இன்றைய தொழில்நுட்ப உலகம் ஒரு சுவாரசியமான போர்க்களமாக மாறியிருக்கிறது. ஒருபுறம், அமெரிக்காவின் வற்றாத முதலீடு, அதிநவீன ஆராய்ச்சி, உலகையே மிரட்டும் கார்ப்பரேட் செல்வந்தர்கள் என அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ‘நாங்கள் என்ன சளைத்தவர்களா?’ என்று சவால் விடுகிறது சீனா. அமெரிக்காவிடம் தனியார் நிறுவனங்களின் பலம் இருந்தால், சீனாவிடம் ஒட்டுமொத்த அரசின் இரும்புக்கரமும் இருக்கிறது. ஏ.ஐ. கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய மாடல்களை மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவது, அதைத் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் புகுத்துவது... என சீனா கொடுக்கும் கழுத்தை நெரிக்கும் போட்டி அமெரிக்காவையே யோசிக்க வைக்கிறது.
இவர்கள்
அனைவரின் ஒற்றை இலக்கு AGI (Artificial General Intelligence) என்னும்
மனிதனுக்கு நிகரான அல்லது மனிதனை மிஞ்சிய, சிந்தனைத் திறன் கொண்ட ஏ.ஐ. மாடலை
முதலில் உருவாக்குவது யார் என்பதுதான். இப்போட்டியில் ஓபன் ஏ.ஐ., கூகுள்,
அன்த்ரோபிக், மைக்ரோசாஃப்ட், மேடா போன்ற புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதற்குத் தேவையான பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டவும், சிறிதும் தயக்கம் காட்டாமல் இரவும் பகலும் உழைத்து வருகின்றன. இந்த ஏ.ஐ. பந்தயம்
வெறும் ஆய்வகங்களோடு நின்றுவிடவில்லை. உலகளவில் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தலைகீழாக மாற்றி வருகிறது. இத்தொழில்நுட்பம் அனைத்துலகக் கவனத்தையும் திருப்பியுள்ளதோடு, இத்துடிப்பான ஏ.ஐ. ஆராய்ச்சியில்
அமெரிக்கா முன்னிற்பதால் மாணவர்களை ஈர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது.
தொழில்நுட்பமும்
மாணவர்களும்
ஹார்வர்ட்
கென்னடி பள்ளியின் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ்’ நிறுவனம்
2025-இல் நடத்திய ஆய்வு சுமார் 70% கல்லூரி மாணவர்கள்
ஏ.ஐ.-யைத் தங்கள்
வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர் என்றும், அண்மைய ‘Gallup’ நிறுவன ஆய்வுகள்,
அமெரிக்கத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களால் தங்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் வந்துவிடுமோ என்ற நிச்சயமற்றத்தன்மை, தொழில்கல்வி சார்ந்த கல்வி பயில்பவர்களிடையே அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றன.
மாணவர்கள்
ஏ.ஐ.-யில் நிபுணத்துவம்
பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாலும், அதே சமயம், அதுவே தங்களை வேலையிலிருந்து நீக்கிவிடுமோ என்று அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இளம் மாணவர்கள் பாரம்பரியக் கல்வித் திட்டங்களில் படிப்பை முடித்து வெளிவரும்போது, முற்றிலும் மாறிப்போகும் வேலைச் சந்தையைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். என்றாலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏ.ஐ. எவ்வாறு
பயன்படுத்துவது என்பது குறித்துக் கற்பிக்கப்படுவது மிகவும் அல்லது ஓரளவிற்கு முக்கியமானதும்கூட என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புவதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது. இதே மனநிலைதான் உலகளவில் பரவலாக இருப்பதாகவும் உணரப்படுகிறது.
ஏ.ஐ.யினால்
பாதிக்கப்படாத
பாடப்பிரிவுகளைத்
தேடி...
சில
ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் ஒருவர் பல கல்விப் பிரிவுகளை
ஆய்வுசெய்து, ஒரு திட்டத்துடன் ‘பிசினஸ் அனலிட்டிக்ஸ்’ (Business Analytics) என்ற துறையில் திறன்களைக் கற்று, படிப்பை முடித்ததும், ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று பட்டமும் பெறுகிறார். ஆனால், ஏ.ஐ.-யின்
வளர்ச்சி, அவரின் திட்டங்களை முற்றிலும் மாற்றிவிட்டது. அவர் அந்தப் படிப்பைக் கற்று முடித்து வேலை தேடும் தருவாயில், புள்ளி விவரப் பகுப்பாய்வு (Statistical analysis), கணினி
குறியீடு (Coding) போன்ற
அடிப்படைத் திறன்களை ஏ.ஐ. எளிதாகச்
செய்யும் நிலை உருவாகி, அவரின் கனவு உடைந்துபோனது. இவ்வாறு ஆரம்பநிலை வேலைகள் (Entry-level
jobs) பலவற்றை ஏ.ஐ. பறித்து
விடுவது பலர் மனத்தில் பயத்தையும், எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்புகிறது என்கிறார் ஓஹியோவில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர்.
இச்சூழலில்,
மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவை மாற்றியமைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், இன்றைய கல்லூரி மாணவர்கள், ‘ஏ.ஐ.-யினால்
பாதிக்கப்படாத’ ஒரு
முதன்மைப் பாடத்தைத் (major) தேர்ந்தெடுத்தல் என்பது நகரும் இலக்கைக் குறிவைப்பது (carrot infront of the cart) என்றாகிவிட்டது.
வேலைக்கேற்ற கல்வி
உலகளவில்
இன்று பிளம்பர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர் போன்ற உடல் உழைப்பு சார்ந்த எந்தவொரு வேலையும் ஏ.ஐ. ஆக்கிரமிக்க
முடியாதது. அதேநேரத்தில், மருத்துவம், நீதித்துறை மற்றும் கட்டடக்கலை போன்றவற்றைத் தவிர, பட்டதாரிகள் சேரும் பல வேலைகள் அவர்கள்
படித்த பாடத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்பதுதான் உண்மை. எனவே, ஒரு பட்டம் என்பது, நாம் எந்தப் பாடத்தைப் படித்திருந்தாலும் நம்மால் ஒரு கருத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் விமர்சிக்கவும் மற்றும் தகவல்களைச் செயல்படுத்தவும் முடியும் என்பவைகளுக்கு அடிப்படையாய் உள்ளதென்பது நம் அனுபவமும்கூட.
நாம்
‘மனிதர்களைக் கணினிகளாக மாற்ற’ முயற்சி செய்தோம். இப்போது கணினிகள் நம்மை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. என்றாலும், வருங்காலத்தில் இயந்திரங்களால் வழங்க முடியாத மனிதப்பண்புகளே அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் குறிப்பாக, இரக்கம் (Empathy), அறநெறி
(Ethics) மற்றும்
படைப்பாற்றல் மிக புதிய சிந்தனை (Innovative Thinking) போன்ற
திறன்களே மனிதர்களை இயந்திரங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்பது நம் இடைக்கால அனுபவமுமாக உள்ளது.
அறிவியல்
என்பது ஒரு வலிமையான வாகனம் என்றால், மனிதநேயம் என்பது அந்த வாகனத்தைச் சரியான திசையில் செலுத்தும் திசைக்காட்டி. திசைக்காட்டி இல்லாத பயணம் ஆபத்தானது என்பதை உணர்கிறோம். இன்று STEM (விஞ்ஞானம்,
தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) அறிவியல்-கல்வி முறைக்கு முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம். இது வேலை வாய்ப்பிற்கு ஏற்றதென்றாலும், முழுமையான மனிதனை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது. அறிவியல் நமக்கு எப்படி ஒரு கருவியை உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. ஆனால், மனிதநேயம் (Humanities) மட்டுமே
அக்கருவியை ஏன் உருவாக்கவேண்டும்? எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்ற அறநெறியைக் கற்றுத்தருகிறது.
உதாரணமாக,
அணுசக்தி என்பது ஒரு வீறு கொண்ட பொருள். இது மின்சாரம் தயாரிப்பதற்கா அல்லது அழிக்கும் ஆயுதமாக மாறவேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது மனிதநேயம்தானே! அடித்தளம் பலமாக இருக்க STEM கல்விப்
பிரிவுகள் தேவைதான். இன்று, அந்த அடித்தளத்தின் மேல் கோபுரம் கட்ட ஏ.ஐ. தேவை
என்றாகிவிட்டதால், ஒரே திசைக்கல்வி என்றில்லாமல், பல்முனை அறிவு இன்றைய சமுதாயத்தின் தேவை என்றும் உணரப்படுகிறது. எனவே, STEM-உடன்
சேர்த்து மனிதநேயப்
பண்புகளையும் (Humanities/Arts) ஊக்குவிப்பது
இன்றைய தொழில்நுட்பத்தின் கட்டாயமாக உள்ளது.
எதிர்காலத்தைச்
சந்திக்கத்
தயார்படுத்திக்
கொள்வதன்
அவசியம்
வருங்காலத்தில்
நம்மை அசைத்துக் கொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிதான் ஏ.ஐ.-ஐவிடப்
பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து பிராந்திய அல்லது குழுவாதப் (tribalised) பொருளாதாரமாக மாறும் சூழலில், அந்தப் பாதிப்புகளிலி ருந்து தப்பிக்க முடியாத துறைகளைக் கண்டறிந்து, தவிர்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எனவே,
ஏ.ஐ.-யைப் பற்றி
அதிகம் கவலைப்படாமல், நாம் எதில் சிறந்திருக்கிறோமோ, எதை விரும்பிச் செய்கிறோமோ அதனை மேம்படுத்தவும், ஒரு நிறுவனத்திற்கு நாம் ஒரு சொத்தாக இருப்போமென்பதையும் வெளிப்படுத்த வேண்டியது இன்றைய தேவை. அதோடு, எதிர்காலம் எப்படி மாறினாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நம்பகமான கூடுதல் தொழிலை (side hustle) வளர்த்துக்கொள்வது நமக்கு நம்பிக்கை
கொடுப்பதோடு, ஏ.ஐ.-யினால்
வரும் எதிர்பாராத பாதுகாப்பின்மை மற்றும் நம்பகத்தன்மை போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.
மாணவர்களின் இன்றைய
நிலை
“மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவுகளை (Majors) மாற்றுவது
இயல்பானது; ஆனால், அதற்குப் பல காரணங்கள் இருக்கும்” என்கிறார்
லுமினா (Lumina) கல்வி
அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோர்ட்னி பிரவுன். “இத்தனை மாணவர்கள் ஏ.ஐ. காரணமாகப்
பாடப்பிரிவை ஏன் மாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றும்
அவர் கூறுகிறார்.
‘ஜென் ஜி’
(Gen Z) இளையோரிடம்
நடத்தப்பட்ட கேலப் நிறுவன ஆய்வில், ஏ.ஐ. பயன்பாடு
அதிகரித்து வந்தாலும், இத்தலைமுறையைச் சார்ந்த பலர் இத்தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டு அஞ்சுகின்றனர். குறிப்பாக, தங்களின் சிந்திக்கும் திறன் மற்றும் வேலைவாய்ப்புகள்மீது ஏ.ஐ. ஏற்படுத்தும்
தாக்கம் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர். கணிசமான ஜென் ஜி பணியாளர்கள் வேலைவாய்ப்புச்
சந்தையில் ஏ.ஐ.-யினால்
கிடைக்கும் நன்மைகளைவிட ஆபத்துகளே அதிகம் என்று உணர்கின்றனர் என்று கூறும் பிரவுன், இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர்கள் வழக்கமாக ஆலோசனை கேட்கும் பேராசிரியர்கள், ஆலோசகர்கள் அல்லது பெற்றோரிடமே இதற்குப் பதில்கள் இல்லை என்பதுதான்.
மேலும்,
“மாணவர்கள் எந்தவித வழிகாட்டியும் (GPS) இல்லாமல்,
தாங்களாகவே இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார்
பிரவுன்.