news-details
ஆன்மிகம்
திருத்தூதுச் சீடர்களுக்கான உருவாக்கம் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 12)

தம் சீடர்களின் உருவாக்கத்தில் இயேசு செலவிட்ட நேரம், திரு அவையின் உருவாக்கப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கையாண்ட உருவாக்க முறையே அதற்கு மாதிரியாகவும் திகழ்கிறது. அவர் கற்றுத்தருவதுடன் நின்றுவிடவில்லை; தம் வாழ்வையே பகிர்ந்து அவர்களுக்குமாதிரிகாட்டினார். எவ்வாறெனில், “தமது இறைவேண்டலின் மாதிரி வழியாகஇறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத்தாரும்என அவர்களைக் கேட்கச் செய்தார். கூட்டத்திற்கு உணவு அளித்த தன் வழியாகத் தேவையில் இருப்போரைக் கவனிக்கக் கற்பித்தார். எருசலேமுக்குப் பயணித்த தன் வழியாக சிலுவையின் பாதையை அவர்களுக்குக் காட்டினார் (முஅ 14 b).

இறைமக்கள் அனைவரும் சீடத்துவ உறவு வாழ்வுக்கும், நற்செய்தியின் மகிழ்ச்சிக்கும் சாட்சியம் பகரவும், கூட்டியக்க முறையைச் செயல்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளனர். “கூட்டியக்கம் என்பது அழைத்தலையும், மறைத்தூதுப் பணியையும் பற்றிய ஆழ்ந்த உணர்வு, புதிய முறையில் திரு அவைசார் உறவுகளை வாழ்தல், பங்கேற்பில் புதிய நடைமுறை, திரு அவையோடு இணைந்து தெளி தேர்வு செய்யும் செயல்முறை, தொடர் மதிப்பீட்டாய்வு செய்யும் பண்பாடு என்பவற்றை உள்ளடக்கியது ஆகும் (இஅ 141). உரிய உருவாக்க முறைகள் இன்றி இவை கைகூடாது. மேலும், கூட்டியக்கத்திற்கான உருவாக்கத்தைப் பெற்றிருந்தால்தான் திருமுழுக்கில் தாங்கள் பெற்ற கொடைகளை மறைத்தோ பயன்படுத்தப்படாமலோ வைத்திராது, அனைவருடைய நலனுக்காகவும் அவை பயன்படுத்தப்பட வேண்டியவை எனும் உணர்வும் உறுதிப்பாடும் அவர்களுக்கு ஏற்படும்.

பெறுபவர்களே வழங்குபவர்களும் ஆவர்!

இறைமக்கள் உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; முதன்முதலில் அவர்களே கூட்டுப் பொறுப்புடன் அதை வழங்குபவர்களும் ஆவர். ஏனெனில், முதல் உருவாக்கம் குடும்பத்தில்தான் நிகழ்கிறது. இதனால் திரு அவையில் உருவாக்கப் பணியாற்றுபவர்கள் இறைமக்கள் அனைவரின் ஞானத்துடன் இணைத்தே அதை ஆற்றவேண்டும். இதுவே கூட்டியக்க முறையில் உருவாக்கம் நிகழ்கிறது என்பதன் முதல் அடையாளம் (முஅ 14c). “கூட்டியக்க முறையிலான உருவாக்கம் என்பது தங்கள் குடும்பத்திலும் வேலையிடத்திலும், திரு அவை மற்றும் சமூக, அறிவுசார் தளங்களிலும் இறைமக்களைத் தங்கள் திருமுழுக்கு அழைப்பை முழுமையாக வாழச்செய்யும் நோக்குடையது. அது ஒவ்வொருவரும் தனக்கே உரிய அருங்கொடைகளுக்கும் அழைத்தலுக்கும் ஏற்ப திரு அவையின் மறைத்தூதுப் பணியில் செயலாக்கத்துடன் பங்கேற்கும் வகையில் அவர்களை ஆற்றல்படுத்தும் குறிக்கோளைக் கொண்டது (முஅ 14f).

இயேசுவில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவருடைய சீடர்கள்; அவரது திருத்தூதுப் பணியில் பங்கேற்பவர்கள். அவர்களது சீடத்துவ உருவாக்கம் கிறித்தவப் புகுநிலையில் தொடங்கித் தொடர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது நம்பிக்கைப் பயணத்தில் தாங்கள் சந்திப்பவர்கள் இயேசுவுடன் கொள்ளும் உறவில் வளரவும், அவர்களுக்குத் திரு அவையுடன் உள்ள ஒன்றிப்புறவை அறிமுகப்படுத்தவும் உதவுகின்றனர். பெற்றோர், உறவினர், ஞானப் பெற்றோர், வேதியர்கள், ஆசிரியர்கள், திருவழிபாட்டுத் தலைவர்கள், அன்பிரக்கப் பணி ஆற்றுகின்றவர்கள், திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால், புகுமுகப் பயணம் முடிந்ததும் குழுமத்துடன் அவர்கள் கொண்டுள்ள உறவு பொதுவாக ஆழத்தையும் வலுவையும் இழக்கிறது; அவர்களது உருவாக்கமும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. “ஆனால், ஆண்டவரின் திருத்தூதுப் பணியாற்றும் சீடராக மாறுதல் என்பது ஒருபோதும் முற்றுப் பெறும் செயல் அல்ல; தொடர் மனமாற்றத்தையும்கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு (எபே 4:13) அன்பில் வளருவதையும் நம்பிக்கையின் உயிர்துடிப்பும் மகிழ்ச்சியும் உள்ள சாட்சியம் பகர ஆவியார் தரும் கொடைகளுக்கு உள்ளம் திறந்தவர்களாக இருப்பதையும் தொடர்ந்து அது கோருகிறது (இஅ 142).

கிறிஸ்துவுடன் ஒன்றித்து ஒத்துருவாவதே உருவாக்கத்தின் நிறைவு. நம்பிக்கையாளர்கள் பலருக்கு அவர்கள் திரு அவையுடன் கொண்டுள்ள ஒரே தொடர்பு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பது மட்டுமே. அதனால் அது மிக அர்த்தமும் அனுபவமும் தரும் வகைகளில் கொண்டாடப்படவேண்டும். குறிப்பாக, மறையுரையும் அனைவருடைய பங்கேற்பும் சிறப்பாக அமைதல் அவசியம். இதுவே அவர்களது கூட்டியக்கத்தை உறுதிசெய்யும்.

உருவாக்கத் தளங்களும் முறைகளும்

இறைமக்களின் உருவாக்கம் பல்வேறு தளங்களில் நடைபெறுகிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப்பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊடகங்கள்வழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக் கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை.

திருத்தூதுச் சீடர்களுக்கான உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமைவதாகும். “மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தியுரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும் (இஅ 143).

இத்தகைய உருவாக்கத்திற்குத் தேவை தாங்கள் கற்றுத்தருவதைத் தாங்களே வாழ்ந்து காட்டும் தகுதியும் திறமையும் வாய்ந்த உருவாக்குநர்கள். இதனால் உருவாக்குநர்களின் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவது அவசியம். திருத்தூதுச் சீடர்களை உருவாக்குவது அவர்கள் மட்டுமல்ல; நம் குடும்பங்கள், அன்பியங்கள், பங்குகள், பணிக்குழுக்கள் மற்றும் கழகங்கள், அருள்பணி பயிற்சி இல்லங்கள், துறவு இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகத்தில் நலிவுற்றோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மேம்பாட்டிற்கான பணித்தளங்கள், மறைத்தூதுப் பணி மற்றும் தன்னார்வத் தொண்டு முயற்சிகள் என்பனவும் திருத்தூதுச் சீடர்களை உருவாக்கும் தளங்களே. ஏனெனில், “திரு அவையில் எவரும் உருவாக்கம் பெறுபவர்கள் மட்டும் அல்லர்; பிறருக்கு வழங்க தங்களிடம் ஏதாவது இருப்பதால், ஒவ்வொருவரும் உருவாக்குநர்களே. மக்கள் பக்தி கூட திரு அவைக்கு ஒரு விலைமதிக்கவியலாக் கருவூலமே. பயணிக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அது (பலவற்றை) கற்பிக்கிறது (இஅ 144).

உருவாக்கச் செயல்பாடுகளுள் மறைக்கல்வி தனிக்கவனம் செலுத்தப்படவேண்டிய ஒரு துறை. அது கிறித்தவப் புகுநிலையுடன் முடிந்துவிடவேண்டியது அல்ல; மாறாக, மக்களை அது வாழ்க்கை முழுவதும் மறைத்தூதுப் பணியாற்ற இட்டுச்செல்ல வேண்டும். “பல திரு அவைகளில் மக்களுடன் தொடர்ந்து பயணித்து உருவாக்கம் அளிப்பதில் வேதியர்கள் சிறந்த வளமாக இருக்கின்றனர். அவர்களது பணி கிறித்தவக் குழுமங்களால் இன்னும் அதிகமாகப் பாராட்டி ஊக்கப்படுத்தப்படவேண்டும் (இஅ 145).

கிறித்தவக் குழுமங்கள் பல துறைகளைச் சார்ந்த கல்விப்பணியிலும் ஈடுபட்டுள்ளன. வேலை வாய்ப்புகளுக்காகவும், சமூகம், அரசியல், பல்வகைக் கலைகள், விளையாட்டு என்பன போன்ற துறைகளில் ஈடுபடவும் அவை மக்களைத் தயாரிக்கின்றன. புற உலகில் நற்செய்திப் பணியாற்ற முன்னேறிச் செல்லும் திரு அவையின் முன்னணிப் பணித்தளங்களாக இவை இயங்குகின்றன. “அவற்றுள் தனிச்சிறப்பாகக் கத்தோலிக்கக் கல்விக் கூடங்களும் பல்கலைக்கழகங்களும் நம்பிக்கைக்கும் பண்பாட்டிற்கும் இடையிலான உரையாடலிலும் விழுமியங்களை முன்னிறுத்தும் ஒழுக்கநெறிக் கல்வி வழங்குவதிலும், நிறைவாழ்வின் உயிரோவியமாகிய கிறிஸ்துவை நோக்கிய உருவாக்கம் தருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவை தனியாள் மையப்போக்கு, போட்டி மனப்பான்மை என்பனவற்றால் இயக்கப்படும் இன்றைய பரவலான வாழ்க்கை முறைகளுக்கு ஒரு மாற்று மாதிரியை ஊக்குவிக்கும் ஆற்றல் உடையவை. இவ்வாறு அவை இறைவாக்குப் பணியும் ஆற்றுகின்றன (இஅ 146).

தனிப்பட்டத் திருப்பணிகளுக்கான உருவாக்கம்

திருமுழுக்குப் பெற்ற அனைவருக்குமான இணைந்த கூட்டியக்க உருவாக்கத்தின் பின்னணியில்தான் தனிப்பட்ட திருப்பணிகளுக்கும் அழைத்தல்களுக்கும் தேவைப்படும் சிறப்பு உருவாக்கம் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். “மாமன்ற அமர்வுகளின்போது வலுவாக எழுந்த இந்த வேண்டுகோள் உருவாக்கத்தின் சூழமைவுகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த பார்வையிலும் செயல்பாடுகளிலும் பல வேளைகளில் மாற்றத்தைக் கோருகிறது (இஅ 147).

அருள்பணி மாணவர்களின் தேர்ந்தெடுப்பும், அவர்களது உருவாக்கமும் கூட்டியக்க முறையில் நடைபெறவேண்டும் என்பது மாமன்றக் கலந்துரையாடல்களில் பலமுறை எழுப்பப்பட்ட வேண்டுகோள். பெண்களின் கணிசமான பங்களிப்பு, மக்களது அன்றாடக் குழும வாழ்வில் பங்கேற்பு, திரு அவையில் உள்ள அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கும், சபைசார் தெளிதேர்வு செய்வதற்கும் அவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி என்பன அதில் இடம்பெறுவது அவசியம்.

உருவாக்கம் ஆயர்களுக்கும் இவ்வாறு அவசியமானதே. அதனால் அவர்கள் ஆவியாரின் கொடைகளை ஒன்றிணைக்கும் தங்கள் பணியைச் சிறப்புற ஆற்றவும், தங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தைக் கூட்டியக்க முறையில் செயல்படுத்தவும் முடியும் (இஅ 148).

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. கூட்டியக்கப் பார்வையின் பின்னணியில், பொதுநிலையினர், துறவியர், அருள்பணியாளர்கள் என இறைமக்கள் அனைவருக்கும் இணைந்து பங்கேற்கும் உருவாக்க நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

2. அருள்பணியாளர் உருவாக்கத்தில் பல நிலைகளில் உள்ள இறைமக்கள் பங்கேற்க வேண்டும். பெண்களும் குடும்பங்களும் அதில் பங்கேற்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது.

3. அருள்பணியாளர் உருவாக்கத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்படுவோர் பயிற்சிக்கு உரிய பண்புகளும் திறமைகளும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏற்ற அளவீடுகளும் முறைகளும் செயல்படுத்தப்படவேண்டும்.

4. கூட்டியக்கத் திரு அவையின் பல்வேறு இடங்களின் சூழமைவுகளுக்கு ஏற்ப அருள்பணியாளர் உருவாக்கம் திட்டமிடப்படவேண்டும். அப்பயிற்சியில் பங்கேற்கும் முன்பு அவர்கள் அக்கிறித்தவக் குழுமத்தின் அனுபவத்தைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும் “(அருள்பணியாளர்) உருவாக்கம் நம்பிக்கையாளர்களின் சாதாரண வாழ்விலிருந்து வேறுபட்ட செயற்கையான சூழமைவில் நடைபெறக்கூடாது (முஅ 14n). மாறாக, “ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்தல், அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன கிறித்தவக் குழுமங்கள் வழங்கும் அனைத்து உருவாக்க முறைகளிலும் இன்றியமையாத ஒரு பகுதியாக இருத்தல்வேண்டும். இது விருப்பத்திற்கு விடப்பட்ட ஒரு (பிற்)சேர்க்கை அல்ல; மாறாக, நம்பிக்கையின் கட்டாயத் தேவை. திருநிலைப் பணிகள் மற்றும் துறவு வாழ்வுக்கான உருவாக்கத்திற்கு இது இன்னும் அதிகம் பொருந்தும் (முஅ 4o). இதற்கென அருள்பணியாளர் மற்றும் திருத்தொண்டர் என்போருக்கான உருவாக்கத்திற்கான அடிப்படைத் திட்டத்தை (Ratio Fundamentalis) மறுசீரமைப்பது அவசியம்.

5. அருள்பணியாளர் உருவாக்கத்தில் கூட்டியக்க நடைமுறை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும், கூட்டியக்கத் திரு அவைக்கு ஏற்ற அதிகாரச் செயலாக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உரிய மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் அருள்பணியாளர் தொடக்க மற்றும் தொடர் உருவாக்கத்திற்கான பொறுப்பாளர்களின் கலந்தாய்வு ஒன்றை நடத்தவேண்டும்.