அன்றிரவு ஆண்டிரோபோலிஸ் நகரிலேயே தங்கி அங்கு முகாமிட்டிருந்த மற்ற வணிகர்களுடன் மறுநாள் அதிகாலை புறப்பட்டு, தங்கள் பயணத்தைத் தொடர தோமாவும் ஹப்பானும் திட்டமிட்டனர். கடல் பயணத்தைத் தொடர விரும்பிய இருவரும் அன்றிரவு அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அன்றுதான் திருமணம் மூலம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய மணமகனும் மணமகளும் அன்றிரவு உறக்கமற்றுப் போனார்கள். ஆம், அன்று அந்த இளம் தம்பதியரின் இல்வாழ்வின் மனநிலை, தோமாவின் போதனையால் மாற்றம் கண்டுகொண்டிருந்தது.
மறுநாள்
காலைப்பொழுது புலர்ந்து, சூரியன் தன் ஒளியை மண்ணில் பாய்ச்சத் தொடங்கிய நேரம். தம்பதியர் இருவருமே அரசனைச் சந்தித்தனர். இளவரசியையும், அவள் கணவனையும் கண்ட மாத்திரத்தில் அரசன் மனத்தில் ஏதோ உணர்ந்தான். புதுத்தம்பதியருக்குள்ள மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தென்படவில்லை. குழப்பத்தோடு அவர்களை நோக்கினான். “என்ன மகளே?” என்று பாசத்தோடு வினவியவனிடம், இருவரும் கூறிய பதிலால் அவன் சினத்தின் உச்சிக்கே போனான்.
தம்பதியர்
இருவரும் தணிந்த குரலில், “அரசே, சினம் கொள்ளவேண்டாம். நாங்கள் இருவரும் மணத்துறவு வாழ்வைத் தொடர விரும்புகிறோம். இதன்மூலம் கடவுளை மாட்சிமைப்படுத்த ஆசிக்கிறோம்” என்றனர்.
“கடவுளா? எந்தக் கடவுள்? அயல் நாட்டு மனிதன் அறிமுகப்படுத்திய கடவுளா?” என்று சீறினான் அரசன். கோபம் அடங்காதவனாய் தன் வீரர்களை அழைத்து, “வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் அந்த மந்திரவாதியை எங்கிருந்தாலும் உயிரோடு பிடித்து வாருங்கள்; நானே அவனைத் தண்டிக்கிறேன்” என்று
அவன் உத்தரவிட, வீரர்கள் அந்நகர் மற்றும் கடலோரப் பகுதிகளில் தோமாவை வலைவீசித் தேடினர். எங்குத் தேடியும் தோமா கிடைக்காததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அன்று
அதிகாலையிலேயே ஆண்டிரோபோலிஸ் பகுதியிலிருந்து புறப்பட்டிருந்த தோமாவின் பயணக்கப்பல் கடலுக்குள் வெகுதூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
ஆண்டிரோபோலிஸ்
நகரிலிருந்து புறப்பட்ட தோமாவும் ஹப்பானும் அரேபியத் தீபகற்பத்தில் சொகோட்டிரா என்ற தீவை அடைந்து கப்பல் பயணத்திற்கு ஏதுவான பருவநிலை மாற்றத்திற்காகக் காத்திருந்தனர். சுமூகமான சூழலில் அங்கிருந்து பயணித்த தோமா, சிந்து நதிக்கருகில் உள்ள பட்டாலா என்ற துறைமுக ஊரில் சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டாலாவுக்கு ‘டாடா துறைமுகம்’
என்றொரு பெயரும் இருந்தது. சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமா நற்செய்தி போதித்ததற்கான ஆதாரமாகச் சொல்லப்படுகிறது தூமா பகத் (Thomas The Saint) என்ற
சபையினரைப் பற்றிய குறிப்புகள். பிரிவினை சபை கிறித்தவர்களான இவர்கள் புனித தோமாவைப் பின்பற்றியவர்களாகக் கருதப்பட்டனர். புனித மத்தேயு நற்செய்தி நூலையே பயன்படுத்தியதோடு, கிறித்தவச் சடங்குமுறைகள் பலவற்றைக் கடைப்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமாவின் போதனைக்குப் பின்னர் இச்சபை உருவெடுத்ததால் தோமா இப்பகுதியில் தங்கியுள்ளது தெரியவருகிறது.
சிந்து
சமவெளிப் பகுதியிலிருந்து புறப்பட்ட இருவரும் கப்பலில் பயணித்து அட்டோக் என்ற ஊரின் கரையை வந்தடைந்தனர். கடல்வழி முடிவுற்ற நிலையில், 40 மைல்கள் நடந்து தென்கிழக்குப் பகுதியில் இந்தோ-பார்த்திய தேசத்தின் தலைநகராக விளங்கிய தட்சசீலத்திற்குள் வணிகர் ஹப்பானுடன் வருகை தந்தார் தோமா.
கி.மு. 138-ஆம் ஆண்டில் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைப் பார்த்தியர்கள் ஆண்டனர். அவர்களின் முதல் அரசர் முதலாம் மித்ரிடேட்டஸ் என்பவர், காலப்போக்கில் அரசுகள் கைமாறிப் போய் இந்தோ-சிந்தியர்கள் வசம் ஆட்சி இருந்தபோது, கி.மு. 19-ஆம்
ஆண்டில் ஈரான் நாட்டு வம்சாவளியைச் சார்ந்த முதலாம் கொண்டோபரஸ் என்ற அரசர் சிந்தியர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்று அரகோஷியா, செயிஸ்டான், சிந்து, பஞ்சாப், காபூல் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய இந்தோ-பார்த்தியா நாட்டை உருவாக்கித் தன்னை அரசருக்கெல்லாம் அரசராக அறிவித்துக் கொண்டார்.
அவருடைய
வழித்தோன்றலாக நான்காம் தலைமுறை அரசரான கொண்டோபரஸ் சாசஸ் என்பவரே தோமா வருகையின்போது தட்சசீலத்தைத் தலைநகராகக் கொண்டு பார்த்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். நான்காம் கொண்டோபரஸ் ஆட்சி கி.பி. 20-லிருந்து
கி.பி.50 ஆண்டுக்குள் நீடித்திருந்ததாகக் கருதப்படுகிறது.
சார்லஸ்
மேசன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வு நிபுணர், 1834-ஆம் ஆண்டு தன் தொல்லியல் ஆய்வில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்ராம் என்ற இடத்தில் முதன்முதலாகக் கொண்டோபரஸ் பெயர்கள் பொறித்த நாணயங்களைக் கண்டுபிடித்தார். அங்கே பல இடங்களில் நாணயங்கள்
கிடைத்தன. இக்கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக 1854-ஆம் ஆண்டு ஜெனரல் கன்னிங்காம் என்பவர் தன் ஆய்வுநூலில் காபூல், காந்தகார், செயிஸ் டான், மேற்கு மற்றும் தெற்கு பஞ்சாப் பகுதிகளில் அரசரின் பெயர்களும் உருவங்களும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
1857-இல் பாகிஸ்தானின்
பெஷாவர் நகரின் வடகிழக்கில் கிடைக்கப்பெற்ற தாக்த்-இ-பாகி கல்வெட்டுகளிலும்
நாணயங்களிலும் அவ்விதமே அரசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் பெரும் பதவி வகித்து வந்த அவர் உறவினர்கள் பெயர்களும் உருவங்களும் பொறித்த நாணயங்களும் கிடைத்தன. இவையனைத்திலும் எழுத்துகள் இந்திய பாலி மொழியிலேயே இருந்தன.
பார்த்தியா
தேசத்தின் தலைநகராய் விளங்கிய தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரிலிருந்து வடமேற்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. சமஸ்கிருத மொழியில் பண்டைய தட்சசீலம் நகரத்தை ‘தக்சசீலா’
என்றும், பாலி மொழியில் ‘தக்கசிலா’
என்றும் அழைப்பர். தட்சசீலம் நகரத்தில் கி.மு. 3,360 ஆண்டுகளுக்கு
முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
தட்சசீலத்தின் பெருமையைப் பற்றிக் கூற வேண்டுமானால், பண்டைக் காலத்தில் அங்கு நிறுவப்பட்டிருந்த பல்கலைக்கழகம் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வந்த ஆரியர்களின் குடியேற்றம் முதலில் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில்தான் நடந்தது. இந்துகள் வேதநூல்களின் கல்வி மையமாகத் திகழ்ந்த இப்பகுதியிலுள்ள தட்சசீல நகர் பல்கலைக்கழகத்தில் இளவரசர்கள் மற்றும் பிராமணர்கள் கல்வி பயில அனுப்பப்பட்டனர். தத்துவம், மொழி இலக்கியம், அறிவியல், மூலிகை மருத்துவம் முதலான பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
(தொடரும்)