news-details
சிறப்புக்கட்டுரை
மகத்தான மானுடம்

திருத்தந்தை 13-ஆம் லியோ 1891-ஆம் ஆண்டுதொழிலாளர் நிலைமை (ரேரும் நொவாரும்) என்ற சுற்றுமடலை வெளியிட்டார். இது அன்றைய தொழில்புரட்சியின் பின்புலத்தில், ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி எழுதப்பட்ட மடலாகும். தொழிலாளர் நிலைமை சுற்றுமடல் வெளியான 135-வது ஆண்டின் நினைவாக இன்றைய திருத்தந்தை 14-ஆம் லியோமகத்தான மானுடம் (மாக்னிபிக்கா ஹூமானித்தாஸ்) என்ற தனது முதல் சுற்றுமடலை, கடந்த மே 25 அன்று வெளியிட்டிருக்கிறார். இது இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தின் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து எழுதப்பட்ட மடலாகும்.

இன்றைய தொழில்நுட்பம் என்பது மனிதரை ஆளக் கூடாது; மாறாக, அது (செயற்கை நுண்ணறிவு உள்பட) மனிதருக்குப் பணியாற்றவேண்டும், சேவை செய்யவேண்டும். மேலும், இம்மடல் மனிதரின் சுதந்திரம், உண்மை, சமூகநீதி, அமைதி போன்ற கருத்துகள் பற்றியும் பேசுகிறது. இம்மடல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது. அவை முறையே:

1. நற்செய்திக்குப் பிரமாணிக்கமான நம்பகத்தன்மையோடு கூடிய அணுகுமுறை

திருத்தந்தை 13-ஆம் லியோ தொழில்புரட்சி காலத்தில் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்குப் பதில் கூறினார். தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் காலம்வரை பல திருத்தந்தையர்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குப் பதில்கூறி வந்திருக்கின்றனர். இன்றைய செயற்கை நுண்ணறிவின் சவால்களுக்குத் திருத்தந்தை இச்சுற்று மடல் மூலம் பதில் கூறுகிறார். மாறாத நற்செய்தி, மாறிவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப புதிய விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறது.

2. திரு அவை சமூகப் படிப்பினையின் அடிப்படைகளும் கொள்கைகளும்

கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மானிடர் வெறும் உற்பத்திக் கருவி அல்லர்; அவரின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மானிடரின் நலனும் குறிப்பாக, நலிவுற்றோர் நலனும் பேணப்படவேண்டும். பொதுநன்மை, கூட்டுத் தோழமை, சமூகநீதி, துணை நிலைக் கொள்கை (‘சப்சிடியாரிட்டி) போன்ற திரு அவையின் அடிப்படைக் கொள்கைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

3. தொழில்நுட்ப ஆதிக்கம், செயற்கை நுண்ணறிவின் வாக்குறுதிகள் ஒளியில் மகத்தான மானுடம்

நுண்ணறிவு ஒரு கருவியே அன்றி, அது மனிதரைவிட உயர்ந்ததோ மேலானதோ அல்ல; மானிடர் இயந்திரம் அல்லர்; அவர் அன்பு, மனச்சான்று, அருள்வாழ்வு, உறவுகளுக்குச் சொந்தக்காரர். தொழில்நுட்பத்தின் மூலம் மானிடரின் இயல்பான வரம்புகளை மீறி, அவர்களை மேம்படுத்த முயலும் போக்கை திருத்தந்தை லியோ விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

4. மாற்றத்தின் காலத்தில் மானிடரைப் பாதுகாத்தல்

பொய்ச்செய்திகள், தகவல்திரிப்புகள் சனநாயகத்தைப் பாதிக்கின்றன. எனவே, உண்மை பகிரப்படவேண்டும். கல்வி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல; மாறாக, கல்வி மனித ஆளுமையைச் செழுமைப்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் மனிதருக்காக; மனிதர் தொழில்நுட்பத்திற்காக அல்லர். ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாகும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்துச் சுயவிமர்சனமும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. அதிகாரத்தின் நாகரிகமும், அன்பின் பண்பாடும் போர், வன்முறை, அதிகாரக் குவிப்புப் பற்றியும் இம்மடல் பேசுகிறது. ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு ஆபத்துகொலை முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைக்கக்கூடாது. பாபேல் கோபுரம்போல அதிகாரத்தின் உச்சமல்ல நம் உலகு; மாறாக, அது அன்பின் பண்பாடாகப் பரிணமிக்கவேண்டும். சகோதரத்துவம், உரையாடல், அமைதி, நீதியின் மேல் கட்டப்பட்ட மனித சமுதாயத்திற்குத் திரும்ப இம்மடல் அழைப்பு விடுக்கிறது.

இச்சுற்றுமடலின் உச்சம் இந்த இறுதி அதிகாரத்தில் வரும்அதிகாரத்தின் நாகரிகமா? அல்லது அன்பின் பண்பாடா?’ இதுவே இச்சுற்று மடல் நம்முன் நிறுத்தும் சவாலான கேள்வி. எதைத் தேர்ந்தெடுப்போம்? இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தையும், இயற்கை நுண்ணறிவையும் எப்படி அன்பின் பண்பாடாக மாற்றுவது என்ற கேள்வியையும் திருத்தந்தை முன்வைக்கிறார்.                              

(தொடரும்)