news-details
தலையங்கம்
தொடரும் அவலம்! மானுட மாண்பு காண்பது எப்போது?

21-ஆம் நூற்றாண்டு - அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சம், விண்வெளிப் பயணங்கள், செயற்கை நுண்ணறிவு என மானுடம் தன்னை ஒரு நாகரிகமடைந்த சமூகமாகப் பறைசாற்றிக்கொள்ளும் காலம். ஆனால், இந்தநாகரிகமுகமூடிக்குப் பின்னால், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையும், சாக்கடைக் குழிகளில் மனித உயிர்கள் கருகும் அவலமும் இன்றும் தொடர்வது நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு பெரும் வினாவாகும். இந்திய ஒன்றிய அரசின் அண்மைக்காலத் தணிக்கை அறிக்கைகளும், சமூக ஆய்வுகள் வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களும் நாம் இன்னும் கற்கால மனநிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறோம் என்பதையே தோலுரித்துக் காட்டுகின்றன.

ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்ட சமூகத் தணிக்கை அறிக்கையின்படி (Social Audit 2025), சாக்கடைக் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது நிகழும் மரணங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாலேயே நிகழ்ந்துள்ளன. அவ்வாறே, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த 54 மரணங்களை ஆய்வு செய்ததில், 47 நிகழ்வுகளில் அவர்களுக்கு எவ்வித இயந்திரச் சாதனங்களும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இறந்த தொழிலாளர்களில் ஐவருக்கு மட்டுமே கையுறைகளும், ஒரே ஒரு நபருக்கு மட்டுமே காலணிகளும் இருந்துள்ளன. மிக முக்கியமாக, 27 நிகழ்வுகளில் அத்தொழிலாளர்களிடம் ஒப்புதல்கூடப் பெறப்படவில்லை.

மேலும், 1993 முதல் இன்று வரை 1,035 பேர் இத்தகைய அபாயகரமான துப்புரவுப் பணியின்போது உயிரிழந்துள்ளனர். இதில் 948 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்ட மனித உயிர்களின் பட்டியல்.

இந்தியாவில் துப்புரவுப் பணி என்பது வெறும் தொழிலாளர் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல; அது ஆழமாக வேரூன்றிய சாதியக் கட்டமைப்பின் ஒரு நீட்சி என்பதை நாம் புரிந்தாக வேண்டும். ‘துப்புரவுத் தொழிலாளிஎன்ற சொல்லாடலுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இப்பணியைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத விதி, இன்றும் நிலவுவது பேரபத்தமானது.

மனுதர்மம்போதித்த படிநிலைச் சமூகம், மனிதர்களை அவர்கள் பிறப்பின் அடிப்படையில்தூய்மையானவர்கள்என்றும், ‘தீண்டத்தகாதவர்கள்என்றும் பிரித்து வைத்தது. அந்த இழிவான மனநிலைதான், நவீன காலத்திலும் ஒரு சக மனிதனை மலம் நிறைந்த குழிக்குள் இறங்கச் சொல்லும் துணிவைத் தருகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்குபவன்தீண்டத்தகாதவன்என்றும், அவனது மரணம் வெறும் செய்தியாகக் கடந்து போகவேண்டிய ஒன்று என்றும் கருதும் மனநிலை நிலவும் வரை, சட்டம் மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்துவிடாது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

                                                  (குறள் 972)

என்றார் ஐயன் வள்ளுவர். பிறப்பினால் அனைவரும் சமம்; ஆயினும், செய்கின்ற தொழில்களால் உயர்வு-தாழ்வு வேறுபாடுகள் இல்லை; மாறாக, செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும், காண வேண்டும் என்பதை நாம் உணர்ந்ததாகவேண்டும்.

படித்த மேதாவிகள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும், அரசு அலுவலகங்களிலும் இன்றும் சாக்கடை அடைப்பை நீக்க இயந்திரங்களைவிட மனிதர்களையே தேடுவது எத்தகைய நாகரிகம்? மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளும் கொடுமை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் அது இன்னும் நடைமுறையில் உள்ளதே! குறிப்பாக, கிராமப் புறங்களில் உலர்ந்த கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் இன்றும் ஈடுபடுத்தப்படுவதும், அவர்கள் மூங்கில் கூடைகளில் மனிதக் கழிவுகளைச் சுமந்து செல்லும் காட்சியும் இந்திய சனநாயகத்தின் மீது பூசப்பட்ட கரி என்பதை மறந்துவிடக்கூடாது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் இப்பணியைச் செய்ய மறுத்தால், அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்படுவதும், வன்முறைக்கு ஆளாவதும் தொடர்கதையாகிறது. கல்வி கற்றும் பட்டதாரி இளைஞர்கள் கூடத் தங்கள் சாதியின் காரணமாகத் துப்புரவுப் பணிக்குத் தள்ளப்படும் அவலத்தை, மனித உரிமை கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நான் வங்கியியல் பயின்றவன்; ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் என்னைக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய சொன்னது; ஏனெனில், நான் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன்என்ற கைலாஷ் போகர்ஜி போன்ற இளைஞர்களின் வாக்குமூலம் நம் கல்வி முறையையும், சமூக அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 2014-ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கைலாஷின் நிகழ்வு, இந்தியாவில் கையால் மலம் அள்ளுவதும், அது சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பானது என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது. பல சட்டத் தடைகள் இருந்தபோதிலும், இந்த மனிதாபிமானமற்ற நடைமுறை இன்றும்  தொடர்கிறது என்பதும், அது சாதிப் படிநிலைகளில் வேரூன்றி உள்ளூர் அதிகாரிகளால் நிலைநிறுத்தப்படுகிறது என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்தியாவில் மலம் அள்ளும் கொடுமையை ஒழிப்பதற்காகப் பல ஆண்டுகளாகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1993-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறை கட்டுமானத் தடைச்சட்டம், மலம் அள்ளும் தொழிலைக் குற்றமாக்குவதற்கான முதல் முயற்சியாகும்; இருப்பினும், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரியதே. அவ்வாறே, 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டமனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளுதல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு செய்தல் சட்டம் (PEMSR Act) இப்பணியை முற்றிலும் தடை செய்தது. ஆனால், இன்றும் கள நிலவரம் வேறாக உள்ளது. அரசு அதிகாரிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்காமல், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களைத் திரட்டி, அவர்களுக்கு எவ்விதப் பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் மரணக் குழிகளுக்குள் தள்ளுகின்றனர்.

மேலும், 2013-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் மறுவாழ்வுச் சட்டம், அவர்களுக்கான பண உதவி, வீட்டு வசதி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டதுடன், ஒன்றிய அரசுநமஸ்தேபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே எதார்த்தம்.

குஜராத்தின் தாரத் நகரில், 23 வயதே ஆன உமேஷ் பாமினியா சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பத்து நாள்களில் அவரது மகன் பிறந்தான். அஞ்சனா என்ற அவருடைய மனைவி தன் கைக்குழந்தையுடன்என் குழந்தையை இனி எப்படி வளர்ப்பேன்?” என்று கேட்கும் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. அதேபோல், சென்னையில் தொழிற்சாலை ஒன்றில் சாக்கடை சுத்தம் செய்ய சென்று மூச்சுத்திணறி உயிரிழந்த மோசஸின் மனைவி அன்னம்மா, தன் கணவர் இப்பணியைச் செய்கிறார் என்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். “என் பிள்ளைகளிடம் அவர்களின் தந்தை மலக்குழியில் இறந்து போனார் என்று எப்படிச் சொல்வேன்?” என்ற அன்னம்மாவின் கதறல், இந்தச் சமூகம் அந்தத் தொழிலாளர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகத்தின் சாட்சியே (26 October 2023, BBC News).

நாடெங்கும் எதிரொலிக்கும் இந்த அவலக் குரல்கள் மறைய, சாக்கடை மற்றும் கழிவுத் தேக்கங்களைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது இனி 100 விழுக்காடு நிறுத்தப்படவேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மேலும், இப்பணியிலிருந்து விடுபடுபவர்களுக்குக் கௌரவமான மாற்றுத்தொழில், கல்வி மற்றும் வீட்டு வசதி வாய்ப்புகளை அரசு வழங்கிடவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், தூய்மைப் பணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கடமை என்ற பிற்போக்குச் சிந்தனையைப் பாடப்புத்தகங்கள் முதல் பொதுவெளிகள் வரை நாம் வேரறுக்கவேண்டும்.

இறுதியாக, மானுட மாண்பு என்பது அனைவருக்கும் சமமானது; ஒருவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சகமனிதனின் கழிவை அள்ளும் நிலையும், நச்சு வாயுவில் மூச்சுத்திணறிச் சாகும் அவலமும் நீடிக்கும் வரை, நாம் நம்மைநாகரிகமடைந்த சமூகம்என்று அழைத்துக்கொள்ளும் தார்மிக உரிமையை இழந்துவிடுகிறோம். இவ்வேளையில்,

தினம் மாறும் உலகில்

நிறம் மாறும் மனிதர்கள்;

காயங்கள் ஆற

காட்சிகள் மாறவேண்டும்!’

எனும் புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகின்றது.

துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் என்பது விபத்தல்ல; அது ஒரு சமூகப் படுகொலை! இந்நிலை மாற, இந்த இழிநிலையைத் துடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்ஒன்றிணைவோம்! சமத்துவச் சமுதாயம் படைப்போம்!!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்