“ஒரு தலைமுறையின் வகுப்பறையில் நிலவும் கல்விக் கொள்கையே அடுத்த தலைமுறையின் அரசின் இயக்கக் கொள்கையாக மாறும்” என்கிறார் ஆபிரகாம் லிங்கன். அவ்வாறே, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்து-இசுலாமியர் ஒற்றுமையை வலியுறுத்திய வருமான மௌலானா அபுல்கலாம் ஆசாத், “ஒரு தேசத்தின் சுதந்திரம் என்பது, கற்கும் சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது” என்கிறார். இக்கூற்று முற்றிலும் உண்மையே!
ஒரு
நாட்டின் ஆன்மாவும், அதன் எதிர்காலப் பாதையும் அந்த நாடு தன் குடிமக்களுக்கு வழங்கும் கல்வியில்தான் வடிவமைக்கப்படுகின்றன. கல்வி என்பது வெறும் எழுத்தறிவோ, வேலைவாய்ப்பிற்கான தகுதியோ மட்டுமல்ல; மாறாக, அது அச்சமூகத்தின் விடுதலைக்கான ஆயுதம், பகுத்தறிவின் ஊற்றுக்கண். எனவேதான், “உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வியே” என்றார் நெல்சன் மண்டேலா.
இந்தியத்
திருநாடு பன்முகத்தன்மையையும், பல்வேறு மொழி-கலாச்சாரக் கூறுகளையும் கொண்ட ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பு. இத்தகைய சூழலில் கல்வி என்பது அனைவருக்குமான பொதுநலப் பொருளாக, சமூகநீதியின் சாரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதைகளின் தொலைநோக்குப் பார்வை. ஆனால், தற்போதைய இந்திய உயர்கல்வித்துறை, வரலாறு காணாத ஒரு பேராபத்தின் விளிம்பில் வந்து நிற்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்விக் கட்டமைப்பையும் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றை அதிகாரத்துவக் குடையின்கீழ் கொண்டுவரும் நோக்குடன், நாடாளுமன்றத்தின் இந்த 2026 மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருக்கிறது,
‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
(VBSA - Viksit Bharat Shiksha Adhisthan Bill, 2025) எனும் சட்ட முன்வரைவு.
ஏற்கெனவே
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட இந்தச் சட்ட முன்வரைவு, எதிர்வரும் கூட்டத்தொடரில்
சட்டமாக்கப்பட்டால், அது இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தேசியக்
கல்விக் கொள்கையின் (NEP 2020) சட்டப்பூர்வ
வடிவமாகத் திகழும் இந்தச் சட்ட முன்வரைவு, இந்திய உயர்கல்வியின் பன்முகத்தன்மையை முற்றிலும் ஒழித்து, ஒற்றைப் புள்ளியில் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை உருவாக்க முயல்கிறது. இது சட்டமாக நடைமுறைக்கு வந்தால், பல ஆண்டுகளாக இந்தியக்
கல்வியின் தூண்களாக விளங்கிய பல்கலைக்கழக மானியக் குழு (UGC - University Grants Commission), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE - All India Council for Technical Education), தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE - National Council for Teacher Education) போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றின் சட்டங்கள் நீக்கப்படும். இவற்றிற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
என்ற ஒற்றை உச்ச ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்படும்.
சட்டம்
மற்றும் மருத்துவக் கல்விக்கு மட்டும் தற்காலிகமாக இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றிக்கும் இதேபோன்ற தனித்தனி மையப்படுத்தப்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், இந்த ஆணையத்தின் கீழ், பொதுவான நிர்வாகக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் ஒழுங்குமுறை மன்றம் (Regulatory Council), கல்வி
நிறுவனங்களின் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைக் கண்காணிக்கும் அங்கீகார மன்றம் (Accreditation Council)), கல்வித்
தரங்களைத் தீர்மானிக்கும் தர நிலைகள் மன்றம்
(Standards Council) என
மூன்று முக்கிய மன்றங்கள் செயல்படும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதுவரை
இருந்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கல்வி
நிறுவனங்களைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றிக்கான நிதி மற்றும் மானியங்களை வழங்கும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெற்றிருந்தது. கல்வி நிறுவனங்களின் நிதித் தேவைகளை அறிந்து, அரசியல் சார்பின்றித் தன்னாட்சியுடன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அதற்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புதிய சட்ட முன்வரைவின்படி, அமையவிருக்கும் புதிய ஆணையத்திற்கோ அல்லது அதன்கீழ் இயங்கும் மன்றங்களுக்கோ எவ்வித நிதி அதிகாரமும் கிடையாது. கல்வி நிறுவனங்களுக்கான மானியங்களை வழங்கும் முழுப் பொறுப்பும் நேரடியாக ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆகவே,
கல்விக்கான நிதி ஒதுக்கீடு என்பது இனி தகுதிகளின் அடிப்படையில் நடக்காது; மாறாக, அது அதிகாரத்துவத்தின் தன்னிச்சையான முடிவாகவும், ஆளும் கட்சியின் அரசியல் கணக்கீடுகளுக்கு உட்பட்டதாகவும் மாறும்.
ஏற்கெனவே
தேசியக் கல்விக் கொள்கையையும், இந்திப் பயிற்றுமொழியையும் முழுமையாக ஏற்காத மாநிலங்களுக்குப் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பா.ச.க.
அரசு வழங்க மறுக்கிறது. இனிவரும் காலங்களில், உயர்கல்வியிலும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்குப் பணிந்து போனால் மட்டுமே நிதி கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இது மறைமுகமாக இந்தித் திணிப்பிற்கும், ஒன்றிய அரசின் கொள்கைத் திணிப்பிற்கும் வழிவகுக்கும்.
இந்திய
அரசமைப்புச் சட்டத்தின்படி, கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பான ‘ஒத்திசைவுப் பட்டியலில்’ (Concurrent List) உள்ளது. ஆனால், இந்தச் சட்ட முன்வரைவு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இவ்வாணையத்தின் அமைப்பு முறையைக் கண்டாலே இதன் பின்னணியில் உள்ள அதிகாரக் குவியல் நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த ஆணையம் ஒரு தலைவரையும், 12 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், நாட்டின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் இந்த அமைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் இரண்டே இரண்டு ஆசிரியப் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெறுவர். அவர்களும்கூட மாநில உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கப்படுபவர்களாகவே இருப்பர்.
ஒன்றிய
அரசின் உயர்கல்விச் செயலாளர் மற்றும் ஐந்து ‘நிபுணர்கள்’ என
12-இல் 10 உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். மூன்று மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். மாநில அரசுகளின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் ஓராண்டு காலத்திற்கு, அதுவும் சுழற்சி முறையில் மட்டுமே வழங்கப்படும். இது மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறித்து, அவற்றைப் பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் சதியாகும்.
இந்தியாவின்
உயர்கல்வி என்பது பல நூற்றாண்டு காலக்
கல்வி மறுப்புக்கு எதிராக, சமூகநீதிப் போராட்டங்களின் வாயிலாகப் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்
மூலம் அடித்தட்டு மக்களுக்குக் கிட்டிய உன்னதக் கொடையாகும். ஆனால், இந்த உச்ச ஆணையத்தின் கட்டமைப்பில் சமூக நீதிக்கான எந்தவோர் உத்தரவாதமும் இல்லை.
ஆணையத்தின்
நியமனங்களில் பட்டியல் சாதிகள் (SC), பட்டியல்
பழங்குடிகள் (ST), பிற்படுத்தப்பட்ட
வகுப்புகள் (OBC), பெண்கள்,
சிறுபான்மையினர், மாற்றுப்பாலினத்தவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எந்தவொரு சட்டப்பூர்வப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.
பன்முகத்தன்மை
கொண்ட ஒரு தேசத்தின் கல்வி அமைப்பில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் ஒலிக்காவிடில், அது மீண்டும் கல்வியை ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கானதாக மாற்றிவிடும். ‘ஒரே அளவு அனைவருக்கும்’ என்ற
இவர்களின் அணுகுமுறை, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை முற்றிலுமாக முடக்கிவிடும்.
இன்று
இந்திய உயர்கல்வித்துறை சந்தித்து வரும் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள், தேர்வு குளறுபடிகள் அனைத்தும் நோயின் வெளிப்புற அறிகுறிகள் மட்டுமே. ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ என்பதே அந்த நோய். ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சி.யு.இ.டி. (CUET) எனப்படும்
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முறையால் சீரழிந்துள்ளதுடன், தாமதமான சேர்க்கைகள், காலியாகக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான இடங்கள், மதிப்பில்லாத நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்புகள், தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனங்கள் என உயர்கல்வித்துறை திணறி வருகிறது.
இத்தகைய சூழலில், கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி மறுவார்ப்பு செய்வதற்கும், கார்ப்பரேட் மயமாக்குவதற்கும் ஏதுவாகவே திருமதி. நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்பட்டுள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் கல்வியின் ஆற்றலைக் கொண்டுள்ளது; அந்த ஆற்றலைக் கொண்டுதான் நாம் நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்”
என்கிறார் மலாலா யூசுப்சாய். ஆகவே, கல்வி என்பது ஒரு சந்தைப் பண்டமல்ல; மாறாக, அது பொதுச்சமூகத்திற்கான ஆற்றல். ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’
(VBSA) மசோதா
என்பது இந்திய உயர்கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கல் மற்றும் காவிமயமாக்கலை நோக்கிய பேராபத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாகும்.
தற்போது
இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குறிப்பாக, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிடவேண்டும். கல்வியின் தன்னாட்சியைக் காக்கவும், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல், இந்தியாவின் உயர்கல்வி எதிர்காலச் சந்ததியினரின் சிந்தனைத் திறனை முடக்கும் பேராபத்தாக அமையும் என்பது திண்ணம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்