மறைந்த அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நூலொன்றின் பெயர்தான் ‘நீதி தேவன் மயக்கம்.’ நாட்டில் மக்கள் வாழும் பொதுவெளியில் வளர்க்கப்படும் நம்பிக்கைகளை, புனைவுகளை (Myths) நாட்டின் கலாச்சாரமாகக் கட்டமைத்து, கேள்விக்கு உட்படுத்தாமல் ‘தர்மம்’ என்று ஏற்க வைத்துவிடும் போக்கினை ஏற்போர் பலர் உளரெனினும், எப்போதோ சிலர் கேள்விக்குள்ளாக்கியதும் உண்டு. கேள்வி கேட்போரை, மரபுகளை, புனைவுகளை, விமர்சனத்துக்குள்ளாக்குவோரைக் கலகக்காரர்கள் என்று அழைக்கப்பெறலும் உண்டு. இக்கலகக்காரர்களை எப்போதும், எல்லாச் சமூகமும் கொண்டாடியது இல்லை; பழிக்கப்பெறும் இவர்கள் சரித்திரத்திலிருந்து ஒதுக்கப்பெறுவதும் உண்டு. மறக்கப்பெறுவதும் சாத்தியமே. எனினும், இவர்கள் உண்மையின் பக்கமே நின்றனர் என்பதனை வரலாறு நிரூபித்து வந்துள்ளது.
தமிழ்ச்சமூகம்
போற்றிய இராமாயணத்தை அண்ணா விமர்சித்தார். இராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னார் தந்தை பெரியார். நீதியின் காவலனாகக் கருதப்பட்ட இராமன்,
வாலியை மறைந்து நின்று கொன்றமையை ‘அறமற்ற செயல்’ என்று
இகழ்ந்தார் அண்ணா. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை அக்னி பிரவேசம் செய்யச் செய்ததோடு, குழந்தைகளோடு வனவாசம் செய்ய இராமன் அனுப்பிய இயல்பை ‘என்ன வகை நீதி?’ என்று நீதிதேவனிடம் நீதி கேட்டார் அண்ணா.
அண்ணா
எழுதிய நாடக நூலான இந்நூல் அவர் காலத்தில் புதுமையானது. நீதி தேவன் அமர்ந்திருந்த நீதி அவையில், இராமனைக் குற்றவாளியாக நிறுத்தி இக்கேள்விகளைக் கேட்பார் அண்ணா. இம்மாதிரியான கேள்விக்கணைகளை எழுப்பும் வகையிலான உரிமை மதிக்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடலாகாது. இராமனைக் கேள்வி கேட்போர் அல்லது விமர்சிப்போர் இன்று தேசத்தை விமர்சிப்போர் மட்டுமல்ல; நாட்டுப்பற்றே இல்லாதோர் என்றும், ‘நகர்ப்புற நக்சல்கள்’
என்றும் வர்ணிக்கப் பெறுவர் என்ற உண்மைநிலை இன்றைய நிலை.
தொன்மையென்றும்,
பாரம்பரியம் என்றும், மாறா தர்மம் என்றும், ஏன் ‘சனாதனம்’
(Eternity) என்றும்
போற்றப்பட்ட, தூக்கிச் சுமக்கப்பட்ட நம்பிக்கைகளை எப்போதும் ஒருசிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்மையை ஏற்பதும் அதே வேளை மறுப்பதுவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
ஏனிந்த முன்னுரை?
அண்மையில்
நடந்த அல்லது நடைபெறுகின்ற நம் அரசியல் தலைவர்கள் தொடர்பான சில அறநெறி நிகழ்வுகள் இக்கட்டுரையை எழுதக் காரணமாய் அமைந்தன. சமூக அரசியல் களம் கண்ட எவரும் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவது எதார்த்தம். எக்கட்சியும் எக்கொள்கையும் கொண்டவராயினும், தனிமனித அறநெறி வாழ்வியல் விமர்சிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல; ஆயினும், தலைவர்கள் எனத் தன்னை முன்னிறுத்துபவர்கள் முன்வைக்கும் எடுத்துக்காட்டான வாழ்வியல் சமூகத்திற்கும் தங்கள் கட்சிக்கும், அத்தலைமையை ஏற்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியம்.
இன்றைய
அரசியல் களத்தில் சில கட்சித் தலைவர்களைத் தொடர்புபடுத்திப் பெண்ணிய விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டு, குடும்ப அறநெறி தவறிய சூழல் எனச் செய்திகள் அன்றாடங்காட்சியாவது இன்றைய-நாளைய தலைமைத் துவத்தின் அறநெறி மதிப்பீட்டைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, இளைய தலைமுறையினரிடத்தில் தவறான மதிப்பீடுகளைக் கட்டமைக்கிறதே என்பதுதான் எமது ஆதங்கம்.
இத்தகைய
தலைவர்களைத் தொடர்புபடுத்தி வெளிவரும் பாலியல் புகார்களில் உண்மையே இல்லையென்று அவர்களைப் பின்தொடரும் கூட்டத்தினர் நம்புகின்றனரா? உண்மை கொஞ்சம் கூட இல்லையென்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் நேசிக்கும் தலைவர்மீது இவ்வாறான பழிச்சொல் வந்துவிட்டதே என்ற கவலை பக்கத்தே நிற்கும் தோழர்-தோழியர்க்கும், தூரத்தே நின்று ஊடகவழி செவிமடுப்போர்க்கும் உருவானதுபோல் தெரியவே இல்லையே! ‘நாம் மதிக்கும் தலைவர் இவரா?’ என்ற வியப்பும் கூட ஒருவர் முகத்திலும் எழவில்லையே! பல மாதங்கள் ஊடக
வழி, மேடை வழி ‘இந்நடத்தை’
பேசுபொருளான போதும், ‘அய்யோ’ என்ற கவலைக்குரலும் ஆச்சரியக்குரலும் எவருக்கும் எழவே இல்லையே! தன் தலைவனைப் பற்றிய செய்தி, அது பொய்யாகவே இருக்கட்டும், அவர்களுடைய தொண்டர்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியையாவது தந்திருக்க வேண்டாமா? இந்தக் கண்டுகொள்ளாமை எந்தப் பண்பாட்டின் வெளிப்பாடு? புரியவில்லையே!
அரசியலார்க்குத்
தனிப்பட்ட வாழ்வு உண்டென்பதும், அத்தனிவாழ்வின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதும் உயர்ந்த கோட்பாடுதான். ஆனால், தனிப்பட்ட வாழ்விற்கும், ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் தொடர்பே இல்லையென்று கூறிவிட முடியுமா? தனிநபர் சார்ந்த ஒழுக்கம் காக்கப்பெற வேண்டுவது கட்டாயமில்லையா?
தனிமனிதக்
கவர்ச்சி மற்றும் இரசிக மனப்பான்மையோடு அரசியல் வேட்கையும் இணைவது சனநாயக வீழ்ச்சியின் அச்சாரம் என்பதே உண்மையாகும். தனிநபர் துதியும் சனநாயகமும் இணைந்து செல்ல முடியாது. தனிநபர் துதி மற்றும் வழிபாட்டில் அறிவுப் பார்வை இல்லை; அறிவியல் நோக்கமற்ற குடிகளால் சனநாயகம் வளராது. எழுபத்தைந்து ஆண்டுகாலச் சனநாயக இந்தியாவில் வளர்ந்துவரும் இத்தகைய மனநிலை நம் சனநாயகப் பண்பையே கேள்விக்குள்ளாக்குவதோடு, எம்மாதிரியான சனநாயகத்தை நாம் கட்டிக்காத்து வருகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
‘அந்தரங்கம் புனிதமானது’ என்பார்
எழுத்தாளர் செயகாந்தன். அந்தரங்கம் காக்கப்பெற வேண்டுவது அடிப்படை உரிமை. ஆனால், தனிமனித வாழ்வு மூலம் காக்கப்பெற வேண்டிய மாண்பும் மரியாதையும் காக்கப்பெறா நிலையில், பொதுவாழ்வில் தலைமை தேடி வருபவரின் ஒழுக்க விதிகளை நாம் கேள்விக்குள்ளாக்காமல் கடந்து செல்வது ‘பாவம்’ இல்லையா?
பெரும்பான்மை
மக்களின் ஒருமித்த ஓங்கு குரலில் பாவம் மரித்துப் போய்விடுமா? இது யார் வகுத்த நியதி? அய்யோ... பாவமே! இங்கு வீழ்ந்தது ஒரு தனிநபர் தலைமையல்ல; வீழ்ந்தது மாபெரும் சமூகத்தின் ஒழுக்க விதிகள். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும்
வள்ளுவன் வாக்கிற்கு நாம் தரும் மதிப்பு என்ன? கண்மூடித்தனமாகத் தலைமையை ஏற்றபின், தங்கள் தலைவர்களின் அனைத்து வீரசாகசங்களும் போற்றப்படுகையில், இவர்களது சுய ஒழுக்கக்கேடும் காத்தற்கரிய வாழ்வறமே என ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில்
இல்லை என்பதுதான் இங்குப் பெரிய சோகம்.
நியாயப்படுத்தும்
வரலாறு
தமிழ்நாட்டில்
இம்மாதிரியான நிகழ்வுகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதும் வரலாறு. மகாத்மா காந்தி அவர்கள் தான் சார்ந்த அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் ஒழுக்கம் எனும் அறத்தைப் போதித்ததோடு வாழ்ந்தும் காட்டினார். அகிம்சையை, பிரம்மச்சரியத்தை வாழ்வறமாகப் போற்றினார். இவரைத் தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறம் பேணினர். லோக்நாயக் என்று அழைக்கப்பெற்ற செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் இல்லற வாழ்வுப் பற்றி எத்தனை பேர் அறிவர்? மணவாழ்விலும் பிரம்மச்சரிய விரதத்தைப் பிறழாது கடைப்பிடித்தவர்.
தமிழகத்துக்
காந்திய சீடர்கள் அப்படித்தான் வாழ்ந்தனர். பெருந்தலைவர் காமராசருக்கென்று தனிவாழ்வு எதுவுமில்லை என்பதுதான்
அவர் சிறப்பு. கதராடை அணிந்த தலைவர்கள் பலர், அடிப்படைக் காந்திய சிந்தனையில் எந்தவிதச் சமரசமுமின்றி வாழ்ந்தனர். தனிமனித வாழ்வில் எளிமையையும் தூய்மையையும் கடைப்பிடித்தனர். அண்மையில் மறைந்த தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை இதற்கு நற்சான்று.
தமிழ்நாட்டின்
திராவிடர் ஆட்சித் தலைவர்களின் போக்கில் சில ஒழுக்க அதிர்வுகள் நிகழ்ந்தன. பல்திறன் கொண்ட கலைஞரின் தனி வாழ்வு மெச்சும்படியாய் இல்லை என்பதும் கசப்பான உண்மையே. த.வெ.க.
தலைவரின் அண்மை ஒழுக்கச் சிதைவைச் சிலர் கேள்விக்குள்ளாக்கியபோது, முந்தைய தலைவர்களின் வழியைத்தான் இவர் தொடர்கிறார் என்று நியாயப்படுத்தும் கலாச்சாரமாக மாறியுள்ளமையும் அசிங்கமே.
‘திமுக அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று
கவலைப்படும் எடப்பாடியின் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டமொன்றில்
கலந்துகொண்ட மேனாள் அமைச்சர், இந்நாள் மேலவை உறுப்பினர் தமிழ்நாட்டு முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ என்ற
திட்டத்தைக் கேலிசெய்யும் வகையில் ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, தன் கனவு நிறைவேறுமா? என்று கேட்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் கலாச்சாரம் தரம் தாழ்ந்து போயுள்ளது. வெட்கக்கேடு!