இரு வார்த்தைகள் இரு வாக்கியங்களுக்குச் சக்கரமாய், விழிகளின் ஓரமாய், பார்வையின் பாசறையாய் பேருந்தில் பயணம் செய்தபோது, சூரிய ஒளிக்கீற்றால் இதயத்தில் ஊடுருவிய வாக்கியம்: ‘இடைவெளி விட்டுப் பயணம் செய்தால் இன்னலைத் தவிர்க்கலாம்.’ இது பயணத்திற்கு மட்டுமா? இது பயணத்திற்கு மட்டுமா? இல்லை; இது வாழ்க்கைக்கும் அச்சாணியாக அமைகிறது.
வேப்பம்
பூவில் எடுக்கும் தேனும் இனிக்கும். வாழ்க்கை என்பது வேப்ப மரம் அல்ல; மாறாக, அதில் உள்ள தேன். “துன்பம் என்பது உறங்கிக்கொண்டிருக்கும் உலகை எழுப்ப இறைவன் பயன்படுத்தும் மெகாஃபோன்”
(Pain is God’s megaphone
to rouse a deaf world) என்று கூறுவார் சி.எஸ். லூயிஸ்.
அதாவது, நாம் சந்திக்கிற இன்னல்கள் இறைவனின் குரலைக் கேட்க நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் ‘ஆன்மிக இடைவெளி’ ஆகும்.
சில
வார்த்தைகள் நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைக்கின்றன. ‘இடைவெளி’ என்ற ஒரு சாதாரண சொல் கூட, சில சமயங்களில் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகக் கேள்வி கேட்க வைக்கிறது. இடைவெளி... அது ஒரு தூரம் மட்டுமா? அல்லது… அது ஓர் உறவின் அமைதியான உடைச்சலா? இந்தச் சிந்தனை எனக்குத் தெளிவாக வந்தது ஒரு சாதாரண நாளில்.
சில
நாள்களுக்கு முன் ஒரு மருத்துவமனை வருகை என் மனத்தில் நீண்ட நேரம் பதிந்துவிட்டது. ஒரு முதியவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்குத் தேவையான மருந்துகளும் பராமரிப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அவர் அடிக்கடி கதவு பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தார்; ‘யாராவது வருவார்களா?’ என்று. ஒரு கட்டத்தில் நான் அவர் அருகில் சென்று, “யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மெதுவாகச் சிரித்தார். “யாரும் வரமாட்டாங்க;… ஆனா, யாராவது வந்தா நல்லா இருக்கும்”
என்றார். அந்த ஒரு வாக்கியம்,…அந்தத் தருணம் என் உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது. ‘நாம் மனிதர்களுக்கு அருகில் இருக்கிறோமா?’ அல்லது அவர்களைச் சுற்றிலும் மட்டுமே இருக்கிறோமா? என்று.
பேருந்து
பயணம், பொதுமக்கள் கூடும் இடங்கள், காத்திருப்பு அறைகள்... எங்குப் பார்த்தாலும் ஒரே காட்சி. மனிதர்கள் அருகில் இருந்தும், அருகில் இல்லாதவர்கள் போல! ஒருவர் அருகில் அமர்கிறார்; ஆனால், முழுமையாக இல்லை. சிறிது தள்ளி, சிறிது தயக்கம், சிறிது தெரியாத ஓர் எல்லை. ஒரு காலத்தில் அது மரியாதை. பிறகு அது பாதுகாப்பு. ஆனால், இன்று அது நம்முடைய வாழ்வியல் முறையாக மாறிவிட்டது. அப்போது மனத்தில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது. இது உடலுக்கான இடைவெளியா? அல்லது இதயங்களுக்குள் உருவான தூரமா?
ஒரே
வீட்டில் வாழும் மனிதர்கள் கூட இன்று வெவ்வேறு உலகங்களில் வாழ்கிறார்கள். ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்தும் குடும்பம் கூட, ஒரே மனத்துடன் இணைவதில்லை. ஒரே ஆலயத்தில் மண்டியிட்டுச் செபிக்கும் மனிதர்கள் கூட, அருகில் இருக்கும் ஒருவரின் வலியை உணர முடியாமல் இருக்கிறார்கள். அப்போது மனத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது, ‘இடைவெளி நம்மைப் பாதுகாக்கிறதா?’ அல்லது ‘மெதுவாக மனிதத்திலிருந்து பிரிக்கிறதா?’
தவக்காலம்
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் காலம். இது வெறும் தவிர்ப்புகளுக்கான காலமல்ல; இது அணுகுவதற்கான அழைப்பு. பாடுகளோடு நெருக்கம், பாமரனோடு பயணம். இயேசு பாலைவனத்திற்குச் சென்றது மனிதர்களிடமிருந்து தூரமாக இருக்க அல்ல; மாறாக, அவர்களை இன்னும் ஆழமாக அணுகத் தயாராகும் நேரம். அவருடைய வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, அவர் தூரம் வைக்கும் மனிதராக அல்ல; அருகில் வரும் மனிதராகத் தெரிகிறார். அவர் தொழுநோயாளியைத் தொட்டார், அவர் பாவிகளுடன் உட்கார்ந்தார், அவர் தனிமையில் இருந்தவர்களை அணுகினார். அவருடைய வாழ்க்கை ஓர் அமைதியான செய்தியைக் கூறுகிறது: ‘அன்பு என்பது தூரம் வைப்பது அல்ல; அருகில் வரத் தயங்காதது.’
நமது
மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார், “நாம் திரைகளைப் பார்க்கும் உலகமாக மாறாமல், மனிதர்களின் கண்களைப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.” இன்று நாம் மனிதர்களைக் காணவில்லை; அவர்களின் உருவங்களை மட்டுமே பார்க்கிறோம். அவர்களின் குரலைக் கேட்கவில்லை; அவர்களின் செய்திகளை மட்டுமே படிக்கிறோம்.
ஒரு
மருத்துவமனை அறையில் படுத்திருக்கும் ஒரு நோயாளி, அவருக்குச் சிகிச்சை கிடைக்கலாம்; ஆனால், ஒரு மனிதக் குரல், ஓர் அன்பான உரையாடல்; அது மற்றொரு மருந்து. ஒரு முதியவர் - அவருக்கு உணவு இருக்கலாம்; ஆனால், அவரைக் கேட்க யாராவது இருந்தால், அது அவருடைய வாழ்வை நிரப்பும். ஒரு நண்பன் - அவன் சிரிக்கலாம்; ஆனால், அவன் உள்ளே உடைந்து கொண்டிருப்பான். அதைக் கவனிக்கும் ஒருவர் அவனுக்குத் தேவையானவர். அன்னை தெரேசா கூறியதுபோல், “அன்பு இல்லாத தனிமைதான் உலகின் மிகப்பெரிய வறுமை.” திருவிவிலியம் நமக்கு நினைவூட்டுகிறது: “இருவர் ஒருவரைவிட மேலானவர்; ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிவிடுவார்” (சஉ
4:9-10).
குயில்
எழுப்பும் ஓசையை இசையைவிட, அவற்றின் இடையில் இருக்கும் மௌன சப்தமே பெரும்பாலான நேரங்களில் இனிமையை அளிக்கிறது. மனிதன் உறவுகளுக்காகப் படைக்கப்பட்டவன்; தனிமைக்காக அல்ல! தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன: “The best way to find yourself is to lose yourself in the service
of others.” இடைவெளியைக்
குறைக்கப் பெரிய செயல்கள் தேவையில்லை. சிறிய அன்பு போதும். ஒரு சிரிப்பு,… ஒரு நலம் விசாரிப்பு,… ஒரு நிமிடம் கொடுத்துக் கேட்பது...… இவையெல்லாம் மனிதர்களுக்கிடையிலான தூரத்தைக் குறைக்கும். “மனிதன் தன்னை முழுமையாகக் கண்டுபிடிப்பது, தன்னை அன்பாக மற்றவர்களுக்கு அளிக்கும்போதுதான்” என்று
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறுவார். இடைவெளி அவசியம்; ஆனால், அது உடலுக்குள் மட்டும் இருக்கவேண்டும். இதயங்களுக்கு இடையில் அல்ல! தவக்காலம் நமக்கு மெதுவாகக் கூறுகிறது, தூரத்தில் நின்று பாதுகாப்பாக இருக்க மட்டுமல்ல; அருகில் வந்து மனிதமாக இருக்க!