news-details
ஆன்மிகம்
நான் இப்போது அருள்பணியாளராக இல்லை!

அருள்பணியாளர்கள் மிகச் சிறந்தவர்களாக அப்பழுக்கற்றவர்களாக இருக்கவேண்டும் என்றுதான் நம்மில் பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களைப்போல அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகக் கடினமானவை. அருள்பணியாளர்களின் வாழ்வு பெரும் விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் உள்ளாக்கப்படுகிற காலம் இது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொய்கள் மற்றும் வதந்திகள் எனும் சேற்றில் சிக்கிக் கிடக்கிறார்கள்.

1964-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மறைமாவட்டங்களிலிருந்து வத்திக்கானுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் 69,063 அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை ஆண்டுதோறும் 26 விழுக்காடு அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி நிலையிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், அருள்பணியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் அதே அருள்பணி நிலைக்குத் திரும்பி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது என்று இணையதளத்தில் வாசிக்க நேரிட்டது.

உணர்ச்சி ரீதியான உறுதியற்ற சூழ்நிலைகள், மணத்துறவு, நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி, மனச் சோர்வு, திரு அவைத் தலைவர்களோடு ஏற்படும் கருத்து வேறுபாடு, மீளமுடியாத பிற காரணிகள் மற்றும் இன்னும் பிற காரணிகள் அருள்பணி நிலையிலிருந்து விலகுவதற்குக் காரணிகளாக இருக்கின்றன. நம்பிக்கைப் பயணத்தில் யூதாஸ் விழலாம்; தோல்வி அடையலாம்; பேதுரு விழலாம்; அருள்பணியாளர்களும் விழலாம்; தோல்வி அடையலாம்.

அமெரிக்க இறையியலாளரான ஸ்காட்ஹான் ஏப்ரல் 25-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டு EWTN தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்திய உரையில், தனது ஆன்மிக வழிகாட்டியிடமிருந்து கேட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் பற்றிய ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.

இளைஞர் ஒருவர் அருள்பணியாளராக ஆக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதனால் அவருடைய ஆயர் அவரைப் படிப்பதற்காக உரோமைக்கு அனுப்பினார். அவர் படித்து முடித்ததும் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சில வருடங்கள் தனது மறைமாவட்டத்தில் பணியாற்றினார். அவருடைய ஆயர் அவரை மேற்படிப்பிற்காக மீண்டும் உரோமைக்கு அனுப்பினார். அங்கு அவர் படித்துக்கொண்டிருந்த போது, தினமும் செபம் செய்வதற்காக அருகிலிருந்த ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். அந்த ஆலய வாசலில் பிச்சைக்காரர்கள் குழு யாசகம் கேட்டு அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரைக் கண்டதும், ஏதோ விவரிக்க முடியாத ஒருவிதமான சங்கடம் அந்த அருள்பணியாளருக்கு ஏற்பட்டது.

அவர் அந்தப் பிச்சைக்காரரிடம் சென்று, “உங்களை எனக்குத் தெரியும். நாம் இருவரும் சேர்ந்து தானே குருமடத்தில் படித்தோம் என்று கேட்டார். அவர், ‘ஆமாம் என்று கூறியதோடு “நானும் உங்களுடன் உரோமையில் படித்தேன், திருநிலைப்படுத்தப்பட்டேன் என்று சோகத்துடன் தெரிவித்தார். திகைத்துப்போன அருள்பணியாளர், “உங்களுக்கு என்னதான் நடந்தது?” என்று கேட்டார். அதற்கு அவர், “என் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்தேன். இறுதியில் அருள்பணியாளர் பணியைத் துறந்துவிட்டேன். அருள்பணியாளர் பொறுப்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. நான் எல்லாவற்றையும் இழந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன் என்று கூறினார். அந்த அருள்பணியாளரால் அந்தப் பிச்சைக்காரரை மறக்கமுடியவில்லை. அவருக்காகத் தொடர்ந்து செபம் செய்தார். அவர் படிப்புப் பயிற்சி முடிவுக்கு வந்துகொண்டிருந்தது.

மாணவர்கள் அனைவரும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களிடமிருந்து தனிப்பட்ட ஆசிர்வாதங்களைப் பெற அழைக்கப்பட்டனர். அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், இந்த அருள்பணியாளர் ஆசிர்வாதம் பெறுவதற்காக மண்டியிட்டபோது, மனம் முழுவதும் அந்தப் பிச்சைக்காரரைப் பற்றியே நிறைந்திருந்தது. அதனால் அவர் திடீரென்று, “புனித தந்தையே, உரோமையில் ஓர் ஆலயத்திற்கு வெளியே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்காக இறைவேண்டல் செய்யுங்கள். அவர் ஓர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்; ஆனால், பணியைத் துறந்துவிட்டார். அவருடைய அருள்பணிப் பொறுப்பும் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறி விட்டார்.

கோபமடைந்த உதவியாளர்கள் அவரை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியதால், அவர் பேசி முடிப்பதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை.

சில நாள்களுக்குப் பிறகு வத்திக்கானைச் சேர்ந்த பணியாளர்கள் அந்த அருள்பணியாளரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டனர். அவரும், அந்தப் பிச்சைக்காரரும், அதாவது மேனாள் அருள்பணியாளரும் திருத்தந்தையுடன் இரவு உணவு உண்ண அழைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அருள்பணியாளரிடம் தெரிவித்தனர். உற்சாகமும் ஆவலும் அடைந்த அவர், தன் வகுப்புத் தோழரைக் கடைசியாகப் பார்த்த ஆலயத்திற்கு விரைந்தார். அங்கே சில பிச்சைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். அவருடைய மேனாள் வகுப்புத் தோழரும் அந்தச் சிலரில் ஒருவராக இருந்தார்.

இவர் அந்த மனிதரை அணுகி, “நான் திருத்தந்தையைச் சந்தித்தேன்; அவர் உங்களுக்காகச் செபிப்பதாகக் கூறினார். அது மட்டுமல்ல, அவர் நம்மை இரவு உணவிற்காகத் தனது தனிப்பட்ட இல்லத்திற்கு அழைத்துள்ளார் என்றார்.

நடக்காத காரியம். என்னைப் பாருங்கள்... நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். நான் நீண்ட காலமாகக் குளிக்கவில்லை. என் உடைகளும் அழுக்கான நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் அவரை நான் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டார்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த அருள்பணியாளர், “நான் உங்களுக்காக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கே நீங்கள் குளித்து சவரம் செய்துகொள்ளலாம். உங்களுக்குப் பொருந்தக்கூடிய உடைகளும் என்னிடம் உள்ளன என்றார்.

அந்தப் பிச்சைக்கார அருள்பணியாளர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் திருத்தந்தையுடன் இரவு உணவு உண்ணப் புறப்பட்டனர்.

இருவரும் புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய வாயில்கள் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்குத் திருத்தந்தையின் போலந்து நாட்டைச் சார்ந்த செயலாளரான மான்சிக்னோர் டிசிவிஸ் அவர்களை வரவேற்றார். அவர் அவர்களை உணவு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்குத் திருத்தந்தை அவர்களுக்காகக் காத்திருந்தார். அறிமுகங்களுக்குப் பிறகு, அவர்கள் ஓர் அருமையான உணவை உண்ண அமர்ந்தனர். உணவு முடிந்ததும், திருத்தந்தை தனது செயலாளருக்குச் சைகை காட்டினார். அவர் எழுந்து அருள்பணியாளரைத் தன்னைப் பின்தொடரும்படி சைகை காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறினார். பிச்சைக்காரரான அருள்பணியாளரும் திருத்தந்தையும் தனிமையில் உரையாடினர்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு திருத்தந்தை அவர்களை மீண்டும் உள்ளே அழைத்தார். அவர்களுக்கிடையான உரையாடல் யாரும் அறியாத இரகசியமாகவே புதைக்கப்பட்டது. என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை.

புனித பீட்டர் சதுக்கத்தைக் கடந்து சென்ற போது, மிகுந்த ஆர்வம் மேலிட அந்த அருள்பணியாளர், தான் அறைக்கு வெளியே இருந்தபோது ‘என்ன நடந்தது?’ என்று அந்தப் பிச்சைக்கார அருள்பணியாளரிடம் ஆவலுடன் கேட்டார்.

கண்ணீரோடு பேச ஆரம்பித்தார். “நாங்கள் தனியாக இருந்தபோது திருத்தந்தை என்னை நோக்கித் திரும்பி, ‘அருள்பணியாளரே, நான் உங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்புகிறேன் என்றார். நான் பெரும் குழப்பத்துடனும் வேதனையுடனும் ‘என்னால் முடியாது; நான் இப்போது அருள்பணியாளராக இல்லை என்று பதிலளித்தேன். திருத்தந்தை என்னை அன்புடனும் கருணையுடனும் பார்த்தார். பிறகு அவர் தனது வலது கையை உயர்த்தி, விரலை அசைத்து, ‘ஒருமுறை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டால் எப்போதும் அருள்பணியாளர்தான் என்று கூறினார். என்னுடைய பிரச்சினையைத் திருத்தந்தையுடன் பகிர்ந்துகொண்டேன். திருத்தந்தையிடம் பாவ சங்கீர்த்தனம் செய்தேன்.”

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்தார்... “உரோமையின் ஆயர் மற்றும் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் என்ற முறையில் உங்கள் அருள்பணி தகுதிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குகிறேன் என்றார் திருத்தந்தை. நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதேன். மீண்டும் திருத்தந்தை என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய கோரிக்கை வைத்தார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்தார். செபம் மற்றும் தியானத்திற்காகச் சிறிது நேரம் ஒதுக்கிய பிறகு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் கூறினார்: ‘நீங்கள் இங்கிருந்து சென்றதும், நீங்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆலயத்திற்குச் சென்று, அந்தப் பங்குத்தந்தையைச் சந்திக்கவேண்டும்; அங்கு உங்களை உதவி பங்குத்தந்தையாக நியமனம் செய்யச் சொல்கிறேன். ஆலய வாசல்களில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களைக் கவனிக்கும் சிறப்புப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும் என்றார்.”

அருள்பணியாளர் திரு அவைச் சட்டங்கள் மற்றும் தார்மிகக் கடமைகளின்படி வாழவேண்டும் என்பது உண்மை. அருள்பொழிவு அருள்சாதனம் நிரந்தரத் தன்மையுடையது என்பதற்காகத் தனிப்பட்ட விருப்பம் போல் வாழலாம் என்பதல்ல.

அருள்பணியாளர் எப்படி அருள்பணி நிலையிலிருந்து வெளியேறினார்? என்ன செய்தார்? என்பதும் இதில் அடங்கும். இரக்கமுள்ள தந்தையைப் போலவே ஞானத்துடனும் ஆன்மிகப் பொறுப்புடனும் திரு அவை எப்போதும் கதவைத் திறந்து வைத்திருக்கிறது; வைத்திருக்கவேண்டும். ஓர் அருள்பணியாளர் மனிதனைப் பிரதிநிதிப்படுத்துகிறார். அவரது தகுதி மனிதர்களுக்குச் செய்கிற நலமான பணியால்தான் அளவிடப்படுகிறது.