திருப்பலி முன்னுரை
ஆண்டவராகிய
இயேசுவைக் கண்டுகொள்ளவும், அவரது உடனிருப்பை உணர்ந்து வாழவும் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருக்காட்சி என்றால், ‘வெளிப்படுத்துதல்’ என்று
பொருள். இயேசு ஒரு தனிமனிதகுலத்திற்கோ அல்லது நாட்டிற்கோ சொந்தமானவர் அல்லர்; மாறாக, உலகிற்கே சொந்தமானவர் என்ற உயர்ந்த, உன்னதக் கருத்தை உணர்த்துவதுதான் இந்தத் திருக்காட்சிப் பெருவிழா!
இயேசுவின்
பிறப்பானது இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏரோது மற்றும் மறைநூல் வல்லுநர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும், எளிமையின் வடிவான இடையர்களும், அறிவாற்றல் மிகுந்திருப்பினும் பல ஆயிரம் மைல்கள்
கடந்து வந்த ஞானிகளும் இயேசுவைக் கண்டு மகிழும் பேறுபெற்றனர். அம்மகிழ்ச்சியினை விண்மீன் காட்டும் பாதையில் சென்று அறிவித்தனர்.
இயேசுவைப்
பார்க்க வேண்டும் என்ற தீராத வேட்கையால் விண்மீனைத் தொடர்ந்து சென்ற ஞானிகளைப் போன்று நாமும் அன்றாடம் இயேசுவை நற்செயல்கள் வழியாகக் கண்டுகொள்ள முற்படுவோம். நம்முடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் இயேசுவை அன்றாடம் திருக்காட்சிப்படுத்துவோம்.
கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை உலகுக்கு உரக்க அறிவிப்போம் என்ற உறுதித்தன்மையோடு வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஒளியாக
இருந்து நம்மை அன்றாடம் வழிநடத்தும் ஆண்டவருடைய மாட்சி நம்மேல் உதித்துள்ளது. அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், நிறைகுறையோடு ஏற்றுக்கொள்ளுதல், சமத்துவம் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து ஒளியாம் இறைவனை இவ்வையகத்தில் ஒளிர்விக்கவும், ஒளியின் மக்களாக வாழவும் அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இறைவாக்கினரும்
திருத்தூதரும் தூய ஆவியின் துணையால் இயேசுவை அறிந்து அன்பு செய்து இம்மண்ணகத்தில் நற்செய்தி
அறிவித்ததுபோல், நாமும் தூய ஆவியின் துணையோடு நற்செய்தி அறிவிக்கவும், பிளவுகளைக் களைந்து கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாய் சமத்துவத்தோடு வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘எழு! ஒளி
வீசு’ என்று
கூறிய ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் ஒளியின் பாதையில் நடந்து அன்றாடம் தங்களுக்கு வருகின்ற இன்னல்கள், இடையூறுகள், சோர்வுகள் அனைத்திலும் அழைத்தவர் உடனிருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமக்காக
மனுவுரு எடுத்த ஆண்டவரே! திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்களுடைய சொற்களாலும் சிந்தனையாலும் நல்ல செயல்களாலும் இயேசுவைத் திருக்காட்சிப்படுத்த வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘நான் உங்களோடு
இருக்கின்றேன்’ என்று
கூறிய ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் தூய உள்ளமும் எளிமையான வாழ்வும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த இதயமும் கொண்டு இந்த உலகில் நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ‘கலங்காதே, நான்
உன்னோடு’ என்று
கூறிய ஆண்டவரே! ஞானிகள் உம்மைக்
கண்டவுடன் தன்னிலையிலிருந்து இறங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது போன்று நாங்களும் ‘நான்’,
‘எனது’ என்பதிலிருந்து
இறங்கி, தூய உள்ளத்துடன் உம்மை வணங்கி ஆராதிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.