மொழி என்பது மனிதர்களுக்கிடையேயான வெறும் தொடர்புக் கருவி மட்டுமல்ல; அஃது ஒரு சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி! வாழும் பாரம்பரியத்தையும், வரலாற்றுத் தொன்மையையும் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கும் கலாச்சாரச் சங்கிலி. இந்தியத் துணைக்கண்டத்தின் பேரழகே அதன் பன்மொழியிலும், பலதரப்பட்ட கலாச்சாரங்களிலுமே அடங்கியுள்ளது.
இந்தியாவில்
பன்மொழித்தன்மையையும்,
தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில், கோத்தாரி ஆணையத்தின் (1964-1966) பரிந்துரைகளின் அடிப்படையில் ‘மும்மொழிக்கொள்கை’ என்ற
கல்விசார் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் என்றும், அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் இக்கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால், இக்கோட்பாடு அதன் நோக்கங்களிலிருந்து விலகி, இன்று மாநிலங்களின் தன்னாட்சியையும், மாணவர்களின் கற்றல் சுதந்திரத்தையும் சிதைக்கும் ஒரு கருவியாக உருவெடுத்திருக்கிறது. அண்மையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஜூன்
2026-இல் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களும், அதன் விளைவாக எழுந்துள்ள குழப்பங்களும் இக்கொள்கையின் திசை மாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஒன்றிய
அரசு, ‘தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP) மூலம்
மும்மொழிக்கொள்கையை எவர் மீதும் திணிக்க மாட்டோம்’
என்று வாக்குறுதி அளித்தாலும், நடைமுறையில் அது முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தையே காட்டுகிறது. 2026 மே மாதத்தில், ஒன்பதாம்
வகுப்பு மாணவர்களுக்கும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக்கப்படும் என்றும், அவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் இரண்டு கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் CBSE அறிவித்தது.
இதனால் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளை விருப்பப்பாடமாகப் படித்து வந்த ஆயிரக்கணக்கான மாணவரும், அவர்களது பெற்றோரும் திகைத்து நின்று போராடத் தொடங்கினர்.
இதனைத்
தொடர்ந்து, ஜூன் 30, 2026 அன்று மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் CBSE ஒரு
திடீர் முடிவெடுத்து, புதிய விலக்குகளை அறிவித்துள்ளது. அதாவது, தற்போதைய 7, 8, மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே இரு வெளிநாட்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் அதனையே தொடரலாம் என்றும், கூடுதலாக ஒரேயோர் இந்திய மொழியை மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குறிப்பிட்ட பிரிவினருக்குப் பத்தாம் வகுப்பில் இம்முன்றாம் மொழிக்கு வாரியத் தேர்வு (Board Exam) இருக்காது;
மாறாக, பள்ளி அளவிலான உள்மதிப்பீடு (Internal Assessment) மட்டுமே
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்
திடீர் மாற்றங்களும், தற்காலிகத் தளர்வுகளும் மும்மொழிக்கொள்கையின் அடித்தளத்தில் உள்ள தொலைநோக்குப் பார்வையின்மையையும், திட்டமிடல் குறைபாட்டையும் உணர்த்துகின்றன. கல்வி என்பது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்துவக் கட்டாயங்களால் அவர்களின் சுமையைக் கூட்டுவதாக ஒருபோதும் அமையக்கூடாது.
தேசியக்
கல்விக் கொள்கை 2020-இன்படி, மாணவர்கள் எந்தவோர் இந்திய மொழியையும் தங்களின் மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டாலும், இந்த விதியின் உள்ளே மறைந்திருக்கும் நடைமுறைச் சவால்களை ஆராய்ந்தால் அவை பெரிதும் அதிர்ச்சியளிக்கின்றன.
உதாரணமாக,
தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் அல்லது அரசுப் பள்ளியில் 50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறை இருப்பதாகக் கொள்வோம். மும்மொழிக்கொள்கையின்படி, தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிற இந்திய மொழிகளைத் தேர்வு செய்யும்போது, இம்மொழிகளைக் கற்பிக்கத் தனித்தனி ஆசிரியர்களைப் பெரும் ஊதியம் கொடுத்து பள்ளி நிர்வாகத்தால் நியமிக்க முடியுமா? இதனால்தான் தமிழ்நாடு மற்றும் கர்நாடகப் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்புகள் இக்கொள்கைக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
இத்தகைய
சூழலில், ஒன்றிய அரசின் ‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’ போன்ற அமைப்புகள் மூலம் ஏற்கெனவே உலாவரும் ‘இந்தி மொழி’ ஆசிரியர்களையே நியமிக்கப் பள்ளிகள் முன்வரும். ஒன்றிய அரசும் இந்தி ஆசிரியர்களை நியமிக்கவே மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதன் விளைவு, மாணவர்களுக்குத் தங்களின் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் தவிர்த்து, ‘இந்தி’ மொழியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மறைமுகமாக உருவாக்கப்படும். இது பன்முகத்தன்மையின் பெயரால் நடத்தப்படும் ஒரு நுட்பமான ஏமாற்று வேலை; இந்தி பேசாத மாநிலங்கள்மீது தொடுக்கப்படும் கலாச்சார ஆக்கிரமிப்பு!
கல்வி
என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ‘பொதுப் பட்டியலில்’ உள்ளது.
இதில் மாநிலங்களின் தேவைகளுக்கும், கொள்கை உருவாக்கத்திற்கும் முழு தன்னாட்சி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள் பல ஆண்டுகளாக ‘இருமொழிக்
கொள்கையை’ (வட்டார
மொழி மற்றும் ஆங்கிலம்) பின்பற்றி வருகின்றன. கல்வி, சுகாதாரம், மனிதவள மேம்பாடு என அனைத்துச் சமூக-பொருளாதாரக் குறியீடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களை விடத் தென் மாநிலங்கள் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதற்கு இந்தத் தெளிவான இருமொழிக் கொள்கையே காரணம்.
இந்தி
பேசும் வட இந்திய மாநிலங்களில்
உள்ள மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தங்களின் அன்றாடக் கல்வியில் கற்கப் போகிறார்கள். ஆனால், இந்தி பேசாத தென் மாநில மாணவர்கள் மட்டும் ஏன் மூன்று மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்? என்பதே இங்கே எழும் அடிப்படைக் கேள்வி.
மொழி
என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், கலை மற்றும் தொன்மங்களின் கருவூலம். மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மாணவர்களின் கற்றல் திறனையும் நேரத்தையும் பிரிக்கும்போது, அவர்கள் தங்களின் சொந்தத் தாய்மொழியின் மீதான ஆழமான பிணைப்பை இழக்க நேரிடும்.
மகாராஷ்டிராவைச்
சேர்ந்த ஒரு சராசரி மாணவன், மூன்றாவது மொழியின் சுமையால் மராத்தி மொழிக்கான நேரத்தைக் குறைக்கும்போது, தொன்மை வாய்ந்த மராத்திய இலக்கிய வரலாறும், வாரகாரி இயக்கத்தின் ஆன்மிகப் பாரம்பரியமும், ஜோதிபா புலே மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளும் அந்த இளந்தலைமுறையினரிடமிருந்து மெல்ல மறைந்து போகும். அதேபோல், செம்மொழி வரலாற்றைக் கொண்ட தமிழ்மொழியின் செழுமையை, வடநாட்டுச் சித்தாந்தங்களின் திணிப்பால் சிதைக்க முற்படுவது ஒருபோதும் முறையாகாது.
இன்று
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது; வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தைத் தொட்டுள்ளது, உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், நமது கல்வித்துறை கவனம் செலுத்தவேண்டியது எதன்மீது? மொழிக் கணிப்பொறிகளுக்குள் மாணவர்களை அடைப்பதிலா? அல்லது உலகளாவிய அறிவியல் அரங்கில் சீனா போன்ற நாடுகளுக்குச் சவால் விடுப்பதிலா?
இன்று
சீனா உலக அளவில் 64 முக்கியமான அதிநவீன தொழில்நுட்பங்களில் 57 தொழில்நுட்பங்களில் அமெரிக்காவையே முந்தி முதலிடத்தில் உள்ளது.
நமக்கு
இப்போது தேவைப்படுவது மாணவர்களின் பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனையையும் தூண்டும் ஒரு வலுவான ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கொள்கையே’
(Science Education Policy) தவிர,
மொழிச் சண்டைகளும் திணிப்புகளும் அல்ல.
இந்தியாவின்
பலமே அதன் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் ஒற்றைமொழிக் கொள்கையை நோக்கித் தேசத்தை நகர்த்த முயல்வது பேரழிவிற்கே வழிவகுக்கும். ஆகவே, தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வரும் இருமொழிக் கொள்கையே மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், உலகளாவிய வேலைவாய்ப்பிற்கும், உள்ளூர் கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் உகந்தது என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக்கூடாது.
மாணவர்கள்
தங்களின் எதிர்காலத் தேவைக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும்; அதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது. ஆனால், கல்விசார் கட்டமைப்புகளின் வழியே மறைமுகமாக மொழியைத் திணிப்பதை சனநாயக ஆதரவாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒன்றிய அரசு தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, மாநிலங்களின் கல்வித் தன்னாற்றலை மதித்து, இந்தியாவின் உண்மையான பன்முகத் தன்மையைப் போற்றவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்