news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (26-07-2026) 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52

திருப்பலி முன்னுரை

கடவுள் என்ற மிகப்பெரிய புதையலைத் தேடி ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் கடவுளின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். கடவுள் பரிசாகக் கொடுத்த இந்த வாழ்க்கையைத் தரிசாகப் போட்டுவிடாமல், பலமடங்கு பலன் கொடுத்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 17 - ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

உலகச் செல்வங்களாகிய பணம், பட்டம், பேராசை இவற்றைச் சேமிப்பதிலேயே நாள்களை நகர்த்தி, வாழ்க்கை என்ற புதையலை அனுபவிக்காமலேயே சென்றுவிடுகின்றோம். இறைவன் நமக்குக் கொடுத்த பெற்றோர், மனைவி, குழந்தை, உறவினர், நண்பர் போன்ற புதையல்களை அன்பால், பண்பால், பாசத்தால் அரவணைப்போம். இறையாட்சியின் மதிப்பீடுகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பெறுவதற்கும் விதைப்பதற்கும் தியாகம் செய்யவும், நமது மனத்தைப் பண்படுத்தவும், ஞானத்துடன் செயல்படவும் முன் வருவோம்.

நமது மனமாகிய வலையில் விழும் வெறுப்பு, பாகுபாடு, தன்னலம், பொய், திருட்டு, வஞ்சகம், கோபம், குடி, ஆணவம் போன்றகெட்ட மீன்களைஅகற்றிவிட்டு பரிவு, கருணை, இரக்கம், அன்பு, மனிதநேயம், நல்லிணக்கம், சேவை போன்ற நல்ல மீன்களைச் சேர்த்துக் கொள்வோம்இதயம் என்ற நிலத்தில் இறைவார்த்தை என்ற விதையை அனுதினமும் விதைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டபோது, சாலமோன் பொன்னோ பொருளோ கேட்கவில்லை; மாறாக, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஞானத்தை மட்டும் கேட்கின்றார். ஆண்டவரிடம் ஆயிரக்கணக்கான தேவைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் நமக்கு, ஞானத்தின் அவசியத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் திட்டங்கள் வேறு; ஆண்டவரின் திட்டங்கள் வேறு. ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களுக்கு அவரின் துணை எப்போதும் உண்டு. தாம் அழைத்தவர்களை எத்தீங்கும் அணுகாது உடன் பயணிக்கின்றார். அவரின் திட்டத்திற்குப் பணிந்து வாழும் அவருடைய பிள்ளைகளுக்குத் தமது மாட்சிமையில் பங்கு கொடுப்பார் என்று கூறி ஆண்டவரின் அன்பில் நிலைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கவும், நம்பிக்கையின் ஒளியில் மக்களை வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் தேவனே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்கள் வளமோடும் அமைதியோடும் வாழ்வதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் தேவையான ஞானத்தை எம் நாட்டு தலைவர்களுக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் ஊற்றே எம் இறைவா! நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, ஏற்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வாழும் இடத்தைச் சொர்க்கமாக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் அனைவரும் இறைநம்பிக்கையில் வேரூன்றவும், உலகப் போக்கின்படி செல்லாமல் இறைவார்த்தையை அனுதினமும் வாசித்து அதன்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.