“பெண்களின் மனித மாண்பும் உரிமைகளும் உலகளாவிய மனித உரிமைகளின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும்” எனப் பெண்களின் மாண்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. படைப்புகளிலேயே பெண்ணும் ஆணும் மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறார்கள். மனிதர்கள் உன்னதமானவர்கள் என்பது சமூகத்தின் உன்னதச் சிந்தனை. அவர்கள் மனித மாண்புடன் நடத்தப்படவேண்டும் என்பது ஒவ்வொரு மதத்தின் அடிப்படை நோக்கமாகவும், மனித உரிமைகளின் முக்கிய அம்சமாகவும் உள்ளது. மனித மாண்பு என்பது இறைவன் உருவிலும், சாயலிலும் படைத்ததில் வேரூன்றியுள்ளது எனக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுட்டிக்காட்டுகின்றது. “மனித மாண்பு காக்கப்படும் இடத்தில்தான் உண்மையான சுதந்திரம் வாழ்கிறது” என்கிறார் மகாத்மா காந்தி. மனித மாண்பு என்பது, ஒவ்வொரு மனிதரும் இயல்பாகவே மதிப்பும் மரியாதையும் பெறவேண்டியவர் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படைக் கருத்தாகும். ஒருவரின் இனம், மதம், பாலினம், சமூக நிலை, பொருளாதார நிலை போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல், எல்லா மனிதர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதே மனித மாண்பின் மையம்.
ஆண்களை
மனித இனத்தின் அடிப்படையாக (இயல்பாக) கருதுவது, மனித சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடு
எனப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளரான கரோலைன் கிரியாதோ பெரேஸ், ‘invisible women’ என்னும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைச் சமமாக நடத்தாமையே இந்த வேறுபாட்டிற்குக் காரணம்!
பெண்ணிய
மாண்பும் மதிப்பும் “பெண்களை மதிப்பதும் அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவதும் அல்லது அவர்களுடன் ‘மரியாதையாக
நடப்பது’ அல்லது அவர்களுக்கு ‘வழிவிடுவது’ போன்றது மட்டுமல்ல; அது பெண்களைச் சமமான, சுதந்திரமான மனிதர்களாக
நாம் பார்க்கும் விதத்திலும் பழகும் விதத்திலும் ஏற்படும் ஓர் அடிப்படை மாற்றமாகும்.
பெண்களை வெறும் ‘தாய்’ அல்லது ‘சகோதரி’ போன்ற உறவுமுறைப் பிம்பங்களுக்குள் மட்டும் அடைத்துப் பார்க்காமல்,
அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், முடிவெடுக்கும் அதிகாரமும் கொண்ட
தனிமனிதர்களாகப் பார்ப்பதே உண்மையான கண்ணியமாகும்.”
மனித மாண்பு ஆண்களைக்
குறிக்கும் அடைமொழியா?
இன்றைய
காலச்சூழலில் மனித மாண்பு ஆண்களின் மதிப்பையும் சுதந்திரத்தையும் குறிக்கும் கருத்தாகச்
செயல்படுவதைக் காண முடிகிறது. மாறாக, அது பெண்களையும் உள்ளடக்கியது என்ற புரிதல் காலத்தின்
அவசியமாகிறது. “பெண்களின் சுயமரியாதைதான் சமூக விடுதலையின் அடித்தளம்” என அன்னை சாவித்ரிபாய் பூலே கூறுகிறார். ஓர் ஆணுக்கு இந்தச்
சமூகம் வழங்கும் மதிப்பும் மாண்பும் பெண்களுக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்பதே
மனித மாண்பும் நீதியும் சமத்துவமுமாகும். பெண்களின் மாண்பும் மதிப்பும் குறித்து ஆராய
வேண்டுமானால் அவர்களின் வீடுகளில் தொடங்கி அவர்களின் தலைமைத்துவம் குறித்து ஆராய்வது
நிறைவுள்ளதாக இருக்கும். சில கசப்பான உண்மைகளை அழகான மொழியில் தொகுத்தால் புரிதலுக்கு
உதவும்.
பெண்கள்
இச்சமூகத்தில் அடக்கமாக, தாழ்ச்சியுடன் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என வரையறை அளித்த
சமூகம், அதில் ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தரவில்லையோ என்ற நிலைப்பாடு
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் உடையும் நடையும் செயல்பாடுகளும் அவளுடைய
மாண்பைத் தீர்மானிக்கும் அளவுகோலாக ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, ஒழுக்கம், கற்பு
என்பது இருபாலாருக்குமானது என்று முழங்கிய பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் தந்தை
பெரியாரின் கருத்துகளைப்போல இருக்க வேண்டும்.
தேவையற்ற சரிபாதியா பெண்கள்?
“ஆணும்
பெண்ணும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பவர்கள்” சமுதாயம்
சிறப்பாக இயங்குவது அவ்விருவரின் பங்களிப்பைப் பொறுத்தே அமைகிறது. இருப்பினும், இந்தியாவின்
பல பகுதிகளில் பெண்கள் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமக்களாக, வேண்டாதவர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
இந்தியச் சமூகத்தின் மிகவும் வேதனைக்குரிய, மிகக் குறைவாக ஆராயப்பட்ட அம்சங்களில் ஒன்றாக
இந்த முரண்பாடு நீடிக்கிறது. சில நேரங்களில் ஆண் வாரிசு இல்லாத குறையைத் தீர்க்க பெண்
குழந்தைகள் வரவேற்கப்பட்டாலும், அவர்கள் சமமாக நடத்தப்படுவதோ அல்லது கொண்டாடப்படுவதோ
அரிது.
21-ஆம்
நூற்றாண்டிலும் இந்தியாவில் கருவிலேயே பாலினம் கண்டறிவதைத் தடை செய்யும் சட்டம் (PCPNDT Act, 1994) நடைமுறையில் உள்ளது ஓர் ஆகச்சிறந்த
எடுத்துக்காட்டு. உசிலம்பட்டியில் கொடுமைகள் குறைந்தாலும் “பெண்களைத் தெய்வங்களாகப்
போற்றிப் பெருமைப்படும் இந்திய நாட்டில், ஒரு பெண் குழந்தையின் பிறப்பு இன்றும் குடும்பங்களுக்குள்
ஒரு விலக்கப்பட்ட விசயமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின்
ஒரு குடிமகளாகவும், பாலினச் சமத்துவத்தை ஆழமாக மதிக்கின்ற பெண்களுக்கு, இந்த முரண்பாடு
மிகுந்த மனவேதனையையும் அலைக்கழிப்பையும் தரும் ஒன்றாகும். இது நேர்மையாக எதிர்கொள்ளப்பட
வேண்டிய ஒரு சமூக அநீதி. பெண்களின் உள்ளார்ந்த
கண்ணியத்தையும் ஆற்றலையும் முழுமையாக உள்வாங்கிய சமூகமாக இல்லாமல் தொடர்வது சமூகத்தின்
வளர்ச்சிக்குத் தடை எனலாம். பெண்கள் விடுதலை பெறவேண்டும், சுய சார்பு பெறவேண்டும் என்பதற்காகத்
தன் வாழ்நாளை அர்ப்பணித்து, அதற்காக அவர்பட்ட சவால்களைப் பொருட்படுத்தாமல் பெண் கல்வியை
மேம்படுத்த பெண்களுக்கான முதல் கல்விக்கூடத்தை நிறுவியவர் சாவித்ரிபாய் பூலே.
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சம ஊதியம், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பெண்களின் அதிகப் பங்கு,
கல்வி மற்றும் சுகாதாரத்தில் சமவாய்ப்பு, பெண்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு போன்ற
காரணங்களால் பல ஆண்டுகளாக, World
Economic Forum வெளியிடும்
Global Gender Gap Report-இன் ஐஸ்லாந்து பாலினச் சமத்துவத்தில்
முதலிடத்தைப் பெற்று வருகிறது என்பது மகிழ்வு தரும் ஒன்றே!
கலாச்சார முரண்பாடும்
உள்வாங்கப்பட்ட அடிமைத்தனமும்
இந்தியாவில்
சாதியப் பாகுபாட்டைப் போலவே பாலினச் சமத்துவமின்மையும் ஆழமாக வேரூன்றியுள்ளது. பெண்கள்
இன்றும் சுயசார்பு கொண்ட மனிதர்களாகக் கருதப்படாமல், ஒருவரைச் சார்ந்திருப்பவர்களாகவே
பார்க்கப்படுகிறார்கள். இந்த அடிமைத்தனம் வெளியிலிருந்து திணிக்கப்படுவது மட்டுமல்லாமல்,
பெண்கள் மற்றும் ஆண்களாலேயே தங்களுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதன் விளைவாக, பல பெண்கள்
அறியாமலேயே ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
பெரிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் பெண்கள் கூட மன ரீதியாக, பொருளாதார ரீதியாகச்
சார்ந்திருக்கும் கட்டாயத்திலும் உள்ளனர்.
பெண் சகிப்புத்தன்மை
குடும்பங்களில்
இன்றும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கமே எதிரொலிக்கிறது. ஓர் ஆண்பிள்ளை ‘இளவரசனாக’ கொண்டாடப்படும் அதேவேளையில், பெண் குழந்தையின் பிறப்பு மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படுகிறது. பிறப்பால்,
கல்வியால் மற்றும் சமூக அந்தஸ்தால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எளிய விருப்பம் கூட
இன்றும் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
அண்மையில்
ஒரு குடும்ப நிகழ்வில், பையன் பிறந்ததை உறவினர்கள் கொண்டாடிய விதம் என்னை வியப்பில்
ஆழ்த்தியது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஓர் உறவினர், “கடவுள் என் வேண்டுதலுக்குச்
செவிசாய்த்துவிட்டார், இனி இக்குடும்பத்தில் பல ஆண் பிள்ளைகள் பிறப்பார்கள்” என்று கூச்சலிட்டபோது, அவரது 11 வயது மகள் “அம்மா, உங்களுக்குப்
பெண் குழந்தைகளைப் பிடிக்காதா?” என்று கேட்டது நம் சமூகத்தின் முற்போக்குத்தனத்தை வெளிப்படுத்தியது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிலைகளிலும் முன்னேறி வந்து விட்டாலும்
ஆண் குழந்தை மேல் உள்ள மோகம் இன்னும் குறையாதது வியப்பே.