news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு (02-08-2026) எசா 55:1-3; உரோ 8:35,37-39; மத் 14:13-21

திருப்பலி முன்னுரை

இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துகளும் வரவேற்பும்! தமது இரக்கத்தினாலும் கருணையாலும் இவ்வையகத்தை வழிநடத்தி வரும் இறைவனைத் தேடி வந்திருக்கும் உங்களை, பரிவும் பகிர்வும் கொண்ட மக்களாக வாழப் பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

தம்மைத் தேடி வந்த திரளான மக்களின் உடல் மற்றும் ஆன்மப் பசியைப் போக்கிய இயேசு, நம் வாழ்விலும் அற்புதங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார். நமது நேரம், திறமைகள் மற்றும் ஆறுதலான வார்த்தைகளை அவரிடம் ஒப்படைக்கும் போது, அவர் அவற்றைப் பலமடங்கு பெருக்கி, நம் கவலைகளையும் இன்னல்களையும் நீக்கி இரட்டிப்பான ஆசிரைத் தருகிறார். இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை நாம் பற்றிக்கொள்ளும்போது, நம்மை வாட்டும் நோய்களும் நம்பிக்கையின்மையும் அகன்று போகும்.

நற்கருணை நாதராகிய இயேசுவை உட்கொள்ளும் நாம், அவரைப் போலவே மாற அழைக்கப்படுகிறோம். தேவைக்காக மட்டும் இறைவனைத் தேடாமல், நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவரை முழுமையாகச் சார்ந்து வாழ நாம் முன்வர வேண்டும். இந்தத் திருப்பலியில், இயேசுவின் விழுமியங்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்கவும், பிறரை அன்போடு அரவணைக்கும் பகிர்வின் இதயம் பெற்று வாழவும் வரம் வேண்டி, அவரின் சாட்சிகளாய் ஒன்றிணைந்து செபிப்போம். நமது இதயம் இயேசுவின் இதயம்போல் மாறிட இப்புனிதப் பலியில் முழுமையாக இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்க இறைவன் விடுக்கும் இலவசப் பேரழைப்பாகும். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சி மனித தாகத்தைத் தீர்ப்பதில்லை; ஆண்டவரின் வார்த்தையே அதற்கு அருமருந்து. எக்குறையுமின்றி நம்மை வழிநடத்தி வரும் இறைவனின் பேரன்பைச் சுவைக்க, இந்த முதல் வாசகத்திற்கு ஆர்வம் கலந்த பக்தியோடு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் வாழ்வில் துன்பங்கள் வரும்போது இறைவனின் அன்பை நாம் சந்தேகிக்கலாம்; ஆனால், உலகில் எந்தச் சக்தியாலும் நம்மை அவரின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்னும் மாபெரும் உறுதியை இன்றைய இரண்டாம் வாசகம் தருகிறது. அச்சமின்றி ஆண்டவரின் கரம் பற்றி நம்பிக்கையுடன் வாழ அழைக்கும் இவ்வார்த்தைகளுக்குப் பற்றுறுதியோடு செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவருக்கும் ஆசிர் அளியும். உமது அன்பைத் தேர்ந்துகொண்ட இவர்கள், அதனை அகிலத்திற்கு ஆர்வம் கலந்த துணிவோடு எடுத்துரைக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கருணையின் தெய்வமே! நாங்கள் உம்மைப்போல் பரிவும் இரக்கமும் கொண்ட இதயம் பெற்று வாழ அருள்புரியும். மற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும், எங்களிடம் உள்ள வளங்களைப் பிறரோடு மகிழ்ச்சியோடு பகிர்ந்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எங்கள் சிந்தனை, சொல், செயல்களால் உமது பேரன்பில் நாங்கள் என்றும் நிலைத்திருக்க அருள்தாரும். இமைப்பொழுதும் எங்களை நீங்காது காக்கும் உம்மீது கொண்ட நல் நம்பிக்கையில், நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பரிவுமிக்க பரம்பொருளே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதியும். அவர்கள் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவும், அவர்களுக்கு நாங்கள் நம்பிக்கை வாழ்வின் முன்மாதிரிகளாகத் திகழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.