இந்தியக் கிறித்தவம் இன்றைய மதவாத அரசியலரால் பல்முனைத் தாக்குதலுக்கு ஆட்பட்டு வருதல் உண்மை. கிறித்தவத்தைப் பல்வேறு காரணங்களைக் காண்பித்துச் சிதைக்கும் சக்திகளும் கூட இந்நாட்டில் கிறித்தவம் முன்னெடுத்த கல்விப் பணியை மனமுவந்து பாராட்டுதலைப் பார்க்க முடியும்.
கிறித்தவத்தின்
மீது வன்மம் கொண்ட மதவாதிகள் பலர் கல்வி பெறுவதற்கான வாயிலைத் திறந்தது கிறித்தவமே. இவர்களுக்குக் கற்கவும் பேசவும் சொல்லித் தந்தது கிறித்தவம் உருவாக்கிய கல்விச் சூழமைவுதான் என்பதே வரலாறு கூறும் உண்மை.
“கிறித்தவ மிஷனரிகள் நவீன இந்தியாவின் குடிமக்களைக் கல்வி மூலம் செதுக்கி முனைந்தப் பணி அற்புதமானது. இவர்களின் இப்பணியுள்ளும் மதமாற்றம் எனும் கறை உண்டெனினும், கல்வி மற்றும் மருத்துவத்தில் இவர்கள் ஆற்றி வரும் பணி உன்னதமானது.”
- இந்தியாவில்
மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்த நியோகி கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி இது.
மதமாற்றத்
தடைச்சட்டத்தை ஆதரித்த இக்குழு, கிறித்தவத்தின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை வியந்து பாராட்டத் தயங்கவில்லை. 1971-ஆம் ஆண்டு இந்திய அரசின் கல்விச் செயலராக இருந்த திரு. பட்நாயக் அவர்கள் இந்தியக் கிறித்தவம் கட்டியெழுப்பியுள்ள கல்வித்தளத்தின் விரிவு இந்தியப் புவித்தளத்தில் இயங்கும் பல மாநில அளவைக்
காட்டிலும் பெரிது என்பார்.
இந்தியாவில்
கிறித்தவம் நிறுவிய கல்விப் பணியின் பெருமையைப் பட்டியலிடுவது நம் நோக்கமல்ல. ஆனால், கல்வி எனும் பேராயுதம் மூலம் இந்தியச் சமூகத்துள் இடையீடு (Intervene) செய்த
திரு அவையின் பெருமையைப் பாடுதலில் தவறில்லை. தேசிய சனநாயக முன்னணியின் ஆட்சியின்போது, அன்றைய துணைப் பிரதமராய்ப் பதவி வகுத்த ‘இரதயாத்திரை புகழ்’ எல்.கே. அத்வானி அவர்கள் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, “இப்பயணத்தின் முக்கிய நோக்கம் கராச்சியில் தான் படித்த புனித பாட்ரிக் பள்ளியைக் காண்பதே” என்றார்.
பாட்ரிக்
பள்ளி இன்றும் கராச்சியின் சிறப்புமிகு பள்ளி. திராவிட நாட்டின் கல்விச் சிறப்பைத் தொகுத்தோர், கிறித்தவக் கல்வி மூலம் திராவிடத்தைச் செழிக்க செய்த பெருமையைப் பேசுவர்.
கிறித்தவத்தின்
கல்விப் பணியை வியந்து பேசியோர் பல பேருண்டு; அதில்
உண்மையும் உண்டு. இப்புகழ் மயக்கத்தில் எத்துணை காலம் வாழப்போகிறோம்? திரு அவையின் கல்விப் பணியின் நோக்கம் நிறைவுறும் நோக்கில் நம் கல்விப் பணியின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்துள்ளனவா? நாம் நம்மையே தட்டிப் பார்த்துச் சிந்திக்க வேண்டிய காலம் வந்தாகிவிட்டது.
கிறித்தவக்
கல்விமுறை அதன் புற அமைப்பில் சந்திக்கும் பிரச்சினைகள் பல இருக்கலாம். இருக்கவே
செய்யும். கிறித்தவத்தின் கல்விப் பணி அடிப்படையில் ஒரு மறைபரப்புப் பணி என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம்? மறைபரப்புப் பணியென்பது, நம் மறைபற்றிய போதனையை முன்னெடுப்பதல்ல; மறைபரப்புப் பணி என்பது நம் மறை சார்ந்த கருத்துகளை மட்டும் கற்பிப்பதும் அல்ல; நாம் வாழும் சனநாயகத்தை மதித்து, சனநாயக விழுமியங்களையும், சமயச் சார்பற்ற போக்கில் எச்சமயத்தையும் ஒதுக்கிட முனையும் போக்கையும் தவிர்த்தலும் என்பதே ஆகும்.
கார்ப்பரேட்
உலகில், எல்லாமே கார்ப்பரேட் மயமான உலகில், கார்ப்பரேட் போக்கைத் தூக்கி எறியும் வல்லமையைத் தரவல்ல நிறுவனங்களை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்?
நாம் செல்லும்
திசை
எது?
நம்
கல்வி நிறுவனங்களுக்கு வலுவான வரலாறு உண்டு. இந்தியா போன்ற வர்க்கப் பிளவுகளுடன் வர்ணபேதத்தையும் தாங்கி நிற்கும் சமூகத்தில் சமத்துவம் வேண்டி நிறுவப்படும் நிறுவனங்கள் எளிதல்ல; மிகப்பெரிய எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் அவை வெற்றிபெற முடியும்.
பொதுவாக,
ஒரு நாட்டில் செயல்படுத்தப்படும் கல்வி பற்றி ஆய்வு செய்கையில், கீழ்க்காணும் சில வினாக்களைத் தொகுத்து, அவ்வினாக்களுக்கான பதில் நாம் ஏற்றுக்கொண்ட விழுமியங்களுக்கு அல்லது நோக்கங்களுக்கு
உகந்ததா? இல்லையா? என்பதை அறிய முடியும். நாம் அறிமுகம் செய்துள்ள கல்வி யாரால்? யாருக்கு? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை ஆத்மார்த்தமாக எழுப்பி விடைகாண முயலவேண்டும்.
நம்
கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குறிப்பாக, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் எப்போதாவது மேலே கண்டவாறு சில வினாக்களை எழுப்பி சுய ஆய்வு மேற்கொண்டுள்ளனரா?
மறைமாவட்ட
அளவிற்குப் பள்ளிகளை நடத்துகிறோம். மறைமாவட்டங்களில் கல்விக்கெனத் தனி பணிக்குழுக்கள் உள்ளன. துறவியர் சபை எண்ணிக்கையில் பெருவாரியான கல்வி நிறுவனங்களைக் கையில் வைத்துள்ளனர். மழலையர் பள்ளியிலிருந்து பொறியியல் கல்வி வரை தம் பரப்பை விரிவுபடுத்தியுள்ளனர். போட்டி என்பது வாழ்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடாகிவிட்ட நிலையில், நிறுவப்படும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும், அவைகளின் பரப்பும் பெருத்துவிட்டது. பெருத்துவிட்ட வணிகச் சமூகத்தில், தெரிவு என்பது தேர்வு செய்வோரின் வசதிக்கேற்ப என்பது போல், இன்று ‘வசதிக்கேற்ற’ பள்ளிகள்
உருவாகியுள்ளதால், வசதியற்றவர் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
கல்வி,
மானுடத்தின் மாண்பு சேர்க்கும் அற்புதமான ஒரு கருவி என்ற நிலை மாறி, பிழைப்பிற்கான கருவியாக மாறிய நிலையில், இக்கல்வி தரும் சுவையைப் பருகவிருக்கும் மனிதன் என்னவாக மாறுவான்? திரு அவை நடத்தும் கல்விச் சேவைகள் மானுட மாண்பைக் காக்கும் கேடயமாக மாற்றப்படுகையில், இக்கல்விச் சேவையைக் கையில் வைத்திருப்போர் நம்பத்தகுந்தோராவர்; இல்லாதோர் போட்டியை நியாயப்படுத்தும் வணிகராவர்.
மீண்டும் கேள்விகளுக்கு...?
இந்தியச்
சமூகத்தில் கல்வி என்பது எப்போதுமே எல்லாருக்குமானதாக இருந்ததே இல்லை. சாதியப் படிநிலையில் உச்சத்தில் இருந்தோர் கற்கவும் கற்பிக்கவும் உரிமை பெற்றிருந்தனர். இப்படிப்பட்ட படிநிலை அமைப்பின் இரண்டு அல்லது மூன்றாம் தரத்தினர் கற்க மட்டுமே உரிமை பெற்றிருந்தனர். நான்காம் வகையினருக்கும், அவரைத் தாண்டிய ஐந்தாம் நிலையினருக்கும் கற்கவே உரிமை இல்லையென்பதால், கற்பித்தல் என்ற கேள்வியே இங்கு எழவில்லை. எனவே, கல்வி யாருக்குக் கொடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு விடை கிடைத்த நிலையில், ‘எதற்கு?’ என்ற கேள்வி எழும் வர்ணபேதத்தைத் தர்மமாகப் பேணிய இச்சமூக அமைப்பில் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் கல்வியின் உள்ளடக்கம் பேணப்பட்டது.
ஆனால்,
சமூக மாற்றம் என்பதோ, மானுட மாண்பைப் பேணுதல் என்பதோ இக்கல்வி முறையின் உள்ளுறையாக இல்லை. கற்பிக்கும் ஆசிரியர், கற்கும் மாணவர் யார்? எவர்? என்று நிர்ணயிக்கப்பட்ட சமூக அமைப்பில் கல்வியின் நோக்கம் பற்றிய விவாதத்திற்கு இடமில்லை.
இந்தியச்
சமூகத்தின் எழுதப்பெறாத மனுச்சட்டத்தை நிலைநிறுத்தவே இந்தியக் கல்வி முறை, அவர்களின் குருகுலமுறையாக நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குருகுல முறை நடைமுறையில் இல்லாமை கண்டு கவலையுற்றாராம்.
காலனி
ஆட்சிக் காலத்தில் அறிமுகமான மெக்காலே கல்வியும், அவர்களோடு இந்திய மண்ணில் மாற்றம் வேண்டி நுழைந்த மறைப்பணியாளரின் கல்விப் பணியும் கல்வி உலகில் சிறு அசைவை ஏற்படுத்தியது.
விடுதலை
பெற்ற இந்தியா ஏற்றுக்கொண்ட சனநாயகம், சனநாயகம் காக்க உருவான அரசமைப்புச் சட்டங்கள் என்பனவெல்லாம் சமூக நீதியைப் பேசியமையாலும் இறுகிய சமூக அமைப்பில் சிறிய அசைவுகள், சில அதிர்வுகளை உருவாக்கியது. காலங்காலமாக இறுகப் பிடித்து வந்த சாதியக் கட்டுமானம் முழுமையாகத் தகர்க்கப்படவில்லையாயினும்,
சமூக நீதியின் வரவினால் கல்விக்கூடங்கள் எல்லாருக்குமானதாக மாறியது. ‘எல்லாரும் உள்ளே வந்தார்கள்’ என்று
முழுமையாகச் சொல்லமுடியாது; எனினும், இடஒதுக்கீடு என்னும் சமூக நீதி ஓர் உரிமையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதுவரை அடைத்திருந்த வாயில்கள் திறக்கப்பட்டன.
நாம் என்ன
செய்தோம்?
எல்லாருக்கும்
சமமாகக் கல்விக்கூட வாயில்களைத் திறந்த நாம், அரசமைப்பின் சிறுபான்மையினருக்கான உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டே அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களை நடத்திய நாம், அரசின் தனியார்மயக் கொள்கையைக் கேள்விக்குட்படுத்தாமல், ஒரே வளாகத்தில் ஒரு பக்கம், அரசு உதவி பெறும் பள்ளி அல்லது கல்லூரி; மறுபக்கம் உதவி பெறாத பள்ளிகள் (Matriculation, CBSE) என
ஏற்படுத்தினோம். அதாவது, ஒரே வளாகத்திற்குள் பல்வணிக அரங்குகள்! இம்மாதிரிகளைப் பல்வேறு அரங்குகளை அறிமுகப்படுத்துவதில், அரசுக்கு ஓர் அரசியல் இருக்கலாம். கல்வி மூலம் மறைப்பணி ஆற்றுவோருக்கு என்ன அரசியல் இருக்கமுடியும்? இது இன்றைய கிறித்தவக் கல்விப் பணியின் வடிவம்.
கல்வி
நிறுவனங்கள் காலந்தோறும் எழும் சூழல்களுக்கு ஏற்ப மானுட வளர்ச்சியை மையப்படுத்தித் தம்மைத் தகவமைத்துக் கொள்ளல் இனியேனும் அவசியம். சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பயன்படுத்தும் நம் நிறுவனங்கள் இன்றைய போட்டி உலகில், போட்டியை நியாயப் படுத்தும் வகையில் அமைதல் சரியல்ல.
திரு
அவை தன் மனித சக்தியைக் கல்வி நிறுவனங்களுக்காக அர்ப்பணித்துள்ளது. நாம் நம்மவரை ஆண் மற்றும் பெண்களைத் துறவு ஏற்க வைத்து இத்துறைக்கு அர்ப்பணித்துள்ளோம்.
நமது
கல்விப்பணி பற்றிய விமர்சனங்களை ஏற்று, மறு விசாரணை செய்ய வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.