news-details
கவிதை
பெண்ணே பேசும் தெய்வம்!

பெண்மை என்பது பேசுந்தெய்வம்

உண்மை இதனை உணருக நன்கு

ஆண்மை பெண்மை ஆண்டவன் படைப்பு

பேணுதல் என்பது பெண்மையின் சிறப்பு

ஆணின் வெற்றிக்கு அடிப்படை அவளே

வானினும் உயர்ந்தது வஞ்சியவர் பெருமை

தேனினும் இனிக்கும் தெளிவுறு சொல்லால்

ஊனில் வளர்த்து உயிரினைப் பேணும்

பெண்மை ஓங்கிட பேரினம் வளரும்

கண்ணினும் இனிய கற்பினைப் பேணுவாள்

மண்ணில் அன்னையாய் அவளே திகழ்வாள்!

மாதொரு பாகனாய் மகேசன் காட்டும்

தீதிலா வடிவத் திருவுரு பெண்ணே!

கோதிலா அன்பினைக் குறைவிலாது தனித்து

மேதினி யதனில் மேன்மைகள் சேர்ப்பாள்

கனிவுடன் பேசி காதலை வளர்ப்பாள்

கருவினில் சுமந்து கண்ணெனப் போற்றுவாள்!

தாய்ப் பாலொடு தமிழ்ப்பால் ஊட்டுவாள்

நோயில் படுத்தால் நொந்தே போவாள்

உயிரினைத் தந்தும் உலகினைப் புரப்பாள்!

பேசும் தெய்வம்  அவள்தான் பெண்ணே!