அன்று மாமன்னர்களையும் மன்னர்களையும் அரசவைப் புலவர்கள் உண்மைக்குப் புறம்பாகவும், வானளாவப் புகழ்ந்தும் பாடியது ஒரு வரலாறு. இன்று அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியோ குருக்கள்-துறவியர் பற்றியோ, அவரிடம் இல்லாத திறமைகள், குணங்கள் எல்லாம் உள்ளவராகப் பேசுவதும், அவருக்காக எதையும் செய்வோம் என்று வாழ்த்திப் பாடுவதும் உலகப் போக்கு. ஆனால், நமது எண்ணங்களை அறியும் ஆண்டவர் முன்பு, அப்படி மிகைப்படுத்திப் பேசுவதோ, பாடுவதோ சரியாகுமா?
நமது
வழிபாடுகளில், நாம் பாடும் பாடல்களில் உள்ள சில வார்த்தைகள் சரியானவையா? உண்மையானவையா? என நாம் கவலைப்படுவதே
இல்லை. ஏனெனில், அந்த வார்த்தைகள் நம்முடைய வார்த்தைகள் அல்ல; நாம் எழுதியதும் அல்ல; நாம் புரிந்துகொண்டு உச்சரிக்கும் வார்த்தைகளும் அல்ல; வேறு ஒருவரால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக எழுதப்பட்டவை. அத்தகைய சரியில்லாத வார்த்தைகள் உண்மையானவை அல்ல என்று அறிந்தும், நாம் பாடினால் அல்லது செபித்தால் அவை ‘பொய்’ ஆகிவிடும் அல்லவா?
உதாரணமாக,
ஒரு துறவற வார்த்தைப்பாடு நிகழ்வின் தொடக்கத்தில், கைகளில் தீபம் ஏந்தி அருள்சகோதரிகள் பவனியாக வரும்போது பாடிய ‘தீபத்தின் ஒளியினில் இணைவோம்’ என்ற பாடலை மற்ற இடங்களில் / நேரங்களில்
பவனியே இல்லாதபோதும் பாடுவது பொருத்தமானதா? அதேபோல் பெரிய ஆலயத்தின் உள்ளேயோ, துறவியரின் சிற்றாலயத்திலோ விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் மட்டும் சிலர் இருக்கும்போது, வருகைப் பவனியும் இல்லாத போது ஒருசிலர்
மட்டும் ‘ஆலயத்தில் நாம் நுழை கையிலே’ என்றோ, ‘இங்கே இதயங்கள் பல கோடி’ என்றோ பாடுகின்ற வார்த்தைகளும்...
காணிக்கைப்
பவனியே இல்லாதபோது நற்செய்தி விளக்கம் கூறி முடிந்தவுடன் அப்பத்தையும் இரசத்தையும் குரு ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்ற வார்த்தைகளுக்கு ‘இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக’ என்ற
பதிலுரையை மறந்தவர்களாய்,
தொடர்ந்து வரும் செபங்களும் தங்கள் பெயரால்தான் எழுப்பப்படுகின்றன என்பதையும் பொருட்படுத்தாமல், ‘காணிக்கை தர நான் வருகின்றேன்’ என்றோ,
உண்மைக்குப் புறம்பாக ‘இயற்கை ஈந்த மலர்கள் பறித்துத் தருவேன்’ என்றோ அதேசிலர் பாடுகிற
வார்த்தைகளும்...
திருவிருந்தில்
பங்குகொள்ள ஒருசிலர் மட்டுமே இருக்கிறபோது தொடங்கிய பாடலின் முதல் அடியைப் பாடி முடிக்குமுன், திருவிருந்தே முடிகின்ற நிலையில் அவசரம் அவசரமாகப் பாடகர்கள் முந்தியும் பிந்தியுமாக ‘அவ்விருந்தை உண்டிடச் சென்றிடுவோம் இன்பம் பொங்க’ என்றும் பாடிக்கொண்டே திருவிருந்துக்கு வருவதும் அவ்வளவு சரிதானா? பொருத்தமானதா?
வருகை,
காணிக்கை, திருவிருந்து பவனியே இல்லாதபோது பாடல் தேவையா? ‘ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம்’ என்பது கூட பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பாடலைப் பொருளுணர்ந்து பாடும்பொழுது மட்டும்தானே? வருகைப் பவனி, காணிக்கைப் பவனி, திருவிருந்துப் பவனி நடைபெறுகின்ற முக்கியமான விழா நாள்களில் கூட பாடுகின்ற பாடல்கள் அநேக நேரங்களில் பொருத்தமில்லாதவையாக இருப்பதை நாம் கண்டும் காணாமலே இருப்பது நடைமுறையாகிவிட்டது. குறிப்பாக, துறவற வார்த்தைப்பாடு விழா, ஆலயத் திருவிழா, யூபிலி விழா போன்ற நிகழ்வுகளுக்காக இயற்றப்பட்ட பாடல்களைக் குறுந்தகட்டிலோ (CD), பாட்டுப்
புத்தகத்திலோ இருக்கின்ற ஒரே காரணத்திற்காகப் பாடுவது சரியாகுமா? என்று நினைக்காமலே பாடுவதும் வழக்கமாகி விட்டது.
ஏதோ
பாடித்தான் ஆகவேண்டும் என்பதற்காக... உதாரணமாக, நற்செய்திக்கு முன் ‘அல்லேலூயா’
பாடுகிற பொழுது, இசைக் கருவிகளே எதுவும் இல்லாத போதும்
‘மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்!’ என்றோ, ‘என்னென்ன இராகங்கள்’
என்றோ, இறைவார்த்தையை விட்டுவிட்டுப் பாடுவதோ சரியல்ல என்பதா? ‘பொய்’ என்பதா? பொருத்தமற்றது என்பதா?
நாம்
எந்த வார்த்தைகளைச் சொல்லிப் பாடினாலும் நம் உள்ளத்தால் உணர்ந்து பாடாத பாடல் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல! எனவேதான் திரு அவை நாம் பாடும் பாடல்கள் மட்டும் அல்ல; வழிபாட்டின் (திருப்பலியின்) ஒவ்வொரு வார்த்தையையும் கூட நாம்
உணர்ந்து செபிக்கவேண்டும், பாட வேண்டும் என்பதற்காக அவரவரது தாய்மொழியிலேயே வழிபட அழைக்கிறது.
இப்படியிருக்க,
திருப்பலியின் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் முகவுரையைத் தொடர்ந்து ‘நீர் மெய்யாகவே தூயவர்’ என்ற வார்த்தைகளைக் குரு உபயோகித்தாலும், முகவுரை முடிவில் ‘பரிசுத்தர்! பரிசுத்தர்’ என்ற
வார்த்தைகளையே பயன்படுத்துவதும்; அதே
நேரத்தில், ‘தூயவர்! தூயவர்’ என்ற பாடலில் ஆண்டவரின் திருநாமத்தில் ‘வந்தவரை வாழ்த்திப் பாடிடுவோம்’ என்பதற்குப்
பதிலாக ‘வல்லவரை வாழ்த்தி’
என்று பாடுவதும் வாடிக்கையான, அனிச்சைச் செயல் போன்று பொருத்தமற்றதாக அமைவதில்லையா?
இயேசு
மத்தேயு 12:36-இல் “மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்” என்றும்,
மத்தேயு 15:8-இல் “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் இருக்கிறது” என்ற
எசாயாவின் இறைவாக்கைக் குறிப்பிட்டும் நமது செபங்களிலும் பாடல்களிலும் பயன்படுத்தும் வார்த்தைகள் பொருத்தமானவையாக, பயனுள்ளவையாக, உண்மையானவையாக இருக்கவேண்டும்
என்று எச்சரிக்கிறார்.
திருத்தூதர்
பணி 5:45-இல் நேர்மையின்றி நடந்துகொண்ட அனனியாவிடம் பேதுரு, “நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா
பொய் சொன்னாய்!” என்று கூற, அவன் கீழே விழுந்து உயிர்விட்டான் என்பதும் நமக்கு ஓர் எச்சரிக்கை. நாமோ வாடிக்கை, வழக்கம் என்றோ, ‘எல்லாரும் எல்லாக் கோவில்களிலும் இப்படித்தானே!’ என்ற போர்வையிலோ செபிக்கிற / பாடுகிற வார்த்தைகள் பொய்யானவை என்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமா?
திருப்பலி
நேரத்தில் பாட வேண்டியிருந்தால் திருப்பலிக்கு முன்பே உரிய பாடல்களைத் தெரிவு செய்துகொண்டு பாடவேண்டாமா? திருப்பலியில் பாடுவது கட்டாயமில்லையே? உண்மைக்குப் புறம்பான வார்த்தைகளைச் சொல்லிச் செபிப்பதும் பாடுவதும் நம்மைத் தீர்ப்புக்கு உரியவர் ஆக்குமல்லவா?
செபப்புத்தகத்திலோ,
பாட்டுப் புத்தகத்திலோ அச்சடித்திருந்தாலும் பொருத்தமற்ற, பொய்யான வார்த்தைகள் உள்ள செபங்கள் / பாடல்கள் தீர்ப்புக்கு உரியவையே. உதாரணமாக, புனித அந்தோணியார் மன்றாட்டு, நற்கருணை ஆராதனை (24) மன்றாட்டுகள் போன்றவை மாற்றி அமைக்கப்பட வேண்டியவை.
எனவே,
தேவையற்ற நேரங்களில், தேவையற்ற பாடல்களுக்கோ செபங்களுக்கோ இடம்கொடாமல், அமைதியில் தனி (மௌன) செபத்திற்கு இடம் கொடுப்பது உள்ளத்தால் செபிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இறையருள் பெருகவும் உதவும் அல்லவா!
‘இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமா?’ என்ற விவாதம், “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார்”
(லூக்கா 16:10) என்ற இறைவார்த்தைக்கு எதிரானதுதானே!