ஆண்டுதோறும் மே மாதம் வந்துவிட்டாலே, அக்னி நட்சத்திர வெயிலோடு சேர்த்து நம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வழக்கமாக ஒரு செய்தி ஒலிக்கத் தொடங்கும். அடுத்து வரும் நாள்களில் தமிழ்நாட்டிற்குப் பருவமழை எப்படி இருக்கும்?
வாடிக்கையாகக்
கேட்கும் இந்த வானிலை முன்கணிப்புச் செய்திகளுடன், இன்று புதிய பெயரும் அடிபடுவதைக் கேட்கிறோம். அதுதான் - ‘எல் நினோ’
(El Niño). தற்போது
தென்படும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, இன்றைய ஆண்டின் ‘எல் நினோ’ மிகக் கடுமையாக இருக்கலாம் என்று ஏ.ஐ. ஆய்வாளர்கள்
கணிக்கிறார்கள். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் உலகளாவிய வெப்பநிலை வழக்கமான சராசரி அளவைவிட மிக அதிகமாக இருக்குமென்று உலக வானிலை ஆராய்ச்சி கழகமும் (WMO) எச்சரிக்கை
விடுத்துள்ளது.
எல் நினோ
(El Niño)
‘எல் நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதைக் குறிக்கும் ஓர் உலகளாவிய வானிலை நிகழ்வு. இது உலகெங்கும் வறட்சி, கடுமையான மழைப் பொழிவு மற்றும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். முற்றிலும் அறிவியல், தரவுகள் (Data) மற்றும்
இயற்பியல் (Physics) விதிகளை
அடிப்படையாகக் கொண்டது.
‘எல் நினோ’ கணிப்பு ஏ.ஐ.-க்கு
முன்
செயற்கை
நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்
வருவதற்கு முன்பு, ‘எல் நினோ’
(EI Niño) நிகழ்வின்
கணிப்பு முற்றிலும் இயற்பியல் விதிகள், கடல்சார் மாற்றங்கள் மற்றும் புள்ளியியல் மாதிரிகளை (Statistical Models) நம்பியே
இருந்தது.
பசிபிக்
பெருங்கடலில் நூற்றுக்கணக்கான மிதவைகள் (Buoys) மூலமும்,
பின்னர் செயற்கைக்கோள் வழியாகவும் கடலின் வெப்பநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது.
கடந்த
50-100 ஆண்டுகளாக எல் நினோவிற்குச் சில மாதங்களுக்கு முன்பு கடலிலும் காற்றிலும் நிழ்ந்த வரலாற்றுப் போக்கை (Historical trends),
தற்போதைய சூழ்நிலையோடு ஒப்பிட்டு, புள்ளியியல் முறைப்படி சூப்பர் கணினிகள் மூலமும் கணிக்கப்பட்டது. எல்
நினோ கணிப்பு- ஏ.ஐ.-க்குப்
பின் இன்று கடலில் உள்ள மிதவைகள் (Buoys), செயற்கைக்கோள்கள்
(Satellites) மற்றும்
வானிலை ரேடார்கள் மூலம் சேகரிக்கப்படும் காற்றின் வேகம், கடல் நீர் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் போன்ற கோடிக்கணக்கான தரவுகள் குவிந்து கிடக்கின்றன. மனிதர் இத்தரவுகளைக் கொண்டு எளிதாகக் கணக்கிட முடியாது. இந்நிலையில், சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஏ.ஐ. (AI -Machine Learning)
தொழில்நுட்பம் அரிய கருவிகளாகக் கிடைத்துள்ளன. நாம் எதிர்கொள்ளும் வானிலை அடுத்து எப்படி மாறும் என்பதை, விஞ்ஞானிகள் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் முன்பாகவே துல்லியமாகக் கணிக்க இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம்
உருவெடுத்துள்ளது. இத்தகைய கணிப்புகள் முற்றிலும் தரவுகள் மற்றும் அறிவியல் விதிகளின் அடிப்படையில் அமைந்தவை; இது வெறும் யூகம் அல்ல; விவசாயம், பேரிடர், பொருளாதாரத் திட்டமிடல் என்ற முக்கியத் துறைகளுக்குப் பெரிதும் உதவுகிறது.
2026-2027
இவ்வாண்டில்
உருவாகி 2027 வரை நீடிக்கும் எல்நினோவை ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கின்றனர். ஏற்கெனவே பூமி வெப்பமடைந்த நிலையில், இது பருவமழைக்கு ஆதாரமாய் விளங்கும் கடல்நீரை மேலும் சூடாக்கிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.
எல்
நினோ ஆண்டுகள், பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையைப் பலவீனப்படுத்தும். இதனால் உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால், வெப்பச் சலன மழை வழக்கம் போலிருக்கும். இயல்பாகப் பருவகாலத்தில் கடல் நீர் வெப்ப அதிகரிப்பால் வங்காள விரிகுடா கடலில் புயல்கள் உருவாகுவதும், அவை தீவிரமடைந்து பலத்த
மழையைத் தருவதும் இயல்பு. எனவே, எல் நினோ ஆண்டுகளில் தென்மேற்கு மழை குறைவாக, ஆனால், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது சராசரியாகவோ கிடைப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குறுகிய
காலத்தில் அதிகப்படியான மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், மழை பெய்வதைக் தாங்கும் வகையிலும், சேமித்து வைக்க நீர்நிலைகளையும் வடிகால்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. 2015 ஆண்டில் சென்னை நகரைச் சூழ்ந்த அசாதாரண வெள்ளத்திற்குக் காரணம், அவ்வாண்டின் எல் நினோ என்று கூறப்படுகிறது. பருவமழையின் தொடக்கக் காலத்தில் கடுமையான வெயிலும், தாமதமான மழைப்பொழிவும் விவசாயத் திட்டமிடலைப் பாதிப்படையச் செய்யும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
140 கோடி மக்கள்தொகை
கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்துள்ளது. இதற்கு ஆதாரமாக விளங்குவது பருவ மழைகள். வருடாந்திரப் பருவமழைப்பொழிவில், தென்மேற்கு பருவமழையின் பங்களிப்பு 75%-85% என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறைந்த மற்றும் காலம் கடந்த பருவமழையினால் உணவு உற்பத்தி பாதிப்படையலாம்; எதிர்பாராதச் சேதங்கள் உருவாகலாம். இவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ. துணைநிற்பது
விஞ்ஞானம் அளித்த அரிய நன்கொடை எனலாம்.
உலகளவில் கோதுமை, அரிசி,
சோளம், சோயா, கரும்பு என்ற பயிர்கள் 60% மக்களின் ஆதாரக்
கலோரி உணவாக (calorie intake) விளங்குவதை அறிவோம்.
இதில் கோதுமை, சோளம், அரிசி உற்பத்தி எல் நினோவின் வறட்சி, தாமதமான பருவமழை காரணங்களால் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் உலகளாவிய தற்போதைய தானியக் கையிருப்பை வைத்து சமாளித்துவிடலாம் என்கிறது மற்றோர் ஆய்வு. பல அறிக்கைகள் எல்
நினோ இவ்வாண்டின் இறுதியில் வேகமெடுக்கலாம் என்கிறது. தற்போது நாம் எதிர்கொண்டு வரும் எல் நினோ நிகழ்வு, 2026-2027 ஆகிய இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கி, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அறியப்படுகிறது.
இயற்கையின்
மாற்றங்களை மனிதனால் முழுமையாகக் கணிக்க முடியாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் இதன் உண்மையான வீரியமும் இயல்பு நிலையும் வெளிப்படத் தொடங்கும். இத்தகைய சூழலில், ஏ.ஐ. எச்சரிக்கைகளை
நாம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.