1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் நாள். தென் அமெரிக்காவின் எல்சால்வடார் பகுதியில் அமைந்திருந்த டிவைன் பிராவிடன்ஸ் மருத்துவமனை வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்த மாலை நேரம். திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த ஆயர் ஆஸ்கர் ரொமேரோ தன் மறையுரையை முடித்துக் கொண்டிருந்தபோது ஆலயத்திற்கு வெளியே, தெருவில் ஒரு சிவப்புநிற வாகனம் வந்து நின்றது. அதனுள்ளிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளிப்பட்ட ஒரு மனிதன் ஆலயத்தை நோக்கி நடந்தான்.
துப்பாக்கியுடன்
வந்து ஆலயத்துள் நுழைந்தவன் ரொமேரோவின் மார்பைக் குறிபார்த்தான். ஒருசில நொடிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ரொமேரோ தன் மார்பைப் பிடித்துக்கொண்டு திருப்பலி பீடத்தின் கீழே சாய்ந்தார். கல்வாரிப் பலி நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில், துப்பாக்கிச் சூட்டால் ஒரு மனித உயிர் பலியானது.
அவரைச்
சுட்டது துப்பாக்கியா? மனிதனா? இரண்டுமே இல்லை... உண்மை!
உண்மை
சுடுமா? ஆம், அன்று உண்மைதான் சுட்டது. அது என்ன உண்மை?
1917, ஆகஸ்டு 15-ஆம்
நாள் பிறந்த ஆஸ்கர் ரொமேரோ தன் குடும்பத்தில் பெற்றோரின் எட்டுப் பிள்ளைகளில் ஒருவர். பள்ளிப் படிப்போடு தந்தை சாண்டோஸ் ரொமேரோவின் தச்சு வேலைக்குப் பயிற்றுவிக்கப்பட்டார். இளம்வயது பிள்ளையின் திறமையை உணர்ந்த தந்தை, தன் மகனுக்குள் வணிகத்திறனை வளர்க்க எண்ணியபோது, மகன் ரொமேரோ குருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
13 வயதில்
சான்மிகுவெல் பகுதியில் இருந்த இளங்குருமடத்தில் ரொமேரோ சேர்ந்தார். தாயார் உடல்நலமின்றிப் போனதால் மூன்று மாதங்களில் மடத்திலிருந்து வீடு திரும்பியவர் தாயின் அதிகப்படியான மருத்துவச் செலவுக்காகத் தன் இரு சகோதரர்களுடன் தங்கச்சுரங்கத்தில் வேலைசெய்து உதவினார். பட்டப்படிப்பையும் அவ்வூரிலேயே முடித்தபின் சான்சால்வடார் குருமடத்தில் சேர்ந்து குருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் உரோமை நகரில் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இறையியல் முடித்தவர், 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று குருப்பட்டம் பெற்றார். இத்தாலியில் பணி செய்து கொண்டிருந்த ரொமேரோவை, ஆயர் மீண்டும் எல்சால்வடார் திரும்புமாறு பணித்தார்.
குருவானவர்
வள்ளாடர்ஸ் என்ற நண்பரோடு இத்தாலியிலிருந்து சொந்த நாடு திரும்புகையில் இருவரும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டனர். அங்கிருந்து மீண்டு வந்தாலும், பாசிச நாடான இத்தாலியிலிருந்து வருவதாக இருவரையும் கியூபாவின் எல்லையில் இராணுவத்தினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பல மாதங்கள் சிறை
முகாம்களில் இருந்த இருவரின் உடல்நலமும் சீர்கெட்டுப்போக, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். வெகு விரைவில் கியூபா இராணுவம் அவர்களை விடுவிக்க மெக்சிகோ வழியாக எல்சால்வடார் வந்தடைந்தனர்.
தென்
அமெரிக்காவின் அனமோர்ஸ் என்ற பகுதியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய ரொமேரோ, சான்மிகுவெல் பங்குக்கு மாற்றலாக அங்கே இருபது ஆண்டு காலம் மிகவும் சிறப்பாகப் பணி செய்தார். பல்வேறு திருத்தூதுக் குழுக்களை ஏற்படுத்தினார். சான்மிகுவெல் பகுதியில் பேராலயம் அமைய பாடுபட்டார். ‘அமைதியின் அன்னை’ பக்தியைப் பெரிதும் வளர்த்தார்.
சான்சால்வடார்
மறைமாவட்டக் குருமடத்தின் அதிபராக உயர்த்தப்பட்ட ரொமேரோ, தன் இடைவிடாத பணியால் மனச்சோர்வுக்கு உள்ளாகி ஒரு தியானத்தில் கலந்துகொண்டு மனரீதியாக அமைதி பெற்றார். 1966-இல் ஆயர் பேரவைச் செயலர் ஆனார். கத்தோலிக்கக் கோட்பாடுகளைக் காப்பதற்காக மறைமாவட்டம் வெளியிட்ட ‘ஓரியண்டேஷியன்’ என்ற
பத்திரிகையின் இயக்குநராகவும் பணி செய்தார். 1970-ஆம் ஆண்டில் சான்சால்வடாரின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். நான்கே ஆண்டுகளில் மிகவும் நலிந்த, வறிய மக்கள் நிறைந்த சாண்டியாகோ டி மரியா மறைமாவட்டத்தின்
ஆயரானார். 1977-இல் சான்சால்வடார் மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார்.
ரொமேரோவின்
பேராயர் நியமனத்தை மார்க்சிய அரசாங்கம் வரவேற்றாலும், ஏழைகளுக்கு விடுதலை என்ற முற்போக்குச் சிந்தனைக் கோட்பாட்டால் மார்க்சியம் ரொமேரோவால் தகர்க்கப்படுமோ என்று அது அஞ்சியது. தான் ‘ஏழைகளின் அன்பன்’ என்பதை ரொமேரோ எண்பிக்கும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. மறைமாவட்ட அளவில் தன்னம்பிக்கைக் குழுக்களை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவிபுரிந்த இயேசு சபைக் குருவானவர் ருடில்லோ கிராண்டே 1977-இல் கொலை செய்யப்பட்டார். இப்படு கொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை ரொமேரோ கேட்டுக்கொண்ட போதும், அரசு அவர் கோரிக்கையைப் புறக்கணித்தது. பத்திரிகைகளும் மௌனமாயின. தன் நண்பரான குருவானவர் ருடில்லோ கொலை பற்றி ரொமேரோ வெளியிட்ட அறிக்கையில், எந்த நற்செயலுக்காக ருடில்லோ கொல்லப்பட்டாரோ, அதனைத் தான் தொடரப் போவதாகக் குறிப்பிட்டவர், நாட்டிலுள்ள வறுமை, சமூக அநீதி, படுகொலைகள், சித்திரவதைகள் குறித்துத் தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மனித
உரிமை மீறல்களுக்கும், இடதுசாரி ஆதரவாளர்கள் எதிர்ப்புக்குமிடையே புரட்சி அரசாங்கம் ஒன்று 1979-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. கொலைகள், சித்திரவதைகள் என அரசியல் அடக்கு
முறைகள் அதிகரித்தன. இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும், அந்நாட்டிற்கு அமெரிக்கா இராணுவ உதவி அளிப்பதைக் கண்டு கொதித்த ரொமேரோ, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு எழுதிய கடிதத்தில், “அமெரிக்காவின் இராணுவ உதவியானது அநீதியாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள சால்வடார் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்கள்மீது அரசியல் அடக்கு முறையை அதிகரிக்கும்” என்று
எச்சரித்தார். அமெரிக்கா அக்கடிதத்தைப் பொருட்படுத்தாமல் இராணுவ உதவியைத் தொடர்ந்தது.
ரொமேரோவின்
மனிதாபிமான முயற்சிகளின் விளைவாக அவர் உலக அளவில் கவனிக்கப்பட ஆரம்பித்தார். 1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லூவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. அப்பட்டத்தைப் பெற ஐரோப்பா சென்ற ரொமேரோ, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைச் சந்தித்து சால்வடாரிலுள்ள அரசப் பயங்கரவாதம் மற்றும் படுகொலைகளைச் சட்டமாக்குவது குறித்துத் தெரிவித்து அந்த அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
எல்சால்வடார்
ஆலயத்தில் ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கிய ரொமேரோ, ஞாயிறு தோறும் வானொலி மூலமாக மறையுரைகளை நிகழ்த்தினார். ஏழைகளின் சார்பாகப் பணியாற்றும் கத்தோலிக்கத் திரு அவையின்
உறுப்பினர்களின் துன்புறுத்தல்களுக்கு அரசுக்குப் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்தார்.
மூன்று
ஆண்டுகளுக்குள் ஐம்பதிற்கும் மேற்பட்ட குருக்கள் மிரட்டலுக்கு உள்ளாகி தாக்கப்பட்டனர். ஆறு குருக்கள் கொலையுண்டு மறைச்சாட்சிகளாக உயிர்விட்டனர். ‘திரு அவையின் குருக்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார் ரொமேரோ. நாட்டில் எங்குப் பார்த்தாலும் அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் என்ற அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்தார்.
வாரம்
முழுக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டு வானொலி மூலம் ஞாயிறு மறையுரைகளில் தெரிவித்தார். அவருடைய மறையுரைகளைப் பெருவாரியான மக்கள் கேட்கலாயினர். அவருடைய வானொலி சொற்பொழிவுகள் உலகப் பிரசித்திப்பெற்றன. அரசாங்கம் வானொலி நிலையத்தை இரகசியமாகக் குண்டு வைத்துத் தகர்த்தது. மறைமாவட்டப் பத்திரிகையான ஓரியண்டேஷியனிலும் இந்த அநியாயங்களின் பட்டியலை ரொமேரோ தொடர்ந்து வெளியிட்டார். உண்மைகள் உலகுக்கு வெளிச்சமாயின. எதிரிகள் கலக்கமாயினர்.
1980, மார்ச் 23 அன்று,
அதாவது ரொமேரோ கொல்லப்படுவதற்கு முன் தினம், அவர் தான் நிகழ்த்திய மறையுரையில் இராணுவ வீரர்களைக் ‘கிறித்தவர்கள்’ என்று
குறிப்பிட்டார். கிறித்தவர்களாகிய அவர்கள் ‘கொலை செய்யாதே’
என்னும் கடவுள் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்கத்தின் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோவதைக் கண்டித்துக் கடவுளின் கோபம் குறித்து எச்சரித்தார்.
ரொமேரோ
இதுவரையில் அரசப் பயங்கரவாதத்தின்மீது முன்வைத்த உண்மைக் குற்றச்சாட்டுகள் சுட்டதைவிட, இந்த உண்மை புரட்சி அரசாங்கத்தைப் பெரிதும் சுட்டது. ‘கிறித்தவர்களே வீரர்களாக உள்ள இராணுவத்தில் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டால் அரசாங்கத்தின் நிலை என்னவாகும்?’ என்று ஆட்சியாளர்கள் கலங்கினர். ரொமேரோ கூறிய இவ்வுண்மை அவர்களைச் சுட்டது. அவர்களோ உண்மையின் உருவான ரொமேரோவைச் சுட்டுக் கொல்லத் தீர்மானித்தனர். சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆலயப்பீடத்தில் வைத்தே குருவானவர் ரொமேரோ கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார்? என்பதை உடனடியாகக் கண்டறிய முடியாத நிலையில், உலக நாடுகள் இப்படுகொலையைக் கண்டனம் செய்தன. இதைவிடக் கொடுமை என்னவென்றால், மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தைப் படுகொலைக் களமாக்கிய பாவிகளின் செயல்கள்தான்.
1980-ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 30-ஆம் நாள் சான்சால்வடாரில் நடைபெற்ற பேராயர் ரொமேரோவின் இறுதி ஊர்வலத்தில் உலகெங்கிலுமிருந்து 25,000 மக்கள் கலந்துகொண்டனர். திடீரென பேராலயம் அருகே குண்டுகள் வெடித்தன. கலவரம் உருவாயிற்று. அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் என்ற பெயரால் பொதுமக்கள் ஏறக்குறைய 50 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். கலவரத்திற்கிடையிலே பேராயர் ரொமேரோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் உலகளாவிய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளால் அபுயஸ்சனால் என்ற இராணுவ மேலதிகாரியின் தலைமையில் நான்கு படுகொலையாளர்கள் கொலையில் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் நிகரகுவா தேசியப் பாதுகாப்புப் படையோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது. பின்னர் தேசியவாதக் குடியரசுக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தாலும், இராணுவ அதிகாரிகளைக் கொண்டு திட்டமிட்டு, மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதோடு, கொலைகளையும் செய்தது.
எது
எப்படியோ... அநியாய அரசாங்கத்தின் அவலத்தை, அநீதித்தன்மையை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்த பேராயர் ரொமேரோவின் உண்மைகள் படுகொலையாளர்கள் மனங்களைச் சுட்டன. அவர்களைச் சுட்ட உண்மைகள் ரொமேரோவின் உடலைச் சுட்டுப் பழிதீர்த்தன. வெளிப்படுத்தப்படும் உண்மை எப்போதும் அடுத்தவர் மனத்தைச் சுடும். அதற்காகப் பிறர்நலம் கெடுக்கும், தானறிந்த அநீதியை வெளிப்படுத்தாது போனால், தன் மனசாட்சியே ஒரு மனிதனைச் சுடும் அல்லவா!