இந்திய சனநாயகத்தின் இதயமாகக் கருதப்படும் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் வீதிகள், இன்றைக்கு அதிகாரத்தின் கொடுங்கோன்மைக்கும், ஒடுக்கப்பட்ட இளைய தலைமுறையின் வீரியம் கொண்ட நீதி முழக்கங்களுக்கும் இடையிலான பெரும் போர்க்களமாக உருவெடுத்துள்ளன.
தேசியத்
தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) உள்ளிட்ட
மத்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், இலட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும், அவர்களின் பெற்றோரின் வாழ்நாள் உழைப்பையும் ஒரே நொடியில் சுக்குசுக்காக உடைத்தெறிந்துள்ளன.
இந்தத்
தொடர் அமைப்பியல் முறைகேடுகளையும், கல்வித்துறையின் சீரழிவையும் கண்டித்துத் தங்களின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் நமது நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மீது, ஒன்றிய அரசும் டெல்லி காவல்துறையும் ஏவிவிட்டுள்ள தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு அடக்குமுறைகள், இந்தியச் சனநாயகம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய பின்னடைவை உணர்த்துகின்றன.
தேர்வுத்தாள்கள்
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதும், முறைகேடுகள் மூலம் தகுதியற்றவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதும் வெறும் கல்வித்துறை சார்ந்த தோல்வி மட்டுமல்ல; அது இந்த நாட்டின் ஆன்மாவிற்குச் செய்யப்படும் துரோகமாகும்.
எட்டு
இலட்சத்திற்கும் ஒன்பது இலட்சத்திற்கும் வினாத் தாள்களை முன்கூட்டியே விலைக்கு வாங்கும் நபர்களுக்கு எந்தவிதத் தகுதியும் அர்ப்பணிப்பும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தகுதியற்றவர்கள் நாளைய தினம் மருத்துவராகவோ அல்லது நிர்வாக அதிகாரிகளாகவோ உருவெடுத்தால், அவர்கள் பறிக்கப்போவது சாதாரணப் பொதுமக்களின் உயிரையும், நாட்டின் எதிர்காலத்தையும்தான்.
அறிவு,
திறமை, உழைப்பு ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு, குடும்ப வறுமையிலும் கல்வி ஒன்றே தனக்கும் தன் குடும்பத்திற்கும் விடியல் தரும் என்ற நம்பிக்கையில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகளின் தகுதியை, பணபலம் மற்றும் அதிகாரத்திற்கு முன்னால் அடகு வைக்கும் இந்த வியாபாரத்தை எந்தக் கார்ப்பரேட் அரசாலும் நியாயப்படுத்த முடியாது.
தொடர்
முறைகேடுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி,
கடந்த சில மாதங்களில் மட்டும் 21-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகமான விபரீத நிலை நிகழ்ந்த பிறகும், ஒன்றிய அரசு இத்தகைய கொடூரங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது அதன் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது.
கல்வித்துறை
முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த வாரம் ‘காக்ரோச் ஜனதா கட்சி’
(CJP) மற்றும்
பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை ‘உரிமைக்கான மாணவர் எழுச்சிப் போராட்டமாகவே’ வரலாறு
பதிவுசெய்திருக்கிறது.
டெல்லி இதுவரை கண்டிராத போராட்ட நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
24 நாள்களாகத்
தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகும், மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடாது களத்தில் உறுதியோடு நின்றது பாராட்டத்தக்கதே!
போராடும்
மாணவர்களின் பலத்தைக் குலைக்கவும், வெளிமாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி வரவிருந்த இரயில்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பாதைகளும் முடக்கப்பட்டன. ஊடகங்களில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை வெறும் 75,000 எனக் குறைத்துச் சித்தரிக்கப்பட்டாலும், அங்கே மாணவர்களை ஒடுக்குவதற்காக மட்டும் சுமார் 50,000 காவல்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை. அமைதியான முறையில், அறவழியில் பேரணி சென்ற மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தடியடி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவர்கள், இக்கொடூர அடக்குமுறை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டுவந்து விவாதிக்கக் கோரிய போதிலும், அவையைத் தொடர்ந்து முடக்கி, பேசவிடாமல் செய்தது சனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும். தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் கோவை, விழுப்புரத்தில் மாணவர்கள் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டங்களும், சென்னை தலைமைச் செயலகம் முன் நிகழ்ந்த எதிர்ப்புப்போராட்டமும் அகில இந்தியக் களமாக மாறியதை உறுதிப்படுத்துகின்றன.
பொதுவாக,
மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போதெல்லாம் அவற்றை ஏதாவது ஒரு குறிப்பிட்ட அடையாளச் சட்டகத்திற்குள் அடைத்து ‘தேச விரோதிகள்’
என்றோ, ‘நகர்ப்புற நக்சல்கள்’
என்றோ முத்திரை குத்தி ஒடுக்குவது ஆட்சியாளர்களின் வழக்கமான உத்தி. ஆனால், இன்றைய ‘Gen Z’ தலைமுறை மாணவர்கள்
முன்னெடுக்கும் இந்த இயக்கம் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் சார்பற்றது; சாதி, மத, மண்டல எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்திற்காகக் குரல் கொடுக்கும் தூய்மையான குடிமக்கள் இயக்கமாகும்.
திரைப்படக்
கலைஞரும், சமூகப் போராளியுமான பிரகாஷ்ராஜ் சுட்டிக்காட்டியது போல, “இந்த நாட்டின்மீது சாமானிய மக்களுக்கு இருந்த நம்பிக்கை மெல்ல மெல்லப் போய்விட்டது; நம்மை ஒரு தலைவரோ, ஒரு கட்சியோ, ஒரு நீதிபதியோ காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துபோனதன் வெளிப்பாடே இந்தச் சனநாயகப் பற்றாக்குறை.” நீதி அமைப்புகளும், ஊடகங்களும், நாடாளுமன்ற சனநாயகமும் தங்களின் கடமையிலிருந்து விலகி நிற்கும்போது, மக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளைக் கேட்கும் சூழல் உருவாகிறது.
தேசத்தந்தை
மகாத்மா காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத்தைத் தந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ஆகியோர் காட்டிய வழியில், வன்முறையற்ற அமைதியான முறையில் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை இம்மாணவர் போராட்டம் உணர்த்துகிறது.
போராடும்
மாணவர்களை ‘தேசவிரோதிகள்’ எனச்
சித்தரிக்கும் போக்கை அரசு கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
“இத்தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்”
எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தாலும், இத்தகைய சீர்கேடுகளுக்கும், மாணவர்கள் இறப்பிற்கும், பெற்றோரின் இழப்பிற்கும் பொறுப்பேற்று, ஒன்றிய பா.ச.க.
அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே!
இச்சீர்கேடுகளால்
‘நீட்’ போன்ற
தேர்வுகள் ஏழை, எளிய, கிராமப்புற மாணவரின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் சமூக அநீதி என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. ஆகவே, வணிகமயமாக்கப்பட்ட இந்தக் கல்வி முறையை முற்றிலுமாக ஒழித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.
மேலும்,
அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இரத்தக் காயங்களோடு களத்தில் நிற்கும் மாணவர் சமுதாயத்திற்கு ஆதரவாக நாட்டின் குடிமைச் சமூகம் உடனடியாக ஒன்றிணையவேண்டும். ஆட்சியாளர்களின் முன், அவர்களைக் கேள்வி கேட்கும் தார்மீகக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை உணர்ந்திடவேண்டும். இவ்வேளையில்,
“நாங்கள்... தூங்கிக் கிடந்த நதிகள் அல்ல;
கரைகளை
உடைக்கத் துடிக்கும்
வெள்ளப்
பெருக்கு!
எங்கள்
விரல் முனைகளில்
விதிகள்
எழுதப்படுவதில்லை;
நாங்கள்
தொடும் திசைகளில்தான்
வரலாறுகள்
திரும்புகின்றன.
சாலையில்
சிந்திய
எங்கள்
வியர்வையும் குருதியும்
வெறும்
துளிகள் அல்ல; அவை
அநீதியின்
அடித்தளத்தை ஆட்டும்
அதிர்வலைகள்!
கண்ணீர்ப்
புகைக் குண்டுகளால் - எங்கள்
கனவுகளை
அணைத்துவிட முடியாது.
புகை
விலகும் போது - இன்னும்
புத்தொளிபெற்றே
எரியும்
எங்கள்
விழி நெருப்பு!
எங்கள்
கைகளில் துப்பாக்கிகள் இல்லை,
புத்தகங்களும்
நீதிக்கான
பதாகைகளுமே
இருக்கின்றன!
அரசியல்
சதுரங்கத்தின்
காய்கள்
அல்ல நாங்கள்;
சனநாயகத்தைக்
காப்பாற்ற
விழித்தெழுந்த
குடிமக்கள் கூட்டம் இது!”
என்றே
எட்டுத்திக்கும் எதிரொலிக்கிறது.
இறுதியாக,
மாணவர்களின் குரல்வளையை நெரிக்கும் அரசு, தன் வீழ்ச்சிக்கான விதையைத் தானே விதைக்கிறது என்பதை வரலாறு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்