மானுட வரலாற்றில் ‘வாக்குரிமை’ என்பது வெறும் காகிதத்தில் பொறிக்கப்பட்ட அடையாளமல்ல; அது பல நூற்றாண்டுகாலப் போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் குருதி சிந்திய புரட்சிகளின் வாயிலாகப் பெறப்பட்ட ஒரு பேராற்றல். ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி’ எனும் உன்னதத் தத்துவத்தின் உயிர்நாடிதான் இந்த வாக்குப்பதிவு.
ஒரு
நாட்டின் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரச் சீட்டுதான் ஒவ்வொரு குடிமகனின் கையிலும் இருக்கும் அந்த ஒரு வாக்கு. ஆனால், இன்றைய நவீன உலகில், அரசியலில் நிலவும் ஏமாற்றங்களினால், அக்கறை கொள்ளாத தன்மையுடன் எந்தவித ஈடுபாடும் ஆர்வமும் இல்லாது பலர் இந்தத் தார்மீகக் கடமையிலிருந்து விலகி நிற்பது கவலையளிக்கிறது. அதுவே சனநாயகத்தின் எதிர்காலத்திற்கு விடப்படும் மிகப்பெரிய சவால்.
ஆங்கிலேயர்களின்
காலனித்துவ ஆட்சியில், வாக்குரிமை என்பது சொத்து வைத்திருப்பவர்களுக்கும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் மட்டுமேயான ஒரு சலுகையாக இருந்தது. 1861-ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் தொடங்கி, 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வரை, வாக்குரிமை என்பது மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.
1947-இல் இந்தியா
விடுதலை பெற்றபோது, நமது அரசியல் சாசனச் சிற்பிகள் சாதி, மதம், இனம், பால் மற்றும் பொருளாதார நிலை என அனைத்துப் பாகுபாடுகளையும்
தகர்த்து, ‘அனைவருக்கும் வாக்குரிமை’ எனும்
மாபெரும் உரிமையை வழங்கினர். 1951-52-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல், இந்தியத் திருநாட்டின் சனநாயகப் பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாகவே அமைந்தது.
‘நாடுகாப்பார் யாரே இந்தியத் திருநாட்டை?
மக்களாட்சி
என்னும் மாண்புடைய கோட்டையினை
வாக்கினால்
காப்பார் குடிமக்கள்!’
என்ற
கவிஞரின் வரிகளுக்கேற்ப, நமது முன்னோர் நமக்குப் பெற்றுத் தந்த இந்த உரிமை, வெறும் கடமையல்ல; மாறாக, அது ஒரு பெரும் கொடையே!
வாக்குப்பதிவு
என்பது வெறும் தலைகளை எண்ணும் முறையல்ல; மாறாக, அது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் குரலை அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வலிமையான கருவியே. வரலாற்றில் அமெரிக்காவின் குடிமை உரிமைப் போராட்டங்கள் முதல், பெண்களின் வாக்குரிமைக்கான ‘சஃப்ரஜெட்’
(Suffragette) இயக்கங்கள்
வரை அனைத்தும் உணர்த்துகின்ற பாடம்: ‘உனக்கான நீதியைப் பெற உனது வாக்கே உனது ஆயுதம்’ என்பதுதான்.
சமூகத்தில்
நிலவும் அநீதி, நாட்டின் வீழ்ச்சி, வீணாகும் செல்வங்கள் இவை குறித்த கவலை கொண்டு மக்களின் சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில்,
‘எங்கே உண்மை என் நாடே?
ஏனோ
மௌனம் சொல் நாடே?’
என
நாட்டில் நிலவும் உண்மை நிலை, ஏமாற்று வேலைகள் மற்றும் மௌனத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர் ‘மக்கள் கவிஞர்’ என அறியப்பட்ட பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம். இவர் எந்தவொரு குறிப்பிட்ட
கட்சிக்காகவும் நேரடியாகப் பிரச்சாரப் பாடல்களை எழுதியவர் அல்லர்; மாறாக, பகுத்தறிவுடன் வாக்களித்தல், சமூகநீதி, தவறான தலைவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு, சுரண்டலுக்கு எதிரான எச்சரிக்கை, ஊழலை - ஊழல் அரசியல்வாதிகளைக் கேள்விக்குட்படுத்துதல், சுயமரியாதையை ஊக்குவித்தல் போன்ற நலமான தேர்தலுக்கும், சனநாயகத்திற்கும் அவசியமான விழுமியங்களைத் தனது கவிதைகளிலும் திரைப்படப் பாடல்களிலும் வலுவாக வலியுறுத்தியவர். தங்களுக்காக உழைக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டு என்பதை உறுதிபடக் கூறியவர்.
ஆகவே,
வறுமை, கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் போன்ற தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்பும் ஒரு குடிமகன், அதற்கான முதல்படியைத் தேர்தல் களத்திலேயே எடுத்து வைக்கிறான். நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், நமது விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.
ஆனால்,
இந்திய அரசியலில் உள்ளூர் தேர்தல் முதல் ஒன்றியத் தேர்தல் வரை ஆகப்பெரிய சாபக்கேடு ‘சாதிவாரியான வாக்குப்பதிவு’ ஆகும்.
வேட்பாளரின் தகுதி, தொலைநோக்குப்பார்வை மற்றும் நேர்மை ஆகியவற்றைக் காட்டிலும், ‘இவர் எனது சாதியைச் சார்ந்தவரா?’ என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை இன்னும் பல இடங்களில் வேரூன்றி
இருக்கிறது. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’
என்ற ஒளவையின் வாக்கை மறந்த சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது. ஒரு தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்லர்; அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் பொறுப்பானவர். ‘Casting their vote’ (வாக்கினைச்
செலுத்துதல்) என்பது சனநாயகக் கடமை; ஆனால், ‘Voting their caste’ (சாதி
பார்த்து வாக்களித்தல்) என்பது சனநாயகத்தின் சிதைவு. சாதி எனும் இருளைத் தாண்டி, திறமை எனும் ஒளியைத் தேடி நமது வாக்குகள் பயணிக்க வேண்டும்.
தேர்தல்
அரசியலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக விளங்கும் சாதி, வர்க்கப் பாகுபாட்டை நாம் அகற்றுவோம். வாக்காளர்கள் நாம் நேர்மையாக இருக்கவேண்டும்; எவ்வகைப் பேராசைக்கும் ஆட்கொள்ளப்படக்கூடாது. மேலோட்டமான அரசியல் சொல்லாடல்களால் ஈர்க்கப்படாமல், நாம் விமர்சன ரீதியாகச் சிந்தித்துச் சமூக மேம்பாட்டிற்காக வாக்களிப்போம்!
இன்றைய
இளையோரே, முதன்முறை வாக்காளர்களே, வீறுகொண்டு எழுந்து வாருங்கள்! நாட்டின் ‘புதிய விடியலின்’
தூதுவர்கள் நீங்கள். 1988-ஆம் ஆண்டு 61-வது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வயது பதினெட்டாகக் குறைக்கப்பட்டது. இது இளையோரின் சக்தியை அங்கீகரிப்பதற்கே.
இளையோரே,
உங்கள் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். தற்காலிக இலவசங்களுக்கோ அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கோ மயங்காமல், அடுத்த பத்து - இருபது ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சியை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை யார் முன்னெடுப்பார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும்
உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
பொதுவுடைமைக்
கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனிதமோடதை
எங்கள் உயிரென்று காப்போம்!
இதயமெலாம்
அன்பு நதியினில் நனைப்போம்;
இது
எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்!’
என்ற
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். சாதி, மதப் பிரிவினைகள், மோதல்கள் அற்ற, சமத்துவமிக்க, அன்பான சமுதாயத்தை உருவாக்கும் எண்ணமுடன், பொதுவுடைமை மற்றும் மனிதநேயம் தழைத்தோங்கும் புதிய
சமுதாயத்தை நீங்கள் படைக்கவேண்டும். உங்கள் மௌனம் சில வேளைகளில் தகுதியற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகுத்துவிடும். எனவே, உங்கள் ‘வாக்கு’ என்பது உங்கள் ‘வாழ்க்கை’
என்பதை உணருங்கள்.
ஒரு
சிறந்த தலைவன் என்பவன் அதிகாரத்தைத் தன்வயப்படுத்துபவன் அல்லன்; மாறாக, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பவன். சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைத் தகர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்பவனே உண்மையான தலைவன்.
அடுத்த
தேர்தலை மட்டும் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தொலைநோக்குச் சிந்தனையும், ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதையும், மாநிலங்களின் உரிமைகளையும் பன்முகத்தன்மையையும் மதிக்கக்கூடிய கூட்டாட்சித் தத்துவம் கொண்டவரையும், விளிம்புநிலை மக்களின் வலியுணர்ந்து செயல்படும் மனிதாபிமானம் உள்ளவரையும் இனம் காண வேண்டும். இது இளையோருக்கான அறிவுரை மட்டுமல்ல, நம் அனைவருக்குமான சிந்தனை.
நாம்
வாக்களிக்கத் தவறும்போது, நம்மைப் பாதிக்கப்போகும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையை நாம் இழந்துவிடுகிறோம். குறைவான வாக்குப்பதிவு என்பது ஒரு சிறிய குழுவோ அல்லது ஆதிக்கக் கருத்தியல் கொண்ட அமைப்புகளோ ஒட்டுமொத்த மக்கள் மீதும் தங்கள் அதிகாரத்தைத் திணிக்க வழிவகுக்கும்.
‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல்
எழுத்துப்போல் காணுமே
அல்லாத
ஈயார்க்குச் செய்த உபகாரம்...’
என்ற
மூதுரைக்கேற்ப, தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் தவறுவது சனநாயகத்திற்குச் செய்யும் துரோகமாகும். சில நேரங்களில் ‘எனது ஒரு வாக்கா மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?’ என்று நினைக்கின்றோம்; ஆனால், கடலில் சேரும் ஒவ்வொரு துளியும்தான் பெருங்கடலை உருவாக்குகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!
ஆகவே,
வாக்குப்பதிவு என்பது வெறும் ஐந்து நிமிடச் சடங்கல்ல; அது நாட்டின் ஐந்தாண்டு கால விதியைத் தீர்மானிக்கும் ஒரு புனிதமான பொறுப்பு. இந்தியக் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது ஒரு பிறப்புரிமை. அரசியல் சாசனத்தின் 324 முதல் 329 வரையிலான பிரிவுகள் நமக்கு வழங்கியுள்ள இந்தப் பாதுகாப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
வரும்
தேர்தலில் அச்சமின்றி, ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகாமல், சாதி-மதப் பாகுபாடுகளைக் கடந்து, நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி வாக்களிப்போம். சனநாயகம் என்பது வெறும் வாக்குகளில் இல்லை; அது விழிப்புணர்வுள்ள குடிமக்களின் பங்களிப்பில் இருக்கிறது.
நமது
வாக்கு... நமது வலிமை!
நாளும்
அதுவே நமது உரிமை!
நானிலம்
போற்றும் சனநாயகக் கடமை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்