news-details
ஆன்மிகம்
“இயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு!” - பொதுநிலையினர் ஞாயிறு (18.01.2026)

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே,

இந்தியப் பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்என்று நமது திருத்தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது விழாவைத் (ஜனவரி 14) தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையை (18.01.2026) நாம் பொதுநிலையினர் ஞாயிறாகச் சிறப்பிக்கிறோம்.

புனித தேவசகாயம்

இன்றைய குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற இடத்தில் 1713, ஏப்ரல் 25-ஆம் நாள் வாசுதேவன் நம்பூதிரி, தேவகியம்மை ஆகியோருக்கு மகனாக நமது புனிதர் பிறந்தார். கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற்றுத் திருவிதாங்கூர் அரசின் நிதிக் காப்பாளர் என்ற உயர் பொறுப்பைப் பெற்றார். குளச்சல் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட டச்சுத் தளபதி இஸ்தாக்கியுஸ் டிலனாய் என்பவர் இவருக்கு இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டு 14.05.1745-இல் வடக்கன்குளத்தில் அருள்பணி. ஜோவான்னிபத்தீஸ்தா புத்தார் என்பவரிடம் திருமுழுக்குப் பெற்றார்.

இந்த மனமாற்றத்தால் உயர்குலத்தோர் நம் புனிதரை எதிர்த்தனர். துன்பங்கள், வேதனைகள் அனைத்தையும் துணிவுடன் எதிர்கொண்டு, நம்பிக்கை வாழ்வில் தளராதிருந்தார். 11 மாதங்கள் சிறைவாசம், உடலில் கரும்புள்ளி - செம்புள்ளி, எருக்கம் பூமாலை, சுண்ணாம்புச் சூளையின் கடும் நெருப்பு, அடி, உதைகள் எதுவும் இவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை.

நம்பிக்கை வாழ்வின் சிகரம் தொட்ட இந்த மாமனிதர் 1752, ஜனவரி 14-ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டம் காற்றாடிமலை என்ற ஆரல்வாய் மொழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நம் மறைச்சாட்சிக்கு 26.06.2012 அன்று  அருளாளர் பட்டமும், 15.05.2022 அன்று புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டன. 16.07.2025 அன்று இந்திய பொதுநிலையினரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.

பொதுநிலையினர் ஞாயிறு - 2026

புனித தேவசகாயத்தின் நம்பிக்கை வாழ்வுப் பின்னணியில் இந்த ஆண்டின் பொதுநிலையினர் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்குஇயேசுவின் பணியை முழுமையாக்க அழைப்பு (Call to Fulfil the Mission of Jesus) என்ற பொருத்தமான மையச்சிந்தனையை ஆயர் பேரவை நமக்குத் தந்துள்ளது.

போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி ஆகிய இயேசுவின் முப்பெரும் பணிகளில், நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது. இப்பணிகளில் பங்கேற்கவும் பங்களிக்கவும் திருமுழுக்குப் பெற்ற நாம் இறைவனால் அழைக்கப்படுகிறோம்.

நடந்து முடிந்த உலக ஆயர்கள் மாமன்றம் (2021-2023) கூட்டியக்கத் திரு அவையாக, நமது உறவு ஒன்றிப்பு மற்றும் பங்கேற்பின் வழி, நற்செய்திப் பணியாற்ற நமக்கு அழைப்பு விடுத்துள்ளதை நாம் அறிவோம். தொடர்ந்து நாம் கொண்டாடிய யூபிலி 2025 இணைந்து பயணிக்க, இணைந்து செவிசாய்க்க, இணைந்து கற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுத்தது.

இயேசுவின் பணி

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) என்று தம் சீடர்களிடம் கூறிய இயேசு, தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் தம்முடைய பணிக் கொள்கையை எல்லாருக்கும் அறிவித்தார். “ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோர் பார்வைப் பெறுதல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை (லூக் 4:18) என்பனவற்றைத் தமது பணி இலக்குகளாகப் பிரகடனப்படுத்தினார்.

தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் (லூக் 1:53) என்ற அன்னை மரியாவின் பாடலிலும் இந்தஏழைகள் சார்புநிலைவெளிப்படுவதைப் பார்க்கிறோம்.

திரு அவையின் படிப்பினை

யூபிலி 2025’ கொண்டாட்டத்திற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் 07.05.2024 அன்று வெளியிட்டஎதிர்நோக்கு ஏமாற்றம் தராது (Spes Non Confundit) (உரோ 5:5) எனும் ஆணை மடலில்திரு அவையின் கரிசனம்பற்றி பின்வருமாறு தெரிவித்துள்ளதைப் பார்க்கிறோம்:

ஏழைகளையும் வறியோராக்கப்பட்டவர்களையும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம் (எண்-15).

பசி என்பது ஓர் இடறல்; மானுட உடலில் காணப்படும் ஆறாத புண் (எண்-16).

பூமியின் வளங்கள் ஒருசிலருக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் உரியன (எண்-16).

காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய அழைக்கப்படுகிறோம் (எண்-7).

திருத்தந்தை பிரான்சிஸைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் இறைவனின் கொடையாக நமக்குத் தரப்பட்டுள்ள புதிய திருத்தந்தை லியோ 09.10.2025 அன்று வெளியிட்டநான் உன்னை அன்பு செய்கிறேன் (Dilexi Te) எனும் அறிவுரை மடலில், ஏழைகள் பற்றியும், மனித மாண்பு பற்றியும், இயேசுவின் சீடர்களான நம்பிக்கையாளர்களின் பார்வையும் பணியும் எவ்விதம் அமையவேண்டும் என்ற வழிகாட்டுதல்களைத் தந்துள்ளார்.

ஏழைகள், துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாகத் திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்கவேண்டும்.

ஏழைகள்தான் திரு அவையின் இதயம்!’

ஏழைகளுக்கான பணி வெறும் இரக்கப்பணியல்ல; மாறாக, அது சமூக மாற்றத்திற்கான பணியாகும்.

துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பே, கடவுள் மீதான நம்பிக்கை. எனவே, நாம் ஏழைகள் சார்பான நிலைப்பாடு (Preferential option for poor) எடுக்கவேண்டும்.

சர்வாதிகாரப் பொருளாதாரம் (Dictatorship of Economy) பற்றியும் எச்சரிக்கை செய்கிறார்.

சமூத்தின் கடைநிலையில் உள்ளவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதாக இயேசுவை இந்த ஏடு விவரிக்கிறது. எனவே, ‘ஏழைகள் மீதான அக்கறையே நம் சீடத்துவத்தின் அடையாளம்என்று நமக்கான எதிர்காலச் செய்நெறியைத் திருத்தந்தை வரையறுக்கிறார்.

சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நினைவூட்டும் நமது கடமைகள்

பல்வேறு நேர்மறை அம்சங்கள் இருப்பினும், நாம் காணும் இந்தியச் சூழல் பெருமளவில் அச்சமூட்டுவதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது என்பதே உண்மை. இந்நிலையில், சங்க ஏடுகளும், திரு அவைச் சட்டமும் நமக்கு உணர்த்தும் கடமைகளாவன:

இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், இறை மக்களாகிய நாம் அனைத்துச் சூழமைவுகளிலும் மனிதச் சமுதாயத்தின் நடுவில் இயேசுவின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் (இன்றைய உலகில் திருஅவை - எண்: 43).

நற்செய்தி எல்லா மக்களையும் சென்றடைய உழைத்தல் (திரு அவைச் சட்டம்:211).

ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளித்தல் (திருப்பணியாளர்களின் வாழ்வும் பணியும் GT600T:6).

மனித அமைப்புகள் எல்லாவிதச் சமூக-அரசியல் அடிமைத்தனங்களுக்கும் எதிராக ஊக்கமுடன் போராடவேண்டும் (இன்றைய உலகில் திரு அவை - எண்:29).

உலகை ஊடுருவி, சமுதாயத்தைப் புதுப்பித்து, அதைப் புனிதப்படுத்தி உருமாற்றுவது பொதுநிலையினர் பெற்றுள்ள தனிவரம் (பொது நிலையினரின் திருத்தூதுப் பணி எண்:2).

நமக்கான அழைப்பு

இன்றைய நற்செய்தி வாசகத்தில்இயேசு தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்என்ற நம்பிக்கையை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம், கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியாரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள். இயேசுவின் இலட்சியத்தையும் மதிப்பீடுகளையும் நமதாக்கி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காகத் திருத்தூதுப் பணியாற்ற அழைப்புப் பெற்றவர்கள். இது தொடர்பாகத் தனது மடலில் திருத்தந்தை லியோ பரிந்துரைக்கும் கீழ்க்காணும் சிலவற்றை முன்னெடுக்க முயற்சிப்போம்:

ஏழைகள் மீதான அன்பின் வழியாக உலகைப் புதுப்பித்தல்.

பிளவுகளைக் குணப்படுத்தும் இரக்கம் மற்றும் உரையாடல்.

ஏழைகளில் இயேசுவைச் சந்தித்தல்.

வீடுகளில் / குடும்பங்களில் அன்பு மற்றும் விருந்தோம்பல்.

துன்பப்படுவோருக்கான பரிந்துரை மன்றாட்டுகள்.

தேவையிலிருப்போருடன் நேரத்தையும் அக்கறையையும் பகிர்தல்.

சமூக நீதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல்.

இறைவனின் அன்பும் நீதியும் நிறைந்த இறையாட்சியைக் கட்டமைத்தல்.

அருள்பணி. மரிய மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு

மேதகு ஆயர் சகாயராஜ், தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு