திருப்பலி முன்னுரை
குழந்தை
மனம் கொண்டு அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து விண்ணகத்தின் முன்சுவையை இம்மண்ணகத்தில் சுவைத்து நிறைவோடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு “சுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள்”
என்று வாஞ்சையோடு அழைக்கிறார். விண்ணரசின் மறைபொருள்கள் ஞானிகளுக்கும், தங்களை அறிஞர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை; மாறாக, தூய்மையான உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கே வெளிப்படுத்தப்படுகிறது.
இயேசு
கனிவும் மனத்தாழ்மையும் உடையவர். அவரது கட்டளைகள் அன்பை அடித்தளமாகக் கொண்டவை. தாழ்மையும் சாந்தமும் நிறைந்த இயேசுவின் இதயம்போல் நம் இதயம் மாறும் போது, நம் ஆன்மாவிற்கு உண்மையான அமைதியும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது வெளிப்படையான பெரிய சாதனைகள் அல்ல; மாறாக, நம்பிக்கை யுடனும் தாழ்மையுடனும் அவரிடம் திரும்பி வரும் ஒரு திறந்த இதயத்தையே எதிர்பார்க்கிறார்.
நம் சுமைகளைத் தனியாகச் சுமந்து மன பாரத்தோடு வாழாமல்
நற்கருணைநாதரின் பாதத்தில் இறக்கிவைப்போம். அவரிடம்
மட்டுமே உண்மையான இளைப்பாறுதல் உண்டு என்பதை உணர்வோம். இயேசுவின் பேரன்பைச் சுவைத்து, அவரின் கட்டளைகளில் நிலைத்து, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
இறைவாக்கினர்
செக்கரியா வழியாக ஆண்டவர் நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தருகிறார். உலக அரசர்களைப் போல அதிகாரத்தோடும் ஆயுதங்களோடும் ஆட்சி செய்யாத ஒரு புதிய அரசைப் பற்றியும், அவரது அமைதியின் ஆட்சியைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். இறையாட்சியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
திருத்தூதர்
பவுல், கிறித்தவர்களாகிய நாம் உடலின் இச்சைகளின்படி வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி வாழ அழைக்கிறார். கிறிஸ்துவை
உயிர்தெழச்செய்த அதே தூய ஆவி நமக்குள்ளும் குடியிருக்கிறார். எனவே, அந்த ஆவியானவரின் துணைகொண்டு நம் உடலையும் உள்ளத்தையும் மாசின்றிக் காத்து, புனிதத்தோடு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பான
ஆண்டவரே! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் கிறிஸ்துவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் பெறவும், மக்களின் சுமைகளைத் தாங்கிப் பணியாற்றத் தேவையான தூய ஆவியாரின் கொடைகளைத் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பான
தேவனே! உலகத் தலைவர்கள் வன்முறையையும் போர்க்கருவிகளையும் ஒழித்து, செக்கரியா இறைவாக்கினரின் வாக்குப்படி அதிகாரப் போக்கைக் கைவிடவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் நீதியோடு உழைக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஆறுதலின்
தெய்வமே! நோய், கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தால் சோர்ந்துபோய்
இளைப்பாறுதல் தேடும் உமது பிள்ளைகள் ‘என்னிடம் வாருங்கள்’
என்ற உமது குரலைக் கேட்டு, நற்கருணை நாதராகிய உம்மில் உண்மையான அமைதியைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்
இறைவா! எங்கள் குடும்பப் பிள்ளைகளும் இளைஞர்களும் உலகப் பெருமைகளாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் சீரழியாமல், தூய ஆவியாரின் துணையோடு தீமைகளைக் களைந்து, கிறிஸ்துவோடு இணைந்து தூய்மையான வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.