ஒவ்வொரு பிறப்பும் ‘புதியன’ எனும் கருத்தியலை, எதிர்நோக்கைக் கொண்டிருக்கின்றன. ‘கி.மு.-கி.பி.’ என வரலாற்றை வகுடெடுத்த வரலாற்று நாயகன் இயேசுவின் பிறப்பு ‘கடவுள் நம்மோடு’ என்பதை உணர்த்துகிறது; தொடர்ந்து வந்த புத்தாண்டுப் பிறப்பு, ‘காலமும் நம்மோடு’ என்ற எதிர்நோக்கைத் தருகிறது.
புலர்ந்துள்ள
புத்தாண்டு புதிய எண்ணங்களை, புதிய சிந்தனைகளை, புதிய ஏற்றங்களை, புதிய மாற்றங்களை, புதிய உறவுகளை நம்மிலும் நம்மைச் சுற்றிலும், நாம் வாழும் சமூகத்திலும் மலரச் செய்யவேண்டும்.
விடுதலை
இந்தியாவின் சமூக - அரசியல் - வாழ்வியல் சூழல் தனித்துவமானது. ஆட்சிமுறை குறித்து ஆயிரம் பரிசோதனை முயற்சிகள் நடந்து முடிந்த பின்பு, உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்ட ஆட்சிமுறைதான் ‘மக்களாட்சி’ (சனநாயகம்).
அதில் நிறைந்த நன்மை உண்டு என்பதற்காக அல்ல; மாறாக, குறைந்த தீமை உண்டு என்ற கருத்தியலால் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது. “உள்ள தீமைகளில் சிறிய தீமை, சனநாயகம்”என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையில் நாம் இல்லை; மாறாக, நமக்குக் கிடைத்திருப்பது எல்லாம், இரண்டு தீமைகளில் எந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்பதுதான். நாம் பெரிய தீமையைப் புறக்கணித்துவிட்டு, சிறிய தீமையைத் தேர்வு செய்ய உதவுவதே சனநாயகம்”
என்று விளக்கம் தந்தார் காந்தியவாதி கிருபளானி. இதுவே உண்மையும் கூட.
ஒவ்வொரு
நிறையிலும் நம் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு குறை மறைந்திருக்கும்; அதுபோலவே, ஒவ்வொரு குறையிலும் ஒரு நிறை மறைந்திருக்கும். முழுமை என்று இறைமையைத் தவிர எதையும் நாம் கூற இயலாது. இவ்வாட்சியமைப்பு முறையில், மக்கள் மாண்புடன் வாழ்வர் என்ற எதிர்நோக்கில்தான் மக்களாட்சி இந்திய மண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்படும் மக்களுடைய அரசு” என்று சனநாயகத்திற்கு விளக்கம் அளித்தார் ஆபிரகாம் லிங்கன். அப்பாவி மக்களை ஆட்சியாளர்கள் சுரண்டுவதற்கான வசதியான வாகனம் சனநாயகம் என்பதுதான் இன்றைய இந்திய அரசியல் களத்தின் எதார்த்தம். “பாமர மக்களின் மோசமான ஆட்சியே சனநாயகத்தில் அமையும்” என்று கடுமையாக விமர்சித்தார் அரிஸ்டாட்டில். அந்தக் கூற்று இந்திய மண்ணில் முற்றிலும் உண்மையாகிப் போனது.
மக்கள்
மத்தியில் நிலவும் அறியாமையும், அதனால் வளரும் கருத்தியல் அடிமைத்தனமும், பொருளியல் வறுமை நிலையும் அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மூலதனம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
தங்களுக்கான அரசை உருவாக்குபவர்கள் மக்கள்தாம். ஆனால், அவர்களை அறியாமை இருளிலும் குறிப்பாக, அரசியல் அறியாமையிலும் வைத்து நடத்தும் ஓர் அரசியலில் தரமான அரசியல் அமைப்பு முறை உருவாக வாய்ப்பில்லை. அத்தகைய சூழல் தொடரும் வேளையில், அங்கு அரங்கேறும் அரசியல், அநாகரிகம் கொண்டு தரமற்றதாகத்தான் இருக்கும். அங்கு எப்படித் தரமான அரசை உருவாக்க முடியும்? எதிர்பார்க்க முடியும்? இங்கு இருமுனை ஆய்வுகள் அவசியம். ஒருபுறம், மக்கள் அரசியல் அறிவு பெறவேண்டும்; மக்கள் மத்தியில் அரசியல் அறியாமை அகற்றப்படவேண்டும்; மறுபுறம், அரசியல் தலைவர்களின் ஆட்சியாளர்களின் தலைமைத்துவம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சனநாயகத்தின்
ஆணிவேராக இருக்க வேண்டிய அரசியல் கட்சிகள் இன்று மலினமான மனிதர்களின் கூடாரமாகி விட்டது. தகுதியற்றவர்களிடம் தலைமைப் பொறுப்பும் ஆட்சி அதிகாரமும் வந்து சேர, இன்றைய கட்சிமுறை வழிவகுக்கிறது. சமுதாயத்தில் மக்களிடையே மோதலும் முரணும் கட்சிகளால்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன. சாதி சச்சரவுகளும் மத வேற்றுமைகளும் கட்சிகளால்
தூண்டப்படுகின்றன. அரசியல் களத்தையும் சமூகத் தளத்தையும் சீர்செய்ய யாவரும் கண்விழிக்க வேண்டுமென காலம் எச்சரிக்கிறது.
‘நல்ல காலம் பிறந்து இருக்கிறது’ என்ற
நப்பாசை கொள்வதல்ல ஆண்டுப் பிறப்பு. பிறந்த ஆண்டை நல்ல காலமாகக் கட்டமைப்பதே அதில் பொதிந்திருக்கும் அழைப்பு. மாண்புறு மக்களாட்சி மலர்வதற்கான சிந்தனைகள் நம்மில் வளர வேண்டும், நல்லெண்ணங்கள் எங்கும் மலரவேண்டும்.
குடிமக்கள்
தரமான வாழ்க்கை வாழ வேண்டும்; அந்தத் தரமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை மதிப்பீடு செய்யவேண்டும். ஆண்டுதோறும் இப்பணியை மேற்கொள்வது ஆட்சியாளர்களின் கடமை; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவற்றை அலசி ஆராய்வது வாக்குரிமை பெற்ற மக்களின் கடமை.
முகம்
மட்டும் கொண்ட தலைமையும் முரண்பட்ட கொள்கையும் மக்களாட்சிக் கருத்தியலில் நெடுநாள் காலுன்றாது. அது நேற்றைய மழையில் முளைத்த இன்றைய காளான். காலத்தின் சூழல் கட்சிகளின் கருத்தியலும், கவர்ந்திழுக்கும் கொள்கைகளும் சற்று ஆழமாகக் கூர்ந்து கவனிக்கப்படவேண்டும். ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் என்னும் கூறுகளை உள்ளடக்கிய தலைமைத்துவம் கூர்ந்து கணிக்கப்படவேண்டும். தலைமையின் தன்மையும் தனித்துவமான கொள்கையும் அரசியல் தளத்தில் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும்.
மக்களாட்சி
மாண்புற மக்கள் பிரதிநிதிகள், ‘மாண்புமிகு’ என
அடைமொழி கொண்டோர் மாண்புடனே என்றும் திகழவேண்டும். எளிமையான, ஊழலற்ற, மக்களுக்காக அரசியல் தளத்தில் தன்னலமற்றுப் பணியாற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட அரசியல் தலைவர்களைக் காண்பது இன்று அரிதாகிப் போனது. “மக்களுடைய நலன்களுக்காகப் பாடுபடுவதை விட அழகு மிக்கதும் அற்புதமானதும் எதுவும் அகிலத்தில் இல்லை” என்று அறிவித்து, வியட்நாம் மக்களுக்காகவே தன் வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் ஹோசிமின். இந்திய மண்ணின் விடுதலை கால வரலாற்றில் முன்னின்ற மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், அண்ணல் அம்பேத்கர் போன்றோரையும், தமிழ்நாட்டு மண்ணில் பெரியார், காமராசர், ஜீவானந்தம், அண்ணா போன்றோரையும் இனி காண்பது அரிது.
மக்களாட்சி
அமைப்பு முறையில் கட்சி அரசியலில் தலைமை குறித்த தெளிவுகள் நாம் கொண்டிருக்கவேண்டும். தலைமை - ஆளுமை கொண்டதாக இருக்கிறதா? ஆளுமைக்கான தலைமைத்துவப் பண்பின் வரையறை என்ன? தன்னலம் துறப்பது, பொதுநலம் பேணுவது, தொலைநோக்குப் பார்வை கொள்வது, தெளிந்த சிந்தனை கொள்வது, உறுதியான நிலைப்பாடு கொள்வது, வளமான திட்டங்கள் மேற்கொள்வது... என்பதெல்லாம் தலைமைத்துவ ஆளுமையின் வரையறைகளாகக் கணிக்கப்பட வேண்டும்.
இன்று
மக்களாட்சி அமைப்பு முறையில் நாம் காணும் தலைமை யாருக்கான தலைமையாக இருக்கிறது? என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களாட்சி அரசியல் முறை என்றாலும், இன்றைய காலச்சூழலில் தலைமை யாருக்கானதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது?
தலைமையைத்
தேர்ந்தெடுக்கும் காரணங்கள் என்ன? காரணிகள் என்ன? என்ற தெளிவை நாம் பெற வேண்டும். அப்போதுதான், தலைமையைத் தேர்ந்தெடுப்பதன் சூட்சுமத்தை உணரமுடியும். முகத்திரை கொண்ட தலைமையின் ‘மறை-முகம்’ அறியமுடியும். 140 கோடி மக்களின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் நாடாளுமன்றமும் சட்டப் பேரவைகளும் இன்று எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, குடிமக்களுக்கான உரிமைகளுக்காக, உடைமைகளுக்கான, வாழ்வு நிலைக்கான கொள்கைகளைத் திரட்டுவதும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், வளங்களை மேன்மைப்படுத்துவதும் நலமான விவாதமாக அமைய வேண்டிய தளம் கூச்சலும் குழப்பமும் புகழ்ச்சியும் துதியும் கொண்ட அநாகரிகத்தின் சரணாலயம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
வாழ்வதாக நாம் மார்தட்டிக் கொண்டாலும், அந்த மக்களாட்சி முடக்கப்பட்டு வருகிறது என்பதை அறியாமலே வாழ்ந்து வருகிறோம். மக்களுக்கான அரசியலாக இது அமையாமல், மக்களைப் பிரித்தாளும் மதவாத அரசியல் கொள்கைகளாலும், பிரிவினை எண்ணங்களாலும், சமயச்சார்பற்றத்தன்மை களையப்பட்டு, ‘ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே தேர்தல்...’ என ஒற்றைப் புள்ளியை
நோக்கிப் பயணிப்பது பேராபத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதை அறியாமலே இருக்கிறோம். நாம் விழிப்பதற்குள் நம்மை விழுங்குவதற்குப் புறக்காரணிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
மக்களாட்சி
என்பது எல்லாரும் இன்புற்றிருக்கும் சமூக அமைப்பை, வாழ்வியலை வழங்கக்கூடியது. குடிமக்கள் பொறுப்புடனும், அறிவார்ந்த அரசியல் தெளிவுடன் பங்கேற்கும்போதுதான் அது நமக்கு நன்மை பயக்கக்கூடியதாகத் தொடரச் செய்ய முடியும். ஆனால், மக்களாட்சி அரசியல் அமைப்பின் மாண்பு உணராமலும், மதிப்பீடு அறியாமலும் வாழ்ந்து வருகிறோம். 78 ஆண்டுகால விடுதலை இந்தியாவில், மக்கள் மத்தியில் விடுதலைக்கான அறிவும் உணர்வும், மக்களாட்சிக்கான சிந்தனைகளும் செயல்பாடுகளும் போதிய அளவு புகட்டப்படவில்லை என்பதே கவலையளிக்கும் எதார்த்தம்.
மக்களாட்சியை
நாம் முறைப்படுத்துவோம்; அரசியல் அறிவு பெறுவோம்; ஆளுமைத் தெளிவு பெறுவோம்; மக்கள்மையச் சிந்தனைகளில் சீர்திருத்தம் கொள்வோம்; மாண்புறு மக்களாட்சியை மலரச் செய்வோம்!
அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்