சகாதேவன் ராஜினாமா!
“ஏப்பா இப்படிப் பண்ணினீங்க? இது நாகரிகமான காரியமா? இப்ப போலிஸ் அது இதுன்னு தேவையா?” என்றான் சகாதேவன்.
“இதை உனக்காகத்தானே செய்தேன். நீதானே யாழினி சேவியரைக் கட்டப்போறாள்னு சொன்னே! அப்ப சேவியரை முடிச்சிறலாம்னு பார்த்தோம்” என்றார்
கலையரசன் சிரித்தபடி,
“இது முறையற்ற காரியம்ப்பா! யாழினியைப் பேசி முடிக்கிறதுதான் நல்லதுன்னு சொன்னேன். இந்த டாக்டர் சேவியரைக் கவனிச்சுக்கிறவா சொன்னேன்?” என்றான் சகாதேவன் கோபமாக.
“ஏப்பா, உன்னோட நல்லதுக்குத்தானே அப்பா இதைச் செய்தார்”
என்றாள் தாய் சுந்தரி.
“என்னோட நல்லது எதும்மா? கூட வேலை செய்ற டாக்டரைக் காரை மோதி அடிச்சுக் காலி பண்றதா நல்லது? இது காட்டுமிராண்டித்தனம். சூப்பிரண்டெண்ட் ஆபிஸ்ல இருந்து இஸ்மாயில்ட்டே தினமும் பேசிக்கிட்டிருக்காங்க” என்றான்
சகாதேவன்.
“பேசி என்ன செய்ய? அதெல்லாம் ஒண்ணும் கிழிக்க முடியாது. மேலே இருந்து போலிசுக்கு நெருக்கடி கொடுத்தாச்சு” என்றார்
கலையரசன்.
“நீங்க அரசியல்வாதின்னு தப்பிச்சிறலாம். ஆனால், உங்க பையன் நான்தான்னு தெரியாமலா போகும்?” என்றான் சகாதேவன்.
“நீதானே யாழினியை எப்படியும் கட்டியாகணும்னு ஒத்தக்கால்லே நின்னே! உனக்காகத்தான், அவளை உனக்குக் கட்டத்தான் இடையிலே இருந்தவனைத் தேடிப் பார்த்து அடிச்சாங்க. அவன் தப்பிச்சிட்டான்போல” என்றாள்
தாய் சுந்தரி.
“இதனால் எனக்குக் கெட்ட பெயர் மட்டுமில்லே! ஆஸ்பத்திரியில் கூட இருக்கிற டாக்டர்கள் என்னைச் சுத்தமாக மதிக்கமாட்டாங்க தெரியுமா?” என்றான் கோபமாக சகாதேவன்.
“அதுக்கு என்ன செய்றது? நடந்தது நடந்திருச்சு. அடுத்த காரியத்தை இப்பப் பேசு” என்றாள் தாய் சுந்தரி.
“நாங்கதான் வேற பெண்ணைச் சொன்னோம்ல. பேசாமல் சம்மதிச்சிருந்தால் இந்தக் குழப்பம் நடந்திருக்காதே” என்றார்
கலையரசன்.
“இப்பச் சொல்லு. இந்த மூணுல ஒண்ணைக் கட்டி வைக்கிறோம்” என்று
படத்தை நீட்டினாள் சுந்தரி.
“இதிலே இந்த மலர்விழியைக் கட்டிவையுங்க. இவள் இப்ப அப்பல்லோவில் வேலை செய்றாள். இவள் என்கூட வேலை பார்த்தவள்தான். எனக்கு நல்லாத் தெரிஞ்சவள். நீங்க பேசி முடிவு பண்ணி, கல்யாண வேலையைப் பாருங்க” என்றான் எரிச்சலுடன் சகாதேவன்.
“அப்படிச் சொல்லு சிங்கக்குட்டி. பிரச்சினை இப்ப முடிஞ்சு போச்சு. உனக்கு அடுத்த மாதம் மலர்விழியோட கல்யாணம் சிறப்பா நடக்கும்”
என்றாள் சுந்தரி.
“நான் இப்ப என்னோட வேலையை ராஜினாமா செய்திட்டு வேற ஆஸ்பத்திரியில் சேர்ந்திடுவேன். இந்த சேவியர் மேட்டரை இப்படியே வெளியே தெரியாமல் முடிக்கப் பாருங்க. வீணான கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்”
என்றான் சகாதேவன்.
“நீ கவலைப்படாதே. எல்லாத்தையும்
எங்களோட கட்சி மந்திரிகள் பார்த்து சரி பண்ணிடுவாங்க” என்றார்
கலையரசன்.
(தொடரும்)