news-details
வத்திக்கான் செய்திகள்
கொல்கத்தா மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் முதல் பெண் இயக்குநர்

கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸை நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு பொதுநிலையினர் அதிலும் குறிப்பாக, ஒரு பொதுநிலைப் பெண், மறைமாவட்ட இளைஞர் பணியை வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். கொல்கத்தா உயர்மறைமாவட்ட இளைஞர் பணிக்குழுவின் இயக்குநராக கடந்த ஒன்பது ஆண்டுகள் அருள்தந்தை சந்தீப் மைக்கேல் பிஸ்வாஸ் பணியாற்றி வந்தார். அவரின் பணி மாற்றத்தைத் தொடர்ந்து, உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு எலியாஸ் ஃபிராங் அவர்கள் இந்தியாவின் முதல் பொதுநிலையினர் பெண் மறைமாவட்ட இளைஞர் இயக்குநராக இவரை நியமித்துள்ளார்.

திருமதி. ஆஞ்சலா பெர்ரிஸ் இந்தியக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் (ICYM) நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தவர். இவருடைய அருள்பணி ரீதியான நுண்ணறிவு, அமைப்பு ரீதியான அனுபவம், மேலும் இளைஞர் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவத்தில் இவரின் பங்களிப்பு இவற்றால் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இந்த நியமனம், இந்தியாவில் பல்வேறு மறைமாவட்டங்களுக்கும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூட்டியக்கப் பண்பைச் (Synodality) செயல்படுத்துவதற்கு இந்நிகழ்வு தூண்டுதலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.