news-details
ஞாயிறு மறையுரை
ஜூலை 05, 2026 ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30 (அன்பு நுகமாய் நம் சுமைதாங்கும் இறைவன்

இன்று மனித வாழ்க்கை என்பது ஏதோ ஒரு பாரத்தைச் சுமந்துகொண்டு ஓடும் ஓட்டப்பந்தயமாக மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி, இரவு தூங்கச் செல்லும்வரை கவலைகளும் போராட்டங்களும் நம்மை நிழல் போலத் தொடர்கின்றன. பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சம், தீராத உடல் நோய்கள், உறவுகளுக்குள் விரிசல், மன அழுத்தம் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கனமான சுமையோடுதான் வாழ்கிறோம். இந்தப் பாரங்களிலிருந்து விடுபட தற்காலிகப் பொழுதுபோக்குகள், போதைப்பழக்கங்கள், உலகப் பொருள்கள் தரும் போலி அமைதியைத் தேடி ஓடி ஏமாற்றத்தையே பரிசாகப் பெறுகிறோம்.

இத்தகைய எதார்த்தமான வாழ்வியல் சூழலில்தான் இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். நம் சுமைகளைத் தீர்க்கும் உண்மையான சுமைதாங்கி இறைவன் மட்டுமே என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு ஆழமாக உணர்த்துகிறது.

சுமைகளைச் சுமப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாத எதார்த்தம் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். ஆனால், வாழ்வில் நாம் சுமக்கவேண்டிய தேவையான சுமைகளை நாம் ஒருபோதும் தனியே சுமப்பதில்லை; இறைவனும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார் என்ற உண்மையை நம்பி ஏற்றுக்கொள்ளும் ஆன்மிகப் பக்குவத்தை இன்றைய திருவழிபாடு நமக்குக் கற்றுத்தருகிறது.

திருவிவிலியத்தின் ஒருசில கூற்றுகள், எத்தனை முறை கேட்டாலும் நம் இதயத்தில் புதியதொரு பொருளையும் ஆழமான ஆறுதலையும் தர வல்லவை. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவின் இதயப்பூர்வமான அழைப்பு, இத்தனை நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்து வருகிறது.

இருப்பினும், உலகச் சுமைகளைச் சமாளிக்க நாம் நமது சொந்த அறிவுத்திறனால் பல வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணுவதால்தான், இதமளிக்கும் இவ்வழைப்பை நம்பி ஏற்றுக்கொள்ளப் பல நேரங்களில் தயங்குகிறோம். உலகமோ, நமது பாரங்களைத் தற்காலிகமாக மறக்கடிக்கப் பொய்யான விளம்பரங்களையும், போலி நுகங்களையும் நமக்குப் பரிசளிக்கிறது. ஆனால், இயேசுஉங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன்என்று எதார்த்தத்திற்குப் புறம்பான போலி வாக்குறுதியை ஒருபோதும் தரவில்லை; மாறாக, உலகப் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நுகத்தை அதாவது, தப்பி ஓடாமல் அவரோடு இணைந்து சுமக்கும் உன்னத வாழ்வுமுறையை முன்வைக்கிறார்.

யூதத் தலைவர்கள் மோசேயின் சட்டங்களை மக்களுக்குப் பாரமான நுகமாக மாற்றினர். சட்டங்கள் அனைத்தும் யூத மக்களின் சுமைகளை எளிதாக்குவதற்குப் பதில், அழுத்தி அழிப்பதாக இருந்தன. அவ்வேளையில், இயேசுஎன் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று கூறி, புதியதொரு சீடத்துவ நெறியை அறிமுகப்படுத்துகிறார். இவ்வழைப்பில் இயேசு பயன்படுத்தும் நுகம் என்ற உருவகத்தை இரு வழிகளில் சிந்திக்கலாம்.

முதலில், திருவிவிலியக் காலத்தில் நுகம் என்பது விலங்குகளை நசுக்கும் பாரமாகவும், மோசேயின் சட்டங்களின் கடுமையான சுமையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசு தம் நுகத்தின் ஒரு பக்கத்தைத் தம் தோளில் தாமே சுமந்து கொண்டு, மறுபக்கத்தை மட்டும் நம்மைப் பிடிக்கக் கூறுகிறார். இதனால், அவரோடு இணையும் உன்னத உறவின் உடனிருப்பில் நம் வாழ்வின் எத்தகைய பெரும் பாரமும் இலகுவாக மாறிவிடுகிறது.

இரண்டாவது, கிறித்தவச் சீடத்துவம் என்பது சிலுவைகளோ, எதார்த்த வாழ்வின் போராட்டங்களோ இல்லாத ஒரு மாய உலகமல்ல. நாம் சந்திக்கின்ற துன்பங்களை இயேசுவோடு இணைந்து, அவரோடு பிணைக்கப்பட்டுச் சுமப்பதால், அது நம்மை நசுக்காமல் ஆன்மாவிற்கு அமைதி தரும் ஒரு சுகமான ஆன்மிகப் பயணமாக மாறிவிடுகிறது. கிறித்தவச் சீடத்துவம் என்பது சட்டங்களற்ற வாழ்க்கையுமல்ல; அதேநேரம் நம்மை நசுக்கும் அடிமைத்தனமும் அல்ல. சீடத்துவத்தில் நுகம் இருக்கும்; ஆனால், அது கழுத்தை அழுத்தாது. சுமை இருக்கும்; ஆனால், அது அன்பினால் இனிமையாக இருக்கும் என்ற ஆன்மிக எதார்த்தத்தை இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

துன்பங்களின்போது தூரமாய் நிற்காமல், நம் தோளோடு தோள் நின்று பாரத்தைச் சுமக்கும் இஸ்ரயேலின் கடவுள் என்பதையே இயேசுவின் இதமான வரிகள் விவரிக்கின்றன. இயேசு விடுக்கும் இந்த உன்னத அழைப்பை முழுமனத்துடன் நம்பி, அவரை அணுகி, தங்கள் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடியவர்கள் வரலாற்றில் பலர்.

புனிதரான திருத்தந்தை 23-ஆம் ஜான்வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் துவக்கிய வேளையில், ‘திரு அவைக்குள் புதிய காற்று உள்ளே நுழையட்டும்என்ற தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுத்தார். அப்போது அவர் எதிர்கொண்ட அளப்பரிய நிர்வாகச் சுமைகளால் சோர்ந்து போகாமல், ஒவ்வோர் இரவும்ஆண்டவரே, இயேசுவே! நான் இப்போது உறங்கச் செல்கிறேன்; இது உமது திரு அவை, இதனை நீர் பாதுகாத்தருளும்என்று தன் நுகத்தை இறைவனிடம் ஒப்படைத்தார். அதேபோல், இரண்டாம் உலகப் போரின் வரலாற்று நெருக்கடியான வேளையில், அமெரிக்க அதிபர் டுவைட் டேவிட் ஐசனோவர், “இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்என்ற செபத்துடன் உறங்கச் சென்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உலகத் துயரங்கள் தன்னை அழுத்தும்போது, தன் விண்ணப்பங்களை ஒரு காகிதத்தில் எழுதிஉறங்கும் புனித யோசேப்புவின்திருச்சுரூபத்திற்கு அடியில் வைத்துவிட்டு, கவலைகளை மறந்து அமைதியாகத் தூங்கும் ஆன்மிகப் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் இயேசுவின் அன்பு நுகத்தை ஏற்றதால், இவர்களின் பாரங்கள் இனிமையானவையாக மாறின.

இன்றைய முதல் வாசகத்தில் (செக் 9:9-10) இறைவாக்கினர் செக்கரியா முன்னறிவிப்பதுபோல, நம் அரசர் குதிரைகளின் மீதேறி மக்களுக்குச் சுமையாக வருபவர் அல்லர்; மாறாக, எளிய கழுதைக் குட்டியின்மீது ஏறி, மக்களின் இடுக்கண்களில் உடன் வாழ வரும் ஓர் அமைதியின் வேந்தர் என்பதை உணரலாம்.

ஆகவே, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் (உரோ 8:9,11-13) குறிப்பிட்டுள்ளதுபோல, நாம் உலக ஆசைகளுக்கும் சுய நலத்திற்கும் அடிமையாகி, நம் வாழ்வை ஊனியல்பிற்கு உட்படுத்தும்போது, கவலைகளும் பாவ உணர்வுகளும் நம்மை அழுத்தத் தொடங்குகின்றன. ஆனால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த தூய ஆவியார் நமக்குள்ளே வாழும்போது, நாம் அந்தப் பாரங்களிலிருந்து உண்மையான விடுதலை பெறுகிறோம். ஆவியானவரின் துணை இருந்தால், எத்தகைய எதார்த்த வாழ்வின் போராட்டங்களையும் நம்மால் எளிதாக வெல்ல முடியும். ஏனெனில், அவர் நம் பலவீனங்களில் நமக்குத் துணைநின்று, நம் சுமைகளைத் தாங்கும் ஆற்றலை வழங்குகிறார்.

மேற்குறிப்பிட்ட சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய நாளில் வாழ்விற்கான மூன்று படிப்பினைகளைக் கற்றுக்கொள்வோம்.

முதலில், இன்றைய வணிக உலகம் காட்டும் தற்காலிகப் பொழுதுபோக்குகளும் போலி மயக்கங்களும் நம் வாழ்வின் சுமைகளை மறக்கவும் மறுக்கவும் தூண்டக்கூடிய தப்பித்தல் வழிகளேயன்றி, நிரந்தரத் தீர்வல்ல. எனவே, நம் அன்றாடக் கவலைகளையும் எதிர்காலம் குறித்த அச்சங்களையும் நம் சொந்தத் தோள்களில் சுமந்து கலங்காமல், உண்மையான சுமைதாங்கியாகிய இயேசுவின் பாதத்தில் முழுமையாக ஒப்படைக்கக் கற்றுக்கொள்வோம்.

இரண்டாவது, எல்லாவற்றையும் நம் சொந்த அறிவாற்றலால் மட்டுமே சாதித்துவிடலாம் என்ற அகந்தைதான் நம் தலையில் தேவையற்ற மனப் பாரங்களை ஏற்றி நம்மை நொறுக்குகிறது. உலகக் கணக்குகளைக் கடந்து, ஒரு குழந்தை தன் பெற்றோரை முழுமையாக நம்புவதுபோல, துன்பங்களின்போது நம்மோடு தோள்கொடுக்கும் இறைவனின் கனிவையும் மனத்தாழ்மையையும் அணிந்து, அவரது பராமரிப்பின்மீது மாறாத நம்பிக்கை வைப்போம்.

மூன்றாவது, கிறித்தவச் சீடத்துவம் என்பது சிலுவைகளோ, போராட்டங்களோ இல்லாத பாதையல்ல; மாறாக, சுயநலம் சார்ந்த ஊனியல்பை வென்று, இயேசுவோடு இணைந்து பிணைக்கப்பட்டுச் சுமப்பதால் இலகுவாக மாறும் ஒரு புனிதப் பயணம். அவர் தரும் அன்புச் சட்டங்களுக்கு உட்பட்டு, அவரது புதிய நுகத்தை மகிழ்வோடு ஏற்று வாழ நம்மையே அர்ப்பணிப்போம்.

நிறைவாக, நம் கடவுள் நம்மைத் தூர நின்று பார்ப்பவர் அல்லர்; நம் இதயத்தின் பாரங்களை ஆழமாக அறிந்தவர். அன்பு நுகமாய் நம் சுமைதாங்கும் இறைவன்மீது முழு நம்பிக்கை வைத்து, நம் கவலைகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்து, அவர் தரும் உண்மையான அமைதியோடும் விடுதலையோடும் அன்றாட வாழ்வைத் தொடர்வோம்.