news-details
ஆன்மிகம்
இறை இரக்கம்: எல்லையற்ற இயேசுவின் அன்பின் வெளிப்பாடு!

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை நாம் இறை இரக்கப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்படுகிறோம். இது வெறும் சடங்கு அல்ல; மாறாக, நம் பாவங்களைக் காட்டிலும் இறைவனின் மன்னிப்பு பெரியது என்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் ஓர் உன்னதத் திருநாள்!

இரக்கம் அல்லது கருணை என்பதன் சொற்பிறப்பு, இலத்தீன் மொழியின்மிசெரிகோர்டியா (misericordia) என்ற சொல்லிலிருந்து உருவாகிறது . இதுமிசர் (miser - பரிதாபகரமான, துயரமான) மற்றும் கோர் (cor- இதயம்) ஆகிய சொற்களின் இணைப்பாகும். இச்சொல்லாடலானதுபரிதாபகரமானவர்களுக்கு, துயர் நிலையில் இருப்பவர்களுக்கு நம் இதயத்தைக் கொடுப்பதுஎன்பதாகும். இது மற்றொருவரின் துயரத்தைப் போக்க, ஒருவரைத் தூண்டும் ஆழ்ந்த அன்புறவைக் குறிக்கிறது

இரக்கம் அல்லது கருணை என்பது நாம் செய்த புண்ணியத்திற்காகக் கிடைப்பதல்ல; மாறாக, நாம் அவருடைய பிள்ளை என்பதற்காக வழங்கப்பட்ட ஒரு பெருங்கொடை; மேலான ஓர் அருள் வரம்! ஒரு பெற்றோர் தம் குழந்தையின் மீது காட்டும் அன்பு, அக்குழந்தை எதையாவது சாதித்ததால் வருவதல்ல; அக்குழந்தை பிறந்த அந்த நொடியிலேயே அங்கு அன்பு பிறப்பெடுக்கிறது. அதுபோலவே, நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மைத் தேடி வந்த கிறிஸ்துவின் அன்புதான் இறை இரக்கம்; அந்தத் தெய்வீகக் கருணை!

2016-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டஇறைவனின் திருப்பெயர் இரக்கம் (The Name of God is Mercyஎன்ற நூல், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆழமான உறவைஇரக்கம்என்ற ஒற்றைச் சொல்லால் பிணைக்கிறது. வத்திக்கான் செய்தியாளர் ஆண்ட்ரியா டொர்னியேலியுடன்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்களின் தொகுப்பாக வெளிவந்த இந்த நூலில், ‘புனிதர்களுக்காகவோ அல்லது நீதிமான்களுக்காகவோ மட்டும் இறைவன் காத்திருக்கவில்லை; மாறாக, தன்னை ஒரு பாவி என்று உணர்ந்து அவரிடம் வருபவர்களுக்காகவே அவர் தவம் இருக்கிறார்என்பதை அவர் சிறப்பாக வலியுறுத்துகிறார்மேலும், ‘நமது பாவங்களே நாம் இறைவனின் இரக்கத்தைச் சந்திக்கும் புனிதத் தலங்களாக மாறுகின்றனஎன்றும், ‘நாம் ஒரு பாவி என்பதை உணர்வதே இறைவனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முதல் கொடைஎன்றும், ‘அந்த இடத்தில்தான் இயேசுவின் குணப்படுத்தும் தொடுதல் நிகழ்கிறதுஎன்றும் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறே, “ஒருவர் மிகப்பெரும் பாவியாக இருந்தாலும், என் கருணையின் மணிமாலையை (Divine Mercy Chaplet) ஒருமுறை செபித்தால், அவர் என் எல்லையற்ற கருணையிலிருந்து அருளைப் பெறுவார்என்று புனித பவுஸ்தீனா வழியாக இறைவன் உலகிற்குத் தந்த செய்திகள் நம்பிக்கையற்றுக் கிடக்கும் மானுடத்திற்கு ஒரு கலங்கரை விளக்கம்.

இயேசு புனித பவுஸ்தீனாவிடம் அளித்த வாக்குறுதிகள் கற்பனைக்கு எட்டாதவை. குறிப்பாக, மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்காகச் செபமாலையைச் செபிக்கும்போது, இயேசு ஒரு நீதியுள்ள நடுவராக இல்லாமல், ‘இரக்கமுள்ள மீட்பராகதந்தைக்கும் அந்த ஆன்மாவிற்கும் இடையில் இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இயேசு கல்வாரி மலையில் தம் உயிரைத் துறந்த அந்த மாலை மூன்று மணி, அகில உலகிற்குமான பெரும் கருணையின் நேரம். அந்த நேரத்தில் நாம் கேட்கும் எதையும் தமது திருப்பாடுகளின் பெயரால் அவர் மறுப்பதில்லை. நாமும் இரக்கத்தின் தூதுவர்களாவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பார்வையில், திரு அவை என்பது சட்டங்களை வகுக்கும் ஒரு கூடம் அல்ல; அது ஒருபோர்க்கள மருத்துவமனை (Field Hospital) காயப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அரவணைக்கும் இடமே திரு அவை. “Who am I to judge others?  - ஒருவர் ஆண்டவரைத் தேடினால், அவரைத் தீர்ப்பிட நான் யார்?” எனும் அவருடைய கூற்று, கத்தோலிக்கத் திரு அவையில் பாவிகள் என நாம் தீர்ப்பிடும் பலருக்குப் பல முன்னுரிமைகளை மாற்றியமைத்துள்ளது.

எல்லாச் சூழல்களிலும் சமகாலச் சட்ட வல்லுநர்களாக நாம் இருக்கக்கூடாது; மாறாக, கிறிஸ்துவின் உடலை ஏழைகளிடமும் தேவையிலுள்ளோரிடமும் தொட்டுணரும் மேய்ப்பர்களாக இருக்கவேண்டும். திரு அவை என்பது மக்களைக் கண்டனம் செய்வதற்காக இல்லை; மாறாக, இறைவனின் ஆழமான அன்பைச் சந்திக்க வைப்பதற்காகவே அது இருக்கிறது எனும் அவருடைய சிந்தனைகள் வாழ்வாக்கத்தக்கதே!

புனித பவுஸ்தீனாவின் செபம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிரொலிக்கவேண்டும். நம் கண்கள், காதுகள், நாக்கு, கைகள் மற்றும் கால்கள் என அனைத்தும் இரக்கத்தின் கருவிகளாக மாறவேண்டும். அடுத்தவரைத் தீர்ப்பிடாத கண்கள், பிறரின் கூக்குரலைக் கேட்கும் காதுகள், ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே பேசும் நாக்கு, நற்செயல்களை மட்டுமே செய்யும் கைகள், பிறருக்கு உதவ விரைந்து செல்லும் கால்கள் இவை அனைத்தும் ஒன்றிணையும்போது நாம் இறைவனின் வாழும் சாயலாக மாறுகிறோம்.

இறை இரக்கப் பெருவிழா, ஆன்மாக்களுக்கு ஒரு புகலிடம். அன்று ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குகொண்டு, நற்கருணை உட்கொள்பவர்களுக்குப் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன. “உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருந்தாலும், அவை பனிபோல் வெண்மையாகும்என்ற இறைவனின் வாக்கு அன்றைய தினம் முழுமையாக நிறைவேறுகிறது.

இறைவனின் இரக்கம் நம் பாவங்களை விடவும், இந்த உலகத்தின் பாவங்களை விடவும் பெரியது. இந்த உலகம் வெறுப்பாலும் வன்முறையாலும் சூழந்திருக்கலாம்; ஆனால், இறைவனுடைய இரக்கத்தின் நீரூற்று இன்றும் வற்றாமல் சுரந்து கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்முடைய தற்பெருமையைக் களைந்து, தாழ்ச்சியுடன் அவரிடம் திரும்புவதுதான்.

ஆகவே, இறை இரக்கப் பெருவிழாவை நாம் கொண்டாடும் இவ்வேளையில், நாமும் இறைவனைப் போலஅதிகமாக மன்னிக்கும்அந்தப் பண்பைப் பெற்றுக்கொள்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மக்களின் இதயங்களைக் குளிரூட்டும், அவர்களோடு  நெருக்கமாக இருக்கும் ஒரு திரு அவையாக நாம் மாறுவோம்.”

இறைவனின் திருப்பெயர் இரக்கம்; அந்த இரக்கத்தில் நாமும் அடைக்கலம் புகுவோம்!