‘உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்;
வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை
செய்வோம்!’
என்றான்
முண்டாசுக் கவிஞன் பாரதி. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிந்தனையைத் தழுவிய இப்பாடல் வரிகள், விவசாயம் மற்றும் அனைத்துத் தொழில்களையும் போற்றி வணங்குவதுடன், வீணாக இருப்பவர்களை இழிவாகக் கருதிடல் வேண்டுமென எடுத்துரைக்கின்றன.
உலகில்
உள்ள தொழில்கள் அனைத்திலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவுத் தொழிலே உலக மக்களுக்கு உணவளிக்கும் தொழில்; நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைக்கும் உழவனை நாம் மறந்துவிடக் கூடாது என்று எண்ணிய செந்தமிழ் புல(தழ்)வன், ஐயன் வள்ளுவரோ...
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும்
உழவே தலை’
(குறள் 1031)
என்றார்.
அதாவது, உலகம் பல தொழில்களைச் செய்து
சுழன்றாலும், இறுதியில் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது; எனவே, எவ்வளவு துன்பம் வந்தாலும், உழவுத் தொழிலே தலையானது, சிறந்தது என்று உழவுத்தொழிலின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கும்
மேலாக ஒருபடி சென்று,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு
பின்செல் பவர்’
(குறள் 1033)
எனப்
பாடினார். அதாவது, உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும்,
மானிடர் வாழ்க்கையில்
இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம். இவற்றுள் உணவே முதன்மையான இடம் வகிக்கிறது. உணவளிப்பதற்கு உழவுத் தொழில் சிறக்க வேண்டும்; இத்தொழிலில் ஈடுபடுவோர் உண்மையிலேயே போற்றுதற்குரியவர்கள் என்பதை உணர்ந்த தமிழ் மூதாட்டி ஒளவையும் ‘நல்வழி’ பாடலில் உழவுத் தொழிலின் உயர்வைப் போற்றி
ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு’
(பாடல் 12)
என்று
சிறப்புறப் பாடியிருக்கிறார். அதாவது, ஆற்றங்கரையில் உள்ள மரமும், அரசனே வியக்கும்படி வீற்றிருந்த வாழ்வும் ஒருநாள் வீழ்ந்துவிடும்; ஆனால், உழுதுண்டு வாழ்வதற்கு ஈடு இணை இல்லை என்று விவசாயத்தின் மேன்மையையும், உழுதுண்டு வாழ்வதன் சிறப்பையும் வலியுறுத்துகிறார். இத்தகைய சிறப்புமிக்கது வேளாண் தொழில்!
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
நம் முதுமொழி. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் உழவர்களின் வாழ்வில் அந்த ‘வழி’ இன்னும் ஒரு போராட்டக்களமாகவே நீடிக்கிறது. 2026-ஆம் ஆண்டின் விடியலில் விண்ணை முட்டும் தொழில்நுட்பப் புரட்சி ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் அதலபாதாளத்தில் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் அழுத்தங்களும்தான் முன்னெப்போதும் இல்லாத சவால்களைத் தற்போது ஏற்படுத்தி வருகின்றன.
அன்றும்
இன்றும் ஒரு விவசாயி நிலத்தில் இறங்கும்போதே கடனாளியாகத்தான் காலடி வைக்கிறான். ‘உழைப்பவன் கணக்குப் பார்த்தல் உழக்குக் கூட மிஞ்சாதாம்!’ என்ற பழமொழிக்கேற்ப, வறுமையில் பிறழும் விடியாத பொழுதே என்றும் அவனது வாழ்க்கையாகிப் போகின்றன. இத்தகைய சூழலில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல’ இன்றைய
ஒன்றிய பா.ச.க.
அரசின் நுகர்வுக்
கொள்கைகளும் வேளாண் சட்டங்களும் இன்னும் அவர்களை மேலும் மேலும் இருளில் தள்ளுவதாகவே இருக்கின்றன. தனி முதலாளிகளின் வர்த்தகம் செழிக்க ஒட்டுமொத்த வேளாண் சமூகமும் இம்மண்ணில் பலிகடா ஆக்கப்படுகின்றன.
இடுபொருள்களின்
விலை உயர்வு குறிப்பாக, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை இன்று கணிசமாக
அதிகரித்துள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, உலகளாவிய அளவில் உரங்களுக்கான செலவு உயர்ந்திருப்பது சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
வருடம்
முழுவதும் வெயிலிலும் மழையிலும் உழைத்து விளைவித்தப் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காததும் விவசாயிகளின் ஆகப்பெரிய சோகம். உழவனின் வியர்வையில் விளைந்த பல பயிர்களுக்கு அரசு
அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட (MSP), வெளிச்சந்தையில்
மிகக்குறைவான விலையே கிடைக்கிறது. இடைத் தரகர்களின் ஆதிக்கம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறை விவசாயிகளை ‘அவசர விற்பனை’
(Distress Sale) செய்யத்
தூண்டுகிறது.
ஒன்றிய
அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் 2025-இல் முன்மொழியப்பட்ட ‘விதை மசோதா’ போன்றவை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திறந்தவெளிச் சந்தைமுறை (Free Market) விவசாயிகளுக்கு
அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அது பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கிறது. சந்தை விலையைத் தீர்மானிக்கும் சக்தி விவசாயிகளிடம் இல்லை; மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கத்திலேயே அவை சுழல்கின்றன.
பாரம்பரிய
விதை சேமிப்பு முறைகளைவிட, பதிவு செய்யப்பட்ட வீரிய இரக விதைகளையே முன்னிறுத்தும் ‘விதை மசோதா 2025’, சிறு விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வைக்கும் ஒரு மறைமுகத் திட்டமாக விமர்சிக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டங்கள் ஒருபுறம் வலுத்தாலும், கொள்கை முடிவுகள் எடுக்கும் இடத்தில் அவர்களின் குரல் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைப்பு மற்றும் மின்சாரச் சீர்திருத்தங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.
‘அக்ரி-டெக்’
(Agri-Tech) மற்றும்
‘டிஜிட்டல் விவசாயம்’
பற்றி இன்று பா.ச.க.
அரசு பேசுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வழியாகச்
சந்தையை அணுகுவதும், ஆன்லைன் வர்த்தகத்தைப் புரிந்துகொள்வதும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. தொழில்நுட்பம் என்பது விவசாயிகளுக்கு உதவவேண்டுமே தவிர, அவர்களை மேலும் அந்நியப்படுத்தக்கூடாது.
உழவர்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். உலகுக்கு உணவூட்டும் உழவருக்காகக் குரல் கொடுப்பதும், அவர்கள் சார்பாகத் தேர்தல் காலங்களில் நன்கு சிந்தித்து நிலைப்பாடு எடுப்பதும் நமது கடமை.
குறிப்பாக,
உழவர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுடன் 50% இலாபம்
சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். இது வெறும் சட்டமாக மட்டும் இல்லாமல், நடைமுறையில் அனைத்துப் பயிர்களுக்கும் உறுதி செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டின் ‘உழவர் சந்தை’ போன்ற திட்டங்கள் இந்தியா முழுவதும் வலுப்படுத்தப்படவேண்டும். நேரடிச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் நுகர்வோருடன் விவசாயிகளை நேரடியாக இணைக்கும் ‘டோர் டெலிவரி’
(Door Delivery) போன்ற
நவீன முறைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
மேலும்,
2026-இல் காலநிலை மாற்றம் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பருவம் தவறிய மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க ‘பயிர் காப்பீட்டுத் திட்டங்கள்’ எளிமைப்படுத்தப்பட
வேண்டும்.
இறுதியாக,
விவசாயி என்பவன் வெறும் உணவு உற்பத்தியாளன் மட்டுமல்லன்; அவன் இந்தத் தேசத்தின் உயிர்நாடி. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.
அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதைத் தடுத்து, அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரமும், கௌரவமான வாழ்வாதாரமும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் தைப்பொங்கலின் உண்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.
மண்ணை
நேசிக்கும் மனிதர்களின் வாழ்வில்...
உண்மையான
மகிழ்ச்சி பொங்கட்டும்!
உரிமை
கொண்ட உயரிய வாழ்வு தங்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்