ஜெருசலேமின் இலத்தீன் மறைமுதுவர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிட்சாபாலா, இத்தாலியின் புகழ்பெற்ற ‘லைம்ஸ்’ இதழின் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் காசாவின் கொடூரமான உண்மைகளை விவரித்தார். அண்மையில் காசாவிற்கு சென்ற கர்தினால், “காசா முற்றிலும் பேரழிவைச் சந்தித்துள்ளது; மக்கள் சாக்கடைகளுக்கும் கழிவுகளுக்கும் நடுவே கூடாரங்களில் வாழ்கின்றனர். ஊடகங்கள் காட்டாத ஆகப்பெரும் கொடூரம் அங்கு வீசும் துர்நாற்றமும், பசியால் குழந்தைகளைக் கடித்துக் குதறும் எலிகளின் தொல்லையும்தான்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும்,
“போர் நிறுத்தத்திற்குப் பின்னும் நிலைமை சீரடையவில்லை” எனக்
குறிப்பிட்ட அவர், பள்ளி மேசைகள், பேனாக்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் கூட ‘இராணுவப் பயன்பாட்டுப் பொருள்கள்’
எனக் கூறி இஸ்ரேலால் தடை செய்யப்படுவதாகச் சாடினார். மேற்குக்கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லை. இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைகள் அநாகரிகமாக அதிகரித்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 7 அன்று நடந்தேறிய தாக்குதல் யூதர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதால் தற்போதைய சூழல் சிக்கலாக இருக்கிறது. ஆனாலும், அமைதிக்கான உரையாடல்களும் பரஸ்பர புரிதலும் அவசியம். புனித பூமியைத் தனித்துவிடாமல், விளிம்புநிலை மக்களின் வாழ்வுரிமையைக் காக்க உலக நாடுகளும் ஊடகங்களும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும்” என்று
கர்தினால் பிட்சாபாலா உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.