பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் இடைவிடாத தேடல் - மகிழ்ச்சி! கல்வி, வேலை, பணம், செல்வம், உறவு, மதிப்பு, அதிகாரம் என இவையனைத்தும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே. அதனால்தான், “மகிழ்ச்சி மனிதனின் ஏக்கத்துடனான முக்கியமான எதிர்பார்ப்பு” என்கிறார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். ஆனால், இன்று நாம் செய்யும் செயல்கள் எப்போதும் உண்மையான, நீடித்த மகிழ்ச்சியைக் கொணர்வதில்லை. வசதி வாய்ப்புகள், செல்வச் செழிப்புகள், தொழில் வளர்ச்சிகள் என எல்லாம் இருந்தும் ‘மகிழ்ச்சி இல்லையே’, ‘மனநிம்மதி இல்லையே’ என்று புலம்புபவர்கள் நம் மத்தியில் ஏராளம். ஏன்? ஏனெனில், உலகம் இன்று நமக்கு வழங்கும் ‘மகிழ்ச்சி’ என்பது ஒரு மாயை. அது வசதியிலும் புகழிலும் வெற்றியிலும் இருப்பதாகப் போதிக்கிறது; மகிழ்ச்சியைத் தவறான இடத்தில் தேடச் சொல்லுகிறது.
பொதுக்காலத்தின்
நான்காம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை நம்மை மகிழ்ச்சியின் உண்மையான வேர்களுக்கு அழைத்துச் செல்கிறது. இன்று இறைவன் ஒரு ‘புரட்சிகரமான மகிழ்ச்சியை’ நமக்கு
அறிமுகப்படுத்துகிறார்.
நற்செய்தியாளர்
மத்தேயு இயேசுவின் போதனையை ஐந்து உரைகளாகத் தொகுத்துள்ளார். இதில் புகழ்வாய்ந்தது மலைப்பொழிவு என்று குறிப்பிடப்படும் முதல் உரையாகும். இது அதிகாரங்கள் 5 முதல் 7 வரை அமைந்துள்ள ஒரு மிக நீண்ட உரை. இந்த மலைப்பொழிவைக் கிறித்தவ வாழ்வின் ‘விண்ணக அரசமைப்புச் சட்டம்’ என்று அழைக்கலாம். மலைப்பொழிவு 1) பேறுகளும் அதைத் தொடர்ந்து சில அறிவுரைகளும் (5:3-20); 2) பழைய ஏற்பாட்டுச் சட்டத்திற்கு மாற்றாக இயேசு அளிக்கும் மனிதநேயப் போதனைகள் (5:21-48); 3) யூத அறச் செயல்களுக்குத் தேவையான உள்ளார்ந்த தன்மை (6:1-18); 4) புதிய சமுதாயம் உருவாக இயேசு தரும் சில விதிமுறைகள் என நான்கு பகுதிகளைக்
கொண்டுள்ளது.
இன்றைய
நற்செய்தியில், இயேசு ஒரு மலையின்மீது அமர்ந்து சீடர்களுக்கும் திரளான மக்களுக்கும் போதித்த மலைப்பொழிவின் முதல் பகுதியை வாசிக்கிறோம். மகிழ்ச்சிக்கான உலகளாவிய இலக்கணத்தை அவர் இந்த மலைப்பொழிவிலே தருகிறார். ‘பேறுபெற்றோர்’ (Blessed) என்பது உண்மையான
மற்றும் முழுமையான மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ‘பேறுபெற்ற நிலை’
(Beatitude) என்பதற்கான
கிரேக்க மூலச்சொல்லான ‘மக்காரியோஸ்’ (Makarios) என்பதற்கு ‘மகிழ்ச்சி’ என்பது
பொருள். இயேசு வழங்கிய எட்டுப் பேறுகளையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
‘ஏழையரின் உள்ளத்தோர்’ என்போர்
‘இறைவனே எங்கள் கதி, எங்களுக்கு அவரே எல்லாம்’ என்று கடவுளை மட்டுமே சார்ந்து வாழ்பவர்கள். இவர்கள் விண்ணக அமைதியை, மகிழ்ச்சியை மண்ணகத்திலே முன் சுவைப்பர். ‘துயருறுவோர்’ என்போர்
துன்புறுவோர் மற்றும் துன்புறுத்தப்படுவோர். அதாவது, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் எதிராகச் செய்த பாவங்களை எண்ணித் துயருறுவோர்; அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் சுயநலம் கொண்டவர்களால் துன்புறுத்தப்படுவோர். இவர்கள் ஆறுதல் பெறுவர். ஏனெனில், துன்புறுகிறவர்களுக்குக் கடவுள்தாம் ஆறுதல். ‘ஆறுதல்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘கடவுள் உன் பக்கத்தில் இருப்பார்’
என்பதும் பொருள். ‘கனிவுடையோர்’ என்போர்
வன்முறையற்ற, மென்மையான இதயம் கொண்டவர்கள். கனிவு என்பது இயேசுவைக் குறிக்கும் சொல்லாடல். “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்”
(மத் 11:29). ‘கனிவு’ என்ற சொல்லுக்கு இயேசுவின் வாழ்க்கையே இலக்கணம். கனிவை கிரேக்கத் திருவிவிலியம் தாழ்ச்சியுடையவர்கள் அல்லது இனிமையானவர்கள் என்று காட்டுகிறது. இவர்கள்தான் உலகை வெல்வார்கள். ‘நீதியின்மேல் பசி தாகம் கொண்டோர்’
இறைவனின் திருவுளம் நிறைவேற ஏங்குபவர்கள். நீதியை நிலைநாட்டுவதுதான் கடவுளுடைய பணி; அதில் பங்கெடுப்பவர்கள் பேறு பெற்றவர்கள் ஆகின்றனர்.
‘இரக்கமுடையோர்’ என்போர்
பிறரை மன்னித்து அன்பு காட்டுபவர்கள். அவர்களுக்கே இறைவனின் மன்னிப்பு கிட்டும். ‘தூய்மையான உள்ளத்தோர்’ என்ற
வரியில், மகிழ்ச்சி என்பது நாம் அணிந்திருக்கும் உடைகளிலோ அல்லது பதவிகளிலோ இல்லை; மாறாக, கள்ளமில்லாத நேர்மையான நமது உள்ளத்தில்தான் இருக்கிறது. அங்கே இறைவன் குடிகொண்டிருக்கிறார். வாழ்க்கையில் சண்டைகளைத் தவிர்த்து, அமைதியை விதைப்பவர்களே இறைவனின் பிள்ளைகள் என்ற ஓர் ஆழமான இறையியலை இயேசு காட்டுகிறார். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என்போர் உண்மைக்காகவும் இறைவனுக்காகவும் சோதனைகளை ஏற்பவர்கள். அவர்கள் விண்ணகத்தையே உரிமையாக்குகின்றனர். இந்த எட்டுப் பேறுகளும் உலகப் போக்கிற்கு மாறானவை என்றாலும், ஒரு மனிதனைத் தூயவனாகவும் மகிழ்ச்சியானவனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவை என்பதை இயேசு கற்றுத்தருகிறார்.
ஆண்டவர்
இயேசு மகிழ்ச்சிக்கான எட்டு பேறுகளை வரிசைப்படுத்திக் கூறும் வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் செப்பனியா ஆண்டவரைத் தேடுவதும் நேர்மையை நாடுவதும் மனத்தாழ்மையோடு தேடுவதும் மகிழ்ச்சியை அடைவதற்கான வாய்க்கால் என அறிவுறுத்துகிறார். இதில் செப்பனியா
‘எளியோர்’ (2:3) மற்றும்
‘எஞ்சியோர்’ (3:13) தாழ்மையுள்ள
இதயத்தோடு ஆண்டவர் பெயரில் நம்பிக்கை வைப்போரைக் குறிக்கிறார். இறுதி நாளில் ஆண்டவரிடம் இவர்களுக்குப் புகலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்குகிறார். நாம் நம்மையே நம்பியிருப்பதை விடுத்து, இறைவனை நம்பத் தொடங்கும்போது உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் பிறக்கிறது என நம்பலாம் அன்றோ!
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், கிறித்தவர்கள் கடவுளின் ஞானமாகிய இயேசுவைத் தங்கள் மேல்வரிச் சட்டமாகக் கொள்ள வேண்டும் எனவும் சிலுவையின் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர், உலகம் யாரை ‘முட்டாள்கள்’ என்று
கருதுகிறதோ, அவர்களைத் தேடி இறைவன் வருகிறார். உலகம் யாரை ‘பலவீனமானவர்கள்’ என்று
ஒதுக்குகிறதோ, அவர்களைக் கொண்டு வலிமையானவற்றை வெட்கப்பட வைக்கிறார். இங்கே மகிழ்ச்சி என்பது நமது தகுதியினால் வருவதல்ல; மாறாக, இறைவனால் நாம் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உணர்வினால் வருகிறது. “பெருமை பாராட்டுபவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” என்கிறார்
பவுல்.
காரணம்
என்னவெனில், யூதர்கள், கிரேக்கர்கள் தங்கள் படிப்பறிவால் அறிவுப்பூர்வமாகக் கடவுளை அறிந்துவிடலாம் என நம்பினார்கள். ஆனால்,
சிலுவையின் வல்லமையும் ஞானமும் மனிதரைக் கவரும் வகையில் சொல்லழகிலோ அல்லது வல்ல செயல்களிலோ அமையாது, மனிதரை உள்ளிருந்து உருமாற்றும் அருளில் அடங்கியிருக்கிறது என்று கூறி, நாம் யாராக இருந்தாலும், நம்மிடம் என்ன இருந்தாலும் நம்மைக் குறித்துப் பெருமை பாராட்டாமல், கடவுளைக் குறித்துப் பெருமை பாராட்டி வாழும்போது, நாம் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறோம் என்று பவுல் கற்றுத் தருகிறார்.
நாம்
நல்ல கிறித்தவர்களாக, விண்ணக மகிழ்ச்சியை மண்ணகத்தில் சுவைக்க என்ன செய்ய வேண்டும்? முதலாவது, மனத்தாழ்மையோடும் நேர்மையோடும் இறைவனைத் தேடுவோம். இன்றைய உலகம் நம்மிடம் கூறுகிறது: “பணம் இருந்தால் பாதுகாப்பு”, “அதிகாரம்
இருந்தால் மதிப்பு”,
“பெயர் இருந்தால் மகிழ்ச்சி.” ஆனால், கடவுள் நம்மோடும் நாம் அவரோடும் இருந்தால்தான் மகிழ்ச்சி என்பதை யார் மறுக்க இயலும்!
இரண்டாவது,
இகழ்ச்சியை இறைவனுக்காக ஏற்றுக்கொள்ளும் இதயம் வேண்டுவோம். கிறித்தவ வாழ்க்கை என்பது துன்பமே இல்லாத வாழ்க்கை அல்ல; அழுகையே இல்லாத பாதையும் அல்ல! இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கையில் இகழ்ச்சி, தவறான குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள் வரலாம். அப்போது நாம் தனியாக அழுவதில்லை. துன்புறுவதில்லை. நமக்காகத் திரு அவையும் துன்புறுகிறது. நமக்கு முன்னே வாழ்ந்த இறைவாக்கினர்கள், உண்மைக்காக நின்றவர்கள், நீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் அனைவரும் இதே பாதையில்தான் நடந்தனர்.
மூன்றாவது,
நீதியும் அன்பும் கொண்ட வாழ்க்கையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும். நீதியையும் அன்பையும் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய போராட்டங்களில் அல்ல; மாறாக, நமது பண்பான பேச்சில், பணிவான பணிகளில், நேர்மையான நடத்தையில், உண்மையான உள்ளத்தில் என ஒவ்வொரு நொடியும்
நாம் எடுக்கும் எளிய தீர்மானங்களில்தான் அடங்கியுள்ளது.
எனவே,
இயேசு நமக்குத் தரும் மலைப்பொழிவின் பேறுபெற்றோர் வாழ்வியல் முறை நாளைக்கான பாடமல்ல; அது இன்றே தொடங்கும் வாழ்க்கை முறை. நாம் இறைவனை முதன்மைப்படுத்தினால், உண்மைக்காக அமைதியோடு நிற்கக் கற்றுக்கொண்டால், அன்பையும் நீதியையும் வாழ்க்கை முறையாக மாற்றினால், மண்ணகத்தில் வாழ்ந்தபடியே விண்ணக மகிழ்ச்சியைச் சுவைக்கும் உண்மையான கிறித்தவர்களாக மாறமுடியும்.