விருந்தினர்’ என்ற சொல் இன்று ‘உறவினர்’ என்ற பொருளில் கையாளப்படுகின்றது. உண்மையில் விருந்து என்றால், புதுமை என்றும், விருந்தினர் என்றால் அறிமுகமில்லாத அயலவர் என்றும் பொருள். உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள் இல்லாத சங்க காலத்தில் வழிப்போக்கர்கள் ஆங்காங்கே உள்ள மக்களிடம் உறவினர்போலப் பழகுவர். அவர்களும் வழிப்போக்கரை உறவினராக எண்ணியே விருந்து படைத்து, ஓய்வெடுத்துச் செல்லுமாறு கூறுவர். இதனை ‘அல்லில்லாயினும் விருந்துவரின் உவக்கும்’ என்கிறது நற்றிணை. அதாவது, புதியவர் நள்ளிரவில் வந்தாலும் விருந்து உபசரித்து மகிழ்ந்தனராம் பழந்தமிழர். அதுபோல் இன்றும் நாம் இயலாத அயலாரை ஏற்று நம்மாலான உதவியினை மனமுவந்து செய்யவேண்டும். வறுமையில் வாடும் அனைவருமே இறைவனின் விருந்தினர் என எண்ணி உதவ வேண்டும்.
“உன்னால் நூறு பேருக்கு உணவிட முடியவில்லை என்றாலும், ஒருவருக்கேனும் உணவிடு. அதுவுமில்லையெனில் இருப்பதைப் பங்கிட்டு உண்ணலாமே!” என்கிறார் அன்னை தெரேசா. இதையே ‘யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’ என்கிறார்
திருமூலர். அதாவது, கைப்பிடி உணவும் இல்லாத போது, நீங்கள் பிறர்மீது கருணைகொண்ட இனிய சொற்களையேனும் பகிருங்கள் என்பது இதன் பொருள்.
நீங்கள்
செய்வது உதவியோ, இன்னுரையோ அது மிகச்சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால், பெறுபவருக்கு அது அந்நேரத்தில் அவர்களின் வாழ்வையே மாற்றக்கூடியதாக அமைந்துவிடக் கூடும்.
வீட்டின்
ஒரு சிறிய பகுதியே கதவு. கதவைவிடச் சிறியது பூட்டு. பூட்டைவிடச் சிறியது சாவி. ஆனால், அந்தச் சிறிய சாவிதான் முழு வீட்டையும் திறக்கிறது. ஆக, சிறிய ஒன்றின் சக்தியையும் இறைவன் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை.
உண்மையான
இறைநேசிப்பாளர்களுக்கு
இறைவனின் கட்டளைகள் நல்ல மனிதர்கள் வழி செவியோரம் தூது வரும். சிலர் அதனை ஏற்பதாக மொழிவர். ஆனால், அக்கட்டளைப் படிச் செயல்படமாட்டார்கள். ஒருசிலர் கட்டளையை மறுப்பர்; ஆனால், அதனைப் பின்னாளில் செய்துமுடிப்பர்.
இவ்வாறு
சொல்லொன்று செயலொன்று என்று இருப்போருக்கு இறையருள் என்றுமே உணரப்படுவதில்லை. சொல்லும் செயலும் ஒன்றென வாழ்பவரே இறையருளை என்றும் உணர்வர்.