news-details
தலையங்கம்
கருவறை முதல் கல்லறை வரை... மாண்பு கொண்டது மானுடம்!

மானுட நாகரிகத்தின் உன்னதமே எளியோரை எங்ஙனம் நடத்துகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அண்மைக் காலங்களில் உலகரங்கில்உயிர் பாதுகாப்பு (Pro-Life) எனும் சிந்தனை நன்மக்கள் உள்ளங்களில் துளிர்விடுகின்றது. ஆயினும், பல வேளைகளில் அது வெறும் கருக்கலைப்பிற்கு எதிரான ஒரு குறுகிய அரசியல் நிலைப்பாடாக மட்டுமே சுருக்கப்பட்டு, விவாதக் களங்களில் முடங்கிக் கிடக்கிறது. ஆனால், உண்மையில்உயிர் பாதுகாப்புஎன்பது அரசியல் எல்லைகளையும், கொள்கைச் சுவர்களையும் கடந்தது. அதுகருவறை முதல் கல்லறை வரைஅனைத்து மனித உயிர்களின் உன்னத மாண்பைப் பேணும் அடிப்படை உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்.

நீண்ட காலமாகவே, உலகளவில் மனிதர்கள் இரு வேறு எல்லைகளில் நின்றுகொண்டுதான் இந்தச் சிந்தனையை அணுகுகிறார்கள். ஒன்று, கருக்கலைப்பிற்கான உரிமையைக் கோரும்சுயதேர்வு ஆதரவு (Pro-Choice); மற்றொன்று, அதற்கு எதிரானஉயிர் பாதுகாப்பு (Pro-Life). இந்த இரு துருவ வகைப்பாடுகளுக்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ளும்போது, மாற்றுச் சிந்தனைகளுக்கான வழிகள் அடைபட்டுப் போகின்றன.

ஒரு தாயின் கோணத்தில் நின்று சிந்தித்தால், உயிர் பாதுகாப்பு என்பது வெறும் பிறப்புடன் முடிந்துவிடும் நிகழ்வல்ல; மாறாக, அது பிறப்பிற்குப் பின் தொடங்கும் நீண்ட நெடிய பொறுப்பு. ஒரு குழந்தையை உலகிற்குக் கொண்டு வந்தவுடன் தாயின் கடமை நிறைவடைவதில்லை; அங்கிருந்துதான் அது புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. வளர வளரக் குழந்தைகளின் தேவைகள் சிக்கலானவையாக மாறுகின்றன. இவற்றிற்குத் தீர்வு காண ஒரு கூட்டுச் சமூகத்தின், அன்பான குடும்பத்தின் மற்றும் ஆன்மிக அமைப்புகளின் அரவணைப்பு இன்றியமையாதது. எனவே, பிறப்பிற்கு முந்தைய உயிரை எப்படிக் காக்கத் துடிக்கின்றோமோ, அதே அளவு பிறப்பிற்குப் பிந்தைய உயிரின் வாழ்வாதாரத்தையும் காப்பதே உண்மையான உயிர் பாதுகாப்பாகும்.

உலகின் ஆகப்பெரும் வல்லரசான அமெரிக்காவிலேயே, ஏறத்தாழ நான்கில் ஒரு குழந்தை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாகவும், மாற்று அளவீடுகளைப் பயன்படுத்தினால் இந்த எண்ணிக்கை பாதியாக (இரண்டில் ஒரு குழந்தை) உயர்வதாகவும் தேசியக் குழந்தைகள் வறுமை மையத் (NCCP) தரவுகள் எச்சரிக்கின்றன. செல்வச் செழிப்புமிக்க நாடுகளிலேயே இந்நிலை என்றால், வளரும் நாடுகளின் விளிம்புநிலைச் சூழலைச் சொல்ல வேண்டியதில்லை.

வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமல்ல; அது தரமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், முறையான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மறுக்கப்படுவதன் குறியீடு. உண்மையான உயிர் பாதுகாப்புச் சிந்தனை கொண்ட ஒரு சமூகம், இத்தகைய வறுமைச் சூழலிலிருந்து குழந்தைகளையும் குடும்பங்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த ஆழமான உரையாடல்களைத் தொடங்கவேண்டும்.

அரசின் நலத்திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, தாய்-சேய் நல உதவிகள், ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ஆகியவை ஓரளவிற்குச் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கினாலும், அவை மட்டுமே முழுமையான தீர்வாகாது. அரசு சாரா நிறுவனங்களும், ஆன்மிக அமைப்புகளும் கைகோர்த்து, ஒவ்வொரு மனிதனும் தன் அடிப்படைத் தேவைகளைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.

கிறித்தவக் கோட்பாடுகளின்படி, பலவீனமானவர்களையும் எளியவர்களையும் காப்பது வெறும் சமூகச் சேவை அல்ல; அது இறைவனின் நேரடிக் கட்டளை. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் (யோவா 10:10) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதாகும். எனவே, மானுட உயிர்கள் யாவும் வாழ்வை நிறைவாகப் பெறவேண்டுமாயின், நாம் வெறும் பேச்சளவில் அல்லாமல், செயலில் காட்ட வேண்டும்.

ஆகவே, உயிர் பாதுகாப்பு இயக்கத்தை (Pro-Life Movement) அடித்தட்டு நிலைக்குக் கொண்டு செல்ல, ஆக்கப்பூர்வமான பல செயல்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, கருவில் வளரும் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டும்; ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்தல் மற்றும் வளர்ப்புப் பெற்றோராக (Foster Care) மாறும் முறையை ஊக்குவிக்க வேண்டும்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு அரவணைப்பு வழங்கவேண்டும்; உளவியல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், அம்மையங்களில் தன்னார்வலராகப் பணியாற்றவேண்டும்.

மேலும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடங்கள், ஆபத்தான சூழலில் உள்ள குழந்தைகளுக்கான மாலை நேரக் கல்வி மையங்கள் ஆகியவற்றில் நம் நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்யவேண்டும். மேலும், ஆன்மிகக் கூடங்கள் தங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடாமல், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை நோக்கித் தங்கள் கரங்களை நீட்டும் செயல்திட்டங்களைத் திரு அவை வடிவமைக்கவேண்டும்.

இந்தியச் சூழலில் கருக்கலைப்பு (Abortion) மற்றும் உயிர் பாதுகாப்பு (Pro-Life) ஆகியவற்றிற்கு இடையேயான உரையாடல், மேற்கத்திய நாடுகளைப் போல வெறும் மதக் கோட்பாடாகவோ அல்லது அரசியல் துருவமுனைப்பாகவோ மட்டும் சுருங்கிவிடாமல், மிகவும் ஆழமான சமூகப் பின்னணியைக் கொண்டுள்ளது.

இந்தியச் சட்டம் (MTP Act) உலக அளவில் மிகவும் முற்போக்கான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெண்ணின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. சட்டம் உரிமை வழங்கினாலும், நம் பாரம்பரியக் கலாச்சாரத்தில் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவை அழிப்பது என்பது ஒரு பாவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு சட்டம்உரிமையைமுன்னிறுத்தும்போது, சமூக மரபுகள்உயிரின் புனிதத்தைமுன்னிறுத்துகின்றன.

மேற்கத்திய நாடுகளில்Pro-Lifeஎன்பது பொதுவாகக் கருக்கலைப்பை முழுமையாக எதிர்ப்பதைக் குறிக்கிறது. ஆனால், இந்தியாவில் உயிர் பாதுகாப்பு என்பது வெறும் கருத்தியல் விவாதம் அல்ல; மாறாக, அது பெண் குழந்தைகளின் உயிர் வாழும் உரிமைக்கான நேரடிப் போராட்டம். இதன் மிக முக்கிய வடிவம் பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம் (PCPNDT Act) ஆகும். பெண் குழந்தை என்பதற்காகக் கருவை அழிப்பது கொடும் குற்றம். ஆனால், அதேவேளையில் ஒரு பெண்ணின் உடல் நலம் மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்கச் செய்யப்படும் மருத்துவக் கருக்கலைப்பு அவசியமானது. இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் நம் சமூகத்திற்குத் தேவைப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் 1973-ஆம் ஆண்டு வழங்கப்பட்டரோ வி. வேட் (Roe v. Wade) தீர்ப்பு, கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கிய ஒரு துயரமான நிகழ்வாக உயிர் பாதுகாப்பு ஆதரவாளர்களால் பார்க்கப்பட்டது. ஆயினும், அண்மையில்டாப்ஸ் (Dobbs) தீர்ப்பின் மூலம் அது இரத்து செய்யப்பட்டது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லாரன் போபர்ட் போன்ற தலைவர்கள், ‘பிறந்த குழந்தை பாதுகாப்புச் சட்டம் (Born-Alive Abortion Survivors Protection Act) போன்ற சட்டங்களை ஆதரித்து, கருக்கலைப்பு முயற்சியிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளுக்குக் கூட முழுமையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அமெரிக்க மக்களில் 77 விழுக்காட்டினர் இத்தகைய உயிர்காப்புச் சட்டங்களை ஆதரிப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறினாலும், அரசியல் தளத்தில் இன்னும் தீவிரமான கருத்தியல் போர்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இவ்வுலகில் அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாழும் உரிமை உண்டு. எனவே, தோலின் நிறம், மொழி, சமூக நிலை, கருவறையில் இருக்கும் நிலை என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து உயிர்களையும் நேசிப்பது நம் கடமை.

உயிர் பாதுகாப்பு என்பது வெறும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்குரிய சித்தாந்தமோ அல்ல; அது மனிதகுலத்தின் ஆன்ம சாட்சி. கருவிலிருக்கும் குழந்தையின் உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், தெருவோரங்களில் பசியால் வாடும் முதியவர்கள், புலம்பெயர்ந்த அகதிகள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரின் வாழ்வுரிமையையும் உள்ளடக்கியதே முழுமையானஉயிர் நேயஇயக்கம். இயற்கை நமக்குக் கொடுத்த உன்னதக் கொடை மனித உயிர். அதைத் தன்னிச்சையாக முடித்துக் கொள்ளவோ, சிதைக்கவோ எவருக்கும் உரிமையில்லை.

மனிதநேயச் சிந்தனைகள் மலரட்டும்;

மகத்தான மானுடம் வளரட்டும்;

உயிர் பாதுகாப்பு உன்னதமடையட்டும்;

கருவறைத் தொட்டில் முதல்

கல்லறைத் துயில் வரை

மனித மாண்பு எந்நாளும்

போற்றிப் பாதுகாக்கப்படட்டும்!

வாருங்கள்... மனிதம் புனிதமானது;

மானுடம் மகத்தானது என்பதனை

உலகறிய உரக்கச் சொல்லுவோம்!

வாருங்கள்... ஆகஸ்டு 9-ஆம் நாள் ஒன்றிணைவோம்! உயிர்காப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்