news-details
ஆன்மிகம்
மரியாவின் ‘மறைவு வாழ்க்கை’ அன்னையருக்கு எடுத்துக்காட்டு (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 43)

இயேசு ஞானத்திலும் வயதிலும் மற்றும் இறையருளிலும் வளர்ந்து வந்தபோது, மரியா தனது தாய்மையின் அர்த்தத்தையும்கிறிஸ்துவுடன் கடவுளுக்குள் மறைந்திருந்த தன் வாழ்வின் அர்த்தத்தையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டார்.

1. திருக்குடும்பமானது நாசரேத்தில் வாழ்ந்த ஆண்டுகளைப் பற்றிய நற்செய்தி விவரிப்புகள் மிகவும் அரிதான பல தகவல்களை நமக்கு வழங்குகின்றன. எகிப்திலிருந்து திரும்பிய பின், நாசரேத்தைத் திருக்குடும்பத்தின் நிரந்தர இல்லமாக மாற்ற யோசேப்பு எடுத்த முடிவைப் பற்றி நற்செய்தியாளர் புனித மத்தேயு விவரிக்கின்றார் (மத் 2:22-23). ஆனால், யோசேப்பு ஒரு தச்சன் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் அவர் தனது நற்செய்தியில் கொடுக்கவில்லை (மத் 13:55). திருக்குடும்பமானது நாசரேத்திற்குத் திரும்பியதைப் புனித லூக்கா இருமுறை குறிப்பிடுகிறார் (லூக் 2:39-51). எருசலேமிற்கான பயண நிகழ்விற்கு முன்னும் பின்னும் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிய இரண்டு சுருக்கமான குறிப்புகளைத் தருகிறார்: “குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது (லூக் 2:40); “இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2:52).

மரியா தன் இதயத்தில் வைத்துச் சிந்தித்தார்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இந்தச் சுருக்கமான குறிப்புகளைக் கூறும்போது, லூக்கா அநேகமாகத் தன் மகனுடன் மரியா கொண்டிருந்த ஆழ்ந்த நெருக்கத்தின் ஒரு காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளையே குறிப்பிடுகிறார். ‘இயேசுவிற்கும் அருளால் நிறைந்தவருக்கும் இடையேயான அந்த ஒன்றிப்பு பொதுவாக, தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் உறவைவிட மிகவும் மேலானது. ஏனெனில், அது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் வேரூன்றி, இறைத்திட்டத்திற்கு இருவரும் கொடுத்த சிறப்புமிக்க ஒப்புதலால் வலுப்படுத்தப்பட்டது.

ஆகவே, நாசரேத்தின் வீட்டில் நிலவிய அமைதி மற்றும் சமாதானச் சூழலும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவர்களின் இடைவிடாத தேடலும், தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவுக்கு ஓர் அசாதாரணமான மற்றும் தனித்துவமான ஆழத்தை அளித்தன என்று நாம் முடிவு செய்யலாம்.

2. கடவுளால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியைச் செய்கிறோம் என்ற மரியாவின் உணர்வு, அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த அர்த்தத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வின் எளிய, தாழ்மையான வேலைகள் அவர் பார்வையில் ஒரு சிறப்பு மதிப்பைப் பெற்றன; ஏனெனில், அவர் அவற்றை கிறிஸ்துவின் பணிக்கான தனது பங்களிப்பாக நினைத்து அவைகளைச் செய்தார்.

இவ்வாறு, மரியாவினுடைய  எடுத்துக்காட்டான வாழ்வானது குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே தங்களது அன்றாடப் பணிகளைச் செய்யும் பல பெண்களுடைய அனுபவத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது, அவர்களை ஊக்குவிக்கின்றது. இது ஒரு தாழ்மையான, மறைவான, திரும்பத் திரும்பச் செய்யப்படும் முயற்சியாகும். மேலும், இது பெரும்பாலும் போதுமான அளவு பாராட்டப்படுவதில்லை. ஆயினும்கூட, நாசரேத்தின் வீட்டில் மரியா கழித்த நீண்ட ஆண்டுகள், உண்மையான அன்பின் மகத்தான ஆற்றலையும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பையும் வெளிப்படுத்துகின்றன. உண்மையில், சேவை மற்றும் அன்பின் ஒரு பணியாகக் கருதப்படும் எண்ணற்ற இல்லத்தரசிகளின் வாழ்க்கையின் எளிமை, ஆண்டவரின் பார்வையில் மிக மிக மதிப்புடையது.

நாசரேத்தில் மரியாவின் வாழ்க்கை சலிப்பால் நிறைந்திருக்கவில்லை என்று நிச்சயமாகக் கூறலாம். வளர்ந்து வரும் இயேசுவுடனான தனது தொடர்பில், தியானம் மற்றும் ஆராதனையின் மூலம் தன் மகனின் மறைபொருளுக்குள் ஊடுருவி அறிய அவர் முயன்றார். இதையே புனித லூக்கா நற்செய்தியாளர் இவ்வாறு விவரிக்கின்றார்: “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக்கா 2:19-51).

இந்நிகழ்ச்சிகளையெல்லாம் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் தொடங்கி, அதையும் தாண்டி, இது அவருடைய மகன் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் இந்நிகழ்வுகள் அனைத்திலும் அவர் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் இருக்கின்றார். அவருடனான நெருக்கத்தின் ஒவ்வொரு நாளும், அவரை இன்னும் நன்றாக அறிந்துகொள்வதற்கும், அவருடைய பிரசன்னத்தின் அர்த்தத்தையும், ஆளுமையின் மறையுண்மைகளையும் இன்னும் ஆழமாகக் கண்டறிவதற்குமான ஓர் அழைப்பாகும்.

3. இயேசுவுடன் தினசரி தொடர்பில் வாழ்ந்ததால், மரியாவிற்கு நம்பிக்கை கொள்வது எளிதாக இருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். இருப்பினும், இவ்விடத்தில் நாம் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும்: அவருடைய மகனின் ஆளுமையின் தனித்துவமான அம்சங்கள் பொதுவாக மறைக்கப்பட்டிருந்தன; அவருடைய செயல்படும்விதம் முன்மாதிரியாக இருந்தபோதிலும், அவர் தன் சம வயதினரைப் போன்றே ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்.

நாசரேத்தில் இயேசு வாழ்ந்த முப்பது ஆண்டுகளில், இயேசு தமது இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்களை வெளிப்படுத்தவோ அல்லது அற்புதங்களைச் செய்யவோ இல்லை. அவருடைய போதனையின் தொடக்கத்துடன் தொடர்புடைய, அவருடைய ஆளுமையின் முதல் அசாதாரண வெளிப்பாடுகளின்போது ஒரு விளக்கத்தின்படி அவருடைய உறவினர்கள் (நற்செய்தியில்சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்), அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்; ஏனெனில், அவருடைய நடத்தை இயல்பானதாக இல்லையென உணர்ந்தனர் (மாற் 3:21).

நாசரேத்தின் கண்ணியமும் கடின உழைப்பும் நிறைந்த சூழலில், தன் மகனின் பணியில் கடவுளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள மரியா  முயன்றார். இது சம்பந்தமாக, அவருடைய தாயார் குறிப்பாகச் சிந்தித்த ஒரு விசயம் இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது எருசலேம் தேவாலயத்தில் அவர் கூறிய இந்த வார்த்தைகள்தான்: “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இதைத் தியானித்ததன் மூலம் இயேசுவின் தெய்வீகக் குமாரத்துவத்தின் அர்த்தத்தையும், தன் சொந்தத் தாய்மையின் அர்த்தத்தையும் மரியாவால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில், தன் மகன், ‘என் தந்தை என்று அழைத்தவருடைய சாயலை வெளிப்படுத்தும் பண்புகளை அவரது நடத்தையில் கண்டறிய அவர் முயன்றார்.

நம் வாழ்வானது கிறிஸ்துவுடன் கடவுளில் மறைக்கப்பட்டுள்ளது

4. நாசரேத் இல்லத்தில் இயேசுவுடன் இணைந்து வாழ்ந்த வாழ்வானது, மரியாவைத் தனதுநம்பிக்கைப் பயணத்தில் (இன்றைய உலகில் திருச்சபை, எண். 58) முன்னேறச் செய்தது மட்டுமல்லாமல், நம்பிக்கையிலும் முன்னேற வழிவகுத்தது. கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு நினைவாலும், சிமியோனின் வார்த்தைகளாலும் வளர்க்கப்பட்டுப் பேணப்பட்ட இந்த நற்பண்பு, அவருடைய பூவுலக வாழ்நாள் முழுவதும் நீடித்தது; அதிலும் குறிப்பாக, நாசரேத்தில் கழித்த முப்பது ஆண்டுகால மௌனத்திலும் மறைவிலும் இது சிறப்பாகப் பின்பற்றப்பட்டது.

நாசரேத்து வீட்டில் கன்னி மரியா இறைநம்பிக்கையை அதிக அளவில் அனுபவித்தார். இறைவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றும் நேரங்களையோ வழிகளையோ அவர் அறிந்திருக்காவிட்டாலும் தான் ஏமாற்றமடையேன் என்பதை அவர் அறிவார். நம்பிக்கையின் இருளிலும், தன் மகனின் மீட்புப் பணியின் தொடக்கத்தை அறிவிக்கும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், எல்லாச் சான்றுகளையும் கடந்து, இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் என்று அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் வளர்ச்சி பெறுவதற்கான ஓர் இடமாக, நாசரேத்தின் இல்லம் அன்பிற்கு உன்னதமான சாட்சி பகரும் ஓர் இடமாக மாறுகிறது. கிறிஸ்து உலகில் பொழிய விரும்பிய அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய தாயின் இதயத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது. சரியாக அந்த இல்லத்தில் தான் தெய்வீக அன்பின் நற்செய்திப் பிரகடனம் ஆயத்தப்படுத்தப்படுகிறது.

நாசரேத்து ஊரைக் கண்முன் கொண்டு இயேசுவின் மற்றும் கன்னி மரியாவின்  மறையுண்மைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, நம் வாழ்வின் உண்மைகளைப் பற்றி நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இதையே புனித பவுலடியார் இவ்வாறு நினைவு கூர்கின்றார்: “உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து, கடவுளிடம் மறைந்து இருக்கிறது (கொலோ 3:3).

இது பெரும்பாலும் உலகின் பார்வையில் எளிமையானதாகவும் முக்கியத்துவம் இல்லாததாகவும் தோன்றலாம்; ஆனால், மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், அது கிறிஸ்துவின் அன்பையும் சமாதானத்தையும் பரப்பி, மீட்பின் எதிர்பாராத சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மூலம்: John Paul II, Mary\'s hidden life is example to mothers, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 5 February 1997, page 11.