news-details
தலையங்கம்
அறம் கொண்ட மானுட வாழ்வு: இயற்கை நுண்ணறிவிலா? செயற்கை நுண்ணறிவிலா?

மானுட நாகரிகம் தன் பரிணாம வளர்ச்சியில் எண்ணற்றத் தொழில்நுட்பப் புரட்சிகளைக் கண்டுள்ளது. சக்கரம் முதல் நீராவி இயந்திரம் வரை, மின்சாரம் முதல் இணையம் வரை ஒவ்வொன்றும் மனித வாழ்வியலை மறுசீரமைத்துள்ளன; அடுத்தடுத்த தலைமுறைகளின் மாற்றங்களால் ஏற்படுகின்ற பரிணாமப் புரட்சியை விதைத்துள்ளன.

ஆனால், இன்று நாம் நின்றுகொண்டிருக்கும்செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) என்னும் தளம், முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் அறநெறி சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் பல வினாக்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மானுடத்தின் அறநெறி வாழ்வுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இன்றைய தேவை இயற்கை நுண்ணறிவா? செயற்கை நுண்ணறிவா? என்ற கோணத்தில் தர்க்கமும் கருத்துப் பரிமாற்றமும் கற்றறிந்தோர் அவைகளில் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒருபுறம், பொருளாதார மேம்பாட்டிற்கானமந்திரக்கோலாகஇது பார்க்கப்படும் வேளையில், மறுபுறம் மனிதனின்இயற்கை நுண்ணறிவு (Natural Intelligence) மழுங்கடிக்கப்படுகிறதா? என்ற அச்சமும் இயல்பாகவே நம்மில் எழுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சிமாநாடு, இந்த விவாதத்திற்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. டெல்லியில் நடைபெற்றகார்னகி-அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண் டேஷன்நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் மேனாள் பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவின் நிலையை மிகவும் நேர்மறையாகக் கணித்துள்ளார். அதாவது, “இந்தியா செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிப்பதற்கும், அதனைச் சமூகத்தில் பெருமளவில் பயன்படுத்துவதற்கும் மிகச்சரியான நிலையில் உள்ளதுஎன்றும், “மேற்கத்திய நாடுகளில் AI குறித்த அச்சமும், வேலைவாய்ப்பு இழப்பு பற்றிய கவலையும் நிலவும் சூழலில், இந்தியாவில் பெரும் வியப்பூட்டும் வகையில் நம்பிக்கையும் உற்சாகமும் இருப்பதை என்னால் காண முடிகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சுட்டிக்காட்டியபடி, இந்தியாவின்எண்ணிமப் பொதுக் கட்டமைப்பு (டிஜிட்டல்) என்பது AI தொழில்நுட்பத்தைக் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்வதற்கானபரவலாக்கப் பாதைகளாகஅமைந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் எத்தகைய அடித்தளத்தில் கட்டமைக்கப்படுகிறது என்பதே பெரும் கேள்வி.

பொருளாதாரத் தரவுகளைத் தாண்டி, ஒரு தனி மனிதனின், சமூகத்தின், நாட்டின்அறநெறி வாழ்வுஎன்பது அந்தந்தத் தளங்களில் அதன் நேர்மையிலும், நிர்வாகத் திறனிலும் அடங்கியுள்ளது. டெல்லியில் நடந்தேறிய AI உச்சி மாநாடு குறித்து ஒன்றிய பா... அரசு பெரும் வெற்றியென முழங்கினாலும், உண்மையில் அம்மாநாடு இந்தியாவிற்கு வழங்கிய பிம்பம் சற்று கவலையளிப்பதாகவே உள்ளது என்கின்றனர் பல தொழில்நுட்ப வல்லுநர்களும்  முதலீட்டாளர்களும். மூத்த இதழியலாளர் வீர் சங்வி தனது வலைதள பக்கத்தில் (virsanghvi.com, பிப். 19, 2026, 3:35 pm) பதிவிட்டுள்ள விமர்சனக் கட்டுரையில் இந்த மாநாட்டைத்தலைகுனிய வைத்த நிகழ்வுஎன்று சாடுகிறார்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடும் ஒரு மாநாட்டில், அடிப்படைஇயற்கை நுண்ணறிவு (Natural Intelligence) மற்றும் பொது நிர்வாகத் திறன் பற்றாக்குறையாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு நடந்த இடத்தில் நிகழ்ந்த திருட்டுகள், வைஃபை (Wi-Fi) குளறுபடிகள் மற்றும்டிஜிட்டல் இந்தியாஎன்று முழங்கிக்கொண்டே யூ.பி.. (UPI) பரிவர்த்தனைகளை மறுத்து, கூப்பன்களை வற்புறுத்தியது போன்றவை ஒரு தொழில்நுட்ப வல்லரசிற்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மிக முக்கியமாக, ‘கல்கோட்டியாஸ்போன்ற கல்வி நிறுவனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரோபோ நாயைத் தாங்களே கண்டு பிடித்ததாகக் கூறி ஏமாற்ற முயன்றது, நம் நாட்டின்ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறையில் நிலவும் அறநெறி வீழ்ச்சியையே காட்டுகிறது. குறுக்கு வழியில் புகழ்பெறத் துடிக்கும் இத்தகைய மனநிலை, செயற்கை நுண்ணறிவைவிட ஆபத்தானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அறநெறி வாழ்வு என்பது சக மனிதனை மதிப்பதில் தொடங்குகிறது. டெல்லி மாநாட்டின் போது வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சாதாரண குடிமக்களின் நலனை முற்றிலும் புறந்தள்ளியுள்ளது. சாலைகள் மூடப்பட்டதால் முடங்கிய போக்குவரத்து, ஒரு தொழில்நுட்ப மாநாட்டின் வெற்றியை விடவும் நிர்வாகத்தின் தோல்வியையே உலகிற்குப் பறைசாற்றியது. வீர் சங்வி குறிப்பிட்டது போல, 30 நிமிடப் பயணத்தை 5 மணி நேரமாக மாற்றும் நிர்வாகத் திறமையின்மைநுண்ணறிவுஎன்ற சொல்லுக்கே முரணானது.

செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஆனால், சில வேலைகள் மறையும்; பல வேலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்பதே நம் கண்முன் நிற்கும் கள எதார்த்தம். ரிஷி சுனக் குறிப்பிட்டது போல, இந்த மாற்றத்தைத் தடுப்பது மட்டுமல்ல ஓர் அரசின் பணி! மாறாக, மக்கள் புதிய பணிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளமறுதிறன்பயிற்சியும், கல்விச் சீர்திருத்தமும் வழங்கவேண்டும் என்பதே!

இங்கேதான் அறநெறி சார்ந்த கேள்வி எழுகிறது. தரம் குறைந்த கல்வி நிறுவனங்கள் விளம்பரங்களை மட்டுமே நம்பி அப்பாவிப் பெற்றோர்களை ஏமாற்றிப் பணம் ஈட்டும் சூழலில், உண்மையானஅறிவாற்றல் மேம்பாடுஎன்பது பலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். கல்வி என்பது வெறும் வணிகமாக மாறும்போது, அங்கு இயற்கை நுண்ணறிவு மரித்துப்போகிறது.

ரிஷி சுனக் தனது உரையில் ஓர் ஆழமான தத்துவார்த்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். கூரை மேலிருந்து முழங்கப்பட வேண்டிய பேருண்மை அது. அதாவது, “செயற்கை நுண்ணறிவிடம் மிகுதியானஅறிவு (Knowledge) இருக்கலாம்; ஆனால், அறிவு என்பதுஞானம் (Wisdom) அல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாதுஎன்கிறார் ரிஷி சுனக். இது அறிவை விடவும் ஞானமே  மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சியின் மையத்தில் எப்போதும் மனிதனின் முடிவெடுக்கும் திறனே இருக்க வேண்டும்.

இயற்கை நுண்ணறிவு என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில், சரியான முறையில் அறநெறிக் கோட்பாடுகளுடன் அந்தத் தகவலைப் பயன்படுத்துவதாகும். ஓர் இயந்திரம் தரவுகளை ஆராயலாம்; ஆனால், அதனால்அன்புசெலுத்த முடியாது; ‘இரக்கம்காட்ட முடியாது; ‘நேர்மைபேண முடியாது; ‘ஞானத்துடன்முடிவெடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 அறிவு என்பது கற்றல், அனுபவம் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் கிடைப்பது. ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்தும் முறையை அறிந்திருப்பது அறிவு; ஒரு பொறியாளர் விண்ணை முட்டும் கட்டடத்தை எழுப்பும் நுட்பத்தைப் புரிந்திருப்பது அறிவு; ஒரு கணினி வல்லுநர் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது அறிவு. இவை அனைத்தும் உலகியல் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையே! அறிவு என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைக்கொண்டு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றவும் முடியும்; அதே கத்தியைக் கொண்டு உயிரைப் பறிக்கவும் முடியும். ஆனால், ஞானம் என்பது வெறும் மூளை சார்ந்தது அல்ல; மாறாக, அது இதயம் மற்றும் அறம் சார்ந்தது. ஒரு செயலால் தனக்கு இலாபம் கிடைக்குமா? என்று பார்ப்பது அறிவு; அந்தச் செயலால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்று சிந்திப்பது ஞானம். அறிவுஎப்படி?’ (How) என்பதை விளக்கும்; ஞானம்ஏன்?’ (Why) என்பதை உணர்த்தும்.

எனவே, மானுடத்தின் எதிர்காலம் என்பது செயற்கை நுண்ணறிவைத் தூற்றுவதிலோ அல்லது இயற்கை நுண்ணறிவை முற்றிலுமாக மறப்பதிலோ இல்லை; மாறாக, இவை இரண்டையும்அறநெறிஎன்னும் நூலால் இணைப்பதிலேயே உள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்குச் செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்; ஆனால், அந்தப் பொருளாதாரத்தை வழிநடத்தும்அறநெறிஎன்பது மனிதனின் இயற்கை நுண்ணறிவிலிருந்தே வரவேண்டும்.

இதுவே டெல்லி மாநாடு நமக்குக் கற்றுத்தந்த பாடம். எவ்வளவு சிறந்த தொழில்நுட்பம் கைவசம் இருந்தாலும், அடிப்படை நேர்மையும், நிர்வாகத் திறனும், குடிமக்கள் மீதான அக்கறையும் இல்லையெனில் அது வெறும்செயற்கைஅலங்காரமாகவே முடியும். மானுடத்தின் அறநெறி வாழ்வு சிறக்க, இயந்திரத்தின்அறிவைவிடவும், மனிதனின்ஞானமேஇன்றைய தலையாயத் தேவை.

தரவுகள் யாவும் அறிவாகும் - அதைத்

தர்மம் காக்கப் பயன்படுத்துதல் ஞானமாகும்!

பெருகும் கணினி அறிவிலும் - என்றும்

பேணும் மனிதநேய ஞானமே மேலானது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்