news-details
சிறப்புக்கட்டுரை
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: சாதகங்கள்... சவால்கள்... எதிர்பார்ப்புகள்!

சட்டமன்றம் என்பது வெறும் சட்டங்களை இயற்றும் அமைப்பு மட்டுமல்ல; மக்களின் விருப்பமும் குரலும் வெளிப்படும் சனநாயகக் கருவி - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

ஒரு மாநிலத்தின் சனநாயகத் தரத்தை அளவிட வேண்டுமென்றால், அந்த மாநிலச் சட்டமன்றத்தின் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவார்கள். காரணம், சட்டமன்றம் என்பது வெறும் அரசியல் மேடை அல்ல; அது மக்களின் பிரச்சினைகள் பேசப்படும் இடம்; அரசின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் இடம்; எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனங்களை முன்வைக்கும் இடம்; மக்கள் நலத்திட்டங்கள் உருவாகும் இடம்.

தமிழ்நாடு சட்டமன்றம் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றங்களில் ஒன்றாகும். 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றமாகத் தொடங்கிய இந்த அமைப்பு, நூற்றாண்டைக் கடந்த சனநாயக மரபைக் கொண்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது அரசியல் சிந்தனைகளையும், மக்கள் நலக் கொள்கைகளையும் இந்த அவையின் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழ்நாடுஎன்ற பெயர் மாற்றம், சமூகநீதி சார்ந்த சட்டங்கள், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், சத்துணவுத் திட்டம், பெண்கள் முன்னேற்றம், கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் இந்தச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றம் அதன் நீண்ட வரலாற்றில் பல உயர்ந்த விவாதங்களையும், சில விரும்பத் தகாத நிகழ்வுகளையும் கண்டுள்ளது. காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் இன்றும்கூட அரசியல் மாணவர்களால் படிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அமளி, வெளி நடப்பு, உறுப்பினர்கள் இடைநீக்கம், கடுமையான அரசியல் மோதல்கள் போன்ற நிகழ்வுகளும் சில காலங்களில் நடந்துள்ளன. இருந்தபோதிலும், சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கம் மக்கள் நலனே என்பதை தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தொடர்ந்து நிரூபித்துள்ளது.

தற்போதைய சட்டமன்ற அமர்வின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ஆளுநர் உரையைக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசிற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் ஆளுநர் உரை தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் உரை சுமூகமாக நடைபெற்றது நல்ல சனநாயக முன்னேற்றம். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், அரசமைப்பு அமைப்புகளுக்கிடையேயான மரியாதை நிலைத்திருக்கவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இந்த அமர்வின் மற்றொரு சிறப்பம்சம், சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகும். இதன்மூலம் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் பொழுதுபோக்குக் காணொளிகள், குறும்படங்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களில் அதிக நேரம் செலவழித்து வந்த இளையோர், தற்போது சட்டமன்ற விவாதங்களை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் நேர்மறையான மாற்றமாகும். எந்த உறுப்பினர் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கிறார்? யார் தரமான விவாதத்தில் ஈடுபடுகிறார்? யார் வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளில் நேரத்தைச் செலவிடுகிறார்? என்பதை இளையோர் நேரடியாக மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.

கல்லூரிகள், சமூக ஊடகங்கள் மற்றும் நண்பர் வட்டாரங்களில் சட்டமன்ற விவாதங்கள் குறித்து ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறுவது சனநாயகத்திற்கு நல்ல அறிகுறியாகும். நாளைய வாக்காளர்களும் தலைவர்களும் இன்றைய இளையோரே என்பதால், அவர்களின் இந்த அரசியல் விழிப்புணர்வு தமிழ்நாட்டு சனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது.

இந்த அமர்வில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கன. சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்துவதில் அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவையின் விதிமுறைகளை மீறியபோது எச்சரிக்கை வழங்கினார். சில நேரங்களில் ஆளும் கட்சியினரின் கருத்துகளையும் திருத்தினார்; அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார். விரும்பத்தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டபோது அவற்றைப் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டதும், உறுப்பினர்களை விவாதப் பொருளுக்குத் திருப்பியதும் அவரது நடுநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. சனநாயக அமைப்பில் சபாநாயகர்மீது அனைத்துத் தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த வகையில் பெரும்பாலான நேரங்களில் அவர் நடுநிலையைக் கடைப்பிடிக்க முயற்சித்ததாகக் கூறலாம்.

அதேநேரத்தில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் திருத்திக்கொள்ளவேண்டிய சில அம்சங்களும் உள்ளன. முதலமைச்சர் தனது உரையில் நிர்வாகச் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை அதிகம் பேசுவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேனாள் தலைவர்கள் அல்லது முந்தைய அரசுகளை விமர்சிக்கும் நோக்கில் தேவையற்ற சிறுகதைகள், அரசியல் உவமைகள் அல்லது சைகைகள் போன்றவை தவிர்க்கப்படலாம். சட்டமன்றம் என்பது அரசியல் மேடையாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் மக்கள் நலனுக்கான விவாதங்களே!

அதேபோல் எதிர்க்கட்சியும் அதிகப் பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியமாகும். முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, உரை முடிந்த பிறகு போதுமான நேரம் வழங்கப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளையும் எழுப்ப வாய்ப்பு இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தார் சபாநாயகர். அந்தச் சூழ்நிலையில் அவையிலேயே இருந்து கேள்விகளை எழுப்பிப் பதில்களைப் பெற்றிருக்கலாம். வெளிநடப்பு என்பது சனநாயக உரிமை என்றாலும், அவையில் இருந்து விவாதத்தின் மூலம் பதில்களைப் பெறுவது மக்களுக்கு அதிகப் பயன் அளிக்கும். பின்னர் அவைக்கு வெளியே சென்று முதலமைச்சரின் குடும்ப வாழ்க்கை குறித்துத் தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதும் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. கொள்கைகள், நிர்வாகம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விமர்சிப்பதே சனநாயக அரசியலின் ஆரோக்கியமான வழிமுறையாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மிகப்பெரிய பலம் அதன் வரலாற்று மரபும் சபாநாயகர் சனநாயக கலாச்சாரமுமாகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சட்டமன்றத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும். குறைவாகப் பேசி அதிகமாகச் செயல்படுவது எவ்வாறு சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமோ, அதேபோல் கூச்சல், வெளிநடப்பு மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களைவிட ஆக்கப்பூர்வமான விவாதங்களே ஒரு சிறந்த சட்டமன்றத்தின் அடையாளமாக அமையும்.

வரலாற்றுப் பெருமைமிக்க தமிழ்நாடு சட்டமன்றம், சனநாயகத்தின் உயரிய மரபுகளைக் காக்கும் முன்னுதாரணமாகத் தொடர்ந்து திகழவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.