news-details
சிறப்புக்கட்டுரை
கருவிலுள்ள குழந்தைகளின் வாழ்வுரிமை

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், மனித வாழ்வின் மாண்பும், கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையும் உலகளவில் தீவிரமான சட்ட மற்றும் அறநெறி விவாதங்களுக்கு உட்பட்டுள்ளன. திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது முதல் திருமடலான Magnifica Humanitas’ (மகத்தான மானுடம்) மூலம், செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனித மாண்பும் உயிரின் புனிதத்துவமும் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.

மனிதன் இறைவனின் சாயலிலும் உருவத்திலும் (Imago Dei) படைக்கப்பட்டவர் என்பதால், மனித வாழ்வின் மதிப்பு, அதன் வளர்ச்சி நிலை, திறன் அல்லது சமூகப் பயன்பாட்டைப் பொறுத்தது அல்ல; மாறாக, அது மனிதராக இருப்பதிலேயே அடங்கியுள்ளது. எனவே, கருவில் உள்ள குழந்தையும் இறைவனின் உருவில் படைக்கப்பட்ட மனித உயிராக இருப்பதால், அதன் மாண்பும் வாழ்வும் பாதுகாக்கப்படவேண்டியது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும். இந்தப் பின்னணியில், கருவில் உள்ள குழந்தையின் சட்டநிலையையும் அதற்கான பாதுகாப்புகளையும் அறிந்துகொண்டால்அவர்களது வாழும் உரிமையைப் பாதுகாக்க நமக்கு உறுதுணையாயிருக்கும்.

நாசிட்டூரஸ் கோட்பாடு (Doctrine of Nasciturus)

கருவில் உள்ள குழந்தையின் சட்டப் பாதுகாப்பிற்கான அடிப்படைக் கோட்பாடாக  ‘நாசிட்டூரஸ் கோட்பாடு(Doctrine of Nasciturus) விளங்குகிறது. ‘Nasciturus pro iam nato habetur, quotiens de commodis eius agitur’ என்ற இலத்தீன் சட்டப் பொன்மொழி, ‘கருவில் உள்ள குழந்தையின் நலன் தொடர்பான விவகாரங்களில், அது ஏற்கெனவே பிறந்த குழந்தையாகக் கருதப்படும்என்று பொருள்படும். இந்தக் கோட்பாடு பண்டைய உரோமன் சட்டத்தில் தோன்றி, பின்னர் ஆங்கிலப் பொதுச்சட்டத்தின் வழியாக இந்தியச் சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டப் புனைவு (Legal Fiction) என்ற அடிப்படையில், குழந்தையின் நலனுக்காக அது பிறந்ததாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற சட்ட அறிஞர் சால்மண்ட் (Salmond on Jurisprudence) தனது நூலில், கருவில் உள்ள குழந்தை பல்வேறு சட்ட நோக்கங்களுக்காக ஏற்கெனவே பிறந்த நபராகக் கருதப்படுவதாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, சொத்துரிமை பெறுதல் மற்றும்  நிரந்தரக் கட்டுப்பாட்டுக்கு எதிரான விதி (Rule Against Perpetuities) தொடர்பான சட்டக் கேள்விகளில், கருவில் உள்ள குழந்தை உயிருடன் இருக்கும் நபராகவே சட்டம் கருதுகிறது. இதன் மூலம், பிறக்காத குழந்தையின் நலனைப் பாதுகாக்கும் சட்ட நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.

உலகளாவிய சட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பு

உலகளாவிய அளவிலும் கருவில் உள்ள குழந்தையின் பாதுகாப்பு மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா 1992-ஆம் ஆண்டு அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தத்தின் (UNCRC) முன்னுரையில், “குழந்தை தனது உடல் மற்றும் மன முதிர்ச்சியின்மையால், பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உரிய சட்டப் பாதுகாப்பும், சிறப்பான பராமரிப்பும் பெறவேண்டியது அவசியம்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கருவில் உள்ள குழந்தையை வெளிப்படையாக வரையறுக்கவில்லை என்றாலும், அதன் நலனைப் பாதுகாக்கும் சட்ட அணுகுமுறைக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

இந்திய அரசமைப்பின் 21-ஆம் கட்டுரையின் கீழ் கருவில் உள்ள குழந்தை தனித்த அரசமைப்புச் சட்ட நபராக அங்கீகரிக்கப்படவில்லை; இருப்பினும், உயிரின் மதிப்பு, மனித மாண்பு மற்றும் சமூக நீதி போன்ற அரசமைப்புச் சட்டக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சட்டங்களில் கருவில் உள்ள குழந்தைக்குக் குறிப்பிடத்தக்கப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சொத்துரிமை மற்றும் பரம்பரை உரிமை தொடர்பாக இந்தியச் சட்டம் மிகவும் முன்னேறிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. Indian Succession Act, 1925-இன் பிரிவு 114 மற்றும் Hindu Succession Act, 1956-இன் பிரிவு 20 ஆகியவை கருவில் இருக்கும் குழந்தை பின்னர் உயிருடன் பிறந்தால், வாரிசுரிமை தொடங்கிய நேரத்திலேயே உயிருடன் இருந்ததாகக் கருதி அதன் சொத்துரிமையைப் பாதுகாக்கின்றன.

அதேபோன்று, பாரதிய நாகரிக் சுரக்ஷh சன்ஹிதா (BNSS)-வின் கீழ், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால், அவரது தண்டனையை ஒத்திவைக்கவோ அல்லது ஆயுள் தண்டனையாக மாற்றவோ உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், தாயின் குற்றத்திற்காக எந்தத் தவறும் செய்யாத கருவில் உள்ள குழந்தை தண்டிக்கப்படக்கூடாது என்பதாகும்.

பெண் கருக்கலைப்பு மற்றும் PCPNDT சட்டம்

இந்தியாவில் ஆண் குழந்தைக்கு அளிக்கப்படும் சமூக முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்பு (Female Feticide) என்ற கொடூரமான நடைமுறை பரவலாகக் காணப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பாலின விகிதம் (Sex Ratio) கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சமூகப் பிரச்சினையைத் தடுக்கும் நோக்கில், கருவுறுதலுக்கு முன் மற்றும் கர்ப்பகால நோயறிதல் நுட்பங்கள் சட்டம், 1994 (பாலினத் தேர்வுத் தடை) (PCPNDT Act) இயற்றப்பட்டது.

 இச்சட்டம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதையும், பாலினத் தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதையும் தடை செய்கிறது. சட்டத்தை மீறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. மேலும், ஸ்கேன் மையங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாலின வேறுபாடின்றி கருவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் வாழ்வுரிமை, சமத்துவம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கும் முக்கியமான சட்டமாகும்.

இந்திய மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act), 1971

 இன்றைய சூழலில், கருக்கலைப்பு தொடர்பான வழக்குகளில், கர்ப்பிணிப் பெண்ணின் அரசமைப்புச் சட்ட உரிமைகள், மனித மாண்பு, உடல்நலம், தனியுரிமை மற்றும் சுயாட்சி ஆகியவற்றிற்கும், கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுரிமைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது நீதிமன்றங்களின் முக்கியப் பொறுப்பாக உள்ளது. இந்திய மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (MTP Act) குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கருக்கலைப்பை அனுமதித்தாலும், அது கருவில் வளரும் உயிரின் மதிப்பை முற்றிலும் புறக்கணிப்பதில்லை; மாறாக, தாயின் உரிமைகளையும் கருவின் நலனையும் சமமாகக் கருத்தில் கொள்கிறது

கருவில் உள்ள குழந்தையின் உரிமைகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள்

நீதிமன்றங்களும் கருவில் உள்ள குழந்தையின் உரிமைகளைப் பல்வேறு சூழ்நிலைகளில் அங்கீகரித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் Watt v. Rama (1972) வழக்கில், கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட காயங்களுக்குப் பின்னர் உயிருடன் பிறந்த குழந்தை இழப்பீடு கோரலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அமெரிக்காவின் Amadio v. Levin (1985) வழக்கில், குழந்தை உயிருடன் பிறந்ததா? அல்லது கருவிலேயே உயிரிழந்ததா? என்பது தவறான மரண வழக்குகளில் இழப்பீட்டு உரிமையை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், Hemraj v. Ramdhan வழக்கில் இராஜஸ்தான் உயர் நீதிமன்றமும், Shri Sukhnandan v. Union of India (2026) வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றமும், கரு என்பது பெண்ணின் உடலில் வளரும் மற்றோர் உயிர் என்றும், கருவை இழப்பது பிறக்கவிருந்த குழந்தையை இழப்பதற்குச் சமமானதாகும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

Suchita Srivastava v. Chandigarh Administration (2009) வழக்கில், கருவில் வளரும் உயிரைப் பாதுகாப்பதில் அரசுக்குச் சட்டப்பூர்வமான அக்கறை இருப்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், அந்த அக்கறை கர்ப்பிணிப் பெண்ணின் தனிநபர் சுதந்திரம், உடல், சுயாட்சி மற்றும் இனப்பெருக்க உரிமைகளுடன் சமநிலைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அண்மைகாலத் தீர்ப்புரைகளில் இந்திய அரசமைப்பின் 21-வது பிரிவு, இனப்பெருக்கச் சுயாட்சி, உடல் ஒருமைப்பாடு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றிற்கான உரிமையைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்குகிறது என்று இந்திய உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. மருத்துவக் கருக்கலைப்பு (MTP) சட்டம் பெண்கள் 24 வாரங்கள் வரை தங்களின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்கிறது. மேலும், பெண்ணின் உடல் மற்றும் மனநலனைப் பாதுகாப்பதற்காக அந்தக் காலக் கெடுவைத் தாண்டியும் கருக்கலைப்பு செய்ய நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன.

கத்தோலிக்கச் சமூகப் போதனையும் இந்தியச் சட்டமும்: ஓர் ஒருங்கிணைந்த பார்வை

கத்தோலிக்கச் சமூகப் போதனை மனித வாழ்வின் புனிதத்துவத்தை மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்ணின் மாண்பு, உடல்நலம் மற்றும் சமூக நலனையும் சமமாக வலியுறுத்துகிறது. திரு அவை தாயையும் குழந்தையையும் ஒருவருக்கொருவர் எதிரானவர்களாகக் காணவில்லை; மாறாக, இருவரும் சமமான மனித மாண்பைக் கொண்டவர்கள் என்றும், இருவரையும் பாதுகாக்கும் சமூக, மருத்துவ மற்றும் சட்ட அமைப்புகளை உருவாக்குவது அரசின் கடமை என்றும் போதிக்கிறது. ஏழைகள், பலவீனர்கள், குரலற்றவர்களை முன்னுரிமையுடன் பாதுகாக்கவேண்டும் என்ற Preferential Option for the Vulnerable என்ற கத்தோலிக்கச் சமூகப் போதனையின் அடிப்படையில், கருவிலுள்ள குழந்தையும் சிறப்பான பாதுகாப்பிற்குரியவராகக் கருதப்படுகிறார்.

இன்றைய சூழலில், மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, மரபணு பரிசோதனைகள் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான புதிய சவால்கள் சட்டத்திற்கும் அறநெறிக்கும் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. இந்நிலையில், மனிதனை ஒரு பயன்பாட்டுப் பொருளாக அல்ல; இயல்பிலேயே மாண்புடைய நபராகக் காணும் கத்தோலிக்கச் சமூகப் போதனையும், கருவில் உள்ள குழந்தையின் நலனைப் பாதுகாக்கும் இந்தியச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று துணையாக அமைகின்றன.

எனவே, இந்தியச் சட்டத்தின் தற்போதைய அணுகுமுறை, கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையையும், கர்ப்பிணிப் பெண்ணின் அரசமைப்புச் சட்ட உரிமைகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாகும். அதேநேரத்தில், கத்தோலிக்கச் சமூகப் போதனை ஒவ்வொரு மனித உயிரும் கருவுறும் தருணத்திலிருந்தே இயல்பான மாண்பும் மதிப்பும் கொண்டது என்பதை நினைவூட்டுகிறது. மனித உரிமைகள் குறித்த எந்தவொரு சட்ட அமைப்பும், மிகப் பலவீனமான மனித உயிரைப் பாதுகாக்கும் அளவில்தான் அதன் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்தும். கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, ஒரு சட்டக் கடமையாக மட்டுமல்ல; மனித மாண்பையும், சமூக நீதியையும், பொதுநலனையும் நிலைநாட்டும் உயர்ந்த அறப்பொறுப்பாகும்.