news-details
சிறப்புக்கட்டுரை
இளையோரின் குரலைப் பலத்தால் அமைதிப்படுத்த முடியாது!

டெல்லியில் மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்: இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்!

புது டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலை இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் (ICPA) வன்மையாகக் கண்டிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் தங்களது சனநாயக உரிமையைப் பயன்படுத்திய இளம் குடிமக்களுக்கு எதிராக, அளவுக்கு அதிகமான தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதுடன், சனநாயகம், நீதி மற்றும் மனித கண்ணியத்தை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளது.

மாணவர்கள் குற்றவாளிகள் அல்லர்; அவர்கள் தங்களது அரசமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தும் நாட்டின் குடிமக்கள். தங்களது கல்வி, வாழ்க்கைப்பாதை மற்றும் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கும் விவகாரங்களில் அதிகார அமைப்பைக் கேள்வி கேட்கவும், பொறுப்பேற்பை வலியுறுத்தவும், குரல் எழுப்பவும் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. இவ்வேளையில், நியாயமான கவலைகளுக்கு வன்முறை மற்றும் அச்சுறுத்தலின் மூலம் பதிலளிக்கும் எந்தவொரு சனநாயக அரசும், தனது இளம் குடிமக்களை மதிப்பதாக உரிமை கோர முடியாது.

லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டுகள், வீரியமிக்க நீர்ச்சீரமைப்பிகள் (வாட்டர் கேனான்) மூலம் பெண்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உடலளவிலான சித்திரவதைகள் குறித்த செய்திகளால் ICPA ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. காவல்துறையினர் பயன்படுத்திய வசைச்சொற்கள் மற்றும் அவை நாகரிகத்திற்கு ஒவ்வாத கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுகளாலும் நாங்கள் பெரிதும் கவலையடைகிறோம். இத்தகைய நடத்தைகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும், இவற்றை அலட்சியப்படுத்தவோ அல்லது இயல்பான நிகழ்வாகக் கருதவோ கூடாது. காவல்துறை என்பது குடிமக்களைப் பாதுகாப்பதற்கே அன்றி, அவர்களைத் தாக்குவதற்கு அல்ல; காவல்துறையின் சீருடை என்பது கொடூரத்தனத்தை அரங்கேற்றுவதற்கான உரிமம் அன்று.

தங்களது நியாயமான கவலைகளை எழுப்புவதற்காக அமைதியான முறையில் ஒன்றுகூடிய மாணவர்களுடன் ICPA உறுதியோடு கரம் கோர்க்கிறது. அவர்களின் குரல்கள் மரியாதையுடனும் தீவிரத்தன்மையுடனும் கேட்கப்பட வேண்டுமே தவிர, வன்முறையான வழியில் தாக்குதல்களால் நசுக்கப்படக்கூடாது. போட்டித்தேர்வுகளின் நம்பகத்தன்மை, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள், கல்வி அமைப்பிற்குள் இருக்க வேண்டிய பொறுப்புடைமை மற்றும் இந்திய இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்கு வெளிப்படைத்தன்மையான பதில்களும், நம்பகமான நடவடிக்கைகளும் அவசியமாகின்றன.

தங்களது எதிர்காலத்திற்கு ஆயத்தமாக வேண்டிய மாணவர்கள், நீதியையும் பொறுப்புடைமையையும் வலியுறுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இளைஞர்கள் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, அதற்கான பொறுப்பு கேள்விகளைக் கேட்பவர்களிடம் இல்லை; மாறாக, திருப்திகரமான பதில்களை வழங்கத் தவறியவர்களிடமே உள்ளது.

மாணவர்களின் அமைதியான போராட்டத்தைப் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகச் சித்தரிக்கும் எந்தவொரு முயற்சியையும் ICPA தீர்க்கமாக நிராகரிக்கிறது. மாற்றுக்கருத்துத் தெரிவிப்பது குற்றமல்ல; போராட்டம் என்பது தேசத்துரோகமல்ல; கேள்விகளைக் கேட்பது கிளர்ச்சிச் செயலல்ல; ஒரு நலமான சனநாயகம், தன் இளம் குடிமக்களின் கேள்விகள் உணர்ச்சிமிகுந்ததாக இருக்கும்போது கூட அவற்றிற்குச் செவிசாய்க்கும் துணிவைக் கொண்டிருக்கவேண்டும்.

காவல்துறையின் வன்முறை மற்றும் போராட் டத்தின்போது சட்ட அமலாக்கப் பணியாளர்களின் நடத்தை குறித்து தனித்த, நடுநிலையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்தப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். கொடூரமான தாக்குதல், வசைபாடுதல் அல்லது தவறான நடத்தைக்குக் காரணமான நபர்களை அவர்களது பதவி, சமூக நிலையைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் கீழ் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

அரசிற்கும் உரிய அதிகார அமைப்புகளுக்கும் ICPA பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

மாணவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

சட்ட விரோதமான, கொடூரமான தாக்குதலுக்கு அரசும் அதன் அதிகார அமைப்புகளும் பொறுப்பேற்கவேண்டும்.

தாக்குதலுக்கு அல்லது தவறான நடத்தைகளுக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அரசமைப்பு உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டும்.

அடக்குமுறைக்குப் பதிலாக, வெளிப்படையான உரையாடலின் மூலம் மாணவர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறுகள் உறுதி செய்யப்படும் இடங்களில் பொறுப்பேற்பை உறுதி செய்யவேண்டும்.

சனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக எந்தவொரு மாணவரும் பழிவாங்கல், அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் மாணவர்களும் குடிமக்களும் நடத்தப்படும் விதம் குறித்துச் செய்தி சேகரிப்பதில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் விழிப்புடனும் அச்சமின்றியும் செயல்படவேண்டும் என்று ICPA கேட்டுக்கொள்கிறது. சனநாயகச் சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது பத்திரிகைகள் அமைதியான பார்வையாளராக மாறக்கூடாது. உண்மையைப் பதிவு செய்வதும், குரலற்றவர்களின் குரலாகச் செயல்படுவதும், அமைப்புகளைப் பொறுப்பேற்கச் செய்வதும் இதழியல் துறையின் கடமையாகும்.

ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் மீற முடியாதது என்று இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர் சங்கம் நம்புகிறது. இந்திய இளைஞர்கள் பயம், அச்சுறுத்தல் மற்றும் வன்முறையற்ற நீதி, வெளிப்படைத்தன்மை, தகுதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட ஓர் எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள்.

மேலும், நீதியைக் கோரும் ஒரு மாணவனின் கோரிக்கைக்குக் காவல்துறையின் லத்தி பதிலாக இருக்க முடியாது. மாறுபட்ட கருத்துக்கான பதில் கொடூரமாக இருக்க முடியாது. இந்தியாவின் இளைஞர்களின் குரலைப் பலத்தால் அமைதிப்படுத்த முடியாது.

அதிகார அமைப்புகள் உடனடியாக மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் குறைகளை நல்லெண்ணத்துடன் தீர்த்து வைக்கவும், சனநாயக அமைப்புகளின்மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ICPA வலியுறுத்துகிறது.

இந்தியாவின் இளைஞர்கள் பிரச்சினை அல்ல; அவர்களின் குரல்களை அலட்சியப்படுத்துவதுதான் பிரச்சினை!