திருப்பலி முன்னுரை
ஆண்டின்
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு, நம் உள்ளம் என்னும் நிலத்தை அன்பு, இரக்கம், மன்னிப்பு, பரிவு, மனிதநேயம் என்னும் நல்விதைகளால் பண்படுத்திப் பன்மடங்கு பயன் கொடுக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது.
இறைவன்
விதைப்பவராக இருந்து, ஒவ்வொரு நாளும் வார்த்தையின் வழியாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். நாம் இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளாமல் புறக்கணித்து, வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளைப் போன்று தீயோனின் தூண்டுதலால் வார்த்தையை மறந்து விடுகின்றோமா?
கடினமான
உள்ளம் கொண்டு ஆழமான நம்பிக்கையின்றிப் பாறையின்மீது விழுந்து பயன் கொடுக்காமல் மடிந்த விதைகளைப் போன்று கடின இதயத்துடன் வாழ்கின்றோமா? உலகக் கவலை, செல்வ மோகம், போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நெருக்கப்பட்டு, முட்செடியில் விழுந்த விதைகளைப் போன்று பயனளிக்காது மறைந்து விடுகின்றோமா? எனச் சிந்திப்போம்.
ஆண்டவர்
தம் வார்த்தைகளைத் தாராளமாக நமக்குத் தருகின்றார். நாம் எந்த அளவுக்குத் தகுதியுள்ள இதயத்தோடு செவிமடுக்கிறோம் என்பதிலேயே நம் ஆன்மிக வளர்ச்சி அடங்கியுள்ளது. எனவே, நம் இதயம் இறைவார்த்தையை ஏற்கும் பக்குவமான நல்ல நிலமாக மாறி, நூறு மடங்கு நற்பயன் கொடுக்க இணைந்து வரம் வேண்டுவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
ஆண்டவர்
வாக்கு மாறாதவர். அவரது வார்த்தைகள் வல்லமைமிக்கவை. விதைகள் எவ்வாறு முளைத்துப் பயன்கொடுத்துப் பலரை வாழவைக்கின்றதோ, அதேபோன்று நாமும் இறைவனின் வல்லமைமிக்க வார்த்தைகளை உள்ளம் எனும் நிலத்தில் விதைத்து, பல மடங்கு விளைச்சலைக்
கொடுக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
தூய
பவுல் நமக்குக் கிடைக்கவிருக்கும் மேலான மாட்சிமையைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதர் உயர்வடையும்போது மனிதர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் படைப்பும் உயர்வடைகிறது. அதற்காகவே, மனிதரோடு சேர்ந்த படைப்பும் பேறுகால வேதனையுறுகிறது என்பதை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. கருணையே
உருவான இறைவா! திரு அவையை வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும் பிறரை வாழத்தூண்டவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பேரன்பு
கொண்ட ஆண்டவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளங்களையும் மக்களையும் பாதுகாக்கவும், அனைத்து மக்களும் நலமோடும் வாழ்வதற்கு ஏதுவான திட்டங்களைத் தீட்டவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நன்மைகளின்
நாயகனே இறைவா! எம் குடும்பங்கள் அனைத்தும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவ்வார்த்தைகளின் படி வாழ்ந்து சிறந்த கிறித்தவக் குடும்பமாகத் திகழவும், ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இரக்கத்தின்
ஊற்றே இறைவா! உமது சாயலில் படைக்கப்பட்ட நாங்கள் எங்களால் இயன்ற அளவு மற்றவருக்கு உதவவும், ஏழையர், முதியோர் மட்டில் இரக்கம் கொண்டு உதவி செய்திடவும், எமது வாழ்க்கையால் உம்மைப் பிரதிபலிக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.