2016-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. 136 தொகுதிகளைத் தனித்தே வென்றது. அ.தி.மு.க.வை விட ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றது. தி.மு.க. கூட்டணி 98 தொகுதிகளைப் பெற்று எதிர்க்கட்சியானது. 2021 - தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைப் பிடித்து, ஆட்சிப் பீடம் ஏறியது. அ.தி.மு.க. 75 தொகுதிகளை எடுத்தது. நான்கு விழுக்காடு வாக்கு வித்தியாசமே ஆட்சி மாற்றம் ஏற்பட அடிப்படைக் காரணமானது. வாக்கு அரசியலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. வாக்குகளைக் கோர்க்க ஒவ்வொரு சிறிய கட்சியின் வாக்கும் முக்கியமானது. அதற்குத் தேர்தல் காலக் கூட்டணிகள் காலத்தே அவசியமானது.
1967 முதலே கூட்டணி
அமைப்பது, வெற்றி காண்பது தி.மு.க.வின் தேர்தல் யுக்தி. தமிழ்நாடு முதல்வர் கூட்டணிக் கலையில் வித்தகம் பெற்றவர் என அரசியல் விமர்சகர்கள்
சொல்கிறார்கள். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு ‘சீட்’ இறுக்கிப் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயரும் உண்டு. வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு கொள்கைகள் என்றாலும், அதிக இடங்கள், அதிக வெற்றி மட்டுமே கட்சிகளின் இலக்கு.
2026 - தமிழ்நாடு தேர்தல்
கூட்டணியில் வலதுசாரி, இடதுசாரி, மையம் என்று பிரிந்து இருக்கிறது. தி.மு.க.
தலைமையில் உள்ள இடதுசாரிக் கூட்டணி சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் அனைவருக்கும் எனக் களம் காண்கிறது. ‘இந்தியா’ கூட்டணி என்பதைவிட ‘மதச்சார்பற்ற கூட்டணி’ எனத் தன்னைத்தானே பிரகடனம் செய்கிறது. மாநில மற்றும் மனித உரிமைகளை நசுக்குகிற, ஒன்றிய பா.ச.க.
அரசைக் கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை
என்.டி.ஏ. கூட்டணி எதிர்
தமிழ்நாடு எனத் தி.மு.க.
கட்டமைக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி மாநிலச் சுயாட்சி, மாநில உரிமைகள், தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவர்களுக்கான சம உரிமை, சம
வாய்ப்பு, அவர்களின் மொழி, கலாச்சார, பண்பாடு காப்பு என உரத்தக் குரல்
கொடுக்கிறது. இனவாரி, மொழிவாரி, மதவாரி சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, அடிப்படை உரிமை, வாழ்வுரிமை என்பதில் சமூகநீதி பேசுகிறது; சமத்துவம் போதிக்கிறது.
தமிழ்நாட்டில்
என்.டி.ஏ. கூட்டணி
அ.தி.மு.க.
தலைமையில் அமைந்ததாக வெளித்தோற்றம் உள்ளது. என்.டி.ஏ. கூட்டணியை
இயக்குவது அமித்ஷா. அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இவர்கள் வலதுசாரிச் சித்தாந்தம் கொண்டவர்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எந்த இழிநிலைக்கும் இறங்குபவர்கள். மனுவாதிகள். மனுதர்மப்படி சமூக நிலைகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள். தேசியவாதம் பேசுபவர்கள். பழமை, பாரம்பரியம் என்பதில் தங்கள் உயர் நிலையை விட்டு இறங்காதவர்கள். முதலாளித்துவச் சிந்தனையில் தம் பாசிசக் கொள்கைகளை வடிவு
செய்பவர்கள். தம் அனைத்துச் செயல் திட்டங்களையும் பணிகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இருந்து பெறுபவர்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போக என்றும் துடிப்பவர்கள். இவர்களோடு இந்த இந்துத்துவா என்.டி.ஏ.வோடு
தமிழ்நாட்டு மக்கள் எதிர் நிற்பதே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களமாகும். இதை தமிழ்நாடு முதல்வர் என். டி.ஏ. எதிர்
தமிழ்நாடு என உருவாக்கம் தருகிறார்.
பா.ச.க.வோடு
தமிழ்நாட்டில் கூட்டணி சேரும் எந்த அரசியல் கட்சியும் தோற்றுப் போகும் என்பது தமிழ்நாடு அரசியலின் பாலபாடம். தமிழ்நாடு தேர்தல் களம் வித்தியாசமானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் புரியாத புதிரானது.
தமிழகத்
தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் மூன்றாவது அணி மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் கூட்டணி குறித்து ஒரு கவர்ச்சி சலுகை கொடுத்தது. அது ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பதே. அடிப்படையில் அது ஆட்சி அதிகாரம் என்பதைப் பொதுமக்களுக்கு, விளிம்புநிலை மக்களுக்குச் சேவை என்பதைப் புறந்தள்ளும் அறமற்ற சொல்லாடல் ஆகும். இந்த மாய வலையில் எந்த அரசியல் கட்சியும் சிக்காமல், மாற்று வழியிலேயே சிந்தனை செய்தன.
தமிழ்நாட்டின்
இரு துருவ அரசியலில், இரு திராவிடக் கட்சிகளிடம் தங்கள் அதிகத் தொகுதி வேண்டும்
பேர வலிமையை இதைக் கொண்டே அதிகமாக்கினர். இது இரு கூட்டணிகளிலும் கூட்டணி வாக்குப் பரிமாற்றத்தில், அடிமட்டத் தொண்டர்கள் இணைந்து செய்யும் தேர்தல் சூழலைச் சுணக்கமாக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும் தன் கட்டமைப்பை உருவாக்காமல், அடிமட்டத்தில் எந்தவொரு மக்கள் சேவையும் செய்யாமல் பெரிய கட்சிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்கிற நிலை தமிழ்நாட்டு அரசியலின் அசிங்கம்.
தி.மு.க. தலைமையில்
உள்ள மதச்சார்பற்றக் கூட்டணி தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், இரண்டாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தல்களிலும், சிறுபான்மையினர் வாக்குகளை நம்பியே களம் காண்கிறது. 2024-நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலன் என்பதில்
பா.ச.க.வோடு
கூட்டணி இல்லை என்றது. ‘எப்பொழுதும் கூட்டணி இல்லை’ எனவும் வீராப்புப் பேசியது. அழுத்தங்கள் காரணமாக மீண்டும் பா.ச.க.வோடு ஒட்டிக் கொண்டது.
செல்வி.
ஜெயலலிதா காலந்தொட்டு அ.தி.மு.க. மென்மையான போக்கு
கொண்ட இந்துத்துவா கட்சி என்பதால் அவர்கள் சிறுபான்மை மக்கள் குறித்து கவலை கொள்வதில்லை. சிறுபான்மை வாக்குகள் குறித்த அ.தி.மு.க.வின் அக்கறையின்மை
அவர்களின் தொடர்
தோல்விகளுக்குக் காரணம் என்ற உண்மையை என்றும் உணர மறுக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லும் மாண்பு கொண்டவர்கள். 2026 - ஒன்றிய வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் காலக் கட்டாய நிலையிலும் நிதி ஒதுக்காத பா.ச.க.வுக்கு அ.தி.மு.க. பாராட்டுப் பத்திரம்
வாசிக்கிறது. அ.தி.மு.க. தன் கூட்டணியால்
வென்று விடுவோம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறது.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எனும் ஆடுபுலி ஆட்டத்தால் மக்கள் வியப்பு அடைகிறார்கள். மனத்தில் ஆச்சரியங்களை மட்டுமல்ல, ‘இவர்கள் ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறார்கள்?’ எனவும் ஒருசில
அரசியல் கட்சிகளை வெறுக்கவும் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் லொடுக்குப் பாண்டி உள்பட 65 சிறு
உதிரி, சாதி லெட்டர் பேடு கட்சிகளும்
எதையாவது செய்து, எப்படியாவது சட்டமன்றத்தில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை அருவருப்பான கூட்டணி அமைப்பு அரசியலாக அமைகிறது. வருங்காலங்களில், கூட்டணித் தொகுதி பங்கீடுகள், தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்ற பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போகலாம். தொலைக்காட்சிகள் நொடிக்கு நொடி பரபரப்பு ஊட்டுவதும் நடக்கும். கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் கட்சிகளின் வாக்கு விழுக்காடுகள், கட்சிகளின் வெகுசன ஆதரவு, கட்சித் தலைவர்களின் புகழ் முகங்கள், ஊடக வெளிச்சம் என்பது கருத்தில் கொள்ளப்படும். அடாவடி அரசியல்வாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். மக்கள் நலனே முக்கியம் எனக் கருதாத அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு மட்டுமல்ல, அரசியலில் இருந்தே புறந்தள்ளப்பட வேண்டியவர்கள்.
அவர்களைப்
பொதுமக்கள் அடையாளம் காண்பர் என்பதே முற்றிலும் தெளிவான அரசியல் அறமாகும்.