோயுற்றோரையும் முதியோரையும் ‘பயனற்றவர்கள்’ என்று
ஒதுக்கும் ‘குற்ற உணர்வில்லாக் கலாச்சாரத்தை’ ஒழித்து,
அவர்களை அன்பால் தாங்கும் இதயத்தைப் பெறுவோம்.
மூன்றாவதாக,
பார்வை பெற்ற மனிதன் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் இயேசுவை அறிவித்ததுபோல, நாமும் உள்ளொளி பெற்றவர்களாக நம் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் அன்பிற்குச் சாட்சிகளாக மாறுவோம். வாருங்கள், நம் இதயங்களை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். அவர் நம் இருளை அகற்றி, நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றி, ஒளியின் மக்களாக உலகிற்கு அனுப்பி வைப்பார். இறைவனின் ஒளி நம் இதயங்களில் என்றென்றும் சுடர்விடட்டும்.