இக்கட்டுரையை எழுதுகையில், மாநிலங்கள் அவைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முனைவர் கான்ஸ்டாண்டின் அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோன்றியது. கிறித்தவர், மீனவக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரைச் சரியாக அடையாளங்கண்டு சிறப்பு செய்த தி.மு.க.வின் பொறுப்பாளர்களுக்குச் சிறுபான்மை கிறித்தவர்களின் சார்பில் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்!
நெருங்கி
வரும் தேர்தலில் ‘கிறித்தவருக்கென ஒரு நிலைப்பாடு வேண்டுமா?’ என்ற கேள்வி இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எழக்கூடாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்தியக் கிறித்தவம் வெறும் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியக் கிறித்தவர்கள் தமக்கென தனித்த அடையாளங்கொண்ட இந்திய நாட்டின் குடிமக்கள்; இக்குடிமக்கள் தமக்கெனவுள்ளத் தெரிவு செய்யும் உரிமையைப் பயன்படுத்தி, தெரிவு செய்த மார்க்கமே கிறித்தவம்.
கிறித்தவ
மறையைத் தெரிவு செய்த மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதால் மதச்சிறுபான்மையினர் இந்தியா எனும் சனநாயக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மதச்சிறுபான்மையினர். இவர்கள் மதச்சிறுபான்மையினர்; மதரீதியாக - மதம் ஏற்கும் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள். இவர்கள் வேறுபட்டவர்கள்! ஆம், ஆனால் சமமானவர்கள். இவர்கள் அடையாளத்தால், கொண்ட கொள்கையால் வேறுபட்டவர்கள் என்பதாலேயே இவர்களைப் பாகுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. இவர்கள் உரிமைக் குடிமக்கள்.
சனநாயகம்
வழங்கியுள்ள இவ்வுரிமைகளைச் சமமாக அனுபவிக்கும் உரிமை பெற்ற இவர்கள், சனநாயகம் அளிக்கும் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தில் பங்குகொள்ள வேண்டுவது இவர்தம் கடமையும் உரிமையும் ஆகும். ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஒரு சடங்கல்ல; அது ஒரு வேள்வி.
சனநாயகம்
தந்த உரிமையின் பெயரால், அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதச்சிறுபான்மையினராகிய கிறித்தவர்கள் தேர்தல் முறையைச் சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் நிறம் மாறலாம்; கொள்கைகளில் சமரசம் செய்யலாம்; ஆனால், கிறிஸ்து வழிவந்த மதச்சிறுபான்மையினர் மிகத் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுவது கடமையாகிறது. கிறித்தவர் சனநாயகத்தை, சமயச்சார்பின்மையை, சமத்துவத்தை, இறையாண்மையை நம்பும் கட்சிகளைத்தான் ஆதரிக்க முடியும்.
விடுதலை
பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்பும், வலுவான அரசமைப்புச் சட்டத்தைப் பெற்ற பின்பும், சனநாயகம் எனும் பெருவிழுமியத்தைச் சிதைவுபடாமல் காத்திடும் வகையில் சனநாயக நிறுவனங்கள் உருவான பின்பும், இன்று மத அடிப்படையிலான அரசு
ஒன்று, நம்மை ஆளும் அரசாக இருப்பது
முரணில்லையா?
மதவாதக்
கருத்தியலின் வெற்றி வகுப்புவாதம். அதன் அடிப்படையில் வளர்க்கப்பெறும் மதவாதம் மானுட மாண்பிற்கு, மனித உரிமைகளுக்கு, சமூகங்களின் சமாதான சகவாழ்விற்கு எதிரானது.
ஆக,
எதிர்வரும் தேர்தலில் ‘மதவாதக் கட்சிகளை எதிர்ப்போம்’ என்று
உறுதியேற்போம். மதவாதக் கட்சி ஒன்று எப்படிச் செயல்படும் என்பதை கடந்த பத்து ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம், அனுபவித்தும் வருகிறோம். நாட்டின் ஒருமைக்கு, தேசிய இனங்களுக்கு, மதச்சிறுபான்மையினருக்கு, இந்தியக் கூட்டாட்சிக்கு என்னென்ன சேதங்களை உருவாக்கி வருகின்றன என்பதையெல்லாம் அறிந்த பின்பும், வெறும் ஆட்சி அதிகாரம் கருதி இம்மதவாதக் கட்சியோடு கூட்டணி கொண்ட கட்சிகளோடு எவ்விதச் சமரசமும் இல்லை என்போம்.
மதவாத
பாரதிய சனதா என்பது வெறும் கட்சியல்ல; பெரும்பான்மைவாதம் பேசும் இக்கட்சியோடு உறவுகொள்ளும் எந்தக் கட்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சிகளே!
இருவகை
அணிகள் தேர்தலைச் சந்திக்கத் தயார்நிலையில் உள்ளன. இவ்வணிகளில் மதவாதக் கூட்டணிக்கு இப்போதும் எப்போதும் ஆதரவு இல்லையென்பதே நம் நிலைப்பாடு. இவ்வணிக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியே நம் ஆதரவு கூட்டணி. ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் கறைபடாத தூய கட்சிகளா? உண்மையாக இல்லை. எனினும் பா.ச.க.
எனும் மதவாத, சனநாயகமற்ற, எதேச்சதிகார எதிரியை வீழ்த்த இம்மாதிரி நிலைப்பாடே எடுத்தாகவேண்டும்.
இன்று
தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களைப் பெருங்குழப்பத்தில் வைத்திருக்கும் சக்திகள் இரண்டினைப் பற்றிப் பேசியாகவேண்டும்.
ஒன்று,
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள். இவர்கள் நெற்றியில் திருநீறிட்டு முப்பாட்டன் முருகனைத் துதிக்கும் பெரும்பான்மை மத அடையாளத்தைக் கொண்டு
அரசியல் செய்பவர்கள். இன்றும் இந்தியாவில் முழுமையாக வளராத ‘இந்திய தேசியமே’ தமிழ்நாட்டுத் தேசியத்தைக் காக்காத நிலையில், ஒன்றிய அரசை ஆளும் பாரதிய சனதாவின் முதன்மைக் கொள்கையான ‘இந்து தேசியம்’ அல்லது கலாச்சார தேசியத்திலிருந்து எப்படி இவர்கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்கள்?
இவர்களின்
பரப்புரைகளால் கவரப்பட்டுத் திசைமாறிப் போகும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிப்பாக, கத்தோலிக்க இளைஞர்களை, இளம் அருள்பணியாளர்களை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுவது கட்டாயமாகிறது. பெரியார் மீதான அவதூறுகளும், தி.மு.க.
மீதான வன்மமும் மட்டுமே இவர்களின் கொள்கையென்பதால், இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அடுத்து
வரும் நபர் மிக மிக ஆபத்தானவர். இவருக்கு எதுவும் தெரியாது என்பது நம்முடைய பொய்யான நம்பிக்கை. தன் கொள்கை எதிரியாக அறிவிக்கும் பா.ச.க.வின் கொள்கை எதுவுமே இவர் படிக்கும் தாளில் இடம்பெறுவதே இல்லை. ‘தீய சக்தி’ என்று அடையாளம் காட்டப்பெறுவது தி.மு.க.
‘தூய சக்தி’ என்று யாரையாவது சொல்லட்டுமே! ஒரு மனிதன் நடிகன் என்பதாலேயே அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தரும் இவரை நம்பி பின்செல்வது, சனநாயகத்தைக் கேலி செய்வதே.
கொள்கை
பலமோ, அறம் சார்ந்த நிலைப்பாடோ இல்லாமல் மக்களிடம் ஏற்கெனவே இயங்கும் கட்சிகளிடம் வளர்ந்திருக்கின்ற அவநம்பிக்கையை ஆதாயமாக்கி அரசியல் செய்யும் இத்தகையோரின் அரசியலைப் புரிந்துகொள்வோம். இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்போம்.