தமிழ்நாடு ஒரு புவிப்பரப்பு மட்டுமல்ல; புவிப்பரப்பு மட்டுமாயின், அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை எல்லைக்கோடுகளால் நிர்ணயிக்கலாம். காவலர்களால், அவர்கள் தரித்த கவசங்களால் காத்துக்கொள்ளலாம்.
வாழும்
தேசத்திற்கு ஆபத்து என்பது பகை அரசுகளால் வரும் என்பதும், எதிர் அரசின் படைபலத்தால் எதிர்ப்படை வெல்கையில், நாட்டு வளம் சூறையாடப்படும் என்பதுவும், தமக்குத் தமக்கென்றிருந்த நாடு தம் கை நழுவிப் போகையில்
சொந்தம் கொண்டாடி மகிழ்ந்த நாட்டு மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுவதையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இப்போதும் பார்த்தும் வருகிறோம்.
இந்தியா
என்ற நிலப்பரப்புள் ஒருங்கிணைப்பட்ட தமிழ்நாட்டின் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கவும் காக்கவும் இன்று தமிழ்நாடு அரசு தனிக் காவல்படைகளை எல்லையோரத்தில் நிறுத்திட அவசியம் இல்லை; அப்படித் தேவைப்படுமாயின் தமிழ்நாடு ஏற்றிருக்கும் ‘இந்தியா’ எனும் ‘தேசங்களின் நாடு’ அப்பொறுப்பை ஏற்கும்.
இன்றைய சவால்
என்ன?
தமிழ்நாடு
எல்லையோரப் பாதுகாப்புப் பற்றி இன்று எங்கும் கவலைகொள்ள வேண்டுவதில்லை. இந்திய ஒன்றியமே பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும். ஆனால், எல்லையோரப் பாதுகாப்பைத் தாண்டி, தமிழ்நாடே பறிபோய்விடுமோ என்ற அச்சம் இன்று எழுந்துள்ளது. தமிழ்நாடு என்பது அதன் நிலப்பரப்பைச் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளான கலாச்சாரம், கலாச்சாரத்தின் பெரும் பகுதியான மொழி, வாழ்வு அறங்கள் என்பனவெல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் எழுந்துள்ளது.
‘இந்தியம்’
என்று அழைக்கப்பட்ட இந்த இந்தியத்துள், இந்திய நாட்டின் பன்மைக் கலாச்சாரப் பண்புகள் அபகரிக்கப்பட்டு, சீரணிக்கப்பட்டு, அடையாளமே தெரியாமல், சிதைவுண்ட நிலையில், தமிழும் தமிழ் மண்ணின் கலாச்சாரச் செழுமைகளும் வடவர் ஊடுருவலால் விழுங்கவிருந்த காலத்தில் தமிழ்நாடு ஆடித்தான் போனது. திராவிடக் குடும்பத்து மொழிகள் பல வழக்கிழந்த சமஸ்கிருத
மொழித் தாக்கத்தால் சிதைந்து போயின. தமிழையும் தாக்கியிருந்த நிலையில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. ‘தெய்மொழி’
என்றும் ‘நீச பாஷை’ என்றும் பிரித்துக் கேலி செய்யப்பட்ட நிலையில், வடமொழியே உலகத் தாய் மொழியென்று புனையப் பெற்றிருந்த சூழலில், திராவிட மொழிகளைத் தனியே இனங்கண்டு அடையாளப்படுத்தி, திராவிட மொழிக் குடும்பத்தைக் கட்டமைத்து, திராவிடத்திற்குத் தனி மதிப்பையும் அடையாளத்தையும் தந்தவர் கால்டுவெல் எனும் பேரரசன்.
ஒரு
கிறித்தவ மதப்போதகர் தம் பணியின் எல்லையையும் மீறி செயல்பட்டதால் திராவிடம் அடையாளப்படுத்தப்பட்டது. திராவிடத்துள் இயங்கிய மொழிகளுள் ஒன்றான தமிழ் மேன்மையுறும் வகையில், இந்திய மொழிகளுள் தமிழ் மட்டுமே தனித்தியங்கவல்லது என்ற உண்மையையும் அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறிந்து வெளியிட்டார் அவர். மறைப்பணியாளர் ஒருவர் மிகவும் பின்தங்கிய பகுதியொன்றில் என்ன வசதிகளோடு வாழ்ந்திருக்க முடியும்? அவர் பணி செய்த பணித்தளங்களில் வாழ்ந்த நாடார் மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து எழுதியுள்ள ‘திருநெல்வேலி சரித்திரம்’, ‘சாணார்கள்
சரித்திரம்’, ‘திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்பனவெல்லாம்
ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. இன்றைய இந்துத்துவர்கள், திராவிடத்தை அடையாளப்படுத்திய கால்டுவெல் அவர்களை ‘பிரிவினைவாதி’ என்றழைத்தனர்.
இறையியலையும்
மானுடவியலையும் மொழியியலையும் ஒரு தனிமனிதன் கற்றறிந்து, தான் தெரிவு செய்து பணியாற்றிய நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்த கால்டுவெல் பற்றித் தமிழனுக்குத் தெரியாது. கிறித்தவ மறைப்பணியாளராம் இவர் பெயரை எத்தனை கிறித்தவர் அறிவர்?
இன்று
நாம் பேசும் திராவிட மாடல், கால்டுவெல் கொடுத்த கொடை. தமிழ்நாட்டில் தோன்றிய திராவிடச் சித்தாந்தத்திற்கு உள்ளடக்கம் தந்தவர். நீதிக்கட்சியென்றும், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கம் என்றும், தனித்தமிழ் இயக்கம் என்றும், சுயமரியாதை இயக்கம் என்றும் தோன்றிய அனைத்து இயக்கங்களுக்கும் வடிவமும்
உள்ளடக்கமும் தந்தவர் இவர். திராவிடத்தைப் புரிந்து அதற்கு ஏற்றம் தந்த இந்த மனிதரை, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என ‘திராவிட’ எனும் முன்னொட்டைக் (adjustive) கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு ஓர் ஏற்புடையமையைத் (Legitimacy) தந்தவர்
கால்டுவெல். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பேசி வாக்குகளைத் தேடியலையும் ஒருவர், கால்டுவெல் அவர்களை வெறும் மதம் மாற்றுபவராக மட்டுமே சித்தரிக்கிறார்.
திராவிட
மாடல் அரசினைத் தமிழ்நாட்டில் நடத்துவதாகச் சொல்லி வருகிறார் தமிழ்நாடு முதல்வர். திராவிடத்தை முதன்மைப்படுத்தும் முதல்வருக்கும், அவரின் இயக்கம் சார்ந்தோருக்கும் திராவிடம் என்ற சொல்லாக்கம் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம்; தெரிந்தோ, புரிதல் இல்லாமலோ உரத்து உச்சரிக்கப்படுகிறது என்பதால் மகிழ்ச்சியே! மட்டுமின்றி, நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் புதுடெல்லிக்குமான போர் எனறு அறிவித்துள்ளமை பாராட்டிற்குரியது.
திராவிட
இயக்கமும், சமூக நீதி இயக்கமும் என்ன காரணம் பற்றித் தோற்றம் எடுத்தனவோ, அக்காரணங்கள் அனைத்தும் இன்றும் பெரியார் தோன்றிய தமிழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே முயன்று வருகின்றன என்பதே உண்மை.
தமிழ்நாடு வெல்லவேண்டும்
விடுதலை
பெற்ற இந்தியா கண்ட சனநாயகம் எனும் கனவு, பல சமயங்களுடைய நாட்டில்
பல்சமய நல்லிணக்கமும் சமத்துவமும் பேண, மதச்சார்பின்மையைப் பேணவேண்டும் என்ற கனவு, பொருளாதார ரீதியாக ஆதிக்க நாடுகளாகப் பிளவுபட்டிருந்த காலத்திலும், சோசலிசத்தை உயர் கொள்கையாகக் கொண்டிருந்த இந்திய அரசும், அவ்வரசுக்குத் தலைமையேற்ற பண்டித நேருவும், ‘அணி சேராமை’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இந்திய இறையாண்மையைக் காத்த இந்தியாவின் சனநாயக அரசு, இன்று அதன் அழகுக்கு வலுசேர்த்த அனைத்துக் கவசங்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலை.
இன்றைய
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் பேணும் அரசல்ல; கார்ப்பரேட்டுகளின் நலன் நாடும் ஓர் அரசு. இந்த அரசு, சமூக நீதி காக்கும் அரசாக இருக்க முடியாது. திராவிடம் பேணிய சமூக நீதியை மறுக்கும் ஒன்றிய அரசு சனநாயகப் பண்பை நாளும் மறுக்கும் நிலையில், இதனை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்கமுடியாது. பன்மையை மறுத்து, ஒற்றையைப் பேணும் ஓர் அரசு, சனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும்.
தமிழ்நாட்டில்
எண்பதுகளில் மண்டைக்காடு கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்கி அரசியல் ஆதாயம் காண முயன்று, இன்று ஆட்சியில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று குமரி மண் அமைதிப் பூமி அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி,
திட்டமிட்டு நடத்தப்பட்ட பகை அரசியலால், இந்த மண் குமரி காவிமயமாகியது. இன்று திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பெறும் பொய்ப்பரப்புரைகளால், தமிழர் முகமான முருகப் பெருமானைக் காவியாக்கவும் அதன்மூலம் வாக்கு அரசியலில் வெற்றிபெறவும் முயற்சிகள் திட்டமிட்டே நடத்தப்பெறுகின்றன.
தமிழ்நாட்டை
ஆண்ட ஒரு கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மதவாதக் கட்சிகளல்ல; ஆனால், அரசியல் இலாபம் கருதி, அதுவும் தி.மு.க.
என்ற ஒரே அணியை வீழ்த்துதல் என்ற ஒற்றை நோக்கில் அணிதிரண்டுள்ள கட்சிகள் யாரை நியாயப்படுத்துகின்றன? எந்தக் கோட்பாட்டிற்குத் துணை நிற்கின்றன?
சனநாயகம்
மக்களின் பங்கேற்பை, சமப் பங்கேற்பை உறுதிசெய்யும் என்பர். இந்தச் சமப் பங்கேற்பில் மதச்சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் குறித்து எங்கேயாவது அல்லது எப்போதாவது இவ்வணிகள் கவலைப்பட்டதுண்டா? குரல்
எழுப்பியதுண்டா?
தமிழ்நாட்டில்
கிறித்தவருக்கென்று தனிக்கட்சி இல்லை; அது தேவையும் இல்லை. இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினரை ஏற்கும் அரசியல் என்பதனை அனைவரும் அறிந்த நிலையில், கிறித்தவர்கள் இவ்வணியினரை ஆதரிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. கிறித்தவர்கள் கொலை செய்யப்பட்ட ஸ்டான் சாமியை மறவார்; மண்டைக்காட்டையும், ஒடிசாவின் காந்தமாலையும், கொலை செய்யப்பட்ட அருள்பணியாளர் அருள்தாசையும், அருள்சகோதரி இராணி மரியாவையும் மறவார்கள்.
கிறித்தவப்
பெயர் வைத்திருப்பதால், கிறித்தவர் வாக்குகளைப் பெற ஓடி ஓடித் திரியும் சந்தர்ப்பவாதிகளையும் நாம் புரிந்துகொள்வோம். ஒன்றிய அரசின் சிறுபான்மைச் சமயங்களின் இருப்பு பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், ‘கொள்கை எதிர்ப்பு’
என்ற ஒரே சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் உச்சரித்து, ஒன்றிய அரசின் எந்தக் கொள்கையையும் விமர்சிக்கத் திராணியற்றவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டுவது கடமையாகும்.
இசுலாமியர்
எனும் ஒற்றைச் சமய எதிர்ப்பில், அரசியல் நடத்தும் ஒன்றிய அரசின் போக்கைப் புரிந்துகொண்ட இசுலாமியர், அதன் எதிர்ப்பில் தீவிரம் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில்
பல பிரிவுகளாக, கட்சி ரீதியாக இவர்கள் பிரிந்து நிற்பினும், தமிழ்நாட்டுத் தேர்தலில் பிரிவுகள் அனைத்தும் மதச்சார்பற்ற கூட்டணியுள் அணி சேர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
அணிகள் பலவாயினும், நோக்கம் ஒன்று என்பதனால் பிளவுபடாது நிற்கும் போக்கு மகிழ்ச்சி தருகிறது.
தமிழ்நாடு
தனித்து நின்று, தன் அடையாளத்தைக் காக்கவேண்டிய தருணம் இது. எப்போதும் வடவர் ஆதிக்கத்தை, வடவர் மொழியை, வடவரை முக்கியப்படுத்துவோரின் மேலாதிக்கத்தை (Hegemony) எதிர்த்து
வெற்றி கண்டு வரும் தமிழ் மண் வெற்றிபெறும்.
ஆம், வெல்லும்!