இன்றைய உலகம் வேகத்தையும் செயல்பாட்டையும் வாழ்க்கையின் அளவுகோலாக மாற்றியுள்ளது. எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; எதையாவது சாதிக்கவேண்டும் என்ற அழுத்தம் மனிதனை அமைதியற்றவனாக மாற்றுகிறது. வெளிப்படையான வெற்றிகளுக்குப் பின்னாலும், உள்ளார்ந்த வெறுமையும் சோர்வும் அதிகரித்து வரும் இந்நிலையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ‘இயேசு கிறிஸ்து - நமது எதிர்நோக்கு’ என்ற யூபிலி ஆண்டு சிந்தனையின் கீழ், மனித இதயத்தின் ஆழமான தேடலை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டு வரும் எண்ணத்தில் தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
துன்பத்தின் வழியே
நற்செய்தி
கிறித்தவ
வாழ்க்கை என்பது சுகமான பாதை அல்ல; இது அர்த்தமிக்க பயணமாகவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அர்த்தம் பல நேரங்களில் வெற்றியின்
மேடைகளில் அல்ல; மாறாக, துன்பத்தின் நிழலில்தான் வெளிப்படுகிறது. நற்செய்திக்காக மகிழ்ச்சியுடன் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, உண்மையான கிறித்தவச் சீடத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
ஓர் இலக்கிற்காக
ஏற்றுக்கொள்ளப்படும்
துன்பம்
பல
ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஷ் வீராங்கனை ஆலிஸ் மார்பிள், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நாளாக இருக்கும் என்று எண்ணிய விம்பிள்டன் இறுதிப் போட்டி நாளில், கடும் உடல் வலியுடன்தான் காலையில் விழித்தெழுந்தார். மருத்துவர் வயிற்றுத்தசை கிழிந்திருப்பதை உறுதி செய்தபோது, ‘விளையாடுவது புத்திசாலித்தனமல்ல’ என்று
அறிவுறுத்தினார். ஆனாலும், அவர் போட்டியிலிருந்து விலக மறுத்தார். ஒவ்வோர் அடியும் உடலின் வலியை அதிகரித்தபோதும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் அவர் வெற்றியடைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிக்கோளுக்காக மனிதன் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், கிறித்தவ நம்பிக்கையில் இந்தக் குறிக்கோள் உலகியலான புகழைத் தாண்டி, நிலையான வாழ்வை நோக்கி வழிநடத்துகிறது.
கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளில்
துன்பத்தின்
அர்த்தம்
“கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்பப்பட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும்படி ஒரு மாதிரியை விட்டுச் சென்றார்”
(1பேதுரு 2:21). துன்பம் என்பது கிறித்தவ வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அது தண்டனை அல்ல; மாறாக, மீட்பின் பயணத்தில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு. கிறிஸ்துவின் சிலுவை, துன்பத்தின் வழியே வாழ்வும் நம்பிக்கையும் பிறக்க முடியும் என்பதற்கான உயர்ந்த சாட்சி.
‘உங்கள் செல்வம்
எங்கு
உள்ளதோ…’ - இத யத்தை
நோக்கிய
இயேசுவின்
அழைப்பு
மத்தேயு
நற்செய்தியில் இயேசு கூறுகிறார்: “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்”(6:21).
இந்த வார்த்தைகள், மனித வாழ்வின் மையத்தைத் தொடுகின்றன. உண்மையான செல்வம் என்பது வங்கிக் கணக்குகளிலும் சொத்துகளிலும் அல்ல; மாறாக, அது மனித இதயத்தில் சேமிக்கப்படுகிறது. இன்று பொருள் செல்வம் வழிபாட்டுப் பொருளாக மாறியிருக்கும் சூழலில், இந்த இறைவார்த்தை ஒரு வலுவான சவாலாக நம் மத்தியில் ஒலிக்கிறது.
நாம் இயந்திரங்கள்
அல்ல;
நாம்
ஓர்
இதயம்!
திருத்தந்தை
வலியுறுத்தும் ஓர் அடிப்படை உண்மை: மனிதன் ஓர் இயந்திரம் அல்ல; அவன் ஓர் இதயம். இதயம் என்பது எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், கனவுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மனித ஆளுமையின் மையம். அதிகப்படியான செயல்பாடுகள் இதயத்தை நிரப்புவதில்லை; மாறாக, சிதறடிக்கின்றன. நாளின் முடிவில் தோன்றும் வெறுமை, ‘நான் எதற்காக வாழ்கிறேன்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் வாழ்க்கையைப் பார்ப்பது என்றால், இந்த இதயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதாகும்.
ஓய்வற்ற இதயம்
- நிலையான
உண்மை
புனித
அகுஸ்தினார் தனது ‘Confessions’எனும் நூலில்
இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகப் படைத்தீர்; எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறும் வரை ஓய்வற்றதாகவே இருக்கும்.” இந்த ஓய்வற்ற நிலை குழப்பத்தின் அறிகுறி அல்ல; மாறாக, மனிதன் தனது இறுதி இலக்கான கடவுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கான சாட்சி. மனிதன் ‘வீடு திரும்பும்’ பயணத்தில்
இருக்கிறான்; அந்த வீடு பொருளோ, அதிகாரமோ அல்ல; கடவுளின் அன்பில் அடையும் நிறைவு.
துன்பத்தின் வழியே
நற்செய்தியின்
பாதை
கிறித்தவ
வாழ்க்கை துன்பமற்ற வாழ்க்கை அல்ல; ஆனால், அது அர்த்தமற்ற துன்பமும் அல்ல; இயேசு கிறிஸ்து தம்மை முழுமையாக மக்களுக்காக அர்ப்பணித்து, சிலுவை வரை சென்றார். அவரது உயிர்த்தெழுதல், துன்பத்திற்கு இறுதி வார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. “சிலுவையில்லாக் கிறிஸ்துவை அறிவிப்பது, உயிரற்ற கிறித்தவத்தை அறிவிப்பதே” என்றார்
புனித இரண்டாம் யோவான் பவுல். நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ளப்படும் துன்பம், மனிதனை உடைக்காது; மாறாக, உள்ளார்ந்த மனிதனை உருவாக்குகிறது.
பலவீனத்தில் வெளிப்படும்
வல்லமை
புனித
பவுல், தனது சாதனைகளில் அல்ல; தனது பலவீனங்களில் பெருமை பேசுகிறார்: “நான் பலவீனமாக இருக்கும்போதுதான் வலிமையானவன் ஆகிறேன்”
(2கொரி 12:10). அவரது வாழ்க்கை, துன்பம் கடவுளின் அருளுக்கு இடையூறல்ல; அது அருளின் மேடையாக மாறமுடியும் என்பதற்கான சாட்சி. முழுமையான அர்ப்பணிப்பே உண்மையான திருத்தூதருக்கான தகுதி.
பிறரிடம் திறக்கும்
இதயம்
- உண்மையான
செல்வம்
உண்மையான
செல்வம் கடவுளின் அன்பிலும், சகோதரர்-சகோதரிகளின் உடனிருப்பிலும் கண்டுபிடிக்கப்படுகிறது. பிறர் நம்மை மெதுவாக நடக்கச் சொல்கிறார்கள், கேட்கச் சொல்கிறார்கள். சில நேரங்களில் நம் திட்டங்களை மாற்றச் சொல்கிறார்கள். அந்த இடையூறுகளுக்குள்ளேதான் கடவுளின் அழைப்பு மறைந்திருக்கிறது. “அன்பு கொடுக்கப்படும்போதுதான் அது மேலும் பெருகுகிறது” என்கிறார்
புனித அன்னை தெரேசா.
கிறிஸ்துவில்
நமது
உறுதியான
எதிர்நோக்கு
இயேசு
கிறிஸ்து தமது மனுவுருவெடுத்தல், பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, மனித இதயத்தின் ஓய்வற்றத் தேடலுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியுள்ளார். கிறிஸ்துவில் நமது வாழ்க்கை வெற்றி பெற்றுவிட்டது. அன்றாட வாழ்வின் சிறிய இழப்புகளிலும் அந்த வெற்றி தொடர்ந்து வெளிப்படுகிறது. துன்பமே தோல்வி அல்ல; துன்பத்தின் நடுவில் கடவுளை இழப்பதே உண்மையான தோல்வி; ஓய்வற்ற இதயத்தின் உண்மையான புகலிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே என்பதை உணர்வதே நம் கிறித்தவ வாழ்வு.