news-details
சிறப்புக்கட்டுரை
‘ஒற்றை’ அரசியலும் ஒருமைப்பாடும்

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, எதிரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில், தில்லி நாடாளுமன்ற அமர்வு கண்முன்னே காட்சி தருகின்றது.

நாம் வாழும் காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கம் பற்றிய விவாதம் (Debute) நடந்த போதும், அரசமைப்புச் சட்ட வரைவு நீண்ட பெரிய விவாதங்களுக்குப் பின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போதும், வானொலி மூலம் கேட்டுப் பரவசம் கொண்டோர் பகிர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு.

இன்று உலக நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் வீட்டின் அறைகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது மகிழ்வுள்ளதாகக் கூறியவர்கள் இன்று இல்லை; ஆனால், எந்த அரசமைப்புச் சட்டம் உலகின் சனநாயக நாடுகள் தோற்றுவித்த அரசமைப்புச் சட்டங்களுள் மேன்மைமிக்கது என்று பெருமைப்பட்டுக் கொண்டோமோ, அந்த அரசமைப்புச் சட்டம் நம் கண்முன்னே பெரும்பான்மைவாத அரசு ஒன்றினால் சிதைக்கப்படுவதைக் கண்முன்னே காணும் கெடுவாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது.

ஏனிந்த அவசரம்?

தமிழ்நாடு, வங்காளத்தில் வேகமெடுத்துள்ள தேர்தல் களேபரங்களூடே, இவ்வளவு வேகமாகத் தொகுதி வரையறை மசோதா அறிமுகப்படுத்த வேண்டுவதன் அவசியம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். எனும் மூல அமைப்பு முன்னெடுத்த கொள்கைகள்சித்தாந்தங்கள் பல இந்தியத் தேசியத் தலைவர்களின் சித்தாந்தத் திற்கு எதிரானவை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலக்கொள்கைகளை இந்திய தேசிய தலைவர்கள் சாத்தியமற்றவை என்று மட்டுமில்லாமல், அரசியல் அறத்திற்கும், மாந்தர்தம் சமாதான வாழ்விற்கும் எதிரானதென்றே கருதினர். மக்களை மதவாத ரீதியில் பிரித்து, மத அடிப்படைவாத அரசொன்றினை நிறுவும் முயற்சி சனநாயக, சமயச் சார்பற்ற அரசின் கொள்கைகளால் சிதைந்துபோகும் என்று நம்பினர். நம்பிக்கையில் தவறில்லை; ஆனால், நம்பிக்கையில் நடைமுறை சாத்தியம் இல்லையே!

இன்று, ஒரு மதவாதக் கட்சி தானே என்று ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டு வருகின்றது. இப்பிரிவினை அமைப்புப் பேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்துமே சாத்தியமற்றவை என்று உறுதியாக நம்பிவந்த நிலையில், பாரதிய சனதா கட்சிக்கும், அதன் பொறுப்பிலிருக்கும் அரசிற்கும் எல்லாம் சாத்தியமே. எல்லாமே சாத்தியமாயிற்று. இன்றுவரை இவர்களால் சாத்தியமாகாதது எதுவுமில்லை.

இந்து தேசமும் சாத்தியமே!

இன்றையதி இந்துஆங்கில நாளிதழில் (16.01.2026) ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த இந்து மதக்குரு திரேந்திர கிருட்டிண சாஸ்திரி. இவர் நடத்தும் அமைப்பின் பெயர்பகேஷ்வர் டாம் (Bageshwar Dham). இந்த மதரீதியான அமைப்பிற்கு இந்திய உள்துறை அமைப்பு வெளிநாட்டு நிதி உதவியைப் (FCRA) பெறுவதற்கான பதிவை (registration) வழங்கியுள்ளதாம்!

இந்த மதக்குருவின் முக்கியக் கொள்கை என்ன தெரியுமா? இவர் இந்து இராஷ்டிராவை நிர்ணயிப்பதில் உறுதியாக உள்ளாராம்! இந்தியாவில் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களுக்காகச் செயல்படும் நியாயமான அமைப்புகளின் உரிமங்கள் பறிக்கப்பட்ட நிலையில், இந்து இராஷ்டிரத்தைக் கட்டமைக்கவிருக்கும் ஒரு மதத் தீவிரவாத அமைப்பிற்கு இந்திய அரசு அந்நிய நிதிபெற அனுமதிக்கிறது. இது என்ன வேடிக்கை! இவ்வளவு அப்பட்டமாகத் தன் உள்ளடக்கத்தை வெளிக்காட்டி வரும் இந்துத்துவர்களின் இறுதி இலக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.

கொள்கைத் தெளிவு எப்போது?

ஒன்றிய பா... அரசின் மாநிலச் சுயாட்சி பற்றிய நடைமுறைகளை, கூட்டாட்சியை மதிக்காமையை, நிதிப் பங்கீட்டில் காட்டப்பெறும் பாகுபாட்டை... இன்னும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதையும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஒன்றிய அரசிற்கு எதிரான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் பாக்கிறோம். தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இந்த எதிர்ப்பை நாம் மதிக்கிறோம்.

ஒன்றிய அரசு திட்டமிட்ட வலுவான கொள்கையுடையது. அவ்வரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்கெனவே வகுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியலின் சாயல் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசின் மாநில அரசுகள்மீது காட்டப்பெறும் பாகுபாட்டரசியலின் முழுமையான அரசியலை நாம் புரிந்துகொள்ள முனையவேண்டும். இன்றைய ஒன்றிய அரசின் அடிப்படையே சனநாயக மறுப்பு என்பதுதான்! சனநாயகம் குடிமக்களின் மாண்பை மதிப்பது, அதிகாரக் குவியலை மறுப்பது, அதிகாரப் பரவலை ஊக்குவிப்பது. இந்துத்துவம்ஒற்றையை நம்புவது, ஓர்மை மூலம் ஒருமைப்பாட்டைத் திணித்து ஒற்றுமையை உருவாக்க நினைப்பது. இந்துத்துவத்தின் ஒற்றை அரசியலில் மொழிவாரி மாநிலங்கள் என்பதோ, மொழிவழி மாநிலங்கள் (State) உருவானது என்பதோ இவர்களின் கொள்கைத் திட்டத்தில் இல்லை.

பாரதிய சனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி, ‘இந்த நாட்டின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் தலைமையில் அமையவேண்டும்; அமெரிக்க ஐக்கிய நாட்டினைப் போல் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும்என்று ஓயாமல் பரப்புரை செய்து வந்தார். ஒரு தலைவரை, குடியரசுத் தலைவரை முன்மொழிதலின் அரசியல் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சமயம்என்ற முழக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவர் யாரால், எந்தக் கூட்டத்தால் தெரிவு செய்யப்பட்டவராக இருப்பார்?

ஏற்கெனவே கூறியது போன்று இந்துத்துவம் இந்தியாவைப் பல மாநிலங்களாகப் பிரித்தமையையும், அதுவும் மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டமையையும் ஒற்றை இந்தியக் கொள்கைக்கு எதிரானது என்றும், இந்திய ஒருமைக்கு எதிரான நடவடிக்கை என்றும், இப்பிரிவுதான் இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினை முழக்கத்திற்கு வழிவகுத்தது எனவும் பேசி வந்தனர் என்பதை இவர்களின் கொள்கை ஏடுகள் மூலம் அறியமுடியும்.

இந்தியக் கூட்டாட்சி முறையை மாற்றி ஒற்றை மய அரசை (Unitary type of govt) உருவாக்கத் துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும். இந்த நாடு ஒன்று; இந்நாட்டின் மக்கள் ஒன்று! எனவே, நமக்கு வேண்டுவது ஒரே வகையான அரசாங்கமே. நிர்வாக வசதிக்காக இந்நாட்டினைப் பல்வேறு மண்டலங்களாகத் (Zone) தேவையாயின் பிரித்துக்கொள்ளலாம். இம்மண்டலங்கள் குறைந்த அளவுகளில் அல்லது எண்ணிக்கையிலும் அமையலாம். இதற்கேற்ப அரசமைப்பில் மாற்றம் கொண்டு வரலாம்.”

மாநில அளவிலான நிர்வாக முறைகள் அல்லது பகிர்வுகள் சனநாயக நடைமுறைக்கு உகந்தது என்று சிலர் வாதிடுவது எனக்குப் புரியவில்லை. சனநாயகத்திற்கும், பல்வேறு சட்டமன்றங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மத்தியில் அமையும் ஒரே அதிகார மையம் (Legislature) மட்டுமே போதும். பல மொழிகளைக் கொண்ட ஒரு மாநிலம், ஒரே மொழியைக் கொண்ட பல மாநிலங்கள் அமைவதில் தவறில்லை.

எஸ். கோல்வாக்கர், ‘Punch of thought பக். 250, 251.

இன்று இந்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி வரையறையை மாநிலச் சுயாட்சி என்ற அடிப்படையிலும், தென்னகம் - வட இந்தியா என்ற அடிப்படையிலும் பார்க்கின்ற பார்வையில் உண்மை இருக்கலாம். ஆனால், இன்றைய ஒன்றிய அரசினை வழிநடத்தும்ஒற்றைஎனும் சனநாயக அவமதிப்புக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் பெருவாரி மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய ஆளும் அரசு, வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெரும்பான்மை (Majority) அல்ல; கருத்தியல் ரீதியாகவும்  ஒருவகையால் மழுங்கடிக்கப்பட்டவர்கள். இவர்கள் இக்கட்சியைச் சார்ந்த தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்லர்; அதிகாரப் பசியில் தம்மை இழந்தோரும் உள்ளனர்.

தமிழ்நாடு, தமிழர் மாண்பு, கூட்டாட்சி மறுப்பு என்ற பெயரில் தொகுதி வரையறைக்கு எதிராகப் பெரிய போராட்டம் ஒன்றினை தமிழ்நாடு முன்னெடுத்து வருகையில், இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கும் முயற்சியில் மேனாள் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய உள்துறை அமைச்சரிடம் பேசியதாகவும், தமிழ்நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் கூறியதாகப் பேசி நிறைவு கொள்ளும் மனிதர்களை என்னவென்பது?

சரியான தருணம்

கண்ணில் தெரியும் இந்து தேசம் எப்படியிருக்கும்? என்பதற்கான அடையாளம் இன்றைய ஒன்றிய அரசின் துரித நடவடிக்கை.

தமிழ்நாடு காட்டும் எதிர்ப்பு, பாராட்டப் பெறவேண்டிய ஒன்று. குடிமக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய ஒன்று. இப்பிரச்சினையை ஒரு தேர்தல்காலப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், இந்துத்துவர்கள் முன்னெடுக்கும் இந்து தேசக் கட்டமைப்புக்கான தொடக்கப்பணி என்பதை நினைவில் கொள்வோம்.

இந்துத்துவர்களும், இந்துத்துவக் கருத்தியலாளரும் தேவைக்கேற்ப பயப்படுவதுபோலக் காட்டிக்கொள்வர் அல்லது தற்காலிகமாகப் பின்வாங்குவர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவுநர் டாக்டர் ஹெட்கேவரும், தொடர்ந்து வந்த குருஜி கோல்வாக்கரும் சிந்தையில் மொழிந்த எதனையும் இவர்தம் கொள்கையைக் காக்க உருவான இந்திய ஒன்றிய அரசும், அதன் ஏவல் நிறுவனங்களும் வழுவாமல் காத்து நிற்கும் என்பதே உண்மை.