news-details
ஆன்மிகம்
தொடரும் வரலாறு (A History that Continues)

திரு அவையின் நூற்றாண்டுப் படிப்பினை

1891-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களோடு திரு அவையின் படிப்பினை தொடங்குகிறது. தொழில் புரட்சியின் பின்புலத்தில் அவர் தொழில் - தொழிலாளர் பிரச்சினை பற்றிப் பேசுகிறார்.

திருத்தந்தை 23-ஆம் யோவான், ‘அன்னையும் ஆசிரியையும் என்ற சுற்றுமடலில் வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவக் கேட்கிறார்.

2-ஆம் வத்திக்கான்இன்றைய உலகில் திரு அவை எண். 69, “உலக நலன்கள், அனைத்து மனிதர்களுக்காகவே உள்ளன என்கிறது. அன்பை அடிப்படையாகக் கொண்ட நீதியில் உலகப் பொருள்கள் பகிரப்படவேண்டும். ஒவ்வொருவரும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான தனிச்சொத்தைப் பெற உரிமை உண்டு. இந்தத் தனிச்சொத்திற்கும் சமூகக் கடமை உண்டு. மிகப்பெரும் இடர்ப்பாட்டிலிருப்பவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையானதை அதிகமாகச் சொத்து வைத்திருப்பவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள உரிமை உண்டு என்கிறார்கள் திரு மறைத் தந்தையர்கள்.

ஏழைகள் கிறிஸ்துவின் பகராளிகள் (Vicars) என்று திருத்தந்தை 6-ஆம் பவுல் 1967-இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழைகள் சார்பாக உரையாற்றுகிறார். ‘மக்களின் முன்னேற்றம் (1967) என்ற சுற்றுமடல், ஏழைகள் அடிப்படைத் தேவைகளின்றி உழலும்போது, மற்றவர்கள் பேராசையால் தேவைக்கு அதிகமாக உலகச் சொத்தை அபகரிக்க உரிமை இல்லை என்கிறார்.

2-ஆம் புனித யோவான் பவுலின்சமூக அக்கறை (Sollicitudo Rei Socialis - 1987) என்ற சுற்றுமடல், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவாததைசெல்வரும் இலாசரும் (லூக் 16:19-31) என்ற திருவிவிலியப் பகுதியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்.

மனித உழைப்பு (Laborem Excercens - 1981) சமூகப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள உதவும் சாவி என்கிறார்.

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்உண்மையில் அன்பு (Caritas in Veritate) என்ற மடலில், ஏழை மக்களின் பசி என்பது பொருளாதாரப் பற்றாக்குறையால் வருவது அல்ல; மாறாக, நியாயமான பங்கீடு செய்யப்படாததால் வருகிறது என்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் - இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் பேரவைகள் மெடலின் (1968), புவேப்லா (1979) Santo Domingo (1992) Aparecida (2007) நகரங்களில் நடந்த கூட்டங்களை எடுத்துக்கூறியும், புனித ஆஸ்கர் ரொமெரோ பேராயருடைய கொலையை எடுத்துக் கூறியும், பெரு நாட்டில் தான் செய்த பணியை நினைவுகூர்ந்தும் திரு அவையின் தெளிந்து தேர்தல் முறையை அறிமுகப்படுத்துகிறார்.

ஏழ்மையையும் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கும் பாவ அமைப்புகளான பொருளாதார சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தையும் கடுமையாகச் சாடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவர் நம்மை அன்பு செய்கிறார் (Dilexit Nosஎன்ற திருத்தூது ஊக்க உரையில், சமூகப் பாவங்கள் ஒன்று சேர்ந்து பாவ அமைப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் திருத்தந்தை லியோ.

ஏழைகள் பொருளாதாரத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நலத்திட்டங்கள் தற்காலிக உதவி. பணக்காரருடைய தொழில் இலாபத்தில் இருந்து கசியும் உதவி (trickle down drops) தீர்வு அல்ல என்கிறார்.

சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் ஏழைகளையே அதிகம் பாதிக்கின்றன.

நற்செய்தி என்பது தனிநபர்களையும், இறைவனோடு கூடிய தனிநபர் உறவுகளையும் பற்றி மட்டும் பேசவில்லை; குழுமங்கள், சமுதாயம், உலகம் முழுவதுமே நலமாக்குவது பற்றியும் பேசுகிறது (லூக் 4:43).

ஏழைகள் எழுவாய்கள்

ஏழைகள் செயப்படுபொருள் அல்ல (objects); எழுவாய்கள் (subjects). ஏழைகள் தங்களுக்கான பண்பாட்டை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள், நற்செய்தியின் முகவர்கள். அவர்களோடு இணைந்து அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவது நீதியின்பால் நம் மீது சுமத்தப்பட்ட கடமை ஆகும் (உரோ 13:8).

ஏழைகளில் காணும் நல்லவைகளுக்காக, அவர்களுடைய நலமான பண்பாட்டிற்காக, இக்கட்டான நெருக்கடி வேளைகளிலும் அவர்களிடம் காணப்படும் இறை நம்பிக்கைக்காக அவர்களைப் பாராட்டுவோம்.

ஏழைகள் மத்தியில் சென்று வாழ்வதைத் திருத்தந்தை பாராட்டுகிறார்.

ஏழைகள் நமக்கு நற்செய்தி அறிவிக்க அனுமதிப்போம். கடவுள் ஏழைகள் வழியாக நம்மிடம் பகிர விரும்பும் ஞானத்தைத் திறந்த மனத்தோடு ஏற்று வாழ்வோம்.