ஆணவம், அகந்தை, அலட்சியம், அச்சம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இக்காலகட்டத்தில், நாம் தவக்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். அன்பையும் அமைதியையும் வாழ்வின் வழியாகக் கொண்ட கிறிஸ்துவில் வேரூன்ற அழைக்கும் இத்தவக்காலம், நம் அழுக்குச் சிந்தனைகளைக் களைந்து அர்த்தமுள்ள வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. இறைவேண்டல், நோன்பு, அறப் பணிகள் போன்ற நல்ல பண்புகள் கிறிஸ்துவில் வேரூன்ற, இத்தவக்காலம் துணையாக இருக்கும்.
1. இறைவேண்டல்
அன்றாட
வாழ்வின் சத்தத்தில் மூழ்கியிருக்கும் இறைவனின் குரலை மீண்டும் கேட்க நம் இதயத்தைத் திறக்கிறது. எனவே, அமைதியில் ஆழப்பட வேண்டியது நமது கட்டாயக் கடமையாகிறது.
“இறைவேண்டல் என்பது ஆன்மாவின் அகக் குளியல்” என்கிறார்
புனித அகுஸ்தினார். ஆன்ம
சோதனை செய்வது மிகவும் அவசியம். இறைவேண்டல் என்பது எல்லா நேரங்களிலும் உதடுகளால் செபங்களை உச்சரித்துக் கொண்டிருப்பது அல்ல; மாறாக, தியானங்கள் வழியாக நம்முடைய இதயத்தைச் சுய ஆய்வுக்கு உட்படுத்துகிற ஒரு காலம் என்பதை இத்தருணங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகளைப் போலவே இறைவேண்டல் அமையவேண்டும் என்பது அவசியம் இல்லை. இறைவேண்டல் நேரங்கள் இறைக்குரல் கேட்கும் தருணங்களாக மாறவேண்டும். இத்தருணங்கள் இறைவனோடு ஒன்றிணையும் தருணங்கள் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். அமைதியில் நாம் தவழும்போது நமது குறைகளையும் நிறைகளையும் இறைவன் நம் கண்முன் கொண்டுவந்து, சரி செய்பவற்றை அவர் சரிசெய்கிறார்; களைபவற்றைக் களைகிறார். “இறைவனோடு நாம் ஒன்றிணையும் பொழுது நம்மில் நல்ல பண்புகள் வளர்கின்றன. பாவங்கள் களையப்படுகின்றன. கோபம் விலகுகிறது; கருணை பிறக்கிறது” என்கிறார்
புனித பிரான்சிஸ் தே சேல்ஸ். “இறைவனோடு
ஒன்றிணையாத வாழ்வு, கடலில் இருந்து கரைக்கு வந்த மீனுக்குச் சமம்” என்கிறார் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம். உலகம் காட்டக்கூடிய கவர்ச்சிகள் அனைத்தும் கானல் நீர் என்பதை உணர்த்துகிற இந்தக் காலத்தில், இறைவனோடு ஒன்றிணையும் நேரங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்வோம். நம்மைப் பல நேரங்களில் தனிமைப்படுத்தி
அன்றாடம் தாங்குகிற கடவுளின் தரிசனத்தைக் காண்போம்.
2. நோன்பு
இக்காலகட்டத்தில்
வெளிப்புற உடல் நலத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்கும் காலமாகவும் இந்தத் தவக்காலத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தவக்காலத்தில்
பலர், மது அருந்தாமல் இருப்பது, புகை பிடிக்காமல் இருப்பது என்று நாற்பது நாள்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு தங்கள் பழைய வாழ்க்கைக்குக் கடந்து செல்கிறார்கள். நமது வாழ்விலே பல வியத்தகு செயல்களை
அனுபவிக்க இறைவேண்டலோடு கூடிய நோன்பும் தேவைப்படுகிறது.
தீய
ஆற்றலால் நாம் பாதிக்கப்படும் பொழுது இயேசுவின் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்வோம். “இவ்வகைப் பேய், இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்
இயேசு (மத் 17:21).
ஆன்மாவின்
அகக் குளியலுக்கும் தூய்மைக்கும் இந்த நோன்பு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை உணர வைக்கிற காலம் இந்தத் தவக்காலம்.
ஒரு
காலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பு இருப்பார்கள். ஆனால், இப்பொழுது பல்வேறு
நோய்களால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்கள் நோன்பு இருக்க முடியாத சூழ்நிலை. ஆனாலும்,
சற்று ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக வாழ்விலே இலக்கோடு பயணிப்பதற்கும், இறைவனோடு ஒன்றிணைவதற்கும் நோன்பு என்பது கட்டாயம் தேவை என்பதை உணர வேண்டும்.
3. தர்மம் அல்லது அறப்பணிகள்
‘நான் உன்மீது அன்பு செய்து வருகிறேன்’
என்கிற திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை லியோ அவர்கள் அறப்பணிகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஏழை எளிய மக்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்றும், அவர்களே நற்செய்திப் பணியின் கதாநாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
திருவழிபாட்டில்
நாம் ஏறெடுக்கும் இறைவேண்டல்கள் விண்ணகத்தைச் சென்றுசேர வேண்டுமென்றால் நாம் கொடுக்கக்கூடியதான தர்மங்கள் அதன் சிறகுகளாக அமைந்தால் மட்டுமே விண்ணகத்தைச் சேரமுடியும் என்பதைத் திருத்தந்தை பெரிய கிரகோரியாரின் எழுத்துகளில் பதிவிடுகிறார். “தானம்
செய்வது நீதிக்குத் தலை வணங்குவதாகும்” என்கிறார்
புனித அம்புரோஸ்.
உடைமைகள்
இழந்தவர்கள், உரிமைகளை இழந்தவர்கள், சுதந்திரத்தை இழந்தவர்கள், குரலற்றவர்கள், விளிம்புநிலையில் இருப்போர், கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மிக அளவில் கண்டுகொள்ளப்படாதவர்கள், சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள்... என இவர்கள் அனைவருக்கும்
உதவிக்கரம் நீட்டுவதுதான் நம்முடைய கிறித்தவர்களின் அவசியக் கடமையாக இருக்கிறது.
வன்முறைகளால்
பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இரு மடங்கு ஏழைகளாய் மாறி இருக்கிறார்கள் என்பதைத் திருத்தந்தை சுட்டிக்காட்டத்
தவறவில்லை. செல்வராயினும் இயேசு ஏழையானார்; எளிய மக்களோடு வாழ்ந்தார்; தலைசாய்க்கக் கூட இடம் இல்லாத அளவுக்குப் பற்றற்றவராய் வாழ்ந்தார் என்று நற்செய்தியில் நாம் வாசித்தாலும், மீண்டும் மீண்டுமாய் மறுவாசிப்பு செய்து அதை ஏழை எளிய இயேசுவைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகின்றோம்.
2026-ஆம் ஆண்டை
புனித பிரான்சிஸ் அசிசியார் ஆண்டாகத் திருத்தந்தை லியோ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். செல்வராக இருந்தாலும் இயேசுவின் அடிச்சுவட்டில் ஏழையாகவே வாழத் தொடங்கி, தொழுநோயாளிகளை எல்லாம் தன்னுடைய கரங்களால் அரவணைத்து, ‘யாரும் சமூகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்கள் அல்லர்’ என்பதை உலகுக்கு உணர்த்திய புனித பிரான்சிஸ் அவர்களும் இத்தவக்காலத்தில் நம்முடைய முதன்மை மாதிரியாக நம் கண்முன் வலம் வரட்டும்
திரும்பத்
திரும்ப நாம் மறையுரைகள் வழியாக, இறைவார்த்தையை வாசிப்பதன் வழியாக, ஏழை எளியவருக்குக் கைகொடுக்கவேண்டும் என்று நாம் வாசித்தாலும், ஏன் நம்முடைய இதயம் அவர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் திருத்தந்தை சாடுகிறார்.
‘கண்டுகொள்ளாமை’ மிகப்பெரிய
பாவம் என்பதைச் சாடுகிற திருத்தந்தை, புலம்பெயர்ந்த சகோதரர்-சகோதரிகளை நாம் ஏற்றுக்கொள்ளவும், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும், அனாதைகளுக்குப் புகலிடம் கொடுக்கவும் நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.
மருத்துவ
வசதியின்றி, கல்வி வசதியின்றி வாடுகிற மக்களுக்குக் கல்வி செல்வத்தையும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதையும் நினைவில் கொண்டு மக்களுக்கு அறப்பணிகள் ஆற்றிட இந்தத் தவக்காலம் நமக்கு அறிவுறுத்தவேண்டும்.
ஒரே
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய், அந்தக் குழந்தையை எவ்வளவு கண்ணும் கருத்துமாய் நோய்களிலிருந்து பாதுகாப்பாளோ அதுபோல, திரு அவை உறுப்பினர்களாகிய நாம் நோயுற்ற ஒவ்வொருவரையும் கண்காணிக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் புனித கமில்லஸ்.
அனாதையாக,
அந்நியனாக, அகதியாக அடைக்கலம் கேட்டு வரும் மக்களுக்கு இறைப் பிரசன்னத்தைக் கொடுக்கவே திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த அறப்பணிகள் வழியாக நாம் செய்தோம் என்றால், இந்தத் தவக்காலம் உண்மையான, அர்த்தமுள்ள காலமாக மாறும்.
கிறிஸ்துவில்
வேரூன்றிய வாழ்வு என்பது, இறைவனோடு ஒன்றிணையும் தருணம், நோன்பிருக்கும் தருணம், அறப்பணிகள் ஆற்றுகின்ற தருணம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்பதை மனத்தில் கொண்டு அர்த்தமுள்ள விதத்தில் இந்தத் தவக்காலத்தைக் கொண்டாட முன்வருவோம்.